பரஸ்பர நிதி கேள்வி பதில்
பரஸ்பர நிதி கேள்வி பதில்
கேள்வி : பரஸ்பர நிதிகளிலும் பன்மடங்காளர்கள் உண்டா ?
பதில் : Nippon India Growth Fund ன் NAV 3401 ரூபாய் . அதன் ஆரம்ப விலையான 10 ரூபாயைக் கொண்டு கணக்கிட்டால் அது 340 மடங்காளர் . இந்தப் பன்மடங்காளர்களைக் கைக்கொள்ள நீங்கள் இந்தப் பரஸ்பர நிதிகளின் வளர்ச்சித் தேர்வில் (Growth Option) பங்கேற்றிருக்க வேண்டும் . அதனினும் முக்கியமாக இந்த நிதிகளை விற்காமல் வைத்திருக்க வேண்டும் .
கேள்வி : Front running ?
பதில் : பரஸ்பர நிதி மேலாளர்கள் பகுப்பாய்வை மேற்கொண்டு நிறுவனப்பங்கு ஒன்றில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீட்டை மேற்கொள்ளவிருப்பதாகக் கொள்ளலாம் . இந்த முதலீடுகள் காரணமாக அதன் பங்கு விலைகள் கூடும் . இந்நிலையில் தனிப்பட்ட முறையில் அத்தகைய பங்குகளில் முன்னதாகவே முதலீட்டை மேற்கொண்டு அதன் மூலமாக இலாபமடைய முயல்வது front running என்று அழைக்கப்படுகிறது . பங்குகளை விற்கும் போதும் முன்னதாகவே அவற்றை விற்று வைப்பார்கள் .
கேள்வி : பரஸ்பர நிதி நிறுவனங்கள் எவ்விதம் வருமானம் ஈட்டுகின்றன ?
பதில் : பரஸ்பர நிதி மேலாண்மைச் செலவுகள் மூலமாக ... பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கான அதிக பட்ச மேலாண்மைச் செலவு 2.5 சதவீதம் . கடன் பத்திர முதலீடுகளுக்கு 1.5 சதவீதம் .
கேள்வி : பங்குச்சந்தை சரிந்தாலும் பரஸ்பர நிதிகள் சரியாது என்பது உண்மையா ?
பதில் : பங்கு சார்ந்த பரஸ்பர நிதி பங்குகளால் ஆகப் பெற்றிருக்கிறது . எனவே பங்குச்சந்தை சரிந்தால் பரஸ்பர நிதிகளும் சரியும் . பரஸ்பர நிதிகளின் முக மதிப்பு 10 ரூபாய் என்று இருப்பதால் சதவீதக் கணக்குகள் போட்டால் அன்றி இந்த சரிவை நம்மால் உணர முடியாது . Nippon India Growth Fund முதலான NAV அதிகமாக இருக்கும் நிதிகளில் இதனை நன்கு உணர முடியும் .
கேள்வி : Average up , Average down - எது சிறந்தது ?
பதில் : தரமான பங்கு(நிதி)களைப் பொறுத்தவரை இந்த இரண்டு உத்திகளும் நற்பலனைத் தருவதாக இருக்கும் . தரமற்ற பங்கு(நிதி)களைப் பொறுத்தவரை இந்த இரண்டும் கெடுபலனைத் தருவதாக இருக்கும் .
கேள்வி : பரஸ்பர நிதிகளில் இலாபத்தைக் கைப்பற்ற அவ்வப்போது அவற்றை விற்க வேண்டுமா ?
பதில் : தேவையில்லை . பரஸ்பர நிதிகளின் வளர்ச்சித் தேர்வில் (Growth Option) கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருப்பது தான் ஒரேயொரு சரியான வழி . இலாபத்தைக் கைப்பற்றுவது , நஷ்டத்தைக் குறைப்பது , பங்குத் தொகுப்பை அவ்வப்போது சமன் செய்வது ஆகிய அனைத்தும் நிதி மேலாளர் பாடு . அதற்காகத் தானே பரஸ்பர நிதியில் முதலீடு செய்திருக்கிறோம் ?
கேள்வி : சில பரஸ்பர நிதிகள் கடந்த ஒரு வருட அளவில் 80 சதவீத வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன . இவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாமா ?
பதில் : பரஸ்பர நிதிகளின் ஐந்தாண்டு பத்தாண்டு வருமானங்களை மட்டுமே பார்க்க வேண்டும் . இந்தக் கால அளவுகளில் சராசரியை நோக்கிய பின்னடைவு தனது வேலையைச் செவ்வனே செய்து விடும் .
கேள்வி : சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து SIP ஐ நிறுத்தவும் தொடரவும் வேண்டுமா ?
பதில் : SIP களின் ஆதாரமான பயன்பாடே , சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது குறைவான பரஸ்பர நிதி அலகுகளை வாங்குவது மற்றும் சந்தை இறக்கத்தில் இருக்கும் போது அதிகமான பரஸ்பர நிதி அலகுகளை வாங்குவது என்ற இந்த இரண்டு மட்டும் தான் . SIP க்களை சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து நிறுத்தவும் தொடரவும் செய்வது இந்தப் பயன்பாட்டை அழித்து விடும் .
கேள்வி : காலாகாலத்திற்கும் இருப்பதான ஒரேயொரு பங்கு சார்ந்த பரஸ்பர நிதியைப் பரிந்துரைக்க வேண்டுமென்றால் எதனைப் பரிந்துரைப்பீர்கள் ?
பதில் : சந்தை முழுமைக்குமான குறியீட்டு நிதி .
கேள்வி : துறை சார் நிதிகளில் (Sector Funds) முதலீட்டை மேற்கொள்வது குறித்து ?
பதில் : பொதுவாக ஒரு துறை அதன் உச்சத்தில் இருக்கும் போது அதாவது அத்துறை சார்ந்த நிறுவனப்பங்குகளின் விலை வருவாய் விகிதம் உயர் அளவுகளில் இருக்கும் போது தான் அவை சார்ந்த பரஸ்பர நிதிகள் வெளி வரும் . இது buy low sell high என்ற பங்குச்சந்தை தாரக மந்திரத்திற்கு எதிரானதாகும் .
Comments
Post a Comment