ரூபாய் பங்கு முதலீடு

ரூபாய் பங்கு முதலீடு

Rupee Stock Investing

தமிழில் ரூபாய் பங்குகள் என்று அழைக்கப்படும் Rupee Stocks பற்றிய ஒரு பேச்சு வந்தது. என் நண்பர் ஒருவரின் 'ஒரு நாள்' நண்பர் இந்த ரூபாய் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலமாக தினம் இலட்சங்களில் சம்பாதிக்கிறாராம். உண்மை விவரிக்கப்படும் போதே பொய்யாகிறது என்ற பொன்மொழி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. முன்பெல்லாம் நண்பர் இந்த மாதிரி தகவல்களைக் கேட்டால் கொஞ்சம் சோர்வாகி விடுவார். நாம் எல்லாம் ஒன்றுக்கும் இலாயக்கில்லை ... இத்யாதி... இத்யாதி... இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இந்த நேரத்தில் ஒரு இரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். காதைக் கொஞ்சம் கிட்டே கொண்டு வாருங்கள். மேலும் இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லி விடாதீர்கள். இந்த மாதிரி தின வர்த்தகம் மூலமாக ஒருவர் இலட்சங்களில் சம்பாதிப்பதாக நான் கேள்விப்பட்டால் எனக்கும் ஒரு விதமான மனச்சோர்வு வந்து விடும். பொறாமையினால் அல்ல, மாறாக நாம் செல்லும் பாதை சரியானது தானா என்பதான ஒரு கேள்வி எழுந்து விடும். உடனே நான் என்ன செய்வேன் என்றால் முதலீட்டாளர்களின் பைபிள் என்று அழைக்கப்படும் The Intelligent Investor புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவேன். அதில் ஒரு பத்து பக்கம் படித்தால் தான் என்னால் தன்னிலை அடைய முடியும். இந்த ரூபாய் பங்கு என்பது என்ன? இவை எங்கிருந்து வந்தன? உண்மையிலேயே இவை எந்த வகையான பங்குகள்? இவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாமா? ரூபாய் பங்குகளைக் கொஞ்சம் கிட்டத்தில் சென்று பார்க்கலாம்.

பிறக்கும் போதே ரூபாய் பங்குகள் ரூபாய் பங்குகளாகப் பிறக்கவில்லை. ரூபாய் பங்குகள் ஒரு காலத்தில் செயலாக இருந்தவை தான். காலத்தின் கோலத்தில் அவை இங்ஙனம் ரூபாய் பங்குகளாக உருமாற்றம் அடைந்து விட்டன. உதாரணமாக ரிலையன்ஸ் பவர் பங்குகளை எடுத்துக் கொள்ளலாம். IPO விலை ரூபாய் 269/- இன்றைய விலை வெறும் ரூ.13.40/- IPO வெளிவந்து கிட்டத்தட்ட 13  ஆண்டுகள் கடந்து விட்டன. நிறுவனம் இத்தனை ஆண்டுகளாக நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. பங்கின் விலையோ அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. இவ்வாறு தான் ரூபாய் பங்குகள் உருவாக்கம் கொள்கின்றன. இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடித்தல் தான் ரூபாய் பங்கு முதலீடு என்று அழைக்கப்படுகிறது. 

புரியாத விஷயத்தை புரிந்த விஷயம் கொண்டு தான் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் மதிப்பு முதலீட்டைக் கொண்டு ரூபாய் பங்கு முதலீட்டைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். மதிப்பு முதலீட்டிற்கான அடிப்படைப் பகுப்பாய்வை மேற்கொள்ள முதலில் நிறுவனம் இலாபம் ஈட்ட வேண்டும். அவ்வாறு இலாபம் ஈட்டினால் தான் நிகர இலாபத்தை மொத்தப் பங்குகளால் வகுத்து ஒரு பங்குச் சம்பாத்தியம் எவ்வளவு என்பதாகக் கணக்கீடு செய்ய முடியும். பங்கின் விலையை இந்த ஒரு பங்குச் சம்பாத்தியத்தால் வகுத்தால் கிடைக்கப் பெறுவது PE விகிதம். இந்த PE விகிதத்தைக் குறை மதிப்பில் வாங்குவது மதிப்பு முதலீடு என்பதாக அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த PE விகிதம் கரடிச் சந்தையில் குறை மதிப்பில் இருக்கும். ஒரு நல்ல நிறுவனம் (தற்காலிகமாக மற்றும் எதிர்காலத்தில் தீர்வு காணக்கூடிய) ஏதேனும் பிரச்னை ஒன்றில் சிக்கித் தவிக்கும் போதும் இந்த மாதிரியான குறை மதிப்பில் வர்த்தகமாகும். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களை இனங்கண்டு முதலீடு செய்தால் வருடாவருடம் பங்காதாயம் கிடைக்கப்பெறும். நிறுவனம் நன்கு வளர வளர பங்காதாயம் கூடிய வண்ணம் இருக்கும். இந்த மாதிரியான கூடுதலான பங்காதாயங்களைக் கொடுக்கக்கூடிய பங்கின் விலையும் கூடிய வண்ணமாக இருக்கும். நிறுவனம் நன்கு வளர்ந்த பின்னர் இலவசப்பங்குகளை வழங்கும். இந்த இலவசப்பங்குகளும் பங்காதாயங்களை வழங்கும். மேலும் பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பு என்று வண்ணமயமாக வானமே எல்லையாக இருப்பது தான் மதிப்பு முதலீடு (Value Investing) என்று அழைக்கப்படுகிறது. 

