சந்தைத் திருத்தம் - கேள்வி பதில்

சந்தைத் திருத்தம் - கேள்வி பதில்

Market Correction - Q & A


கேள்வி: நாம் கரடிச்சந்தையில் தான் இருக்கிறோமா?


பதில்: சந்தைக் குறியீடு 20 சதவீதம் அல்லது அதற்கும் மேலாகச் சரிந்தால் கரடிச்சந்தை தொடங்கி விட்டதாக அர்த்தம். சென்செக்ஸ் தற்போது அதன் உச்சபட்ச அளவான 85478 புள்ளியிலிருந்து கிட்டத்தட்ட 12 சதவீதம் சரிந்திருக்கிறது. எனவே இதனைக் கரடிச்சந்தை என்று கூறவியலாது. ஒரு திருத்தம் (correction) என்று கூறலாம்.


கேள்வி : சென்செக்ஸ் குறியீட்டின் இந்த 10000 புள்ளிகள் இழப்பை எப்படிப் பார்ப்பது?


பதில்: சென்செக்ஸ் குறியீட்டின் இந்தத் திருத்தம் அதன் நீண்ட கால முன்னேற்றம் என்ற கணக்கில் மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. 


கேள்வி: முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள் சரிந்திருப்பது குறித்து?


பதில்: முதலீட்டாளர்கள் பகுப்பாய்வை மேற்கொண்டு தரமான நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் இது ஒரு காகித இழப்பு (notional loss) மட்டுமே. அத்தகைய பங்குகள் மீண்டும் மதிப்பேற்றம் அடைந்து விடும்.


கேள்வி: என்ன தான் காகித இழப்பு என்று கூறிக்கொண்டாலும் demat கணக்கைப் பார்க்க அச்சமாக இருக்கிறதே?


பதில்: Don't price your portfolio often. கரடிச்சந்தையில் மட்டுமல்ல, காளைச்சந்தையிலும் உங்கள் பங்குத்தொகுப்பின் மதிப்பை அடிக்கடி பார்க்காதீர்கள். பஃபெட் மாதிரி, சந்தையில் யாராவது எந்தப் பங்கையாவது அச்ச விற்பனை செய்கிறார்களா என்ற பார்வையில் மட்டும் பாருங்கள். பங்குச்சந்தை மூலம் நீங்கள் ஈட்டும் பணவீக்கத்தை விஞ்சிய வருமானத்திற்கு அரசாங்கம் வசூலிக்கும் வருமான வரி போக சந்தை வசூலிக்கும் உணர்வுரீதியான வரியாக இதைக் கொள்ளுங்கள்.


கேள்வி: தற்போது கையில் இருக்கும் பங்குகளை விற்று விட்டு சந்தை சரிந்து மீண்டெழும் போது முதலீட்டை மேற்கொள்ளலாமா?


பதில்: அருமையான யோசனை. ஒரேயொரு சின்னப் பிரச்னை இருக்கிறது. சந்தை எப்போது மீண்டெழும்?


கேள்வி: சந்தை அவ்வப்போது இவ்விதம் திருத்தத்திற்கு உள்ளாவது ஏன்?


பதில்: முதலீட்டாளர்களின் உணர்வுக் கொந்தளிப்பால் சந்தை உயர்வும் தாழ்வும் ஏற்படுகின்றன. பங்கு ஒன்றின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (Earnings Per Share) மற்றும் அதன் விலை-வருவாய் விகிதம் (Price Earning Multiple) இந்த இரண்டையும் பெருக்கினால் கிடைப்பது பங்கின் விலை. தற்போது PE சற்று உயர் விகிதத்தில் இருக்கிறது. சிறு மற்றும் குறு நிறுவனப்பங்குகளை (Mid and Small cap stocks) பொறுத்தவரை இது இன்னும் அதிகமாக இருக்கிறது. மேலும் EPS எதிர்பார்த்த அளவிற்கு வளரவில்லை. டாலருக்கு எதிரான ரூபாயின் சரிவும் சந்தை சரிவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. எது எவ்வாறாயினும் சந்தை அவ்வப்போது தன்னைத்தானே திருத்திக் கொண்டு மென்மேலும் முன்னேறிச் செல்லும். 2000 ஆவது ஆண்டு தகவல் தொழில்நுட்பக் குமிழி வெடிப்பிற்கு முன்னர் சென்செக்ஸ் விலை-வருவாய் விகிதம் 40 என்ற அளவில் இருந்தது. தற்போதைய சென்செக்ஸ் PE அவ்வளவு உயர்வில் இல்லை என்பது ஆறுதலான ஒரு தரவு. எவ்வளவுக்கு எவ்வளவு சந்தை விலை-வருவாய் விகிதம் அதன் வருவாயிலிருந்து அதிகரித்துச் செல்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்து என்பதை அறியவும். EPS மற்றும் PE இவற்றுக்கிடையிலான உறவை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் தந்தை மற்றும் குழந்தையின் நிலையிலிருந்து பாருங்கள். தந்தையும் குழந்தையும் கை கோர்த்துக் கொண்டு செல்கிறார்கள். இது வரை நன்று. திடுதிப்பென்று PE எனப்படும் குழந்தை, தந்தையின் கையை விட்டு ஓடி விடும். பின் தன்னிலை அடைந்து தந்தையுடன் சேரும். இது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறாக தந்தையும் குழந்தையும் கட்புலனாகாத ஒரு கண்ணியால் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள்.


