வாழ்க்கை பதில்கள் - 2
வாழ்க்கை பதில்கள் - 2
கேள்வி : பங்குச்சந்தை குறித்த வலைப்பூவில் ஏன் வாழ்க்கை பதில்கள் ?
பதில் : சற்றே இளைப்பாறுதலின் பொருட்டு .
கேள்வி : சிந்திப்பது எப்படி ?
பதில் : ஒரு விஷயத்தைக் குறித்து சிந்திக்க வேண்டுமென்றால் அதனைக் குறித்து எழுதிப் பாருங்கள் .
கேள்வி : வாழ்க்கை , சமயங்களில் அலுப்பூட்டுவதாக இருக்கிறது ?
பதில் : இரண்டு நாட்களாக கை விரலில் நகச் சுத்தி . அதற்கு முன்னால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருந்ததை இப்போது உணர முடிகிறது .
கேள்வி : எனக்கு வயது 58 . இப்போது முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கலாமா ?
பதில் : வயது என்பது வெறும் ஒரு எண் மட்டுமே . அரவிந்த் கண் மருத்துவமனையை டாக்டர் வெங்கடசாமி தொடங்கும் போது அவருடைய வயது 58 . HDFC ஐ H T Parekh தொடங்கும் போது அவருடைய வயது 66 . McDonalds நிறுவனத்தை Ray Kroc தொடங்கும் போது அவருடைய வயது 52 .
கேள்வி : தவறே செய்யாமல் இருக்க முடியாதா ?
பதில் : தவறு செய்யாதவர் எதுவும் செய்யாதவர் . நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்றால் ஏதோ ஒரு புதிய விஷயத்தைத் தொடங்குவதாக அர்த்தம் . அதே சமயம் செய்த தவறையே மீண்டும் செய்யாமல் புதிய தவறுகளைச் செய்யுங்கள் . தன்னைத் தானே இரட்டிப்பாக்கும் செல் என்ற மரபியல் பிழையின் காரணமாகவே உலகில் உயிர் வாழினங்கள் தோன்றின . அந்த வகையில் , To err is human என்று சொல்வதை விட Human is err என்று சொல்வது தான் சரியாக இருக்கும் .
கேள்வி : எது நீங்கள் தொடர்ந்து எழுதத் தூண்டுகோலாக இருக்கிறது ?
பதில் : எழுதாமல் என்னால் இருக்க முடியாதது .
கேள்வி : Lateral thinking என்றால் என்ன ?
பதில் : எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம் ஒரு முறை பின் வரும் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது . நீங்கள் எழுதுவதை எப்போது நிறுத்துவீர்கள் ? இந்த மாதிரி பிரபலங்களைத் தாக்குவது அதன் பின்னால் இருக்கும் உளவியல் என்றெல்லாம் விலாவாரியாகப் போகாமல் சுஜாதா அந்த இடத்தில் சொன்ன பதில் என்னவென்று பார்க்கலாம் . அவர் சொன்னது : நள்ளிரவு 12 மணிக்கு . அதே மாதிரி பிரபல தமிழ் நடிகை ஒருவரிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது : மறக்க முடியாத கசப்பான அனுபவம் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா ? நடிகையின் பதில் : ஆம் ! ஒருமுறை பச்சைப் பாவக்காய் ஒன்றைக் கடித்து விட்டேன் . இதனை விடுங்கள் . வாரன் பஃபெட்டிடம் உங்கள் வசம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதாக கேள்வி ஒன்று கேட்கப்பட்டது . அதற்கு பஃபெட்டின் பதில் . 166 டாலர் . ( பஃபெட் வெறுமனே சொன்னதோடு மட்டும் நிற்கவில்லை . தனது சட்டைப் பையிலிருந்து எடுத்தே காண்பித்தார் )
கேள்வி : ஒருவரால் ஒரு துறையில் தான் பாண்டித்தியம் பெற இயலுமா ? அஷ்டாவதானி என்றெல்லாம் ஆக முடியாதா ?
பதில் : முடியாது . முதலீடு என்ற துறையில் மட்டும் தேடித் தெளிய வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன . அது எந்தத் துறையாக இருந்தாலும் அதன் வாழ்நாள் மாணக்கராக இருப்பது தான் ஒரேயொரு சரியான வழி .
கேள்வி : எழுத்தாளராவதற்கு என்ன செய்ய வேண்டும் ?
பதில் : நிறையப் படிக்க வேண்டும் .
கேள்வி : அறிவு - ஞானம் என்ன வித்தியாசம் ?
பதில் : பங்கின் முக மதிப்பு , ஒரு பங்குச் சம்பாத்தியம் , விலை - வருவாய் விகிதம் , கடன் முதல் - பங்கு முதல் விகிதம் , நிகர இலாப வரம்பு முதலிய தரவுகளைத் தெரிந்து வைத்திருப்பது அறிவு (knowledge) இந்த அறிவைக் கொண்டு பங்குகளை இனங்கண்டு காலா காலத்திற்கும் அவைகளை வைத்திருத்தல் ஞானம் (wisdom)
Comments
Post a Comment