ரூபாய் பங்கு முதலீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். ரூபாய் பங்குகளில் இலாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இலாபம் ஈட்டினால் தான் அது ரூபாய் பங்கு கிடையாதே? எனவே ஒரு பங்குச் சம்பாத்தியம் எவ்வளவு என்று கணக்கிட இயலாது. PE மதிப்பும் கிடையாது. பங்காதாயம்? மூச்! அப்புறம் ரூபாய் பங்கில் எப்படித்தான் பணம் சம்பாதிப்பதாம்? அங்கு தான் பிரச்னையே வருகிறது. ரூபாய் பங்கில் 'முதலீடு' செய்பவர் கால் முட்டாள் என்று வைத்துக் கொள்வோம். இவர் அரை முட்டாளைத் தேடி அலைய வேண்டும். அவரிடம் தான் இவர் ஒரு ரூபாய் பங்கை இரண்டு ரூபாய்க்கு விற்க முடியும். இந்த அரை முட்டாள் ஒரு முக்கால் முட்டாளைத் தேடி அலைய வேண்டும். முக்கால் முட்டாள் முழு முட்டாளை... தங்கத்தில் முதலீடு செய்வதிலும் இதே பிரச்னை தான். நன்றாக நினைவில் கொள்ளுங்கள், ஒரு முதலீட்டை நீங்கள் ஒரேயொரு முறை மேற்கொள்ள வேண்டும். அந்த முதலீடு நீங்கள் வாழும் போதும், வாழ்க்கைக்குப் பிறகும் பங்காதாய (dividend) வடிவிலும், முதலீட்டுப் பெருக்கத்தின் (capital appreciation) மூலமாகவும் உங்களுக்கு வருமானத்தைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். அதுவே ஒரு சிறந்த முதலீடு. மாறாக ஒரு முதலீட்டை விற்றுத் தான் வருமானம் ஈட்ட முடியும் என்றால் அது ஒரு சிறந்த முதலீடு அல்ல. 

இவ்வாறு ரூபாய் பங்கு முதலீட்டில் முட்டாள்களைத் தேடியலைவது ஒருபுறம் இருக்கட்டும். இந்த மாதிரி , பங்குகளை தினசரி வாங்குவதும் விற்பதுவுமாக பல்வேறு முடிவுகளை சரியாகவும் அதே சமயம் தொடர்ச்சியாகவும் எடுப்பது எந்த அளவு சாத்தியம்? மேலும் உராய்வுச்செலவுகள் (frictional costs) என்று அழைக்கப்படும் bid/ask spread, தரகர் தரகு மற்றும் வரியையும் கணக்கில் கொள்ள வேண்டும். பார்த்துப் பார்த்து முதலீடு செய்தாலே Cox & Kings போன்ற களைகள் அவ்வப்போது முளைத்து விடுகின்றன. ரூபாய் பங்கு முதலீடு என்பது குப்பையுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருப்பதற்கு ஒப்பானதாகும்.

ரூபாய்  பங்குகளில் முதலீடு செய்பவர்கள் மட்டுமல்ல, பொதுவாக நாம் எல்லோருமே நம்முடைய வெற்றிக்கதைகளைக் கொஞ்சம் ஜிகினா வேலைப்பாடுகள் செய்து சொல்வதும், தோல்விகளைக் காலடியில் போட்டு மறைத்து விடுவதுமாக இருப்பது ரொம்பவும் இயல்பானது. அந்த வகையில் என் மானசீக குருவான வாரன் பபெட்டை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்கிறேன். வாரன் பஃபெட் தனது முதலீட்டாளர்களுக்கு எழுதும் கடிதத்தில் முதலில் அவருடைய தவறுகளைப் பட்டியலிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். நம்முடைய வெற்றிகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியாது. மாறாக தோல்விகளிலிருந்து மட்டுமே பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறாக வாழ்க்கை நமக்கு சுட்டிக் காட்டும் தவறுகள் அது கொட்டிக் கொடுக்கும் பரிசு.

ரூபாய் பங்கு முதலீட்டின் மூலமாக ஒரு சிலர் இலட்சாதிபதியாகி இருப்பதாகக் கேள்வி. ஆனால் அவர்கள் அதற்கு முன்னர் கோடீஸ்வரர் ஆக இருந்தவர்கள் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14