ஆத்தும குணம் - 2

ஆத்தும குணம் - 2

(Basic Instinct - 2)

[ இந்தக் கதையைத் தனியாகப் படித்தாலும் புரியும் . ஆனால் இது ஆத்தும குணம் -1 ன்    தொடர்ச்சி . ஆத்தும குணம் - 1 ஐ படித்து விட்டு இதைப் படித்தால் சுவை பெருகும் ]

ராஜா ராமன் ஒரு பங்குச்சந்தை ஊக வணிகன் . அவன் சந்தையில் தினசரி வணிகம் , குறுகிய கால வணிகம் , முதல் பொது வெளியீட்டில் பங்குகளைப் பெற்று பட்டியல் விலைக்கு விற்பது , பங்குகளை விற்று வாங்குவது மற்றும் F & O என்று அழைக்கப்படும் பெறுதிகள் என்று பலவற்றையும் செய்து வந்தான் . பணக் கொள்முதல் என்பதை விட புத்திக் கொள்முதல் ஏராளம் சம்பாதித்திருக்கிறான் . ஆனால் ராஜா ராமனுக்கு வரவர சந்தை சலிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது . அவன் சந்தைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும் . ஆனால் இருபது ஆண்டுகள் ஆன மாதிரி ஒரு சோர்வு ... அவன் நண்பர் ஒருவர் மதிப்பு முதலீட்டாளர் . அவர் வெகு காலத்திற்கு முன்னர் கொடுத்த The Intelligent Investor புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான் . எத்தனை முறை படித்தும் அதன் முதல் பத்து பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை . எப்படி சந்தை ஊக வணிகங்கள் சறுக்குகிறதோ அது மாதிரி இந்தப் புத்தகமும் சறுக்கும் ஒரு வழுக்கு மரமாக இருந்தது . அடக்கடவுளே என்பதாக முணுமுணுத்தான் . எதிரில் எட்டு முழம் வேட்டி மற்றும் ஜிப்பா சகிதம் வந்து நின்ற கடவுளைப் பார்த்ததும் அவனுக்குப் பத்து வருடங்கள் முன்பு தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் மின்னலாய் நினைவில் வெட்டியது .

இதே மாதிரி தான் பத்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் தன் சந்தை முதலீடுகளைக் கணக்கிட்டு மனம் வருந்திய பொழுதில் கடவுள் வந்தது , தான் அவரிடம் வரம் கேட்டது , முன்னர் செய்த முதலீட்டுத் தவறுகளைக் களைவதற்காகக் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து பத்து வருடங்கள் முன் சென்றது ஆனால் துரதிர்ஷ்டவசமாக செய்த தவறுகளையே மீண்டும் செய்தது எல்லாம் நினைவுக்கு வந்தன . அவனுக்குக் கடவுளை ஏறெடுத்துப் பார்க்கவே கூச்சமாக இருந்தது .

ஆனால் கடவுள் எதுவுமே நடவாதது மாதிரி என்ன விஷயம் என்று கேட்டார் . அதே கருணை ததும்பும் சாந்தமே வடிவான முகம் . உண்மையிலேயே கடவுளுக்குப் பெரிய மனசு .

மீண்டும் கால இயந்திரத்தில் பயணம் செய்யக் கேட்பதற்கு ராஜா ராமனுக்கு ஒரு மாதிரி இருந்தது . கடவுள் கேட்காமலே கொடுப்பவர் அல்லவா ? அவராகவே , " கால இயந்திரத்தில் மீண்டும் பயணிக்க வேண்டுமா ? " என்பதாகக் கேட்டார் . ராஜா ராமனுக்கு IPO வில் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்ற Zomato பங்கை இரட்டிப்பு விலைக்கு விற்றது மாதிரி ஒரே மகிழ்ச்சி . 

கடவுள் கால இயந்திரத்தில் ராஜா ராமனை அனுப்ப இரண்டு நிபந்தனைகளுடன் ஒத்துக் கொண்டார் . முதலாவது நிபந்தனை கால இயந்திரத்தை மூன்று முறை மட்டுமே  பயன்படுத்த முடியும் . இந்த மூன்று முறை என்பது நிகழ் காலத்திற்குத் திரும்பி வருவதையும் சேர்த்த கணக்கு . இரண்டாவது இறந்த காலத்திலும் எதிர் காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அவர்களைப் பாதிக்கும் வகையில் ஒரேயடியாகக் குறுக்கிட்டு விடக் கூடாது .

