தலைகீழ் விகிதங்கள் - 1
தலைகீழ் விகிதங்கள் - 1
வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று எளிதாகச் சொல்லி விடலாம். அடுத்த சனிக்கிழமை இரவு எப்பாடு பட்டாவது பங்குச்சந்தை குறித்த ஒரு பதிவை எழுதி விடுவது என் கையில் உள்ளது ( காத்து கருப்பு கேட்காமல் இருக்கக் கடவது) ஆனால் பத்து வருடங்கள் கழித்து என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. ஆனால் பங்குச்சந்தையில் இது தலைகீழாக நடக்கும். நாளை பங்குச்சந்தை உயருமா அல்லது இறங்குமா என்று யாராலும் சொல்ல இயலாது. ஆனால் பத்து வருடங்கள் கழித்து பங்குச்சந்தைக் குறியீட்டெண் உயர் மதிப்பில் இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். எவ்வளவு உயரும் என்று தோராயமாகக் கூடக் கூறி விடலாம்.
நீண்ட கால அடிப்படையில் ஏன் பங்குச்சந்தையின் மதிப்பு கூடுகிறது? முதலாவது மற்றும் முக்கியமானதுமான காரணம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டின் GDP கூடுவது. இரண்டாவது பணவீக்கம். கடைசியாக equity risk premium. ஒருவர் கடன் பத்திர முதலீட்டில் பத்திரமாக ( அது பத்திரம். ஆனால் பத்திரமில்லை) முதலீடு செய்யலாம். அவரை பங்குச்சந்தை முதலான அபாயகரமான (அபாயகரமானது. ஆனால் அபாயகரமானதில்லை) முதலீடுகளின் பக்கம் இழுக்க அவருக்குக் கொடுக்கப்படும் ஊக்கத்தொகை தான் equity risk premium என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் GDP ஆறு சதவீதம், பணவீக்கம் ஆறு சதவீதம் மற்றும் equity risk premium மூன்று சதவீதம் என்று கொண்டால் பங்குச்சந்தை நீண்ட கால அடிப்படையில் பதினைந்து சதவீதம் என்ற அளவீட்டில் வளர்ந்து வரும் என்று எளிதாகச் சொல்லி விடலாம். இன்னும் சொல்லப்போனால் சென்செக்ஸ் 1978 ல் இருந்து கிட்டத்தட்ட 15 சதவீத CAGR என்ற அளவில் தான் வளர்ந்திருக்கிறது.
ஆனால் நாளை சென்செக்ஸ் கூடுமா அல்லது குறையுமா என்று கேட்டால் பூவா தலையா தான் போட்டுப் பார்க்க வேண்டும். அதனால் தான் Futures & Options அபாயகரமான முதலீடாகப்(?) பார்க்கப்படுகிறது. Call Option எடுத்தால் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பங்கின் விலை கூடியே தீர வேண்டும். அதே மாதிரி Put Option என்றால் பங்கின் விலை குறைந்தே ஆக வேண்டும். எப்போதாவது அதிர்ஷ்டவசமாக நாம் நினைத்தபடி கூடலாம் அல்லது குறையலாம். அதிர்ஷ்டத்தையும் திறமையையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. அதுவும் முக்கியமாகப் பங்குச்சந்தையில் கூடவே கூடாது.
ஒரு தேர்தலில் பெரும்பான்மையானவர்கள் செலுத்திய வாக்குகள் தான் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கின்றன. ஆனால் பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறும் ஒவ்வொரு கணமும் அந்தக் கணத்தில் விற்பவரும் வாங்குபவரும் தான் பங்கு விலையைத் தீர்மானிக்கின்றனர். ரிலையன்ஸ் பங்கு 2200 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது. ஒருவர் தவறுதலாக ஒரு பூஜ்யத்தை விட்டு விட்டு 220 ரூபாய்க்கு விற்பதாகக் கணிணியில் உள்ளீடு செய்தால் மறுகணம் அந்த வர்த்தகம் முடிந்து விடும். அந்தக் கணத்தில் அம்பானியின் சொத்து மதிப்பும் பத்தில் ஒன்றாகக் குறைந்து விடும். இதனை freak trading என்பார்கள். அடுத்த கணம் இந்தத் தவறு களையப்பட்டு விடும் என்றாலும் ஆங்கிலத்தில் marginal trading என்று அழைக்கப்படும் அந்த சிறுபான்மை , சிறுபான்மை என்று கூடச் சொல்ல முடியாது , அந்த ஒருபான்மை வர்த்தகம் தான் பங்கின் விலையைத் தீர்மானிக்கிறது.
பங்குச்சந்தையில் சிறிதே பெரிது. பூவுலகின் #1 முதலீட்டாளரான வாரன் பஃபெட்டிற்கு இல்லாத கேந்திரமான அனுகூலம் சிறு முதலீட்டாளர்களுக்கு உள்ளது. நாம் நினைத்தால் ஒரு பங்கை வாங்கலாம். பிடிக்கவில்லை என்றால் விற்று விட்டு வெளியேறி விடலாம். சிறு முதலீட்டாளர்களுக்கு இருக்கும் இந்த வசதி பெரு முதலீட்டாளர்களுக்குக் கிடையாது.
நிரந்தர வைப்பு முதலீடுகள் மற்றும் கடன் பத்திர முதலீடுகள் முதலானவற்றில் மொத்தமாக முதலீடு செய்து விடலாம். ஆனால் பங்குச்சந்தையில் அவ்வாறு மொத்தமாக முதலீடு செய்யக்கூடாது. Time Diversification என்று சொல்வார்கள். அது காளைச்சந்தையாக இருந்தாலும் சரி அல்லது மீமிகை கரடிச்சந்தையாக இருந்தாலும் சரி, வெவ்வேறு காலகட்டங்களில் சிறிது சிறிதாகத் தான் முதலீடு செய்ய வேண்டும். ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை. அது மாதிரி உங்கள் பங்குத் தொகுப்பையும் சிறிது சிறிதாகத் தான் கட்ட வேண்டும்.
பங்குச்சந்தையைக் குறித்து ஒரு வார்த்தையில் விளக்க வேண்டுமென்றால் அது ஏறி இறங்குவது என்பதாகச் சொல்லலாம். பங்குச்சந்தை ஏறி இறங்குவதை மட்டுமே நாம் கவனிக்கிறோம். ஆனால் ஏறி இறங்கும் தளம் உயர்ந்த வண்ணம் உள்ளதை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம். ஒரு சிறுவன் பந்து ஒன்றை தரையில் அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறான். பந்து தரையில் பட்டு ஏறி இறங்கிய வண்ணம் உள்ளது. ஆனால் அந்தச் சிறுவன் பந்தை அடித்து விளையாடியவாறே ஒரு மலையின் மீது ஏறிய வண்ணம் இருக்கிறான். மலையின் உயரம் 1978 ஆம் வருடம் 100 அடியாக இருந்தது. தற்போது அவன் கிட்டத்தட்ட 52000 அடி உயரத்தில் பந்தை அடித்து விளையாடியவாறே மென்மேலும் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறான். உங்களுக்கு இந்த உருவகக்கதையின் மையம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். 52000 அடி உயரத்திற்குச் சென்று விட்டதால் இனி வெற்றி கொள்ள சிகரம் இல்லை என்று நினைக்க வேண்டாம். இந்த சிகரத்திற்கு வானமே எல்லை.
Comments
Post a Comment