பங்கு கேள்வி பதில் - 6
பங்கு கேள்வி பதில் - 6
கேள்வி : சமீபத்தில் விற்ற பங்குகள் ?
பதில் : Ador Fontech மற்றும் ICICI Securities . இரண்டு நிறுவனங்களும் தத்தமது தாய் நிறுவனங்களுடன் விரைவில் இணையவுள்ளன . தனிப்பட்ட முறையில் அவை செயல்படுவது என்பது வேறு . தாய் நிறுவனங்களுடன் இணைந்து அவை செயல்படுவது என்பது வேறு . நான் விற்கையில் Ador Fontech 3 மடங்காளர் . ICICI securities அரை மடங்காளர் . பங்காதாயப் பலன்கள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை .
கேள்வி : Byju நிறுவன மதிப்பு , டாலர் 22 பில்லியனிலிருந்து டாலர் 200 மில்லியனுக்கு இறங்கியிருப்பது குறித்து ?
பதில் : 22 பில்லியன் டாலர் என்பது 183422 கோடி ரூபாய் . 200 மில்லியன் டாலர் என்பது 1667 கோடி ரூபாய் . இந்த 99 சதவீத மதிப்பிழப்பு , நல்லவேளை , நிறுவனம் பங்குச்சந்தைக்கு வருவதற்கு முன்பே நிகழ்ந்து விட்டது . இல்லாவிட்டால் சிறு முதலீட்டாளர்கள் கையைச் சுட்டுக் கொண்டிருப்பார்கள் . Byju நிறுவனத்தில் முதலீடு செய்த பெரு முதலீட்டாளர்கள் ? அவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் .
கேள்வி : Unique stocks ஏதேனும் சிலவற்றைப் பரிந்துரைக்க முடியுமா ?
பதில் : Balkrishna Industries , CDSL , IEX , Sigachi Industries முதலான பல்வேறு பங்குகள் இருந்தாலும் மதிப்பு முதலீடாக குறை PE மதிப்பில் வர்த்தகமாகும் ஒரே நிறுவனப்பங்கு Off Highway வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Uniparts India .
கேள்வி : Analyst coverage போன்றவற்றை நம்பி பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ளலாமா ?
பதில் : Tata Investment Corporation நிறுவனப்பங்கு சென்ற நிதியாண்டில் 260 சதவீதம் உயர்ந்திருக்கிறது . எந்த ஆய்வாளரும் அந்தப் பங்கை ஆய்வு செய்யவில்லை என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது .
கேள்வி : ஒரே நாளில் 41000 கோடி ரூபாய் சேர்த்த முகேஷ் அம்பானி என்று பத்திரிகை செய்தி ஒன்று படித்தேன் . இது எப்படி சாத்தியம் ?
பதில் : ரிலையன்ஸ் பங்குகளின் விலை உயர்வைக் கொண்டு இந்தக் கணக்கீடு செய்யப்பட்டிருக்கிறது . ஒரே நாளில் , அம்பானி , 41000 கோடி ரூபாயை இழக்கவும் செய்யலாம் .
கேள்வி : சில நிறுவனங்களில் attrition rate அதிகமாக இருப்பது முதலீட்டிற்கான ஒரு அபாயமாக இருக்கிறதே ?
பதில் : உண்மை தான் . IT நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்த அபாயம் இன்னும் சற்று அதிகம் . ஆனால் பணியாளர் விலகு விகிதம் சில நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கிறது . உதாரணமாக Naukri அதாவது Info Edge நிறுவன அடிப்படையே attrition rate ல் தான் கட்டப்பட்டுள்ளது .
கேள்வி : Tata Chemicals நிறுவனப்பங்கை வாங்கலாமா ? அது வைத்திருக்கும் Tata Sons நிறுவனத்தின் 3 சதவீதப் பங்குகளின் மதிப்பு அதன் தற்போதைய சந்தை மதிப்பில் பெரும்பான்மை சதவீதம் உள்ளதே ?
பதில் : Holding company discount அதாவது உடைமை நிறுவன தள்ளுபடி என்பதாக ஒரு கருத்தாக்கம் இருக்கிறது . Tata Chemicals நிறுமனம் Tata Sons நிறுவனத்தின் 3 சதவீதப் பங்குகளை holding company என்ற வகையில் வைத்திருக்கிறது . Tata Sons நிறுவனப் பங்குகள் தற்போதைக்குப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் வாய்ப்பு எதுவுமில்லை . Tata Chemicals நிறுவனம் Tata Sons நிறுவனத்தின் பங்குகளைத் தொடர்ந்தவாக்கில் வைத்திருக்க மட்டும் செய்யும் . பங்குச்சந்தையில் Tata Sons நிறுவனப்பங்குகள் பட்டியலிடப்பட்டு அதனை Tata Chemicals நிறுவனம் விற்றாலன்றி இந்தப் பங்குகளைப் பணமாக்கம் செய்ய முடியாது . இவ்வாறு வெறுமனே கையில் வைத்திருக்கும் பங்குகளுக்குச் சந்தை , குறை மதிப்பை மட்டுமே வழங்கும் . இது holding company தள்ளுபடி என்பதாக அழைக்கப்படும் . இது காளைச்சந்தையில் கூடியும் , கரடிச்சந்தையில் குறைவதுமாக இருக்கும் . சராசரியாக இந்தத் தள்ளுபடி 40 முதல் 60 சதவீதம் என்ற அளவில் இருக்கும் . சமயங்களில் இது 80 சதவீதம் என்ற அளவிற்குக் கூடச் செல்லும் . ஆக , இதனைக் கொண்டு Tata Chemicals நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொள்ள முடியாது .
