பன்மடங்காளர்கள் - கேள்வி பதில்
பன்மடங்காளர்கள் - கேள்வி பதில்
Multibaggers - Q & A
கேள்வி : பன்மடங்காளர் பங்குகளைக் கைப்பற்ற அடிப்படையாக நாம் என்ன செய்ய வேண்டும் ?
பதில் : பங்குகள் பன்மடங்காளர் ஆகும் வரை அவற்றைப் பொறுமையாக வைத்திருக்க வேண்டும் .
கேள்வி : பன்மடங்காளர் என்பது குறைந்த பட்சமாக எத்தனை மடங்காளர் ?
பதில் : பன்மடங்காளர் பங்குகள் என்பதைக் குறைந்த பட்சமாக 100 மடங்காளர் என்று கொள்ளுங்கள் .
கேள்வி : ஒரு பங்கு 100 மடங்காளர் என்ற நிலையை எட்டிப் பிடிக்க அதிக காலம் ஆகுமே ?
பதில் : ஆம் . ஒரு பங்கு 20 சதவீத CAGR என்ற விலையில் வளர்ந்து வந்தால் அது 100 மடங்காளர் ஆக 25 ஆண்டுகள் ஆகும் . அதே சமயம் அது 36 சதவீத CAGR கொடுத்தால் 15 ஆண்டுகளிலேயே 100 மடங்காளர் ஆகி விடும் . 100 மடங்காளர் என்பதை 100 மடங்காளர் என்று பார்த்தால் அது ஏதோ எட்டிப் பிடிக்க முடியாத இலக்காகத் தோன்றும் . மாறாக அதனைத் தொடர்ந்த வாக்கிலான இரண்டு 10 மடங்காளர் என்பதாகப் பாருங்கள் . அதாவது 10 ரூபாய் பங்கு 10 மடங்காளர் ஆனால் அது 100 ரூபாய் ஆகி விடும் . இந்த 100 ரூபாய் பங்கு 10 மடங்காளர் ஆனால் 1000 ரூபாய் ஆகி விடும் . ஆக 10 ரூபாய் பங்கு 1000 ரூபாய் அதாவது 100 மடங்காளர் ஆகி விடும் .
கேள்வி : சிறு மற்றும் குறு நிறுவனப் பங்குகள் மட்டும் தான் பன்மடங்காளர்கள் ஆகின்றதா ?
பதில் : அப்படி பொத்தாம் பொதுவாகச் சொல்ல முடியாது . தேவையான காலத்தைக் கொடுத்தால் அனைத்து நிறுவனங்களுக்குமே பன்மடங்காளர்கள் ஆவதற்குரிய வாய்ப்பு கிடைக்கப்பெறும் . அபூர்வமாகப் பெரு நிறுவனப் பங்குகள் கூட பன்மடங்காளர்கள் ஆகும் . கரடிச்சந்தைகளில் பன்மடங்காளர்கள் பங்குகள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவும் . சிறு மற்றும் குறு நிறுவனப் பங்குகள் மட்டுமே பன்மடங்காளர்கள் ஆகின்றன என்பது ஒரு தவறான கருத்து . இத்தகைய நிறுவனங்கள் அவ்வப்போது வழங்கிய இலவசப்பங்குகள் மற்றும் பங்குப் பிரிப்பின் மூலமான பங்குகளை அவற்றின் விலையில் பொருத்திப் பார்ப்பதால் வரும் தோற்றப்பிழை இது . V Guard நிறுவனப் பங்கை நான் 42 ரூபாய் என்ற விலையில் வாங்கினேன் . நிறுவனம் அதன் பத்து ரூபாய் முக மதிப்பை ஒரு ரூபாய் என்று பிரித்தளித்தது . ஐந்து பங்குகளுக்கு இரண்டு பங்குகள் என்ற விகிதத்தில் இலவசப் பங்களிப்பு ஒன்றை மேற்கொண்டது . இவ்விதமாக அதன் ஒரு பங்கு 14 பங்குகள் ஆகி விட்டது . ஒரு பங்கின் சராசரி விலை 3 ரூபாய் (42÷14=3) V Guard நிறுவனப்பங்கு ஒருபோதும் 3 ரூபாய்க்கு வர்த்தகமாகவில்லை . அது எனக்கான சராசரி விலை மட்டுமே .
கேள்வி : பன்மடங்காளர் பங்குகள் எவ்விதம் பன்மடங்காளர் ஆகின்றன ?
