பங்குச்சந்தை பதில்கள் - 10

பங்குச்சந்தை பதில்கள் - 10

கேள்வி : தேர்தல் முடிவுகள் சந்தைக்குச் சாதகமாக இல்லை . கூட்டாட்சி சரிப்பட்டு வருமா ? சந்தை இனி என்னவாகும் ?


பதில் : 1977 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள் ... வாரன் பஃபெட்டின் வார்த்தைகளில் ... நீண்ட மற்றும் விலை அதிகமான வியட்நாம் யுத்தம் , சம்பளம் மற்றும் விலை கட்டுப்பாடுகள் , எண்ணைய் அதிர்ச்சிகள் , ஜனாதிபதி ஒருவரின் இராஜினாமா , சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் சந்தையின் பெரிய அளவிலான தின நகர்வுகள் ... இவ்வளவின் பின்னரும் அமெரிக்கப் பங்குச்சந்தை அதன் வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்தது ... Dow Jones குறியீடு 894.37 புள்ளியிலிருந்து 15009.52 புள்ளி என்ற அளவை எட்டியது .


கேள்வி : ஊர் பேர் தெரியாத நிறுவனங்கள் எல்லாம் இலவசப் பங்கு வெளியீட்டையும் பங்குப் பிரிப்பையும் மேற்கொள்கின்றனவே ?


பதில் : வாங்குபவர் கவனம் ! சமீபத்தில் இலவசப்பங்குகளை வழங்கிய இத்தகைய நிறுவனங்களிடம் பொதுவாக ஒரு தன்மை காணப்படுகிறது . இந்த நிறுவனங்களிடம் இருப்பு மற்றும் உபரிப்பணம் ஒரு மடங்கு கூட இல்லை . எதற்காக இலவசப்பங்கு ? பங்கின் விலை இரட்டை இலக்கத்தில் மட்டும் வர்த்தகமாகிறது . எதற்காக பங்குப் பிரிப்பு ? நிறுவனத்தில் நிறுவனர் பங்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவு . மீதி 99 சதவீதம் பொது மக்கள் கையில் . நிறுவனம் யாருக்காக இயங்குகிறது ?


கேள்வி : ஒரு பங்கு அதன் உச்சபட்ச விலையில் வர்த்தகமாகும் போது அதனை விற்று வைத்தால் அந்த இலாபத்தைப் பிடித்து விடலாம் அல்லவா ?


பதில் : உச்ச பட்ச விலை என்பது மேல் நோக்கிய ஒரு நகரும் இலக்காகும் . பஜாஜ் ஆட்டோ முதலான தரமான பங்குகள் இன்னமும் அவற்றின் உச்ச பட்சப் பயணத்தைத் தொடர்ந்த வண்ணம் உள்ளன . பஜாஜ் ஆட்டோ முதல் பொது வெளியீடு 1960 ஆம் ஆண்டு வெளி வந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவும் . மேலும் விற்பது என்பது உங்களுக்கும் பங்கிற்குமான பயணத்தின் ஒரு முடிவைக் குறிக்கிறது . இந்தப் பங்குகளை மறுபடி எப்போது வாங்குவீர்கள் ?


கேள்வி : பங்கு முதலீடுகளுக்கு எங்கு பயிற்சி எடுக்கலாம் ?


பதில் : பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதன் மூலமாக முதலில் சந்தை என்ற பெரு வெள்ளத்தில் காலை நனையுங்கள் . பரஸ்பர நிதிகளின் NAV ஏற்றத்தையும் இறக்கத்தையும் எவ்விதம் எதிர் கொள்கிறீர்கள் என்று பாருங்கள் . பரஸ்பர நிதிகள் எந்தப் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்கின்றன எந்தப் பங்குகளில் முதலீட்டை விலக்கிக் கொள்கின்றன என்பதைத் தொடர்ந்தவாக்கில் ஆராயுங்கள் . இவ்வாறு பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது net practice என்ற வாக்கில் நேரடி பங்கு முதலீடுகளுக்கு ஒரு பயிற்சியாக இருக்கும் . 


கேள்வி : மல்டிபேக்கர் பென்னி ஸ்டாக் ?


பதில் : ?


கேள்வி : All weather portfolio ?


பதில் : All weather portfolio என்பது காளைச்சந்தை கரடிச்சந்தை பக்கவாட்டுச்சந்தை என்று எல்லாச் சந்தைகளிலும் ஒரே சீரான வருமானத்தைக் கொடுக்கவல்லதான ஒரு பங்குத் தொகுப்பாகும் . பங்குச்சந்தை வானிலை உட்பட எந்த வானிலையும் எப்போதும் ஒரே சீராக இருக்காது . All weather portfolio என்பது ஒரு el dorado . அது கற்பனைத்தங்கம் .


