கதைக்குரு கதைகள் - 3
கதைக்குரு கதைகள் - 3
1. குப்பையிலே கோமேதகம்
ஒரு ஊரில் ஒரு பங்குச்சந்தை கதைக்குரு இருந்தார் . அவருடைய சிஷ்யர் குருவிடம் பின்வருமாறு சலித்துக் கொண்டார் . " நானும் பார்த்துப் பார்த்துத் தான் பங்குகளை வாங்குகிறேன் . ஆனால் அவ்வப்போது Cox and Kings முதலான களைகள் முளைத்த வண்ணமாகவே உள்ளன " கதைக்குரு வழக்கம் போல் ஒரு கதையைக் கூறத் தொடங்கினார் . என் குருவின் குரு ஒருவர் இருந்தார் . அவர் ஒரு சமயம் தோட்டத்தைச் சுத்தம் செய்யும் படி தனது சிஷ்யனைப் பணித்தார் . சிஷ்யன் தோட்டத்தில் கிடந்த இலை தழை காய் கனிகள் அனைத்தையும் மூட்டை கட்டி ஒரு ஓரத்தில் வைத்து விட்டு வந்தான் . நன்றாகச் சுத்தம் செய்யுமாறு குரு சிஷ்யனைக் கடிந்து கொண்டார் . சிஷ்யன் தோட்டம் முழுவதும் மறுபடியும் சுற்றி வந்து ஒரு ஓரத்தில் கிடந்த இலையை எடுத்துப் போட்டு விட்டுக் குருவை வணங்கினான் . " முட்டாளே ! என்ன செய்திருக்கிறாய் ? " என்று குரு ஒரு மரத்தைக் குலுக்கினார் . காய்கள் விழுந்தன . இன்னொரு மரத்தைக் குலுக்கினார் . கனிகள் விழுந்தன . இன்னொரு மரத்தைக் குலுக்கினார் . இலை தழைகள் விழுந்தன . " இப்போது தான் தோட்டம் சுத்தமாக இருக்கிறது " என்று குரு கூறினார் . உனக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறதா ? தோட்டம் என்பது காய் கனி இலை தழை எல்லாவற்றாலும் தான் ஆனது . அவைகளைச் சுத்தம் செய்வதென்றால் வெளியே எடுத்து எறிவதாக அர்த்தம் கிடையாது . அவை மண்ணோடு மண்ணாகி நாளைக்கு உரமாகப் பயன்படும் . உதிர்ந்த மலர் கிளைக்குத் திரும்புகிறது என்பதை நீ கேள்விப்பட்டதில்லையா ? பட்டு விடும் என்று நினைத்த எத்தனையோ மரங்கள் துளிர் விடுவதை நீ அறிந்ததில்லையா ? பங்குச்சந்தை முதலீட்டையும் ஒரு தோட்டமாகப் பார் . Cox and Kings பங்கு முழுவதும் பட்டுப் போய் விட்டது . அதனைப் புத்திக் கொள்முதல் என்று கொள் . TTK Prestige பங்கு 2003 ஆம் ஆண்டு சில பல காரணங்களால் 75 பைசா என்ற விலையில் வர்த்தகமானது . இன்றைய அதன் விலை 888 ரூபாயாகும் . எது வளரும் எது மக்கும் என்று பிரித்தறியும் திறன் வேண்டும் . அதனால் தான் முதலீடு என்பது வெறும் கணக்கு மட்டுமல்ல அது ஒரு கலை என்பதாக அழைக்கப்படுகிறது . பூவுலகின் சிறந்த முதலீட்டாளராகிய வாரன் பஃபெட்டின் வெற்றி விகிதம் 10 க்கு 6 என்றால் நாமும் அதனை எட்டிப் பிடித்தாலே பெரிய விஷயம் .
2. மின்னுவதெல்லாம் பொன்னல்ல
பங்குச்சந்தை என்றால் என்னவென்று அறியாமல் நேரடியாக F & O க்களில் குதித்து விளையாடுபவர்களைக் குறித்தும் அது சம்பந்தமான , செபியின் , பத்துக்கு ஒன்பது F & O வணிகர்கள் நஷ்டமடைகிறார்கள் என்பதான எச்சரிக்கை குறித்தும் ஒரு பேச்சு வந்தது . அப்போது கதைக்குரு சொன்னது : அது மின்சாரம் அறிமுகமான காலம் . குக்கிராமத்திலிருந்து ஒருவன் நகரத்திலுள்ள தன் நண்பனைக் காண வந்திருந்தான் . அவன் இது வரை மின்சாரத்தைக் கண்டதில்லை . நகர நண்பன் அவனைத் தனியறையில் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்தான் . அந்த அறையில் மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது . அதை எப்படி அணைப்பது என்று கிராம நண்பனுக்குத் தெரியவில்லை . ஒரு துணியை அந்த மின்சார விளக்கின் மேல் சுற்றி விட்டுத் தூங்கினான் . மறுநாள் காலை நகர நண்பன் , " இரவு நன்றாகத் தூங்கினாயா ? " என்று வினவினான் . " ஒன்றும் பிரச்னையில்லை , ஆனால் இந்த விளக்கை எப்படி அணைப்பது என்று தான் தெரியவில்லை " " உனக்கு மின்சாரம் பற்றி தெரியாதில்லையா ? இதோ பார் , இதனைத் தூக்கி விட்டால் மின்சாரம் நின்று விடும் . இதனை இறக்கி விட்டால் மின்சாரம் வந்து விடும் " கிராம நண்பன் , " எவ்வளவு சுலபமானது ? எனக்கு மின்சாரம் என்றால் இப்போது முழுமையாகத் தெரியும் "
Comments
Post a Comment