பதில் : நிறுவனம் ஒன்றின் ஒரு பங்குச் சம்பாத்தியம் சீராக வளர்ந்து வருவதாகக் கொள்ளலாம் . இது ஒரு புறம் . மறு புறம் , சந்தை , இந்தச் சீர்மையான வருமானத்தை இனங்கண்டு அதற்கு உயர் விலை வருவாய் விகிதத்தைக் கொடுக்கும் . நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியத்தையும் அதன் விலை வருவாய் விகிதத்தையும் பெருக்கினால் பங்கின் விலை கிடைத்து விடும் . இவ்வாறு தான் பன்மடங்காளர் பங்குகள் உருவாகின்றன .
கேள்வி : ஒரு நிறுவனப்பங்கு 100 மடங்காளர் ஆனதும் அதனை விற்று விடலாமா ?
பதில் : ஒரு பங்கு ஆண்டாண்டுகளின் கணக்கில் 100 மடங்காளர் நிலையை அடைகிறது . அதனை விற்று வைப்பது அறிவுடைமையாகாது . மேலும் , ஒரு பங்கு 100 மடங்காளர் ஆனதும் அது அதன் பன்மடங்காளர் பயணத்தை மேலும் விரைவாக எட்டும் தகுதியைப் பெறும் . ஒரு சின்ன உதாரணம் மூலமாக இதனைப் புரிந்து கொள்ளலாம் . 10 ரூபாய்க்கு வாங்கப்பட்ட பங்கு 100 மடங்காளர் ஆனால் அதன் விலை 1000 ரூபாய் என்பது தெளிவு . அந்தப் பங்கின் விலை வெறும் 10 ரூபாய் கூடினால் அது 101 மடங்காளர் ஆகி விடும் . அதாவது இன்னும் ஒரு மடங்கு கூடி விடும் . ஒரு நிறுவனப் பங்கு 100 மடங்கு கூடுகிறதென்றால் அதற்கு அடிப்படையாக ஒரு காரணம் இருக்கும் . அந்தக் காரணம் தொடர்ந்து இருக்கும் வரை அத்தகைய பங்குகளைக் கையில் வைத்திருப்பது தான் அறிவுடைமையாகும் .
கேள்வி : ஒரு பங்கு 100 மடங்காளர் நிலையை எட்டி விட்டது . அந்தச் சமயம் பார்த்து சந்தையில் சரிவு ஏற்பட்டு பங்கின் விலை பாதியாகி விட்டது . 100 மடங்காளர் பங்கு 50 மடங்காளர் ஆகி விடாதா ?
பதில் : அது ஒரு மடங்கு கூடினால் மீண்டும் 100 மடங்காளர் ஆகி விடும் . 10 ரூபாய்க்கு வாங்கப்பட்ட பங்கு 1000 ரூபாய் என்ற விலையை எட்டினால் அது 100 மடங்காளர் . 1000 ரூபாய் பங்கின் விலை பாதியானால் அது 500 ரூபாய் ஆகி விடும் . மீண்டும் அந்த 500 ரூபாய் பங்கு ஒரு மடங்கு கூடினால் அது 1000 ரூபாய் ஆகி விடும் .
கேள்வி : பன்மடங்காளர் பங்குகளை எப்போது விற்பது ?
பதில் : விப்ரோ நிறுவன IPO , 1946 ஆம் ஆண்டு வெளி வந்தது . ஐடிசி நிறுவன IPO 1976 ல் வெளியானது . சிப்லா நிறுவன IPO 1979 ல் . இன்றைய தேதியில் விப்ரோ 2060301 மடங்காளர் . ஐடிசி 11725 மடங்காளர் . சிப்லா 447000 மடங்காளர் . ஒரு பங்கு இத்தனை மடங்கு கூடி விட்டது , இனி கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது . நிறுவனம் நன்கு செயல்படும் வரை பங்கின் விலை கூடிய வண்ணமாகவே இருக்கும் . மேலும் பங்காதாயம் மூலமாக இந்தப் பங்குகள் வருடாவருடம் கொடுக்கும் வருமானங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் . உதாரணமாக சிப்லா நிறுவனப் பங்கு அதன் IPO முதலீட்டாளருக்கு 390000 சதவீத பங்காதாயப் பலன்களை சென்ற நிதி ஆண்டில் வழங்கியிருக்கிறது . ஆக , பன்மடங்காளர் பங்குகளை விற்பது என்ற கேள்விக்கே இடமில்லை . அவை பன்மடங்காகும் வேகம் வேண்டுமானால் குறையலாம் . ஆனால் அதிகரித்து வரும் பங்காதாயம் அதனை ஈடு செய்து விடும் .
