நலம் தரும் புறக்கணிப்பு - 1
நலம் தரும் புறக்கணிப்பு - 1
Benign Neglect - 1
Passive என்பதற்கான சரியான தமிழ் மொழிபெயர்ப்பு கிட்டவில்லை. அகராதியின் செயலற்ற, மந்தமான, அடங்கிப்போகிற ... என்ற எந்த விளக்கங்களும் ஏற்கும் படியாக இல்லை. மொழி, தவறான புரிதலுக்கான ஊற்றுக்கண் (Language is the source of misunderstandings) என்று Antoine de exupery கூறியது ஞாபகத்திற்கு வருகிறது. Passive income என்றால் ஒரு முறை முதலீடு செய்து வாழ்நாள் முழுவதும் வருமானம் பெறுவது என்பது ஓரளவு பொருந்திப் போகிறது. நிரந்தர வைப்பு முதலீடுகள், பங்கு முதலீடுகள் போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.
நிரந்தர வைப்பு முதலீட்டில் என்ன பிரச்னை என்றால் உங்கள் ஆரம்ப முதலீடு வளராது. நிரந்தர வைப்பு முதலீட்டுத் திட்டத்தில் 50000 ரூபாய் முதலீடு செய்தால், வருட வட்டி 8 சதவீதம் என்று கொண்டால் வருடத்திற்கு 4000 ரூபாய் கிடைக்கும். திட்டத்தின் முடிவில் உங்கள் ஆரம்ப முதலீடான 50000 ரூபாய் மட்டுமே திரும்பக் கிடைக்கும். மேலும் 8 சதவீத வட்டி என்பதும் மாறாது. அதனால் தான் நிரந்தர வைப்பு முதலீடுகள், நிலையான வருமான முதலீடுகள் (Fixed Income investments) என்று அழைக்கப்படுகின்றன.
பங்குகளில் இது சற்று சுவாரஸ்யமாக மாறுகிறது. தரமான நிறுவனங்கள் அதிகரித்து வரும் பங்காதாயங்களைக் கொடுக்க வல்லவை. முதலீட்டின் மூலமாக நாம் 'உண்மையான வருமானம்' ( Real return) ஈட்ட வேண்டும். அது என்ன உண்மையான வருமானம்? உங்கள் முதலீட்டு வருமானத்திலிருந்து பணவீக்கத்தைக் கழித்தால் கிடைப்பது தான் உண்மையான வருமானம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் உங்கள் முதலீட்டு வருமானம் பணவீக்கத்தை விஞ்சியதாக இருக்க வேண்டும். அதிகரித்து வரும் பங்காதாயங்கள் பணவீக்கத்தை வெல்லும் வல்லமை பெற்றவை. பங்குகளின் சுவாரஸ்யம் இதனுடன் முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இனிமேல் தான் இன்னும் சுவாரஸ்யமாக ஆகப்போகிறது. இந்த அதிகரித்து வரும் பங்காதாயங்களைக் கொடுக்கக்கூடிய பங்குகளின் விலையும் அதிகரிக்கத் தொடங்கும். நிரந்தர வைப்பு நிதிகளுடன் ஒப்பிட்டுச் சொல்வதானால் அந்த 8 சதவீத வட்டி சிறிது சிறிதாக அதிகரித்த வண்ணம் இருக்கும். அந்த 50000 ரூபாயின் மதிப்பும் அதிகரிக்கத் தொடங்கும். இது மட்டுமல்ல. நிறுவனம் நன்கு வளர்ந்து உபரி நிதி சேர்ந்த பின்னர் இலவசப்பங்குகளை வழங்கும். இந்த இலவசப்பங்குகளும் பங்காதாயங்களை வழங்கும். சில நிறுவனங்கள் இலவசப்பங்குகளை வழங்கத் தொடங்குவதற்கு முன்னர் வழங்கிய அதே அளவு பங்காதாயத்தை இலவசப்பங்குகளை வழங்கிய பின்னரும் வழங்கும். அவ்வாறு வழங்கினால் பங்காதாயம் இரட்டிப்பாகி விடும் என்று சொல்லத் தேவையில்லை. இன்னும் சில நிறுவனங்கள் தங்களது முதலீட்டுத் தொகுப்பைத் ( நிறுவனங்களும் தனி நபர் போல தங்களது உபரி நிதியை பிற நிறுவனங்களில் முதலீடு செய்யும்) தனி நிறுவனமாக்கி அதனைப் பங்குச்சந்தையில் பட்டியலிடும். அது நிறுவனப் பிரிப்பு (demerger) என்று அழைக்கப்படும். பஜாஜ் ஆட்டோ மற்றும் சுந்தரம் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது முதலீட்டுத் தொகுப்பைத் தனி