சுரங்கப் பார்வை

சுரங்கப் பார்வை

Tunnel Vision


சுரங்கப் பார்வை என்பது உங்கள் கண் முன்னால் தெரிவதை மட்டும் பார்ப்பது . Peripheral Vision என்று அழைக்கப்படும் அதற்கு மேலே , கீழே மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்சிகள் உங்கள் கண்களுக்குப் புலனாகாது .


முன்னொரு காலத்தில் பூமி இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்பதான ஒரு பார்வை தான் இருந்தது . அப்புறம் சூரியன் தான் மையம் என்றும் பூமி உள்ளிட்ட கிரகங்கள் அதனைச் சுற்றி வருவதான ஒரு பார்வை . இப்போது milky way என்பதாக அழைக்கப்படும் நமது பால்வீதியில் (Galaxy) மட்டும் 200 பில்லியன் (200 வுடன் 9 பூஜ்யங்களைப் பெருக்கிக் கொள்ளவும்) ஏன் அதற்கும் மேலான சூரியனை ஒத்த நட்சத்திரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள் . அதே மாதிரி நம்முடைய

பால்வீதியைப் போல் இரண்டு டிரில்லியன் (2 போட்டு 12 பூஜ்யங்கள்) ஏன் அதற்கும் மேலான வீதிகள் இருப்பதாக ஒரு கணக்கு . ஆக , இந்தப் பூமி பிரபஞ்சத்தின் மையம் இல்லை . இன்னும் சொல்லப்போனால் பிரபஞ்சத்திற்கு மையம் என்பதே கிடையாது . ஒரு மிகப்பெரிய மைதானத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் . உங்கள் கண்ணிற்கெட்டிய தூரம் வரை மைதானம் தான் . அப்போது நீங்கள் எங்கே நின்றாலும் மைதானத்தின் நடுவில் இருப்பதாகவே தோன்றும் . மேலும் இந்தப் பிரபஞ்சத்தின் பால் வீதிகள் நம்மை விட்டு விலகிச் சென்ற வண்ணம் இருக்கின்றன . ரொம்பவும் தொலைவில் உள்ள பால் வீதிகள் நம்மை விட்டு வேகமாக விலகிச் சென்ற வண்ணம் உள்ளன . ஒரு இரயில் நம்மை நோக்கி வந்தால் அதன் ஒலி அதிர்வுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும் . நம்மை விட்டு விலகிச் சென்றால் இந்த ஒலி அதிர்வுகள் குறைந்த வண்ணம் இருக்கும் . டாப்ளர் விளைவு (Doppler Effect) என்பதாக அழைக்கப்படும் இந்தக் கருத்தாக்கம் ஒலிக்கு மட்டுமின்றி ஒளிக்கும் பொருந்தும் . பால் வீதிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதை அவை வெளியிடும் ஒளியின் அலைநீளங்களை வைத்து Red Shift என்ற அளவீட்டில் கணக்கீடு செய்கிறார்கள் . Science advances one funeral at a time என்று ஜெர்மன் இயற்பியலாளர் Max Planck கூறியதை இவ்விடத்தில் நினைவு கொள்ளலாம் .  அறிவியல் , கருத்தாக்கம் ஒன்றைப் புதிய பார்வையில் பார்ப்பதின் மூலமாக முன்னேறிச் செல்கிறது என்று இதனைத் தமிழில் தளர்வாக மொழி பெயர்க்கலாம் .


பங்குச்சந்தையில் தினசரி மற்றும் குறுகிய கால வணிகர்களை சுரங்கப் பார்வையாளர்கள் என்று அழைக்கலாம் . உடனடியாகக் கண்ணில் தெரியும் இலாபத்தைக் கைப்பற்றுவது (Target Price) அல்லது நஷ்டத்தைத் தவிர்ப்பது

(Stop loss) என்பது மட்டுமே அவர்களின் பார்வை . இந்த சுரங்கப் பார்வையைச் சுற்றி ஒரு மிகப்பெரிய உலகம் உள்ளது . 


பன்னெடுங்காலத்திற்கு முன்னர் வாங்கிய பங்குகள் ஆறு இலக்க பங்கு ஈட்டு விகிதத்தை (dividend yield) அளிக்கவல்லதாக இருப்பது (Bajaj Auto) அவர்களுக்குக் கட்புலனாகாது . இந்த ஆறு இலக்க பங்கு ஈட்டு விகிதத்தை அளிக்கவல்ல பங்குகளின் விலையும் பன்மடங்கு கூட்டுப் பெருக்கத்தை அடைந்திருக்கும் என்பதும் அவர்கள் உணராதது .