கேள்வி : பங்கு ஒன்று அதன் பன்மடங்காளர் பயணத்தின் ஒரு கட்டத்தில் அபரிமிதமான விலை வருவாய் விகிதத்தில் வர்த்தகமாவதாகக் கொள்ளலாம் . எனில் அதனை விற்று விட்டு விலை குறைந்ததும் மறுபடி வாங்கலாமா ? அவ்வாறு செய்தால் அதன் பன்மடங்காளர் பயணத்தைக் கொஞ்சம் விரைவுபடுத்தலாம் அல்லவா ?
பதில் : PE அதிகம் என்று ஒரு பங்கை விற்று வைக்கிறீர்கள் . அதன் EPS அதிகரித்து PE குறையலாம் . சந்தை , நிறுவனப் பங்கிற்கு வழங்கும் PE உயர் அளவுகளில் நிலை பெறலாம் . PE அதிகம் என்று எவ்விதம் சொல்ல முடியும் ? PE இன்னும் கூடினால் ? அதே மாதிரி PE குறைவு என்று எவ்விதம் சொல்ல முடியும் ? PE இன்னும் குறைந்தால் ? விற்ற பங்கை எவ்வாறேனும் மறக்காமல் திரும்ப வாங்க வேண்டுவதும் ஒரு கூடுதல் வேலையாகி விடும் . கூட்டு வட்டியின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக் கூடாது என்பதாகும் . பன்மடங்காளர்களை காலக்கணிப்புக்கு (timing) உள்ளாக்காமல் அவைகளைக் காலத்திற்கும் கையில் வைத்திருப்பது தான் ஒரேயொரு சரியான வழி .
கேள்வி : Only buying No selling என்ற இந்த உத்தி சரியானது தானா ? இலாபத்தைக் கைப்பற்றுவது எப்போது ?
பதில் : வாரன் பஃபெட் உலகின் ஆகச் சிறந்த முதலீட்டாளர் . அவருடைய குரு பெஞ்சமின் கிரகாம் . அவருடைய முதலீடுகள் மூலமாகக் கிடைக்கப்பெற்ற மொத்த இலாபத்தில் பேர் பாதி GEICO நிறுவனப் பங்கின் மூலமாக மட்டும் கிடைத்தது . உங்கள் முதலீட்டுத் தொகுப்பிலும் GEICO மாதிரியான ஒரு பங்கு இருக்கப் பெறலாம் . அத்தகைய நிறுவனப்பங்குகளை வளர விடுவது தான் முறையான ஒரு செயலாக இருக்க முடியும் .
தன் மதிப்பை முற்றிலும் இழந்த பங்குகளை விற்று விட்டு ஏனைய பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளரின் பங்குத்தொகுப்பு நீண்ட காலத்தில் பின்வருமாறு இருக்கும் . ஒன்றிரண்டு 100 மடங்காளர்கள் , நாலைந்து 50 மடங்காளர் , பத்துப் பதினைந்து 10 மடங்காளர் ... ஒரு மடங்காளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் . இது தவிர குறைச் செயலாக்கம் புரியும் சில பங்குகள் . பன்மடங்காளர்கள் ஆகாத பங்குகளிலிருந்து பங்காதாயம் கணிசமான அளவில் கிடைப்பதாக இருக்கும் . இத்தகைய பங்குகளின் சராசரி என்ற அளவில் பார்த்தால் சந்தைக் குறியீடுகளை விஞ்சிய வருமானம் கிடைக்கப்பெறும் . யார் கண்டது ? முன்பே குறிப்பிட்டது மாதிரி உங்கள் பங்குத் தொகுப்பிலும் GEICO மாதிரியான ஒரு பங்கு இருக்கப் பெறலாம் . மனிதனால் பராமரிக்கப்பட்ட தோட்டத்தை விட இயற்கையால் பராமரிக்கப்பட்ட காடு தான் செழிப்பாகக் காணப்படுகிறது . உங்கள் பங்குத் தொகுப்பைக் காலத்தின் போக்கில் , கட்டுக்கடங்காத ஒரு தோட்டமாக மாற்றுங்கள் .
Comments
Post a Comment