அது நகர்கிறது . அது நகர்வதில்லை .
அது நகர்கிறது . அது நகர்வதில்லை .
அது நகர்கிறது . அது நகர்வதில்லை .
அது தூரத்தில் இருக்கிறது . அது அருகில் இருக்கிறது . அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது . அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது - உபநிஷதம்
பங்குகளை முதலீடு செய்வதற்கான ஒரு வழிமுறையாக 6 அளவுருக்களைக் கொண்ட பங்குச் சலிப்பான் ( stock screen ) குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம் . அவை
1. முதல் நீர்க்காமை
Nil equity dilution / Minimum equity dilution
2. கடன் இல்லாமை
Nil debt / Low debt
3. தரமான வளர்ச்சி
Quality growth
4. அகழி
Moat
5. நிறுவனர் பங்கு
Skin in the game
6. அறம்
Corporate governance
ஆனால் இந்த 6 அளவுருக்களையும் ஒரு மதம் மாதிரி பின்பற்ற வேண்டும் என்கிற மாதிரி எதுவும் கிடையாது . இன்னும் சொல்லப்போனால் முதலீட்டு உத்திகளில் நெகிழ்வான தன்மையுடன் (flexibility) இருப்பது இன்னும் உறுதித் தன்மைக்கு இட்டுச் செல்வதாக இருக்கும் . எந்தெந்த சந்தர்ப்பங்களில் இந்த அளவுருக்களை விட்டு விலகலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் .
1. முதல் நீர்க்காமை .
முதல் நீர்க்காமை என்பது ஒரு முக்கியமான அளவுரு . அதனால் தான் இந்த 6 அளவுருக்களில் அது முதன்மையான இடத்தைப் பெறுகிறது . ஆனால் அரிதான சில சந்தர்ப்பங்களில் முதல் நீர்ப்பை மேற்கொள்ளலாம் . நிறுவனம் ஒன்று இந்த 6 அளவுருக்களையும் வெல்வதாகக் கொள்ளுங்கள் . எனில் சந்தையில் அந்த நிறுவனப் பங்குகளுக்கான தேவைப்பாடு அதிகரித்து அதன் பங்குகள் உயர் மதிப்பீட்டில் வர்த்தகமாகும் . இந்த உயர் மதிப்பீட்டுக்கு உச்ச பட்ச அளவு என்று எதுவும் கிடையாது . மீமிகைக் காளைச் சந்தையில் இந்த மதிப்பீடு இன்னும் அதிகரித்துச் செல்லும் . இந்த நிலையில் இன்னொரு அதே துறை நிறுவனம் சில பல காரணங்களுக்காக விற்பனைக்கு வருவதாகக் கொள்ளலாம் . அப்போது உயர் மதிப்பில் வர்த்தகமாகும் பங்குகளைக் கொஞ்சமே கொஞ்சம் QIP ( Qualified Institutional Placement - தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு ) என்ற முறையில் விற்பனை செய்து தேவையான நிதியைத் திரட்டி விற்பனைக்கு வரும் நிறுவனத்தை வாங்கலாம் . அல்லது பங்கு மாற்று ( share swap ) என்ற முறையில் உயர் மதிப்பீட்டில் வர்த்தகமாகும் நிறுவனப் பங்குகளைக் கொஞ்சமாக விட்டுக் கொடுத்து அந்த நிறுவனத்தை இணைத்துக் கொள்ளலாம் . HUL நிறுவனம் Glaxo SmithKline Consumer Healthcare Products நிறுவனத்தை இந்த முறையில் தான் தனது பங்குகளை விட்டுக் கொடுத்துக் கைப்பற்றியது . இவ்வாறாக பங்குகளை விட்டுக் கொடுத்து முதல் நீர்ப்பதின் மூலமாகவும் வளரலாம் .
2. கடன் இல்லாமை .
நிறுவனம் , விரிவாக்கம் ஒன்றை மேற்கொள்கிறது . அப்போது நல்ல கரடிச்சந்தை . கரடிச்சந்தையில் பங்குகளை விற்று நிதி திரட்டினால் குறை மதிப்பீட்டில் தான் பங்குகளை விற்க முடியும் . அத்தகைய சந்தர்ப்பத்தில் கடன் வாங்கி விரிவாக்கம் செய்வது தான் அறிவார்ந்த ஒரு செயலாக இருக்க முடியும் . நிறுவனம் கடனை அடைக்கும் வரை அதன் இலாப வரம்பு குறையும் . முதலீட்டாளர்கள் இந்த சூழ்நிலையைச் சரிவரப் புரிந்து கொள்ளாத போது பங்கின் விலை குறைந்து அதன் உள்ளார்ந்த மதிப்பை ஒட்டி நகரும் . Balkrishna Industries பங்கை இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் வாங்கியதாக ஞாபகம் .
3. தரமான வளர்ச்சி .
