அறுவடை நாள்

அறுவடை நாள்


கண்ணீருடன் விதைக்கிறவர்கள் கெம்பீரமாய் அறுப்பார்கள் - பைபிள் வாசகம்


             *                 *                  *


சரி , பங்குகளின் ஒரு தொகுப்பைக் காலப் பன்மயமாக்கம் மூலமாக மதிப்பு முதலீட்டு அடிப்படையில் கட்டமைத்து விட்டீர்கள் . உங்கள் வயதும் அறுபது ஆகி விட்டது . இப்போது அறுவடைக்கான நேரம் . இந்தப் பங்குத் தொகுப்பை எப்படிப் பணமாக்கம் செய்வது ? அதற்கு ஏதாவது விதிகள் உள்ளனவா ?


ஆம் . அது Rule of 4 percent என்பதாக அழைக்கப்படுகிறது . அதன் படி உங்கள் பங்குத் தொகுப்பிலிருந்து வருடம் ஒன்றுக்கு 4 சதவீதம் மதிப்புள்ள பங்குகளைப் பணமாக்கம் செய்து கொள்ளலாம் . பங்குத் தொகுப்பின் மதிப்பு ஒரு கோடி என்று கொண்டால் வருடத்திற்கு நான்கு இலட்சம் அதாவது மாதத்திற்கு 33333 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் . 


1926 ஆம் ஆண்டிலிருந்து 1976 வரை பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தை கொடுத்த வருமானங்களை அடிப்படையாக வைத்து இந்த நான்கு சதவிகித விதி கட்டமைக்கப்பட்டிருக்கிறது . மேலும் , இந்த முதலீட்டுத் தொகுப்பு 50 சதவிகிதம் பங்குகளிலும் மற்றும் 50 சதவிகிதம் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்திருப்பதாக அனுமானிக்கப்பட்டுள்ளது .


100 சதவிகித பங்கு முதலீட்டுத் தொகுப்பு என்ற அடிப்படையில்  நமது கணக்கீட்டைத் தொடரலாம் .


மதிப்பு முதலீடாக உங்கள் பங்குத் தொகுப்பு கட்டப்பட்டிருக்கும் என்றால் பங்கு ஈட்டு விகிதம் மூலமாகக் குறைந்த பட்சம் ஆண்டு ஆதாயமாக 1.5 சதவீதம் கிடைத்து விடும் . மீதி 2.5 சதவீதம் மதிப்புள்ள பங்குகளை மட்டும் பணமாக்கம் செய்தால் போதுமானது .


அதி மதிப்பில் (over valued) வர்த்தகமாகும் பங்குகளை இந்த 2.5 சதவீதக் கணக்கில் கொண்டு வந்து விற்று வைக்கலாம் . அதனினும் சிறந்த உத்தியாக உங்கள் பங்குத் தொகுப்பில் தவிர்க்க முடியாமல் அவ்வப்போது முளைக்கும் களைகளை விற்று வைக்கலாம் . அல்லது குறைச் செயலாக்கம் புரியும் பங்குகளை விற்று வைக்கலாம் . இவ்வாறு செய்தால் பணமாக்கமும் செய்து கொள்ளலாம் . உங்கள் பங்குத் தோட்டமும் பண்பட்டு விடும் .


அது சரி , வருடாவருடம் உயர்ந்து வரும் பணவீக்கத்தை எவ்வாறு கணக்கில் கொள்வது ?


தரமான பங்குகள் வழங்கும் பங்கு ஈட்டு விகிதம் வருடாவருடம் அதிகரித்துச் செல்லும் . உயர்ந்து வரும் பணவீக்கத்தை அது சமன் செய்து விடும் . 


ஆக , பங்குத் தொகுப்பிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க வேண்டாம் . அவை நிறுவனம் வருடாவருடம் வழங்கும் அதிகரித்து வரும் பங்காதாயம் மற்றும் அவ்வப்போது மேற்கொள்ளும் பங்குத் தொகுப்பின் பழுது பார்த்தல் மூலமாகவே கிடைக்கப்பெற்று விடும் . நமது பங்குத் தொகுப்பும் நாளும் பசுமையாக இருக்கும் . அதனினும் முக்கியமாக இவ்வாறு நீங்கள் நான்கு சதவீதப் பணத்தை எடுத்த பின்னரும் உங்கள் பங்குத்தொகுப்பு நாளும் வளர்ந்து வரும் . சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு அட்சய பாத்திரம் மாதிரி செயல்படும் .


