பைசா நகரத்தின் சாயாத கோபுரம்

பைசா நகரத்தின் சாயாத கோபுரம்


ஒரு பைசா 30 நாட்களுக்குத் தொடர்ந்து இரட்டிப்பானால் என்னவாகும்?


1 - 0.01

2 - 0.02

3 - 0.04

4 - 0.08

5 - 0.16

6 - 0.32

7 - 0.64

8 - 1.28

9 - 2.56

10 - 5.12

11  - 10.24

12 - 20.48

13 - 40.96

14 - 81.92

15 - 163.84

16 - 327.68

17 - 655.36

18 - 1310.72

19 - 2621.44

20 - 5242.88

21 - 10485.76

22 - 20971.52

23 - 41943.04

24 - 83386.08

25 - 167772.16

26 - 335544.32

27 - 671088.64

28 - 1342177.28

29 - 2684354.56

30 - 5368709.12


ஆயிரம் வார்த்தைகளால் தெரிவிக்க முடியாத செய்தியை ஒரு அட்டவணை தெரிவித்து விடுகிறது. 


மேலே உள்ள அட்டவணையை எப்படிப் பார்த்தீர்கள்? ஒன்று இரண்டு என்று சற்று நிதானித்துப் பார்த்து விட்டு சட்டென்று முப்பதுக்கு வந்து விட்டீர்கள், இல்லையா?


மறுபடி ஒருமுறை தொடக்கத்திலிருந்து பாருங்கள்.


தினசரி இரட்டிப்பாகும் ஒரு பைசா ஒற்றை இலக்கத்தைத் தாண்டவே பத்து நாட்கள் எடுத்துக் கொள்கிறது.


இருபது நாட்களில் கூட ஆகப்பெரிய அளவுகளில் அது கூடவில்லை.


கடைசி பத்து நாட்களில் அது கொஞ்சம் வேகமெடுக்கத் தொடங்குகிறது.


அதுவும் கடைசி நாள் மட்டும் 2684354.56 என்ற அளவில் அதி வேகம்.


கூட்டுப்பெருக்கம் என்பது அதன் பின்னாட்களில் தான் செயல்படும். 


நடைப் பயணத்தில் தொடங்கி முதலீட்டுப் பயணம் வரை அவை பாதியில் கைவிடப் படுவதற்கான ஆதாரமான காரணம் இந்த உண்மையை உணராமையே ஆகும்.


மேலும், இள வயதில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான அடிப்படையும் இதுவேயாகும்.


மறுபடி அட்டவணையை ஒருமுறை பாருங்கள். ஒரு நாளில் உங்கள் பணம் இரட்டிப்பாகும் வண்ணம் அது அமைக்கப்பட்டிருக்கிறது.


அட்டவணையை நம் செளகரியத்துக்கு எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.


ஆனால் முதலீடுகள், அதுவும் முக்கியமாகப் பங்கு முதலீடுகள், ஒவ்வொரு நாளும் ஒரு போதும் இரட்டிப்பாகப் போவதில்லை.


பூவுலகின் ஆகச்சிறந்த முதலீட்டாளரின் ஆண்டாண்டு கூட்டுப்பெருக்கம் 20 சதவீதம் மட்டுமே.


அந்தக் கணக்கில் பார்க்கையில் ஒரு நாளில் அல்ல கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.


மூன்றரை ஆண்டுகளில் உங்கள் பணம் இரட்டிப்பாகும் என்றால் ஒவ்வொரு மூன்றரை ஆண்டும் கடிகாரச்சுற்று கணக்காக அது இரட்டிப்பாகாது. 


நீண்ட கால அளவின் சராசரி, மூன்றரை ஆண்டுகள் என்பதாக அதற்கு அர்த்தம்.


வேறு மாதிரி சொல்வதென்றால் அட்டவணையின் படிநிலைகளில் ஒவ்வொரு படியாக அது ஏறிச் செல்லாது.


மூன்று படி ஏறும். இரண்டு படி இறங்கும். இதனை அது ஒரு படி ஏறியிருக்கிறது என்பதாகக் கொள்ள வேண்டும்.


சமயங்களில் ஆண்டாண்டாக ஒரே படியில் தங்கியிருக்கும்.


ஆனால் நீண்ட கால அளவில் இந்த ஏற்ற இறக்கங்கள் சமன் செய்யப்பட்டு விடும்.


இந்த வகையில் அட்டவணையின் பத்தாவது படிநிலையைக் கடக்கவே 35 நீண்ட நெடிய ஆண்டுகளாகும்.


