விடுபடு திசைவேகம்

விடுபடு திசைவேகம்

Escape Velocity 


விடுபடு திசைவேகம் எனப்படுவது ஒரு பொருளானது கோளின் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டுச் செல்வதற்குக் கோளின் பரப்பில் அப்பொருளுக்கு அளிக்கப்படவேண்டிய மேல் நோக்கிய சிறும திசைவேகம் ஆகும் - விக்கிப்பீடியா


               •                    *                    * 


பன்மடங்காளர் பங்குகளை ஏன் விற்கக்கூடாது என்பதை ITC பங்கை உதாரணமாகக் கொண்டு பார்க்கலாம் .


ITC நிறுவன முதல் பொது வெளியீடு 1976 ஆம் ஆண்டு முக மதிப்பு (Face Value) ரூபாய் 10 மற்றும் உயர் மதிப்பு (Premium) ரூபாய் 5 என்ற விலையில் வெளியிடப்பட்டது . நீண்ட கால முதலீட்டாளர் ஒருவர் அதன் 100 பங்குகளை 1500 ரூபாய்க்கு வாங்கி நாளது தேதி வரை வைத்திருப்பதாகக் கொண்டு கணக்கைத் தொடங்கலாம் .


1976 - IPO - 100 பங்குகள்

1978 - 1:5 இலவசப்பங்கு - 120

1980 - 1:5 இலவசப்பங்கு - 144

1989 - 1:1 இலவசப்பங்கு - 288

1991 - 3:5 இலவசப்பங்கு - 459

1994 - 1:1 இலவசப்பங்கு - 918

2005 - 1:2 இலவசப்பங்கு - 1377

2005 - 10:1 - பங்குப் பிரிப்பு - 13770

2010 - 1:1 இலவசப்பங்கு - 27540

2016 - 1:2 இலவசப்பங்கு - 41310


முதல் பொது வெளியீட்டின் 100 பங்கு , இலவசப்பங்கு மற்றும் பங்குப் பிரிப்பின் காரணமாக 41310 பங்குகள் ஆகியிருக்கும் . ITC நிறுவனப் பங்கின் இன்றைய விலை 427 ரூபாய் . 41310 பங்குகளின் விலை 1,76,39,370 ரூபாய் . IPO விலையைக் கொண்டு கணக்கிட்டால் பங்குகளின் விலை 11759 மடங்கு கூடியிருக்கிறது .


இன்றைய தேதியில் ஒருவர் ITC ன் ஒரு பங்கை 427 ரூபாய்க்கு வாங்கினால் அது ஒரு மடங்கு கூட பங்கின் விலை 854 ரூபாய் என்ற அளவை எட்டிப் பிடிக்க வேண்டும் . ITC பங்கின் சமீப கால சரிவான 140 ரூபாய் என்ற விலையைக் கொண்டு கணக்கிட்டாலும் அது ஒரு மடங்காளராக 140 ரூபாய் கூட வேண்டும் . ஆனால் நமது ITC நிறுவன IPO முதலீட்டாளருக்கு இந்தக் கணக்கு சற்று சுவாரஸ்யமாக மாறுகிறது . 


IPO முதலீட்டாளருக்கான ஒரு பங்கின் அடக்க விலைப் பட்டியல் :


1976 - 100 பங்கு - Rs.15/-

1978 -  120 பங்கு - Rs.12.50/-

1980 - 144 பங்கு - Rs.10.42/-

1989 - 288 பங்கு - Rs.5.20/-

1991 - 459 பங்கு - Rs.3.27/-

1994 - 918 பங்கு - Rs.1.63/-

2005 -1377 பங்கு - Rs.1.09/-

2005 -13770 பங்கு - Rs.0.11/-

2010 - 27540 பங்கு - Rs.0.05/-

2016 - 41310 பங்கு - Rs.0.036/-


அவருக்கு , ஒரு பங்கின் விலை வெறும் 4 காசு உயர்ந்தால் மட்டும் போதும் . 4 காசு கூட இல்லை , இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால் 0.03631 காசு கூடினால் மட்டும் போதும் . அது , ஒரு மடங்காளர் ஆகி விடும் . 


