ஜென் கதைகள் - 4
ஜென் கதைகள் - 4
1 . செய்முறை வர்த்தகம் .
Algo trading என்பதான செய்முறை வர்த்தகம் குறித்து விளக்கமாகக் கூறுமாறு பங்குக் குருவிடம் சிஷ்யர்கள் கேட்டுக் கொண்டனர் . செய்முறை வர்த்தகம் என்பது கணிணி நிரல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வர்த்தக முறையாகும் . எந்த ஒரு வர்த்தக முறையும் மனித சிந்தனைக்கு மாற்றாக இருக்குமானால் அது அறவே ஒதுக்கப்பட வேண்டியதும் களையப்பட வேண்டியதுமாகும் . ஒரு முறை பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண்மணி ஒருவர் ஒரு கிலோ ரவை வாங்கினார் . அங்கிருந்த விற்பனையாளர் எலிப் பாஷாணம் ஒன்றை வாங்குமாறு வலியுறுத்தினார் . பிரச்னை , மேலாளர் வரை சென்றது . மேலாளர் , 100 கிலோ ரவை விற்றால் ஒரு எலிப் பாஷாணம் விற்கும் என்பது நிறுவன கணிணி நிரலின் கணக்கு . எங்கள் பதிவேட்டின் படி நீங்கள் வாங்கிய ஒரு கிலோவுடன் ரவை நூறு கிலோ என்ற கணக்கை எட்டி விட்டது . நீங்கள் எலிப் பாஷாணத்தை வாங்கியே தீர வேண்டும் என்று கூறினார் . மேலும் எங்கள் கணிணி நிரல் பொய் சொல்லாது என்றும் கூறிக் கொண்டார் . சிறு வயதில் நகர்ந்து செல்லும் மேகக் கூட்டங்களில் விதம் விதமான உருவங்களைப் பார்த்து விளையாடும் விளையாட்டை பெரியவர்கள் ஆன பின்னரும் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது .2. இதுவும் போகும் .
பங்குச்சந்தை ஒருமுறை வெகுகாலமாகக் கரடியின் பிடியில் சிக்குண்டு கிடந்தது . பங்குகள் வாங்குவாரின்றி குறை PE மதிப்பில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தன . நிறுவனங்களின் பங்கு ஈட்டு விகிதங்கள் நாளும் புதிய உச்சங்களைத் தொட்ட வண்ணம் இருந்தன . VIX அடங்கிக் கிடந்தது . IPO க்கள் எதுவும் பல்லாண்டுகளாக வெளிவரவில்லை . பங்குக் குருவின் சிஷ்யர்கள் குருவிடம் புலம்பிய வண்ணமாக இருந்தனர் . குரு ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார் . இதுவும் போகும் . இப்போது காளையின் காலம் . பங்குகளின் PE நாளும் புதிய உச்சங்களைத் தொட்டது . பங்கு ஈட்டு விகிதங்கள் தரையைத் தட்டின . VIX செயலாக இருந்தது . ஒரே வாரத்தில் ஒன்பது IPO க்கள் வெளி வந்தன . பங்குக் குருவின் சிஷ்யர்கள் குருவிடம் தங்கள் மனமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர் . குரு ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார் . இதுவும் போகும் .
3. இன்பம் எங்கே ? இன்பம் எங்கே ?
ஒரு ஊரில் பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் பல கோடி சம்பாதித்த பணக்காரர் ஒருவர் இருந்தார் . விப்ரோ பங்கை அதன் முதல் பொது வெளியீட்டில் வாங்கி அதனை அவர் இன்றளவும் வைத்திருப்பதாக ஊரில் ஒரு பேச்சு இருந்தது . விப்ரோ மட்டுமில்லை , சிப்லா , பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் , பிரிட்டானியா , ஐடிசி நிறுவன IPO பங்குகளையும் அவர் வைத்திருப்பதாக ஜனங்கள் கூறிக் கொண்டார்கள் . ஆனால் அவர் தான் மனமகிழ்ச்சியுடன் இல்லை . இன்பம் என்ற ஒன்றைத் தேடி அவர் அலைந்த வண்ணமாக இருந்தார் . கோயில் கோயிலாகச் சுற்றினார் . ஒரு முறை இமயமலைக்குச் சென்று வந்தார் . போதை வஸ்துக்களைக் கூட முயன்று பார்த்தார் . ஆனால் இன்பம் என்பது போக்குக் காட்டிய வண்ணம் இருந்தது . ஒரு நாள் மனம் வெறுத்தவராக அவருடைய பங்குப் பத்திரங்களை மூட்டையாகக் கட்டி (கதை NSDL காலத்திற்கு முன்னர் நடக்கிறது) பங்குக் குருவின் காலடியில் வைத்து வணங்கினார் . இந்த மாதிரி எனக்கு ஒரு பிரச்னை என்றும் அதனைத் தீர்த்து வைக்குமாறும் கேட்டுக் கொண்டார் . குரு அவரை ஒரு நிமிடம் தீர்க்கமாகப் பார்த்தார் . திடுதிப்பென்று அந்தப் பங்குப் பத்திர மூட்டையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார் . ஓட்டம் என்றால் அப்படி ஒரு ஓட்டம் . பணக்காரர் பதறிப் போனவராக அவரைத் துரத்திக் கொண்டு ஓடினார் . குரு அங்குமிங்கும் ஓடிப் போக்குக் காட்டி விட்டுப் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தார் . என்னப்பா ! பயந்து விட்டாயா ? இந்தா உன் பங்கு மூட்டை . Paradise is paradise lost என்று நீ கேள்விப் பட்டதில்லையா ? இழந்த சொர்க்கமே உண்மையான சொர்க்கம் . அதனைக் கையில் இருக்கும் போதே உணர்வது உன்னை மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் .