இதற்காக நீங்கள் மனம் தளர வேண்டாம். ஒரு சிறிய கணக்கைப் போட்டுப் பார்க்கலாம்.


ஒரு முறை முதலீடாக 5000 ரூபாய் முதலீடு செய்வதாகக் கொள்ளலாம். 


பத்தாவது படிநிலையில் அதாவது 35 ஆண்டுகளில் 25 இலட்சம் என்ற இலக்கை நீங்கள் அடையப் பெறுவீர்கள்.


ஒரு முறை முதலீடாக 20000 ரூபாய் முதலீடு செய்தால் பத்தாவது படிநிலையில் ஒரு கோடி கிடைக்கப்பெறும்.


ஒரு முறை முதலீடுகளை விடத் தொடர்ந்த வாக்கிலான முதலீடுகள் இன்னும் சரியானது.


மாறா நிலை முதலீடுகளை விட மாறும் நிலை முதலீடான பங்குச்சந்தையில் இந்தத் தொடர் முதலீடுகள் ஆகப்பெரிய அனுகூலங்களுக்கு அடிகோலுகிறது.

பங்குச்சந்தை, அதன் படிநிலைகளில் ஏறவும் இறங்கவும் செய்கையில், ஏறும் போது, அதாவது விலை அதிகமாக இருக்கும் போது குறைவான பங்குகளையும், இறங்கும் போது, அதாவது விலை குறைவாக இருக்கும் போது அதிகமான பங்குகளையும் வாங்க அது வழிவகை செய்கிறது.


இந்த ஒரு முறை 5000 ரூபாய் முதலீடை மாதாமாதம் என்ற அளவில் மேற்கொண்டால் என்னவாகும்?


பத்தாவது படிநிலையில் 28 கோடி கிடைக்கப்பெறும்.


அதுவே மாதம் 20000 ரூபாய் என்றால் பத்தாவது படிநிலையில் 113 கோடி கிடைக்கும். 


ஒருவர் 20 வது வயதில் முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கினால் பத்தாவது படிநிலையை அவரது 55 வயதில் அடையலாம். 


வாரன் பஃபெட், Berkshire Hathaway நிறுவனம் மூலமாக அவருடைய முதலீட்டுப் பயணத்தை 1965 ஆம் ஆண்டில் தொடங்கினார்


வாரன் தற்போது 17 வது படிநிலையில் இருக்கிறார்.


வாரன் பஃபெட் மாதிரி நாமும் அந்தப் படிநிலைகளை எட்டலாமா?


அதற்கு மூன்று வழிமுறைகள் இருக்கின்றன.


ஒன்று, பணத்தை அதிகமாக முதலீடு செய்வது.


இரண்டாவது, கால அளவைக் கூட்டுவது. 


மூன்றாவது, கூடுதல் வருமானத்தைப் பெறுவது.


இந்த மூன்று வழிமுறைகளிலும் சிற்சில இடர்ப்பாடுகள் உள்ளன.


ஒன்று, முதலீடு செய்யும் பணத்திற்கு உச்ச அளவு என்ற ஒன்று உள்ளது.


இரண்டாவதாக காலம் என்பது நம் கையில் இல்லை.


மேலும், கூட்டு வட்டியை விரைவு படுத்த முயலக்கூடாது.


இந்த மூன்றையும் விட முத்தான வழிமுறை ஒன்று இருக்கிறது.


உங்கள் முதலீடுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுங்கள். அதனினும் முக்கியமாக அவர்களுக்கும் இந்தப் பங்கு முதலீட்டு மனப்பான்மையைக் கற்றுக் கொடுங்கள்.


உங்களின் பத்தாவது படி இரண்டாவது தலைமுறையின் முதல் படியாக இருக்கும்.


அவர்கள் அடுத்தடுத்த படிநிலைகளை விரைவாகக் கடந்து செல்வார்கள்.


இப்படியே ஒரு மூன்று தலைமுறை சென்றால் படிநிலைகளின் வழிநிலைகள் என்னவாக இருக்கும் என்று மனக்கண்ணில் பாருங்கள்.


அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கக்கூடிய ஆகப்பெரிய பரிசாக அது இருக்கும்.


இதனால் நமக்கென்ன ஆதாயம் என்று கேட்கிறீர்களா?


பயணமே நமக்கான பரிசு.


நாம் வழிமுறைகளில் களி கொள்வோம். ஏனென்றால் வழிமுறைகளில் தான் நாம் வாழ்கிறோம்.


Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14