பங்குச் சலிப்பான் - ஒரு சிறிய அறிமுகம்

பங்குச் சலிப்பான் - ஒரு சிறிய அறிமுகம்

நிறுவனப் பங்குகளை சில குறிப்பிட்ட அளவுருக்களில் (parameters) சலித்து எடுத்துக் கொடுப்பவை பங்குச் சலிப்பான்கள் (Stock Screener) என்று அழைக்கப்படுகின்றன. 

இணையத்தளங்களில் ஏராளமான பங்குச் சலிப்பான்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. பங்குச் சலிப்பான்களுக்கென்று screener.in என்ற தனிப்பட்ட இணையத்தளம் கூட உள்ளது. சில மேம்பட்ட பங்குச் சலிப்பான்களைப் பயன்படுத்தத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். 

பங்குகளை முக மதிப்பு வாரியாகப் பிரித்துக் கொடுக்கும் அல்லது அகர வரிசைப்படி A யில் ஆரம்பிக்கும் பங்குகள் என்பதில் தொடங்கி நிதி விகிதங்களுக்கான சலிப்பான், சந்தை மதிப்பு சலிப்பான்... என்பதாக எல்லா வகையிலும் பங்குச்  சலிப்பான்கள் உள்ளன. இது போக அகழி முதலீடு என்பதான மென் சலிப்பான்களின் (Soft Screen)  ஒரு வரிசை உள்ளது.

சலிப்பான்கள் வெறும் இயந்திரங்கள் மட்டுமே. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது நமது தனிப்பட்ட திறமையைப் பொறுத்தது. புரிந்து பயன்படுத்த வில்லையென்றால் நம்மைத் தவறாக வழி நடத்தி விடும். உதாரணமாக பங்கு ஈட்டு விகிதம் (பத்து ரூபாய் முக மதிப்பு உள்ள ஒரு நிறுவனம் பத்து ரூபாய் பங்காதாயம் வழங்கினால் பங்காதாயம் 100 சதவீதம். அந்தப் பங்கு 200 ரூபாய்க்கு வர்த்தகமாவதாகக் கொண்டால்  பங்கு ஈட்டு விகிதம் 5 சதவீதம்) என்ற எளிமையான சலிப்பானை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நிறுவனத்தின் பங்கு ஈட்டு விகிதம் 8 சதவீதம் என்பதாக சலிப்பான் சொல்லும். முந்தைய வருடம் அந்த நிறுவனம் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசப் பங்குகளை வழங்கியிருக்கும். அடுத்த வருடம் முந்தைய வருடத்தைப் போலவே பங்காதாயம் வழங்கப்பெற்றாலும், அதிகரிக்கப்பட்ட மூலதனத்தைக் கணக்கில் கொண்டால், பங்காதாயம் பாதியாகக் குறைந்து விடும். பங்கு ஈட்டு விகிதமும் பாதியாகி விடும். 

சில நிறுவனங்கள் சில பல காரணங்களுக்காக சிறப்பு பங்காதாயங்களை (one time dividend) வழங்கும். அடுத்த வருடம் இது தொடராது. Majesco நிறுவனத்தை இந்த வகையில் சேர்க்கலாம் . நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் சிறப்புப்  பங்காதாயமாக 19480 சதவீதம் வழங்கியிருக்கிறது . அதன் தற்போதைய பங்கு ஈட்டு விகிதம் 1044.5 சதவீதம் . இத்தகைய நிறுவனங்களின் பங்கு ஈட்டு விகிதங்கள் இவ்வாறாக அசாதாரணமான அளவீடுகளில் இருக்கும் [பொதுவாகப் பங்கு ஈட்டு விகிதம் கடன் பத்திர முதலீட்டிற்குச் சராசரியாகத் தரப்படும் 6 சதவீதத்தை விஞ்சினால் ' வாங்குபவர் கவனம்' (buyer beware) என்ற அடிப்படையில் சலிப்பானை மீண்டும் சலிக்கத் தொடங்கி விடவேண்டும்] பங்கின் விலை குறையக் குறைய பங்கு ஈட்டு விகிதம் அதிகரித்த வண்ணம் இருப்பது தான் இதற்கான காரணம். 

IL & FS Investment Managers நிறுவனப் பங்கின் பங்கு ஈட்டு விகிதம் 10 சதவீதம். வீடு தரையின் மேல் நிற்கவில்லை. மாறாக ஒரு பெண்ணின் மேல் நிற்கிறது என்பதாக ஒரு பழமொழி உண்டு. அது மாதிரி பங்குச்சந்தை நம்பிக்கையின் மேல் நிற்கிறது. நம்பிக்கை போனால் எல்லாமே போனதாக அர்த்தம். IL & FS குழுமம் நம்பிக்கையைத் தொலைத்து விட்டது. வரும் வருடங்களில் இந்த அளவு பங்காதாயம் கிடைக்கப்பெறும் என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. 