காலம் செல்லச் செல்ல IPO முதலீட்டாளருக்கான அடக்க விலை குறைந்து கொண்டே வரும் பாங்கைக் கவனியுங்கள் . நிறுவனம் மற்றுமொரு இலவசப் பங்கு வெளியீட்டை 1:2 என்ற கணக்கில் வெளியிடுவதாக ஒரு கற்பனை . இது வெறும் கற்பனையல்ல , ITC ன் இலவசப் பங்கு வெளியீட்டு வரலாற்றைக் கொண்டு பார்க்கையில் இதற்கான நிகழ்தகவு பிரகாசமாக உள்ளது . நமது நீண்ட நெடுங்கால முதலீட்டாளருக்கு இதன் மூலமாகக் கூடுதலாக 20655 பங்குகள் கிடைக்கப்பெறும் . அப்புறம் ITC பங்கு வெறும் இரண்டரைக் காசு (0.0242) கூடினால் அவருக்கு அது 1 bagger . இது ஏன் இவ்விதம் நிகழ்கிறது ? அதாவது காலம் செல்லச் செல்ல நிறுவனத்தின் பன்மடங்காளர் வேகம் ஏன் அதிகரிக்கிறது ? ஏனென்றால் கூட்டு விளைவு (Compound Effect) அதன் பின்னாட்களில் தான் வேகமெடுக்கும் . ஆக , பன்மடங்காளர் பங்குகளை அவசரப்பட்டு விற்று விடுவது ஆகப்பெரிய தவறாகும் .


பின்னாட்கள் என்று எளிதாக எழுதி விடலாம் . ITC பங்கின் அடக்க விலை பதினைந்து ரூபாயிலிருந்து மூன்றரைக் காசு ஆக 40 நீண்ட நெடிய ஆண்டுகள் ஆகியிருக்கின்றன . இவ்வளவு காலம் அதன் பங்குகளை விற்காமல் வைத்திருக்க டன் கணக்கில் பொறுமை தேவைப்படும் . 


இந்தக் கணக்கீடுகளில் நிறுவனம் வருடாவருடம் வழங்கிய பங்காதாயப் பலன்கள் சேர்க்கப்படவில்லை .


இவ்வாறு நிறுவனப் பங்குகளைக் காலாகாலத்திற்கும் வைத்திருப்பது ஆபத்து இல்லையா ? Nokia நிறுவனம் ஒரே இரவில் காணாமல் போய் விட்டது . அதற்கு ஆபத்து , ஆப்பிள் நிறுவனம் மூலம் வந்தது . அதே மாதிரி Kotak நிறுவனத்திற்கு அபாயம் எண்ணிம ஒளிப்படவியல் (Digital Photography) மூலம் வந்தது . ஆனால் ITC நிறுவனத்திற்கு அத்தகைய அபாயங்கள் ஏதுமில்லை . நிறுவனம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது .


1946 ஆம் ஆண்டு விப்ரோ நிறுவன IPO வெளி வந்தது . அதன் 3 பங்குகளை வாங்கி இன்றளவும் வைத்திருப்பவருக்கான ஒரு பங்கின் அடக்க விலை 0.00026/- இதன் பொருள் விப்ரோ பங்கு ஒரு பைசா கூடினால் அதன் IPO முதலீட்டாளருக்கு அது 

38.461 bagger என்பதாகும் . இது தான் உண்மையான விடுபடு திசைவேகம் !


1946 கணக்கு , 1976 கணக்கையெல்லாம் விடுங்கள் , உங்கள் கணக்கு என்ன என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது . எனக்கான கணக்கை என் இரண்டு பன்மடங்காளர் பங்குகள் மூலமாகப் பார்க்கலாம் .


