மனிதத்தின் கூர்மதி

மனிதத்தின் கூர்மதி

Human Ingenuity 


The stock market is the only place where anyone can invest in human ingenuity- Ben Carlson 


மனிதத்தின் கூர்மதியில் யாவரும் முதலீடு செய்யக் கூடியதான ஒரே இடம் பங்குச்சந்தை.


    *               *                   *  


பங்குச்சந்தை என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணம் இருக்கலாம். அடிப்படையான ஒரு சிந்தனை என்ற அளவில் பங்குச்சந்தை என்பது பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான இடம் என்று ஒரு சிலர் நினைக்கலாம். இன்னொரு பக்கம் அது செல்வ உருவாக்கத்திற்கான ஒரு தளம் என்பதாக சிலர் நினைக்கலாம். அது சூதாட்டத்திற்கான இடம் என்று சிலர் நினைக்கலாம். ஒரு சிலர் அம்பானியின் சொத்து மதிப்பே தின அளவில் இலட்சம் கோடி நஷ்டத்திற்கு உள்ளாகிறது என்று அஞ்சியவர்களாக முதலீட்டை மேற்கொள்ளாமல் இருக்கலாம். அதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. எனில், பங்குச்சந்தை என்பது உண்மையில் என்ன?


பங்குச்சந்தை என்பதை மனிதத்தின் கூர்மதியில் யாவரும் முதலீடு செய்யக்கூடிய ஒரு இடம் என்பதாக யோசித்துப் பாருங்கள்.


இதனை ஒரு உதாரணம் மூலமாகத் தேர்ந்து தெளியலாம்.


அது 1908 ஆம் ஆண்டு. Henry Ford அவரது Model T காரை வடிவமைத்திருந்த தருணம். Ford அவரது தொழிற்சாலையில், தொழிலாளர்கள் கார் தயாரிப்பதைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். அரைகுறையாகத் தயாரிக்கப்பட்ட கார் ஓரிடத்தில் நின்று கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் அங்குமிங்கும் சென்று கருவிகளையும் கார் பாகங்களையும் எடுத்து வந்து காரைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது Ford மனதில் மின்னலாய் ஓர் எண்ணம் பளிச்சிடுகிறது. தொழிலாளர்களை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு காரை நகர்த்தினால் என்ன? இந்த எண்ணம் தான் பின்னர் Assembly line உத்தி என்பதாகப் பேரும் புகழும் பெற்றது. இந்த முறையில் நகரும் ஒரு பட்டையில் (conveyor belt) காரின் அடிப்பாகம் நகர்ந்து வரும். தொழிலாளர்கள் ஒவ்வொரு பாகமாகப் பொருத்துவார்கள். சக்கரம் பொருத்தும் தொழிலாளர் அந்த வேலையை மட்டும் பார்ப்பார். கதவு பொருத்துபவர் கதவை மட்டும் பொருத்துவார். இவ்வாறு தொடர்ந்தவாக்கில் ஒரு வேலையை ஒருவர் செய்யும் போது அதில் நிபுணத்துவம் அடையப்பெறும் வாய்ப்பு கிட்டும். 


Division of labour என்று சொல்லப்படும் இந்தக் கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ள காலத்தில் இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் பயணித்து 1776 ஆம் ஆண்டின் Adam Smith ன் ஊசி தயாரிக்கும் பட்டறை ஒன்றுக்குச் செல்லலாம். குண்டூசி தயாரிப்பில் 18 விதமான தனிப்பட்ட வேலைகள் உள்ளன. குண்டூசி தயாரிப்பதற்கான கம்பியை நேர்ப்படுத்துதல், அதனை அளவாக வெட்டுதல், ஒரு முனையைக் கூர்மைப் படுத்துதல், மறு முனையில் கொண்டை போடுதல் ... இந்தக் கொண்டை போடுதலில் மட்டும் தனிப்பட்ட மூன்று வேலைகள் உள்ளன. இந்த அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்தால் ஒரு நாள் என்ற கணக்கில் அவரால் பத்து குண்டூசிகளை மட்டுமே தயாரிக்க முடியும். பத்து பேர் வேலை பார்த்தால் 100 குண்டூசிகள். ஆனால் இந்த வேலைகளை division of labour என்ற வகையில் பிரித்துச் செய்தால் பத்து பேர் வேலை பார்க்கும் பட்டறையில் நாள் ஒன்றுக்கு 48000 குண்டூசிகளைத் தயாரிக்க முடியும். உழைப்புப் பங்கீடு என்று சொல்லப்படும் division of labour மூலம் பட்டறையின் உழைப்பு வெளியீடு (output) 480 மடங்கு அதிகரிக்கும் பாங்கைக் கவனியுங்கள். 