ராஜா ராமன் இந்த இரண்டு நிபந்தனைகளையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டான் . அவனைப் பொறுத்தவரை இருபதாண்டுகள் காலத்தில் முன்னோக்கிச் சென்று ஏதாவது ஒரு பெட்டிக்கடையில் பிஸினஸ் லைன் பத்திரிக்கையை வாங்கி விட்டு நிகழ்காலத்திற்கு வர வேண்டியது . பின்னர் அந்தப் பத்திரிக்கையில் இருபதாண்டுகளின் பின்னர் பன்மடங்கு ஆகியிருக்கும் பங்குகளை ஆகப்பெரிய எண்ணிக்கையில் வாங்கி வைத்து விட வேண்டியது . 

ராஜா ராமன் கடவுளுக்குப் பெரிய வணக்கம் ஒன்றைப் போட்டு விட்டுக் கால இயந்திரத்தில் 20 என்ற எண்ணை அழுத்தினான் . பதட்டத்தில் + குறியீட்டை அழுத்துவதற்கு மாறாக  - ஐ அழுத்தி சரியாக (தவறாக) இருபது வருடங்கள் பின்னோக்கி 2000 ஆவது ஆண்டிற்குச் சென்று விட்டான் . 

ராஜா ராமனுக்குச் சற்று வருத்தமாக இருந்தது . சரி , வந்தது வந்து விட்டோம் , கொஞ்ச நேரம் 2000 ஐ சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று தோன்றியது . பம்பாய் பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதன்முதலாக 6000 புள்ளிகளைத் தொட்ட நேரம் . பங்குச்சந்தை எங்கும் ஒரே ஆரவாரமாக இருந்தது . தலால் தெருவில் இங்குமங்குமாக நடந்தான் . எங்கு பார்த்தாலும் ஐடி பங்குகளைப் பற்றிய பேச்சாகவே இருந்தது . ஒரு பத்துப் பேர் கூடியிருந்த கூட்டத்தில் தன்னை மறந்து ஐடி பங்குகளை இன்றைய உச்சத்தில் விற்று விடுமாறு கூறிய ராஜா ராமனை அனைவரும் ஙே என்று பார்த்துச் சென்றனர் . ஒரு கடையில் அல்லயன்ஸ் பரஸ்பர நிதியின் துறை சார்ந்த மூன்று நிதிகளைக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தனர் . பத்து ரூபாய் யூனிட் பத்து ரூபாய்க்கு ... பத்து ரூபாய் யூனிட் பத்து ரூபாய்க்கு ... முதலீட்டாளர்கள் ஐடி துறை சார்ந்த நிதிகளைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய வண்ணம் இருந்தனர் . ராஜா ராமன் பேஸிக் இண்டஸ்ட்ரீஸ் பரஸ்பர நிதி தான் சிறப்பாகச் செல்லும் என்றும் அதை வாங்குமாறும் சொன்னதை யாரும் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை . ஒருவர் " நீங்க அனலிஸ்டா ? " என்றார் . ராஜா ராமன் இல்லை என்பதாக முழுங்கினான் . யாரோ டெரரிஸ்ட் என்றார்கள் . எங்கிருந்தோ வந்த சீருடையணியாத போலீஸ் ராஜா ராமனை சுற்றி வளைத்தது . " நீ என்ன தீவிரவாதியா ? அதென்னடா கையில ? வெடிகுண்டா ? "

" ஐயா ! இது ... இது ... "

போலீஸ் ராஜா ராமன் கையிலிருந்த கால இயந்திரத்தை லத்தியால் தட்டி விட்டது . அப்போது தவறுதலாக இயந்திரம் அழுத்தப்பட்டு ராஜா ராமன் இப்போது 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்று விட்டான் . அமெரிக்க டவ் ஜோன்ஸ் குறியீடு 802 என்ற அளவில் வர்த்தமாகிக் கொண்டிருந்தது . வால் ஸ்ட்ரீட்டிலும் முதலீட்டாளர்கள் எந்தப் பங்குகளை வாங்கலாம் என்று காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர் . ராஜா ராமன் வான் கார்ட் இன்டெக்ஸ் நிதியை வாங்குமாறு அறிவுரை வழங்கினான் ( அடுத்தவர்களுக்கு ராஜா ராமன் வழங்கும் ஆலோசனைகள் எப்போதுமே சரியாக இருக்கும் . அவனுக்கு மட்டும் ஆத்தும குணம் விழித்துக் கொள்ளும் ) ராஜா ராமனுக்கு வரலாற்று அறிவு அவ்வளவாகக் கிடையாது . குறியீட்டு நிதிகள் unamerican என்பதான ஒரு எண்ணப்போக்கு நிலவி வந்த காலம் அது . ஒருவர் நீ ரஷ்ய உளவாளியா என்று ராஜா ராமனின் சட்டையைப் பிடிக்க வந்ததும் ராஜா ராமன் அவசர அவசரமாக தற்காலம் என்ற பொத்தானை அழுத்தினான் . 