தரமான வளர்ச்சி என்பது முக்கியம் தான் . ஆனால் இந்தத் தரமான வளர்ச்சி என்பது நீண்ட கால சராசரி என்ற அளவில் மட்டுமே சரி . எந்த நிறுவனமும் ஒரே சீராக ஆண்டுக்காண்டு இந்தத் தரமான வளர்ச்சியைக் கொடுப்பதாக இருக்காது . அப்படிக் கொடுப்பதாக இருக்கும் பட்சத்தில் அதனைச் சந்தேகக் கண் கொண்டு அது ஏதாவது வருமான மேலாண்மை ( earnings management ) நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதா என்று ஆராய வேண்டும் . Piramal Enterprises நிறுவனப்பங்கை உதாரணமாகக் கொண்டு இந்தத் தரமான வளர்ச்சி என்பதைப் புரிந்து கொள்ள முயலலாம் . நிறுவனம் 2010 ஆம் ஆண்டு தனது மருந்துத் துறையின் பெரும்பகுதியை Abbott நிறுவனத்திற்கு மீமிகை மதிப்பீட்டில் விற்றது . தற்போது நிதித்துறையில் காலூன்றுவதற்கான பூர்வாங்க வேலைகளில் இருக்கிறது . சிறிய அளவில் ஆனால் சிறப்பாக வளர்ந்து வரும் மருந்துத் துறையிலும் கவனம் செலுத்துகிறது . 2010 லிருந்து நிறுவனத்தின் இலாபம் ஏறி இறங்கிய வண்ணமாக உள்ளது . கடந்த ஐந்து ஆண்டுகளாக பங்கின் விலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏதுமில்லை . இதற்காக நிறுவனத்தைப் புறந்தள்ள முடியாது . விரைவில் Piramal Enterprises , நிறுவனப் பிரிப்பை ( Demerger ) மேற்கொள்ள இருக்கிறது . இரண்டு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட Piramal Enterprises ன் ஒரு பங்குக்கு பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட Piramal Pharma வின் நான்கு பங்குகள் வழங்கப்பட இருக்கிறது . கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுவனத்தின் சந்தை மதிப்பில் மாற்றம் ஏதுமில்லையென்றாலும் 1988 லிருந்து நாளது தேதி வரை நிறுவனத்தின் சந்தை மதிப்பு ( Market Cap ) 29.25 சதவீத CAGR என்ற அளவில் வளர்ந்து வந்திருக்கிறது . இனி வரும் காலங்களில் சரித்திரம் மீண்டும் திரும்பும் என்றே தோன்றுகிறது .
4. அகழி .
எல்லா நிறுவனங்களுக்கும் அகழி இருக்கும் என்று சொல்ல முடியாது . மேலும் சில நிறுவனங்களுக்கு அகழி என்பது துலாம்பரமாக வெளியே தெரியாது . உதாரணமாக Powergrid நிறுவனம் . மிகை மூலதனச் செறிவு ( Capital intensive ) நிறுவனத்திற்கு ஒரு சிகர உதாரணமாக Powergrid நிறுவனத்தைக் குறிப்பிடலாம் . நிறுவனத்தின் பங்கு முதல் ( Equity capital ) 5231.59 கோடி . கடன் முதல் ( Debt capital ) ஒரு இலட்சம் கோடிக்கும் மேல் . ஒரு காலத்தில் அதன் பங்கு முதல் மற்றும் கடன் முதலுக்கு அஞ்சி நான் முதலீட்டை மேற்கொள்ளாமல் இருந்தது உண்மை . ஆனால் இந்த அதிகரித்து வரும் பங்கு மற்றும் கடன் முதல் நிறுவனத்தின் அகழியாகச் செயல்படுகிறது . மற்ற நிறுவனங்கள் போட்டிக்கு வராது . இவ்வாறு அதன் பொறுப்புகளே ( liability ) அதன் ஆஸ்தியாக ( asset ) செயல்படுகிறது .
5. நிறுவனர் பங்கு .
நிறுவனத்தில் , நிறுவனர் பங்கு பிரதானமாக இருக்க வேண்டும் . அப்போது தான் அதன் நல்லது கெட்டதுகளில் அவர்கள் கவனம் குடி கொண்டிருக்கும் . ஆனால் HDFC நிறுவனத்தில் நிறுவனர் பங்கை விட அந்நிய முதலீட்டாளர்கள் பங்கு அதிகமாக இருக்கும் . நாளது தேதியில் அந்நிய முதலீட்டாளர்கள் பங்கு 72% நீங்கள் வெறுமனே நிறுவனர் பங்கு குறைவாக இருக்கிறதென்று HDFC மாதிரியான தரமான நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் இருப்பது தவறான ஒன்றாகி விடும் . அதே மாதிரி L & T நிறுவனத்திலும் நிறுவனர் பங்கு என்று இருக்காது . ஆனால் L & T Employees Trust மூலமாக அது தனது பங்குகளை வைத்திருக்கிறது . இந்தத் தரவுகளையெல்லாம் தனிப்பட்டு ஆராய வேண்டும் .
6. அறம் .
இறுதியாக அறம் . அறத்தில் இந்த இரட்டை நிலைகளில் இயங்க முடியாது . அறத்தை நீங்கள் முழுமையாகக் கைக்கொள்ள வேண்டும் . கொஞ்சம் கொஞ்சமாக நான் அறத்தை மேற்கொள்கிறேன் என்பதெல்லாம் கதைக்காகாது . நிறுவனம் அறத்தில் பத்து சதவீதம் தவறி விட்டது என்றெல்லாம் கொள்ள முடியாது . சத்யம் கம்ப்யூட்டர் கற்பனைக்கணக்கு முதலில் சிறிய அளவில் தான் தொடங்கியது . காலப்போக்கில் நிறுவனம் திவாலாகி விட்டது . அற வழிகளில் சமரசத்திற்கு இடமில்லை . அறம் என்பது ஒரு வாழ்க்கை முறை .
ஆக , முதலீட்டில் நெகிழ்வுத் தன்மையுடன் அந்தந்த சூழ்நிலைகளைத் தனிப்பட்டு ஆராயும் திறனைக் கொள்வது இன்றியமையாத ஒரு திறமையாகும் . அதற்கு எதிரெதிர் மனநிலையில் இயங்க வேண்டும் .
Comments
Post a Comment