பங்குச்சந்தை பதில்கள் - 9
பங்குச்சந்தை பதில்கள் - 9
கேள்வி : சந்தை சரியும் போது , காலடியில் பூமி நழுவுவது போல் இருக்கிறது ?
பதில் : உண்மை தான் . ஆனால் இந்த பூமி உயர்ந்து வரும் பூமி என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் . முன்பொரு காலத்தில் அது 7000 அடி உயரத்தில் இருந்தது . தற்போது 70000 என்று இருக்கிறது .
கேள்வி : பணவீக்கம் ஆளாளுக்கு மாறுமா ?
பதில் : கண்டிப்பாக மாறும் . கல்விப் பணவீக்கம் , உணவுப் பணவீக்கம் , மருத்துவப் பணவீக்கம் ... என்று பணவீக்கத்தில் பலவகை உண்டு . இவற்றில் எதில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கான பணவீக்கம் மாறும் .
கேள்வி : புத்தக மதிப்பும் உள்ளார்ந்த மதிப்பும் ஒன்றா ? வேறு வேறா ?
பதில் : புத்தக மதிப்பு (Book Value) நிறுவனத்தின் சொத்துகளிலிருந்து கடனைக் கழித்தால் கிடைக்கப்பெறுவது . உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic Value) என்பது நிறுவனத்தின் எண்சார் (Quantitative) காரணிகளையும் பண்புசார் (Qualitative) காரணிகளையும் கொண்டு கணக்கிடப்படுவது . உள்ளார்ந்த மதிப்புக் கணக்கீடுகள் ஆளாளுக்கு மாறுபடும் . மேலும் அது தனிப்பட்ட எண்ணாக இருக்காது . Range of values என்ற வகையில் அது ஒரு விலைப்பட்டையில் (price band) இருக்கும் .
கேள்வி : விலையும் மதிப்பும் எப்போது ஒன்றிணையும் ?
பதில் : எப்போதாவது .
கேள்வி : வங்கி நிரந்தர வைப்பு முதலீடுகள் பங்குச்சந்தை மாதிரி ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகாமல் ஒரே சீரான வருமானத்தைக் கொடுப்பதாக இருக்கின்றன . பின்னர் ஏன் அவற்றில் முதலீடு செய்யக்கூடாது ?
பதில் : பணவீக்கம் என்ற ஒன்று இல்லாவிட்டால் தாராளமாக முதலீடு செய்யலாம் .
கேள்வி : பங்குச்சந்தை நிதி விகிதங்களில் மிக முக்கியமான ஒன்றே ஒன்று என்றால் எதனைக் குறிப்பிடலாம் ?
பதில் : Cash flow என்று அழைக்கப்படும் பணப்பாய்ச்சல் ...
கேள்வி : எத்தனை மல்டிபேக்கரைப் பிடித்திருக்கிறீர் ?
பதில் : மல்டிபேக்கர் என்பவை 100 மடங்கு கூடிய பங்குகள் என்று கொண்டால் இரண்டு .
கேள்வி : IPO க்களில் நீங்கள் ஏன் முதலீடு செய்வதில்லை ?
பதில் : லாட்டரியில் எனக்கு நம்பிக்கை இல்லை .
கேள்வி : பங்கு முதலீடுகளில் பங்காதாயம் மற்றும் பங்கு ஈட்டு விகிதம் என்கிற மாதிரி பத்திர முதலீடுகளிலும் உள்ளதா ?
பதில் : ஆம் . அது வட்டி மற்றும் வட்டி ஈட்டு விகிதம் (Interest yield) என்று அழைக்கப்படும் . இதனைச் சற்று சுருக்கமாகப் பார்க்கலாம் . கடன் பத்திரங்களை நிறுவனங்களிடமிருந்து ஒருவர் வாங்குவதாகக் கொள்ளலாம் . அதற்கு 8 சதவீத வட்டி . இந்தப் பத்திரங்கள் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன . இதற்கிடையில் RBI , வட்டி விகிதத்தைக் குறைத்தால் பட்டியலிடப்பட்ட இந்தப் பத்திரங்களின் விலை கூடும் . RBI , வட்டி விகிதத்தைக் கூட்டினால் இந்தப் பத்திரங்களின் விலை குறையும் . நிறுவனங்களிடமிருந்து கடன் பத்திரங்களை வாங்கி அவை முதிர்வடையும் போது நிறுவனங்களிடம் திரும்ப ஒப்படைப்பவருக்கு இந்த 8 சதவீத வட்டி விகிதம் மாறாது . ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்தப் பத்திரங்களை சந்தையில் வாங்கினாலோ அல்லது விற்றாலோ வட்டி விகிதம் மாறும் . இது வட்டி ஈட்டு விகிதம் என்று அழைக்கப்படும் .
கேள்வி : Arbitrage செய்வதுண்டா ?
பதில் : நிறுவனங்களின் buyback ல் பங்கு பெறுவது தான் எனது ஒரே arbitrage . ஒரு கையில் நிறுவனங்களிடம் பங்குகளை உயர் விலையில் விற்று விட்டு மறு கையில் சந்தையில் அவற்றைக் குறை விலையில் வாங்குவது .
Comments
Post a Comment