கடவுள் அதே புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார் . பயணம் எவ்வாறு இருந்தது என்று அக்கறையாக விசாரித்தார் . ராஜா ராமன் இரட்டிப்பான Zomato பங்கை IPO ஒதுக்கீட்டில் கோட்டை விட்ட மனநிலையில் இருந்தான் . கடவுள் கொடுத்த வரம் இவ்வாறு சாபமாகி விட்டதே ?

ராஜா ராமன் கடவுள் கையில் வைத்திருந்த கால இயந்திரத்தை ஏக்கத்துடன் பார்த்தவாறு இருந்தான் . கடவுள் அவன் மனவோட்டத்தை உணர்ந்தவராக , " புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக நீ காலப்பொறியில் ஏறி அந்தக் காலங்களுக்கே சென்று விடலாமே ? மேலும் 'தன் வரலாறுகளை'ப் படித்தால் கூடு விட்டுக் கூடு பாய்ந்து அந்த நூலை எழுதிய ஆசிரியராகவே நீ மாறி விடலாமே ! நினைவுப்பாதையில் பயணித்தால் இறந்த காலம் . கனவுப்பாதையில் பயணித்தால் எதிர்காலம் . சரி , உன் பயணத்தின் மூலமாக நீ என்ன பாடங்களைக் கற்றுக் கொண்டாய் ? "

அவரிடம் என்ன பதிலைச் சொல்வது என்று ராஜா ராமனுக்கு யோசனையாக இருந்தது . காலப்பொறியை இனி கவனமாகக் கையாள வேண்டும் .

கடவுள் தொடர்ந்த வண்ணம் இருந்தார் . " 2000 ல் சென்செக்ஸ் 6000 புள்ளிகளில் இருந்தது. இன்று 60000. அதே மாதிரி 1975 ல் 800 புள்ளிகளில் இருந்த டவ் இன்றைக்கு 36000 புள்ளிகளில் இருக்கிறது. எதிர்காலத்திலும் இவ்வாறு கூடிய வண்ணமாகவே இருக்கும் "

ராஜா ராமனின் ஆத்தும குணம் சட்டென்று விழித்துக் கொண்டது . காலப்பொறியில் சென்று மல்டி பேக்கர் பங்குகளைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாகக் கடவுளிடமே மல்டி பேக்கர் பரிந்துரைகளைக் கேட்டால் என்ன ?

கடவுள் அவன் எண்ண ஓட்டத்தை உணர்ந்து சிரித்து விட்டார் . " என்னிடம் மக்கள் ஏதேதோ வரங்களைக் கேட்டிருக்கிறார்கள் . ஆனால் பங்குப் பரிந்துரைகளைக் கேட்ட முதல் நபர் நீ தான் . அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீடாக வாங்கிய பங்குகள் நீண்ட காலத்தில் மல்டி பேக்கர் பங்குகளாக மலர்கின்றன . மல்டி பேக்கர் பங்குகள் என்று தனிப்பட்டு எதுவும் கிடையாது . ஒரு பங்கை மல்டி பேக்கராக மாற்றுவதும் மாற்றாததும் உன் கையில் மட்டுமே உள்ளது "

கடவுள் மேலும் தொடர்ந்தார் .

"உன்னுடைய இறந்த காலம் உனக்குத் தெரியும் . அதுவும் உனக்கு இரட்டிப்பு இறந்த காலம் . அதன் மூலமாக நீ முதலீட்டுப் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் . எதிர் காலம் என்று தனிப்பட்டு எதுவும் கிடையாது . நிகழ் காலத்தில் நீ என்ன செய்கிறாய் என்பதைப் பொறுத்து உன் எதிர்காலம் அமையப் பெறும் . இன்னும் சொல்லப்போனால் எதிர் காலம் என்பது ஒன்றன் பின் ஒன்றான நிகழ் காலங்களால் ஆனது . Zen is to be present in present என்று நீ கேள்விப்பட்டதில்லையா ? இறந்த காலம் என்பது வெறும் நினைவு . எதிர் காலம் என்பது கனவு . அந்தக் கனவை இனிதாக்கம் செய்வது நிகழ் காலம் . அதனால் தான் அது பரிசு என்று பொருள்படும் present என்று அழைக்கப்படுகிறது . நிகழ்காலம் என்பது தினம் தினம் உனக்குக் கொடுக்கப்படும் பரிசு என்பதை நீ உணர்ந்தாலே போதுமானது "

ராஜா ராமன் , அடுத்து கடவுளிடம் என்ன கேட்கலாம் என்ற குருட்டு யோசனையில் இருந்தான் . விழித்துப் பார்த்தால் கடவுளைக் காணோம் . அடக்கடவுளே என்று இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்தான் . கடவுள் போனவர் போனவர் தான் .

" அடக்கடவுளே ! "

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14