இந்தத் தகவல்களையெல்லாம் சலிப்பான் சொல்லாது. நாம் தான் மெனக்கெட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சலிப்பான் என்பது கத்தி மாதிரி. முறையாகக் கையாளவில்லை என்றால் கையைக் கிழித்து விடும். மேலும் பங்கு ஈட்டு விகிதம் என்ற சலிப்பானை பங்காதாயம் வழங்கல் விகிதம் (Dividend Payout Ratio) என்ற சலிப்பான் உடன் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். ஒரு நிறுவனம் ஒரு பங்குச் சம்பாத்தியமாக 10 ரூபாய் ஈட்டுவதாகக் கொள்ளலாம். அது 10 ரூபாய் முழுவதையும் பங்காதாயமாக வழங்கி விடாது. 5 ரூபாய் பங்காதாயமாக வழங்கினால் பங்காதாயம் வழங்கு விகிதம் 50 சதவீதம். ஒரு நிறுவனத்தின் பங்காதாயம் வழங்கு விகிதம் 100 சதவீதம். பிறிதொரு நிறுவனத்தின் பங்காதாயம் வழங்கு விகிதம் 10 சதவீதம். இந்த இரண்டில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? 100 சதவீதம் கொடுக்கும் நிறுவனம், அடுத்த வருடம், நிறுவனத்தின் இலாபம் குறைந்தால் பங்காதாயத்தையும் அதற்குத் தகுந்தாற்போல் குறைத்து விடும். மேலும் ஒரு நிறுவனம் 100 சதவீதம் பங்காதாயம் கொடுத்தால் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இல்லை என்பதாக அர்த்தம். பத்து சதவீதம் கொடுக்கும் நிறுவனம் அடுத்தடுத்த வருடங்களில் பங்காதாயத்தைக் கூட்டக் கூடிய வாய்ப்புக்கள் மிக அதிகம். நிறுவனம் பத்து சதவீதம் பங்காதாயம் கொடுத்து விட்டு மீதி 90 சதவீதத்தை வளர்ச்சி முதலீடு (capital expenditure) செய்தால் மேலும் அதிகமாக பங்காதாயம் வழங்கக்கூடிய தகுதி பெறும்.

52 வார குறைந்த பட்ச விலையில் (52 week low) வர்த்தகமாகும் பங்குகளைச் சலிப்பானில் தேடுவது ஒரு முறை. அதை விட 52 வார குறைந்த பட்ச விலையில் புதிதாக இணைந்த பங்குகளுக்கான சலிப்பான் (new 52 week low screen) சாலச்சிறந்தது. 52 வார குறைந்த பட்ச விலையில் வர்த்தகமாகும் பங்குகள் பெரும்பாலும் 52 வார குறைந்த பட்ச விலையிலேயே தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கும். ஆனால் புதிதாக 52 வார குறைந்த பட்ச விலையில் வர்த்தகமாகும் பங்குகள் சில தற்காலிகமான காரணங்களுக்காக அவ்விதம் வர்த்தகமாகலாம். அந்த மாதிரி பங்குகளை அலசி ஆராய்ந்து வாங்கினால் இலாபம் பெறக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். 

மேலும் படிக்க : எனது விருப்ப பங்குச் சலிப்பான்

சுஜாதாவின் அறிவியல் சிறுகதை ஒன்று  நினைவிற்கு வருகிறது. ஒரு கணவன் மனைவி. மனைவி அவள் புதிதாக வாங்கிய கணினி ஒன்றுடன் ரொம்பவும் ஒன்றி விடுகிறாள். அதிகாலையில் அவளுக்குப் பிடித்த அலார ஓசையுடன் அவளைத் துயில் எழுப்புவதில் தொடங்கி அவளுக்குப் பதமான சூட்டில் வெந்நீர் போடுவது, அவளுக்குப் பிடித்த இசையைப் பாட விடுவது... என்று எல்லா வேலைகளையும் செய்யும் ஒரு விசுவாசமான சேவகனாக அந்தக் கணினி இருக்கிறது. மனைவி எப்போது பார்த்தாலும் அதனுடன் கொஞ்சிக் குலாவிய வண்ணம் இருப்பதைக் கண்டு கணவன் பொறாமை கொள்கிறான். ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் உன்னை எப்படி செயலிழக்க வைப்பது என்பதாகக் கணினியிடம் வினவுகிறான். அது என்ன புத்திசாலி கணினியாக இருந்தாலும் அடிப்படையில் அது ஒரு இயந்திரம் தானே? சிவப்பு வயரை அறுத்து விட்டால் நான் செயலிழந்து விடுவேன் என்கிறது. மேலும் வயரை அறுப்பதற்கு கத்திரி எங்கே இருக்கிறது என்பதையும் சொல்வதாகக் கதை முடிகிறது. இவ்வாறாக பங்குச் சலிப்பான்களில் நிறுவனங்களைச் சலித்து எடுப்பது வெறும் கணக்கு மட்டுமல்ல , அது ஒரு கலையும் கூட.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14