நிறுவனமாகப் பிரித்துப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டிருக்கின்றன. இன்னும் சில நிறுவனங்கள் நன்கு வளர்ந்த தங்களது நிறுவனத்தின் ஒரு பகுதியைத் தனியே பிரித்து அதனைப் பங்குச்சந்தையில் பட்டியலிடும். Godrej Industries நிறுவனத்திலிருந்து இவ்விதம் பிரிந்தது தான் Godrej Consumer Products நிறுவனம். இவ்விதம் பிரிக்கப்பட்ட நிறுவனங்களும் அதிகரித்து வரும் பங்காதாயங்கள் மற்றும் இலவசப்பங்குகளை வழங்கும்... ஆனால் நிரந்தர வைப்பு முதலீட்டில் இது அப்படியே தலைகீழாக நடக்கிறது. மாறாத வட்டி விகிதத்தால் பணவீக்கத்தை விஞ்ச முடியாமல் போகிறது. நீங்கள் பத்து வருடம் நிரந்தர வைப்பு முதலீட்டில் 50000 ரூபாய் முதலீடு செய்து பத்து வருடம் கழித்து அந்த 50000 ரூபாயைத் திரும்பப் பெறும் போது நீங்கள் திரும்பப் பெறுவது 50000 ரூபாய் அல்ல. உபயம்: பணவீக்கம். நாம் இந்த 'நிரந்தரம்' என்பதற்குக் கொடுக்கக்கூடிய விலை மிகவும் அதிகம்.
ஆனால் பங்குச்சந்தையில் என்ன பிரச்னையென்றால் தரமான நிறுவனங்களாகப் பார்த்து மதிப்பு முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். நடுவில் சில பல காரணங்களால் பங்குச்சந்தை தலைகுப்புறக் கவிழும் போது நீங்கள் எதிர் நீச்சல் போடக் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் பார்த்துப் பார்த்து வாங்கிய பங்கு நீங்கள் வாங்கிய விலையின் பாதியில் ( நன்றாகக் கவனியுங்கள். விலையின் பாதியில். மதிப்பின் பாதியில் அல்ல. விலை வேறு. மதிப்பு வேறு) வர்த்தகமாகும் போது இன்னும் கொஞ்சம் பங்குகளை வாங்கிச் சேர்க்க வேண்டும். இதையும் மீறி சில நிறுவனங்கள் நிரந்தரமாக நலிவடையும் போது அவற்றை விற்று விட்டு அதிக சேதாரமில்லாமல் வெளியேறும் கலையையும் கற்றுத் தெளிய வேண்டும். பங்குச்சந்தையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நம் கணக்குகள் சில சமயம் தப்பாகி விடும். அதனை நாம் எவ்விதம் எதிர் கொள்கிறோம் என்பதில் தான் நமது வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது. இவ்வாறாக தரமான பங்குகளை இனங்கண்டு முதலீடு செய்வதோடு மட்டுமின்றி காளைச்சந்தையிலும் கரடிச்சந்தையிலும் அந்தப் பங்குகளை நீங்கள் கைக்கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நீங்கள் செயலற்று, மந்தமாக, அடங்கிப் போக (passive) வேண்டும். அதற்காகத் தூங்கி விடக்கூடாது. Benign neglect என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு நலம் தரும் புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும் . இவ்விதம் செயலற்று இருப்பதும் ஒரு செயலே. இன்னும் சொல்லப்போனால் மிகவும் கடினமான செயல். அந்தக் கடினமான செயலுக்கு சந்தை கொடுக்கக்கூடிய பரிசு தான் உங்களுக்கான வருமானம்.
மொழியின் இயலாத்தன்மை குறித்த மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் வைர வரிகளுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன். ' ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத விஷயத்தை ஒரு சாதாரண ஸ்பரிசம் தெரிவித்து விடுகிறது. இன்னமும் கூடத் தான். மனிதன் பேச்சிலே இவ்வளவு வல்லாளன் ஆன பிறகும் கூடத் தான்'
Comments
Post a Comment