ICICI வங்கி இன்றைய தேதியில் எனது 154 bagger . V Guard இன்றைய தேதியில் 113 bagger . ICICI வங்கிப் பங்கின் எனக்கான ஆரம்ப விலை பங்கு ஒன்றுக்கு ரூ.35/- V Guard பங்குக்கு ரூ.21/-


1997 - ICICI Bank - 100 shares

2014 - Split 5:1.    - 500 shares


ICICI வங்கிப் பங்கிற்கான தற்போதைய அடக்க விலை ரூ.7/- ICICI வங்கிப் பங்கு 7 ரூபாய் கூடினால் எனக்கு அது , ஒரு மடங்காளர் .


2008 - V Guard  - 50 shares

2008 - Split 10:1   - 500

2017  - Bonus 2:5 - 700


V Guard பங்கிற்கான தற்போதைய அடக்க விலை ரூ.3/- V Guard பங்கு 3 ரூபாய் கூடினால் எனக்கு அது , ஒரு மடங்காளர் . 


மேலும் சில பங்குகளின் பட்டியல் :

பங்கு - பங்கின் விலை - அடக்க விலை

Astral - 2043 - 46.12

Balkrishna Industries - 2406 - 73.59

Cyient - 2162 - 273.15

Elgi Equipments - 645 - 31.51

Godrej Consumer Products - 1211 - 41.18

Jyothy Laboratories - 447 - 39.56

Naukri - 5658 - 39.56

Sundram Fasteners - 1079 - 31


ஒரு மடங்கு கூடியதும் பங்குகளை விற்று விடுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது . மாறாக அத்தகைய பங்குகளைத் தொடர்ந்து வைத்திருந்தால் அதன் அடக்க விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் . ஒரு கட்டத்தில் அது விடுபடு திசை வேகத்தை எட்டிப் பிடிக்கும் . 


இந்த மாதிரி பங்குகளை விற்று வைப்பதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது . என்ன தான் நீங்கள் பார்த்துப் பார்த்து முதலீடு செய்தாலும் அவ்வப்போது சில களைகள் முளைத்த வண்ணமாகவே இருக்கும் . பங்குகளை வாங்கி விற்பதான செயல்களில் ஈடுபடும் போது தரமான பங்குகளைக் கை தவறி விடும் ஆபத்து போக தரமற்ற பங்குகளைக் கைக்கொள்ளக் கூடிய ஆபத்தும் உள்ளது . 


இப்போது ITC பங்குகளை வாங்கலாமா ? அல்லது பங்குச்சந்தையில் இப்போது முதலீடு செய்யலாமா ? சென்செக்ஸ் குறியீடு தற்போது 74000 புள்ளிகளில் இருக்கிறது . 


1976 ல் , ITC நிறுவன முதல் பொது வெளியீட்டில் பங்கேற்றவரின் மனநிலையும் சந்தையில் இப்போது முதலீடு செய்யலாமா என்பதாகத் தான் இருந்திருக்கும் . இந்தக் கேள்விக்கான எனது பதில் : சந்தையில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் . ITC மாதிரி ஓடுதளம் இன்னும் இருக்கக்கூடிய பங்குகளை இனங்கண்டு , அவற்றில் அவ்வப்போது தொடர்ந்த வாக்கில் முதலீடு செய்து , தசாப்தங்களின் (decades) கணக்கில் வைத்திருந்தால் உயர் PE மதிப்பில் அவற்றை வாங்குவது கூட எந்தப் பாதிப்பையும் நிகழ்த்தாது . காலம் அதனை சமன் செய்து விடும் .


நுட்பமாக அறிய வேண்டியது :

Key Takeaways :


1. நிலைத்து நிற்கும் பங்குகளை விலைக்கு வாங்குங்கள் .


2. பொறுமை மற்றும் நீடிப்புத்திறனைக் கைக்கொள்ளுங்கள் .


3. தசாப்தங்களில் சிந்தித்து 

பங்குகளுக்குக் காலம் என்கிற மேல்நோக்கிய சிறும திசைவேகத்தைக் கொடுங்கள் . பின்னர் அவற்றின் முதலீட்டுப் பெருக்கத்திற்கு வானமே எல்லை .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14