நிறுவனப் பிரிப்பை எடுத்துக் கொள்ளலாம் . தாய் நிறுவனத்தை விட (Godrej Industries) அதனிலிருந்து பிரிந்த சேய் நிறுவனம் (Godrej Consumer Products) பன்மடங்காகிய கதையும் அவர்கள் அறியாதது .


உட்கிடக்கை மதிப்பு (Embedded Value) என்ற கருத்தாக்கத்தைப் பார்க்கலாம் . Info Edge நிறுவனம் ஏன் அவ்வளவு அபரிமிதமான PE விகிதத்தில் வர்த்தமாகிறது ? ஏனென்றால் Zomoto மற்றும் Policy Bazaar போன்ற நிறுவனங்களை இனங்கண்டு முதலீடு செய்து அவைகளைப் பட்டியல் இட்டதின் வழி அது பன்மடங்கு இலாபத்தை அடைந்திருக்கிறது . இன்னும் சந்தையில் பட்டியலிடப்படாத பல்வேறு நிறுவனங்களில் அது முதலீட்டை மேற்கொண்டிருக்கிறது . நாளை அந்நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது மதிப்புத் திறப்பு (value unlocking) என்ற அடிப்படையில் Info Edge நிறுவனத்திற்கு ஒரு எதிர்பாராத நற்பேறு (windfall gain) கிடைக்க வாய்ப்புள்ளது .


பங்குகளைத் திரும்ப வாங்குதலின் மூலமாக சிறியதாவதன் மூலமாகவும் வளரலாம் . நிறுவனம் ஒன்றுக்கு 100 பங்குகள் இருப்பதாகக் கொள்ளலாம் . பங்கு , கரடிச்சந்தை ஒன்றில் குறை மதிப்பில் வர்த்தகமாகிறது . நிறுவனம் இதனை இனங்கண்டு 50 பங்குகளை சந்தையிலிருந்து திரும்ப வாங்கிக் கொள்கிறது . நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் இரட்டிப்பாகி விடும் . பங்கின் விலையும் இரட்டிப்பாகி விடும் . சந்தை , நிறுவனத்தின் இந்த மதிப்பு முதலீட்டை அங்கீகரிக்கும் விதமாக அதற்கு உயர் மதிப்பை வழங்குமானால் பங்கின் விலை இன்னும் உயரவும் ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெறும் . Godrej Industries , Godrej Consumer Products மற்றும் Ramco Cements போன்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அவ்வப்போது குறை மதிப்பில் திரும்பப் பெற்றுக் கொள்வதன் மூலமாக மதிப்பை உருவாக்கிய வண்ணம் இருக்கின்றன .


மதிப்புப் பெருக்கத்தை அடைய இன்னொரு வழி நிறுவன இணைப்பு . Times வங்கி , HDFC வங்கியுடன் 2000 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது . 5.75 Times வங்கிப் பங்குகளுக்கு ஒரு HDFC வங்கிப் பங்கு வழங்கப்பட்டது . Times வங்கியின் IPO பத்து ரூபாய்க்கு வெளியிடப்பட்டதாக ஞாபகம் . ஒருவர் 5750 ரூபாய்க்கு 575 Times வங்கிப் பங்குகளை வாங்கி இந்த இணைப்பில் பங்கு பெற்று இன்றைய தேதி வரை அவருக்கான நூறு HDFC வங்கிப் பங்குகளை வைத்திருந்தால் அதன் மதிப்பு கிட்டத்தட்ட 15 இலட்சம் ரூபாய் .


உங்கள் பார்வையை விசாலமாக்குங்கள் . அப்புறம் உங்கள் மதிப்புப் பெருக்கத்திற்கு வானமே எல்லை .


Marcel Proust ன் பொன்மொழி ஒன்றுடன் இந்தப் பதிவை முடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது . The real voyage of discovery consists not in seeking new lands but seeing with new eyes . மனிதனின் தேடலுக்கான பயணம் புதிய இடங்களைக் கண்டடைவதில் இல்லை , மாறாக ஒரே இடத்தைப் புதிய விழிகளால் நோக்குவதில் இருக்கிறது .

Comments

  1. அருமையான தகவல், நன்றி,
    தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியான நிலையில்.. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எந்த மாதிரியான பங்கு கள் உச்ச நிலையை அடையும், எந்த மாதிரியான பங்கு கள் வாங்கு நல்லது, ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14