வேதாளம் சொன்ன கதை - 2
வேதாளம் சொன்ன கதை - 2
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி , " மன்னா ! ஏழ் கடல்களின் ஆழத்தைக் கூட அளந்து விடலாம் , ஆனால் பெண்களுடைய மனதின் ஆழம் அளவிட முடியாதது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் . எனக்கென்னவோ பெண்களின் மனதை விட மனிதர்களின் பேராசை தான் அளவிட முடியாத ஆழ்கடலாகத் தோன்றுகிறது . முன்பொரு சமயம் செயற்கைத் தங்க ஆபரணங்களை விற்கும் ஒரு வணிகர் நீண்ட நாட்களாக விலை போகாமல் இருந்த ஆபரணங்களைத் தள்ளுபடியாகப் பாதி விலையில் விற்பனை செய்யும் படிக்கு தன் வேலையாளைப் பணித்தார் . அவனுக்குக் காது கொஞ்சம் மந்தம் . ஆளும் கொஞ்சம் மந்தம் . அவன் அந்த ஆபரணங்களுக்கு இரட்டிப்பு விலையைப் பட்டையில் குறித்து வைத்தான் . மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த நகைகள் அன்று மாலைக்குள் விற்றுத் தீர்ந்தன . இந்த வேலையாளுக்காவது காது கேட்காது . காது கேளாதவன் மாதிரி நடித்த இன்னொருவனின் கதையையும் கூறுகிறேன் கேள் . ஒரு ஊரில் அண்ணனும் தம்பியுமாக துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தனர் . அவர்களுடைய வியாபார உத்தி வித்தியாசமானது . வாடிக்கையாளர் ஒரு ஆடையைத் தேர்ந்தெடுத்து அதன் விலை என்னவென்று கல்லாவில் உட்கார்ந்திருக்கும் தம்பியிடம் கேட்பதாகக் கொள்ளலாம் . தம்பி சற்றுத் தள்ளி வேலையாக இருக்கும் அண்ணனிடம் அந்த ஆடையைக் காட்டி அதன் விலை என்ன என்பதாகக் கேட்பார் . அண்ணன் 500 ரூபாய் என்பதாகக் கூறுவார் . தம்பி காது கேளாதது போல் நடித்தவராக மறுபடியும் எவ்வளவு என்று கேட்பார் . அண்ணன் இந்த முறை சத்தமாக 500 ரூபாய் என்பார் . தம்பி 300 ரூபாய் என்பார் . வாடிக்கையாளர் 500 ரூபாய் பெறுமானமுள்ள ஆடை 300 ரூபாய்க்குக் கிடைப்பதாக அகமகிழ்ந்து பேரம் எதுவும் பேசாமல் 300 ரூபாயைக் கொடுத்து ஆடையை வாங்கிச் சென்று விடுவார் . உண்மையில் அந்த ஆடையின் மதிப்பு 100 ரூபாய் என்பதாக இருக்கும் . வாடிக்கையாளர்களின் பேராசைகள் இவ்வாறு வினோதமான விதங்களில் வெளிப்படுவதாக இருக்கின்றன . பங்குச்சந்தையிலும் இதனை நாம் அன்றாடம் பார்க்கலாம் . கரடிச்சந்தையில் 10 மடங்கு PE யில் விலை போகாத பங்கு காளைச்சந்தையில் சர்வசாதாரணமாக 30 மடங்கு PE ல் வர்த்தகமாவதை நீ பார்த்ததில்லையா ? ஆனால் சந்தையில் ஒரு தரமான முதலீட்டு உத்தி பெரும்பாலோனோரால் கடைப்பிடிக்கப்படாமல் அந்த வைரம் காலங்காலமாக நடுத்தெருவில் கிடக்கிறது . அது என்ன உத்தி என்று கேட்டது . இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தும் நீ சொல்லாமல் இருந்தால் உன் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறும் என்றும் எச்சரித்தது .
" நீ சொல்வது உண்மை தான் . Futures and Options என்று அழைக்கப்படும் பெறுதிகள் இழப்புக் காப்புக் கருவிகள் மட்டுமே (Hedging tools) அவை சொத்து சேர்க்கும் கருவிகள் அல்ல . ஆனால் இந்தியப் பங்குச்சந்தை உலக அளவில் F & O வணிகத்தில் முதலிடத்தில் இருப்பது முதலீட்டாளர்களின் அறியாமையையும் ஆசையையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது . சமீபத்தில் கூட இந்திய முதலீட்டாளர்கள் Game Stop என்பதான அந்நிய தேசத்து அக்கினிப்பந்தைக் (பங்கை) கையில் பிடித்து விளையாடிய வண்ணமாக இருந்ததை நீ அறிந்திருக்கலாம் . அக்கினிப் பந்தில் சிறிதென்றும் பெரிதென்றும் உள்ளதா என்ன ? எத்தனை பேர்களின் பங்குத் தொகுப்பு எரிந்து சாம்பலானதோ அந்தப் பரமேஸ்வரனுக்குத் தான் வெளிச்சம் . ஆனால் பெஞ்சமின் கிரகாம் தொடங்கி டெம்பிள்டன் , வாரன் பஃபெட் முதலான முதலீட்டு குருமார்களின் மதிப்பு முதலீட்டு உத்தி என்ற வைரம் யாராலும் கடைப்பிடிக்கப்படாமல் ஒரு ஓரமாகக் கிடக்கிறது "
விக்கிரமாதித்தனின் பதிலால் அவனுடைய மௌனம் கலைந்தது . வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் தலைகீழாகத் தொங்கத் தொடங்கியது .
Comments
Post a Comment