திறமை வளையம்
திறமை வளையம்
Circle of Competence
ஒருவருக்கு நன்கு தெரிந்த, புரிந்த நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்வதான கருத்தாக்கம் முதலீட்டின் திறமை வளையம் (circle of competence) என்பதாக அழைக்கப்படுகிறது.
திறமை வளையம் என்பதான இந்தக் கருத்தாக்கம் வாரன் பஃபெட் பரிந்துரைத்த முதலீட்டு உத்திகளில் முக்கியமான ஒன்றாகும்.
நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கும் பட்சத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் குறித்த உள்ளார்ந்த புரிதல் உங்களுக்கு இருக்கும். அத்தகைய நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்வது உங்களுக்கான ஒரு திறமை வளையமாக இருக்கும்.
முதலீட்டாளர்களுக்கு நிதி மற்றும் அது சார்ந்த துறைகளில் கூடுதல் புரிதல் இயற்கையாகவே இருக்கும். எனது பங்குத்தொகுப்பில் நிதி மற்றும் நிதி சார் துறைகள் 20 சதவீத இடத்தைப் பிடித்திருப்பது நான் திறமை வளையத்திற்குள்ளாக செயல்படுவதற்கான மறைமுகமான ஆதாரமாகும்.
அதற்காக மருத்துவர்கள் அவர்கள் துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றோ முதலீட்டாளர்கள் நிதி சார்ந்த துறைகளில் மட்டும் இயங்க வேண்டுமென்றோ கட்டாயம் ஏதுமில்லை. அவர்கள் பிற துறைகளிலும் முதலீட்டை மேற்கொள்ளலாம். ஆனால் அந்தத் துறை சார்ந்து தேர்ந்து தெளிந்து முதலீடு செய்ய வேண்டும்.
வேறு மாதிரி சொல்வதென்றால் நாட்பட நீங்கள் உங்கள் திறமை வளையத்தைப் பெரிதுபடுத்தலாம். அதன் எல்லைகளை விரிவுபடுத்தலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் திறமை வளையத்தைத் தாண்டிச் சென்று விடக்கூடாது. புரியாத துறைகளில் முதலீட்டை மேற்கொள்ளக்கூடாது.
பஃபெட் உலகின் உயர்நிலை முதலீட்டாளர். ஆனால் அவருடைய அலுவலகத்தில் TOO HARD என்று எழுதப்பட்ட, புரியாத துறை ஆண்டறிக்கைகளால் நிரம்பப்பெற்ற அட்டைப்பெட்டிகளை இன்றும் காணலாம். பஃபெட், நான், ஒரு அடி தடை தாண்டும் ஓட்டத்தில் மட்டுமே கலந்து கொள்வேன் என்று குறிப்பிட்டிருப்பது இங்கே கவனம் பெறுகிறது.
பீட்டர் லிஞ்ச் இதனை வேறு மாதிரி விளக்குகிறார். நீங்கள் ஒரு பங்கில் ஏன் முதலீடு செய்கிறீர்கள் என்பதற்கான காரணத்தை விரிவுரையாக எழுதாவிட்டாலும் அதனை வண்ணம் கொண்டு ஒரு படமாகவாவது வரைய வேண்டும். அதனை சிறு குழந்தை ஒன்றுக்குப் புரியும் வகையில் உங்களால் விளக்க முடிய வேண்டும்.
நிறுவனப்பங்குகளைத் தேர்வு செய்வதில் மட்டுமல்ல, நீங்கள் கடைப்பிடிக்கும் முதலீட்டு உத்திகளிலும் உங்களுக்கான திறமை வளையத்தைக் கண்டறிய வேண்டும். நீங்கள் மதிப்பு முதலீட்டாளரா என்பதில் தொடங்கி முதலீட்டில் உங்கள் கால அளவு என்ன, சந்தை பாதி ஆவியானால் அந்த வெப்பத்தை நீங்கள் எவ்வளவு தாங்குவீர்கள் என்பதான மனோநிலைக் கணக்குகளையெல்லாம் போட்டுப் பார்க்க வேண்டும். பங்குச்சந்தையைப் பொறுத்தவரை நீங்கள் ஈட்டும் வருமானத்திற்குப் பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டுமே. உங்கள் உணர்வுகள் மட்டுமே.
திறமை வளையத்தைப் பெரிதுபடுத்துவது என்பது வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய ஒரு செயலாகும். நாளும் புதிய புதிய துறைகள் அறிமுகமாகும் தற்போதைய சூழலில் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாறு திறமை வளையம் பெருகப் பெருக நமது அறியாமை வெளியாகும். ஒரு துறையில் தேடித் தெளிய வேண்டிய விஷயங்கள் இத்தனை உள்ளனவா என்பதான எண்ணம் ஏற்படும். இது போக இன்னும் எத்தனை துறைகள் உள்ளன என்பதான ஒரு பிரமிப்பு எழும். பின்னர் கற்றலின் நேர் பின்னூட்ட வளையம் ஒன்று சுழலத் தொடங்கி விடும். அப்புறம் நீங்கள் கற்றலின் வாழ்நாள் மாணாக்கராக மாறி விடுவீர்கள்.
Get your principles right and the rest is a matter of detail. இவ்விதமாகக் கோட்பாடுகளைச் சரியாக வடிவமைத்துக் கொள்ளுங்கள், மற்றவை வெறும் விவரணைகள் மட்டுமே.
Comments
Post a Comment