மாதத்திற்கு உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதைக் கணக்கிட்ட பின்னர் பங்குத் தொகுப்பின் மதிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைப் பின்வருமாறு கணக்கிடலாம் .


(மாதத்திற்கான பணம் × 12) ÷ 0.04


முன்னரே குறிப்பிட்டபடி மாதத்திற்கு 33333 என்றால் வருடத்திற்கு நான்கு இலட்சம் தேவைப்படும் . எனில் பங்குத் தொகுப்பின் மதிப்பு ஒரு கோடி என்ற அளவில் இருக்கவேண்டும் .


(33333 ×12) ÷ 0.04 = 10000000


இது ஒரு பக்கம் இருக்கட்டும் . உங்கள் முதலீட்டுத் தொகுப்பை ஏன் முழுவதும் பங்குகளில் வைத்திருக்க வேண்டும் ?  பங்குச்சந்தை முதலீடு என்பது மனிதத்தின் கூர்மதியில் (Human Ingenuity) முதலீடு செய்வதாகும் . மனிதத்தின் கூர்மதியே கடைமுடிவான வளமாகும் (ultimate resource) இதனை ஒரு சிறிய உதாரணம் மூலமாகப் பார்க்கலாம் .


இணையத் தேடுதல் நிறுவனம் கூகுள் வருவதற்கு முன்னர் Altavista , Excite முதலான தேடுதல் நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன . ஆனால் அவைகளின் தேடுதல் வழிமுறைகள் செழுமையாக இல்லை . கூகுள் அதனைச் செம்மைப்படுத்தியது . இணையத்தில் , கருத்தாக்கம் ஒன்றைக் குறித்த அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏராளம் இருப்பதாகக் கொள்ளலாம் . கூகுள் தேடுபொறி , எத்தனை பேர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு அவர்கள் கட்டுரையில் இணைப்பு கொடுத்திருக்கிறார்கள் என்ற தரவுகளைக் கணக்கிடுகிறது . வெறுமனே கணக்கீடு மட்டும் செய்யாமல் இந்த இணைப்புகளை அது தர வரிசைக்கு உட்படுத்துகிறது . எடுத்துக்காட்டாக Rule of 4 percent குறித்த ஒரு கட்டுரைக்கு investopedia.com இணைப்பு கொடுத்திருந்தால் அதற்கு முதல் மதிப்பெண் . இவ்வாறு இணையத்தின் இணைப்புகளை தர வரிசைக்கு உட்படுத்தினால் உங்கள் தேடுதலுக்குப் பொருந்துவதான இணையத்தளங்கள் முதல் பத்தாக (Top Ten) வந்து விடும் . இது தான் கூகுள் தேடுபொறியின் அடிப்படையான செயல்முறை . கூகுள் இந்த அளவுரு மட்டுமின்றி 500 க்கும் மேற்பட்ட அளவுருக்களை ஆராய்கிறது . மேலும் இந்த அளவுருக்களை அவ்வப்போது மாற்றவும் செய்கிறது . அவ்வாறு செய்யவில்லை என்றால் கூகுள் தேடுபொறியை ஏமாற்றி தரமற்ற இணையத்தளங்கள் முதல் பத்தில் வந்து விடும் .  இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களை இத்தகைய செயல்முறைக்கு உட்படுத்திய பின்னர் கூகுள் தேடுபொறியில் நீங்கள் தேடும் தகவல்கள் சுட்டியின் ஒரு சொடுக்கில் கிடைக்கப்பெற்றன . இது மனிதத்தின் கூர்மதியே அன்றி வேறென்ன ? இந்தக் கூர்மதியின் இன்றைய சந்தை மதிப்பு 2.36 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் . ஒரு டிரில்லியன் என்றால் ஒன்று போட்டு 12 பூஜ்யங்கள் . இதனுடன் 83.48 ஐ பெருக்கிக் கொள்ளுங்கள் . இது தான் கூகுள் நிறுவனத்தின் இன்றைய ரூபாய் அளவிலான சந்தை மதிப்பு . ஒரு டாலரை கூகுள் நிறுவன முதல் பொது வெளியீட்டில் முதலீடு செய்திருந்தால் அது 55 டாலர் ஆகியிருக்கும் .


மீண்டும் சந்திப்போம் .


Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14