நஷ்டம் உவர்ப்பு சாய்வு
நஷ்டம் உவர்ப்பு சாய்வு
Loss Aversion Bias
1000 ரூபாய் நஷ்டம் அடைவதும் 1000 ரூபாய் இலாபம் பெறுவதும் சமமல்ல . 1000 ரூபாய் நஷ்டம் அடையும் போது கிடைக்கப்பெறும் துக்கம் 1000 ரூபாய் இலாபம் பெறும் போது கிடைக்கப்பெறும் ஆனந்தத்தை விட பன்மடங்கு பெரியதாகும் .
முதலீட்டில் இதனுடைய தாக்கம் என்னவென்று பார்க்கலாம் .
பங்குச்சந்தை முதலீடுகளின் ஆதாரமான குணம் என்னவென்றால் அது ஏறி இறங்கும் தன்மை படைத்தது . பங்குச்சந்தையின் இந்த ஏறி இறங்கும் தன்மையை , முக்கியமாக , இறங்கும் தன்மையைத் தாங்காமல் பங்குச்சந்தை முதலீடுகளை அறவே தவிர்த்து விடுவது நஷ்டம் தவிர்ப்புச் சாய்வு .
உங்கள் முதலீடுகள் உண்மையான வருமானம் என்று சொல்லப்படும் பணவீக்கத்தைக் கழித்த வருமானத்தை ஈட்ட வேண்டுமென்றால் பங்குச்சந்தை முதலீடுகள் தான் ஒரேயொரு சரியான வழி . மற்றபடி கடன் பத்திர முதலீடுகள் , தங்கம் மற்றும் நிலம் போன்றவை பணவீக்க இழப்புக் காப்பு (inflation hedge) என்ற அளவிலோ அல்லது பணவீக்கத்தைக் கொஞ்சம் விஞ்சும் அளவிலோ மட்டுமே வருமானத்தைக் கொடுக்கவல்லதாக இருக்கும் .
நஷ்டம் தவிர்ப்பு சாய்வுக்கு ஆளானவர்கள் தப்பித்தவறி பங்கு முதலீடுகளை மேற்கொண்டாலும் நஷ்டம் தவிர்ப்புச் சாய்வின் காரணமாக பங்கு விலை ஓரளவு கூடியதும் விற்று விடுவார்கள் . இவர்களால் பன்மடங்காளர்களை ஒருபோதும் கைப்பற்ற முடியாது .
அதே மாதிரி இவர்கள் வாங்கிய பங்கின் விலை குறைந்து விட்டால் அதனை விற்காமல் வைத்திருப்பார்கள் . விற்று விட்டால் தற்காலிக மதிப்பிழப்பு நிரந்தர மதிப்பிழப்பாகி விடும் என்பதாகக் கூறிக் கொள்வார்கள் . இவர்கள் பங்குகளை விற்காமல் வைத்திருப்பது நஷ்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு மட்டுமே . மேலும் ஒரு நிறுவனம் நிரந்தரமாகத் தனது மதிப்பை இழந்து விட்டால் அதனை விற்பது தான் சரியான ஒரு முடிவாக இருக்க முடியும் .
இவ்வாறு இலாபமீட்டக்கூடிய பங்குகளை அவசர விற்பனை செய்வது , நஷ்டமளிக்கக்கூடிய பங்குகளை அச்சம் காரணமாக விற்காமல் வைத்திருப்பது என்று தொடர்ந்து செய்து வந்தால் ஒரு கட்டத்தில் உங்கள் பங்குத் தொகுப்பு குப்பைக் கூளங்களின் கிடங்காகி விடும் .
நாம் ஏன் இந்த நஷ்டம் தவிர்ப்பின் பக்கம் சாய்பவர்களாக இருக்கிறோம் ?
பல்லாண்டுகளுக்கு முன்னர் நாம் ஆதி மனிதர்களாகக் காட்டிலும் மேட்டிலும் அலைந்து கொண்டிருந்தோம் . நாம் காட்டு வழி செல்கையில் புதர் ஒன்றில் சிறு அசைவு ஏற்படுகிறது . காற்றின் காரணமாக இந்த அசைவு ஏற்பட்டிருக்கலாம் . அல்லது புதரிலிருந்து கொடிய மிருகம் ஏதாவது வெளிப்படலாம் . எப்படியானாலும் நமது உடனடி எதிர்வினை 'ஓடு' என்பது தான் . மற்றபடி இப்போது மாதிரி கூகுள் தேடுபொறியில் 'புதர் அசைவின் காரணங்கள்' என்று தேடிக் கொண்டிருந்தால் ஒருவேளை நாம் புதரிலிருந்து வெளிப்படும் சிங்கம் அல்லது புலிக்கு இரையாகி விடலாம் . அது காற்றாயினும் சரி கரடியாயினும் சரி காற்றாகப் பறந்து விடுவது தான் ஒரேயொரு சரியான வழி . இவ்வாறாக ஆபத்தைக் கண்டால் ஓடி விடு என்பது நம் மனதில் ஆழப் பதிந்து விட்டது .
இப்போது நாம் எந்த முதலீடுகளையும் சரி மற்றும் அதன் ஆபத்துகளையும் சரி , கூகுள் தேடுபொறி கொண்டு நிதானமாக ஆராயலாம் . ஆனால் இப்போதும் ஆபத்து என்றால் ஓடும் ஆதி மனிதன் ஒருவன் நமக்குள்ளே இருக்கிறான் .
ஆனால் எதனை அபாயம் என்று கொண்டு நாம் ஓடி ஒளிகிறோமோ அது தான் உண்மையான வருமானம் ஈட்டக்கூடிய உபாயமாக இருக்கிறது .
இந்த நஷ்டம் தவிர்ப்பு சாய்விலிருந்து விடுபடுவது எப்படி ? பங்குச்சந்தையில் மட்டுமல்ல , வாழ்க்கையிலும் , இன்ப துன்பங்களை , இலாப நஷ்டங்களை சமமாகப் பாவிக்கப் பழகுங்கள் . இன்பம் வரும் போதும் சரி , துன்பம் வரும் போதும் சரி 'இதுவும் போகும்' என்ற மனப்பான்மையைக் கைக்கொள்ளுங்கள் .
Comments
Post a Comment