4. புரியாத புதிர் .
எவ்வளவு தான் படித்தும் , அனுபவம் பெற்றும் இந்தப் பங்குச்சந்தை என்பது ஒரு புரியாத புதிராக இருப்பதாக சிஷ்யர்கள் அலுத்துக் கொண்டனர் . அப்போது குரு கூறியதாவது : நான் அதிகாலையில் நடைப்பயிற்சியை மேற்கொள்வது நீங்கள் அறிந்ததே . அந்த நடைப்பயிற்சிக்கு இளைஞர் ஒருவர் தன் நாயுடன் வருவது வழக்கம் . அந்த நாய் செய்யும் அழிம்புகளுக்கு அளவே கிடையாது . அந்த வழியாகச் செல்லும் தெரு நாய்களைப் பார்த்து உறுமுவது , காரணமில்லாமல் குரைப்பது , இலைதழைகளை நெடு நேரம் முகர்ந்து பார்ப்பது , போவோர் வருவோர் மீது பாய்வது , பிறகு பம்முவது , நின்ற இடத்திலேயே வெகுநேரம் நிற்பது , திடுதிப்பென்று ஓடுவது என்று அடுத்து அது என்ன செய்யும் என்பதை யாராலும் கணிக்க இயலாது . ஆனால் இங்கு ஒரு விஷயத்தை நீங்கள் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும் . அந்த நாய் உறுதியான சங்கிலி ஒன்றுடன் கட்டப்பட்டுள்ளது . அதன் மறுமுனை அந்த இளைஞர் வசம் உள்ளது . நாய் அவ்வப்போது ஆட்டம் போட்டாலும் அந்த இளைஞரை மீறி எதனையும் செய்ய முடியாது . அவர் செல்லும் திசையில் தான் அது பயணிக்க முடியும் . அதே மாதிரி பங்குச்சந்தையும் கட்புலனாகாத ஒரு சங்கிலியால் பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது . நீங்கள் சந்தையில் கவனத்தைச் சிதற விடாது பொருளாதாரத்தில் கவனம் கொள்ளுங்கள் .
5. இரட்டைகள் .
ஒரு சமயம் , காளைச்சந்தையையும் கரடிச்சந்தையையும் ஒரே மாதிரி பாவிப்பது எப்படி என்று குருவிடம் சிஷ்யர்கள் கேட்டனர் . வாழ்க்கை எப்போதும் பகல்- இரவு , இன்பம்-துன்பம் , நன்மை-தீமை என்றவாறு இரட்டை நிலைகளில் இயங்குவதாகவே இருக்கிறது . நாம் இந்த இரட்டை நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும் . இந்த இரட்டைகளை சமமாகப் பாவிக்கும் நிலை ஒன்றைக் கண்டடைய வேண்டும் . கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் காளைச் சந்தையின் வேர்கள் கரடிச் சந்தையின் ஊடாகவும் , கரடிச் சந்தையின் வேர்கள் காளைச் சந்தையின் ஊடாகவும் உள்ளதை நீங்கள் உணரலாம் . ஒரு முறை குடியானவன் ஒருவனின் ஒரே குதிரை ஓடிப் போய் விட்டது . ஜனங்கள் அவனுக்காக வருத்தப்பட்டார்கள் . குடியானவன் ' பார்க்கலாம் ' என்றான் . கொஞ்ச நாட்கள் கழித்து அந்தக் குதிரை 20 குதிரைகளுடன் திரும்பி வந்தது . ஜனங்கள் அவனுடைய அதிர்ஷ்டத்தை வியந்தனர் . குடியானவன் பார்க்கலாம் என்றான் . சில நாட்கள் கழித்து ஒரு குதிரை குடியானவனின் மகன் கையை உடைத்து விட்டது . ஜனங்கள் அவனுக்காக வருத்தப்பட்டார்கள் . குடியானவன் பார்க்கலாம் என்றான் . சில நாட்களில் போர் மூண்டது . கையில் அடிபட்டுள்ளதால் குடியானவனின் மகன் போருக்குப் போகவில்லை ...
Comments
Post a Comment