Henry Ford, அவரது தொழிற்சாலையில் இந்த உழைப்புப் பங்கீடு உத்தியைக் கடைப்பிடித்து அதன் வெளியீட்டை அதிகப்படுத்தினார்.

இதனால் கார் தயாரிக்கும் கால அளவு ஒன்றரை மணி நேரமாகச் சுருங்கியது. அவரால் இப்போது குறைந்த விலையில் அதிக கார்களைத் தயாரிக்க முடிந்தது. இதனால் சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. நகரத்தின் எல்லைகள் விரிவடைந்தன.


இந்த உழைப்புப் பங்கீட்டினால் சில பிரச்னைகளும் எழுந்தன. தொழிலாளர்கள் ஒரே வேலையைத் தொடர்ந்து செய்ததால் மனச்சோர்வடைந்து வேலையை விட்டு நின்றனர். Ford, புதிய தொழிலாளர்களைப் பணியமர்த்தி அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் காலம் மற்றும் அதற்கான செலவினங்களைக் கணக்கிட்டு, அதற்கு மாற்றாக, தொழிலாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கினார். இதனால் தொழிலாளர்கள் வேலையை விட்டு நின்று விடுதல் அறவே நின்றது. மேலும், இந்த சம்பள உயர்வினால் அவர்கள் கார் வாங்கக்கூடிய நுகர்வோராகவும் ஏற்றம் பெற்றனர். 


Ford ன் புரட்சிகள் இதனோடு நிற்கவில்லை. வேலையாட்களின் பணி நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தார். இப்போது அவரது தொழிற்சாலை, நாள் ஒன்றுக்கு, மூன்று பணி நேரங்கள் (work shift) என்ற அளவில் இயங்க முடிந்தது. கார்களின் விலை இன்னும் குறைந்தது.

அவற்றின் விற்பனை விண்ணை முட்டியது.


நம் மண்ணின் உதாரணம் ஒன்றையும் பார்க்கலாம். அரவிந்த் கண் மருத்துவமனை இந்த division of labour அடிப்படையில் தான் இயங்குகிறது. அதன் கண் புரை அறுவை சிகிச்சை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை தனித்தனியாகச் செயலாக்கம் பெறுவதை உழைப்புப் பங்கீட்டிற்கான உச்சகட்ட உதாரணமாகப் பார்க்கலாம். அதன் நிறுவனர் டாக்டர் வெங்கடசாமி அவர்களுக்கு இதற்கான அகவுணர்வுத் தூண்டல் (inspiration), McDonalds நிறுவனம் மூலமாகக் கிடைக்கப்பெற்றது. உலக அளவில், இலாப நோக்கம் இல்லாத ஆனால் தொடர்ந்து இலாபமீட்டும் மிகச்சில நிறுவனங்களில் அரவிந்த் கண் மருத்துவமனையும் ஒன்று. 


சமீபத்திய உதாரணம் ஒன்றையும் பார்க்கலாம். Uber நிறுவனம், அடிப்படையில் ஒரு digital app மட்டுமே. அது ஓட்டுநர்களையும் பயணர்களையும் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படுகிறது. Uber வருவதற்கு முன்பு ஓட்டுநர் பயணர்களையும், பயணர்கள் ஓட்டுநர்களையும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். இந்த நேரத்தைக் கிட்டத்தட்ட பூஜ்யமாக்கி தேவையான நேரத்தில் தேவையான வாகனம் கிடைக்கச் செய்தமையில் மனிதத்தின் கூர்மதி வெளிப்படுகிறது. அதனினும் முக்கியமாக ஓட்டுநரின் நடத்தை குறித்த பின்னூட்டம் நிறுவனத்திற்கு உடனடியாகக் கிடைக்கப்பெறுகிறது. இது பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கிறது. Uber நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 135 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.


வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் நாம் பஃபெட்டின் கூர்மதியில் முதலீடு செய்திருப்பதாக அர்த்தம்.


தனிப்பட்ட பங்குகளை மட்டுமின்றி ஒட்டு மொத்தச் சந்தையையும் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம். மும்பை பங்குச்சந்தையின் குறியீடு அதன் ஆரம்பத்தில் 100 என்ற அளவில் இருந்தது. இன்றைய குறியீடு 75000 என்ற அளவில் இருக்கிறது. இது நாட்பட அதிகரித்த வண்ணமாகவே இருக்கும். ஏனென்றால் மனிதத்தின் கூர்மதிக்கு எல்லைகள் என்பதாக ஏதும் கிடையாது.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14