கேள்வி : பங்குகளைக் காலப் பன்மயமாக்கம் (time diversification) என்ற வகையில் வாங்கினாலும் அவை போக்குக் காட்டிய வண்ணம் இருக்கிறதே ?
பதில் : அடிப்படைப் பகுப்பாய்வு செய்து புதிய நிறுவனப்பங்குகளை வாங்குவது கோள் ஒன்றை அதன் பாதையில் நிலை நிறுத்துவது மாதிரி முதலில் கடினமாகத் தான் இருக்கும் . ஆனால் நிலை நிறுத்தி விட்டால் அது தன்னைப்போல் சுற்றத் தொடங்கி விடும் . ஒவ்வொரு சுற்றுக்கும் அதிகரித்து வரும் பங்காதாயப் பலன்களை அது வழங்கத் தொடங்கும் . இந்த அதிகரித்து வரும் பங்காதாயத்தை வழங்கும் கோள் அதனளவில் பெரிதாகும் . ஆண்டாண்டுகளின் கணக்கில் இந்தப் பெருங்கோள் , குறுங்கோள் ஒன்றை வழங்கும் . அதுவும் ஒவ்வொரு சுற்றுக்கும் அதிகரித்து வரும் பங்காதாயங்களை ... JTL Industries பங்குகளை ஒருவழியாக தற்போது நிலை நிறுத்தியிருக்கிறேன் (என்று நினைக்கிறேன்) RK Swamy முதலான பங்குகள் போக்குக் காட்டிய வண்ணம் உள்ளன . நிலை நிறுத்தம் செய்யப்பட்ட பங்குகளும் அவ்வப்போது கொந்தளிப்புக்கு (turbulence) உள்ளாகும் . அந்தக் கொந்தளிப்பு , பங்குகளை மேலும் வாங்குவதற்கான ஒரு சிறந்த தருணமாகும் . Kotak Mahindra Bank தற்சமயம் அந்த நிலையில் இருக்கிறது .
கேள்வி : Circuit filter ல் ஒரு பங்கு இருந்தால் அதனை வாங்கவோ விற்கவோ முடியாதா ?
பதில் : பங்குகளின் மீமிகை ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்தும் கருவியாக circuit filter செயல்படுகிறது . 5 சதவீத filter ல் ஒரு பங்கு இருப்பதாகக் கொள்ளலாம் . ஒரு வர்த்தக தினத்தில் அந்தப் பங்கு 5 சதவீதம் மட்டும் கூடவோ அல்லது குறையவோ முடியும் . பங்குகளுக்கான தேவைப்பாடு அதிகரித்து அது upper circuit அடிப்பதாகக் கொள்ளலாம் . இந்த நிலையில் பங்குகளை வாங்குபவர்கள் மட்டும் இருப்பார்களேயன்றி விற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . பங்கின் விலை இன்னும் கூடும் என்று காத்திருப்பார்கள் . பங்குகளுக்கான தேவைப்பாடு குறைந்து அது lower circuit அடிப்பதாகக் கொள்ளலாம் . இந்த நிலையில் பங்குகளை விற்பவர்கள் மட்டும் இருப்பார்களேயன்றி வாங்குபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . பங்கின் விலை இன்னும் குறையும் என்று காத்திருப்பார்கள் . வாங்குபவர்களும் விற்பவர்களும் இருந்தால் தான் வர்த்தகம் நிறைவு பெறும் . இந்த நிலையில் சும்மாவேனும் சில பங்குகள் வர்த்தகமாகும் . மற்றவை வரிசையில் நின்று விடும் .
கேள்வி : பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது , இதில் எது கடினமானது ?
பதில் : இந்த இரண்டும் கடினமானதில்லை . அவற்றைக் கையில் வைத்திருப்பதே கடினமானது . அண்மையில் Tata Investment Corporation நிறுவனப் பங்கு circuit filter ல் தினம் 5 சதவீதம் உயர்வைக் கண்டது . விலை வருவாய் விகிதம் 100 ஐயும் தாண்டிச் சென்றது . என்ன தான் நீண்ட கால முதலீட்டாளர் , பன்மடங்காளர்களின் பங்காளன் என்று கூறிக் கொண்டாலும் பங்குகளை இந்த உயர் விலையில் விற்று விட்டு மறுபடி குறை விலையில் திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்ற நினைப்பு எட்டிப் பார்த்தது . பங்கின் முடியையும் அடியையும் சரியாகப் பிடித்தால் பங்கின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடியும் . ஆனால் circuit filter ல் மாட்டிக் கொண்டதால் பங்குகளை விற்க முடியவில்லை . இதற்கிடையில் பங்கு lower circuit அடிக்கத் தொடங்கியது . தற்போது ஒரு விலையில் நிலை கொண்டுள்ளது . பங்குகளை ஆண்டாண்டு கையில் வைத்திருப்பதே கடினமானது .
Comments
Post a Comment