கேள்வி: இந்த சந்தைத் திருத்தத்தை எவ்விதம் நாம் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்?


பதில்: எவ்வளவு தான் பார்த்துப் பார்த்து முதலீடு செய்தாலும் பங்குத்தொகுப்பில் அவ்வப்போது களைகள் முளைப்பது இயல்பே. இவற்றைக் களைய இத்தகைய சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பணத்தைக் கொண்டு நீங்கள் வாங்க விரும்பிய பங்குகளைக் குறை மதிப்பில் தற்போது வாங்கலாம். கையில் இருக்கும் உபரிப்பணத்தைச் சந்தையில் முதலீடு செய்யலாம். இவை எதனையும் செய்யாவிட்டாலும் கையில் இருக்கும் பங்குகளை விற்காமலாவது இருக்கலாம். காகித இழப்பை உண்மை இழப்பாக ஆக்காமல் இருக்கலாம். பஃபெட் சொல்வது மாதிரி சந்தைத் திருத்தங்களில் முதலீடு செய்வதன் மூலமாக நாம் அதிகப்பணத்தை ஈட்ட முடியும்; ஆனால் திருத்தங்களில் அது தெளிவாகத் தெரியாது. இந்தத் திருத்தங்களைக் கடந்து செல்ல குறைந்து வரும் நிறுவனப்பங்குகளின் விலை முதலான இரைச்சல்களில் (noise) கவனம் கொள்ளாமல் உயர்ந்து வரும் பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) போன்ற குறியீடுகளில் (signal) கவனம் கொள்ளுங்கள்.


கேள்வி: கரடிச்சந்தையே இல்லாமல் சந்தைத் திருத்தமே இல்லாமல் ஒரு சந்தை இயங்க முடியாதா?


பதில்: காளைச் சந்தைக்கு ஒரு கரடிச்சந்தை தேவை. கரடிச்சந்தைக்கு ஒரு காளைச்சந்தை தேவை. தின மற்றும் குறுகிய கால அளவில் சந்தை உயர்ந்து செல்லும் போது பங்குகளை வாங்கி விற்கும் வணிகர்கள் வளமை அடைகின்றனர். மேலும் சந்தைக்கு நீர்மை நிறை எனப்படும் liquidity ஐ கொடுப்பது வணிகர்கள் மட்டுமே. சந்தை மிதமிஞ்சிய உயர்வுக்குச் சென்று திருத்தத்திற்கு உள்ளாகும் போது மதிப்பு முதலீட்டாளர்கள் அதனை ஒரு நீண்ட கால வாய்ப்பாகப் பார்க்கின்றனர். இவ்வாறு வணிகர்களும் முதலீட்டாளர்களும் அவர்கள் ஈட்டும் வருமானத்திற்கு ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றனர். மேலும் range bound market என்று சொல்லப்படும் பக்கவாட்டுச் சந்தையில் கூட சில பங்குகள் காளைத்தனமாக (bullish) இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இந்தியப் பங்குச்சந்தையின் பெரியண்ணண் என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பங்குச்சந்தையின் குறியீட்டெண் Dow Jones Industrial Averege 1966 லிருந்து 1982 வரை எங்குமே செல்லாமல் நிலையாக நின்றிருந்தது. பணவீக்கம் அப்போது கொதிநிலையில் இருந்தது. அந்தச் சந்தையில் கூட 187 பங்குகள் 100 மடங்காளர் (100 baggers) ஆனது இங்கே கவனம் பெறுகிறது. 


கேள்வி: சந்தை எப்போது மீண்டெழும் என்று சொல்லவியலாது என்பது புரிகிறது. சந்தை ஏன் மீண்டெழுகிறது? 


பதில்: தற்போது பங்கின் விலைகள் தின அளவில் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. ஆனால், ஒவ்வொரு விற்பவருக்கும் ஒரு வாங்குபவர் இருக்கிறார் என்பதை இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டும். வாங்குபவரும் விற்பவரும் இருந்தால் தான் ஒரு விற்பனை நிறைவு பெறும். பங்குகளை விற்பவர்கள் நாளடைவில் குறைந்து கொண்டே வருவார்கள். ஒரு கட்டத்தில் விற்பவர் யாரும் இருக்க மாட்டார்கள். அப்போது அவர்களை விற்க வைக்கும் பொருட்டுப் பங்கின் விலைகள் கூடும். அப்போது சந்தை மீண்டெழும்.


கேள்வி: சந்தை உயர்வுக்கு வானமே எல்லை என்று சொல்லப்படுவது உண்மை தானா?


பதில்: பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடுகள் மனிதத்தின் கூர்மதியில் (Human Ingenuity) செய்யப்படும் முதலீடுகளாகும். மனிதத்தின் கூர்மதிக்கு வானமே எல்லை.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14