கேள்வி : பங்கு முதலீடுகளிலிருந்து எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம் ?


பதில் : நீண்ட கால அளவில் , நேரடி பங்கு முதலீடுகளிலிருந்து வருடத்திற்கு 20 முதல் 25 சதவீத கூட்டுப் பெருக்கத்தையும் , பங்கு சார்ந்த பரஸ்பர  நிதிகளிலிருந்து 15 முதல் 20 சதவீத கூட்டுப் பெருக்கத்தையும் எதிர்பார்க்கலாம் . இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது , இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கப்பெறாது . முதல் வருடம் 30 சதவீதம் , அடுத்த வருடம் எதிர் பத்து சதவீதம் பின்னர் பூஜ்ய சதவீதம் என்று மாறி மாறி வரும் . ஆனால் நீண்ட கால சராசரி என்ற அளவில் இந்த வருமானம் கிடைக்கப்பெறும் . 


கேள்வி : ஒருவர் தனது வருமானத்தில் எத்தனை சதவீதம் சேமிக்க வேண்டும் ?


பதில் : குறைந்த பட்சம் 20 சதவீதம் . வெறுமனே சேமித்தால் மட்டும் போதாது . அதனை முதலீடு செய்ய முக்கியமாகப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் . பொதுவாக இளவயதில் பொறுப்புகள் எதுவும் இருக்காது . எனவே வருமானத்தின் 20 சதவீதம் என்றெல்லாம் கணக்கில் கொள்ளாமல் அதன் பெரும் பகுதியை முதலீடு செய்தால் கூட்டுப்பெருக்கம் அதன் கடமையைச் செய்ய ஏதுவாகும் . மேலும் கூட்டுப்பெருக்கம் என்பது அதன் பின்னாட்களில் மட்டுமே மிகை பலன்களைத் தருவதாக இருக்கும் . இதனைப் பெற நாம் முன்னாட்களில் அதாவது இளவயதில் அதிகம் பணத்தை முதலீடு செய்வது இன்னும் ஆகப்பெரிய அனுகூலங்களை வழங்குவதாக இருக்கும் . 

அதனை விட முக்கியமான பலன் ஒன்றும் உள்ளது . இந்த மாதிரி இளமையில் முதலீடு செய்யக் கற்று விட்டால் சேமிப்பு மற்றும் முதலீடு உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி விடும் . கூடுதல் பலனாக சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு நீங்கள் பழகி விடுவீர்கள் . அதனால் சாதகமும் அடையப் பெறுவீர்கள் .


கேள்வி : ஏன் தின வணிகம் செய்யக்கூடாது ?


பதில் : ஏன் பங்குகளின் ஒரு நாள் காதலராக மட்டும் இருக்க வேண்டும் ? ஏன் பங்குகளின் வாழ்நாள் காதலராக இருக்கக்கூடாது ? 


கேள்வி : கரடிச்சந்தையை எவ்விதம் எதிர் கொள்வது ?


பதில் : உண்மையான முதலீட்டாளர்களால் கரடிச்சந்தையை உணர முடியாது . அவர்களைப் பொறுத்தவரை கரடிச்சந்தை தான் காளைச்சந்தை .

Comments

  1. வரும் வார நாட்களில் எந்த மாதிரியான பங்குகளில் முதலிடு செய்யலாம்... நீண்ட கால முதலிடு

    Sri
    Chennai

    ReplyDelete
    Replies
    1. முதலில் தாமதமான இந்தப் பதிலுக்கு என்னை மன்னிக்கவும் . நான் தற்போது காலப்பன்மயமாக்கம் என்ற அடிப்படையில் நீண்ட காலத்திற்கு வாங்க உத்தேசித்திருக்கும் , வாங்கிக் கொண்டிருக்கும் பங்குகளின் பட்டியல் ...

      RBL Bank*
      Vedant Fashions
      IDFC Ltd
      Motilal Oswal Financial Services
      Uniparts India
      CMS Info Systems
      Mahanagar Gas
      Control Print
      Godfrey Phillips*
      Godawari Power and Ispat
      Agarwal Industrial Corpn
      Kama holdings*
      Dr Reddys lab*

      *உத்தேச பங்குகள்

      Delete

Post a Comment

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14