கதைக்குரு கதைகள் - 2
கதைக்குரு கதைகள் - 2
1. ஆட்டம் தெரிந்து ஆடு
ஒரு சமயம் நிறுவனம் ஒன்று தனது பங்குதாரர்களுக்கு 8000 சதவீதம் பங்காதாயம் கொடுக்கப் போவதாக அறிவித்தது . அப்போது வங்கி நிரந்தர வைப்பு முதலீடுகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதம் மட்டுமே . நமது முதலீட்டாளருக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி . இருக்காதா பின்னே ? 6 சதவீதம் எங்கே ? 8000 சதவீதம் எங்கே ? நமது முதலீட்டாளர் உடனடியாக அந்த நிறுவனத்தின் பத்து பங்குகளை ஒரு பங்கு 4000 ரூபாய் என்ற விலையில் வாங்கினார் . சில நாட்கள் கழித்து வங்கிக் கணக்கை ஆன்லைனில் பார்த்த முதலீட்டாளருக்கு அதிர்ச்சியான அதிர்ச்சி . கணக்கில் 32 இலட்சத்திற்குப் பதிலாக வெறும் 1600 ரூபாய் மட்டுமே வரவாகியிருந்தது . உடனடியாக தனது சந்தைக்குருவைத் தேடி ஓடினார் . என் கணக்கில் எங்கே தவறு ? குரு சொன்னது : வங்கி முதலீட்டு ஆட்ட விதிமுறைகள் வேறு . சந்தை முதலீட்டு ஆட்ட விதிமுறைகள் வேறு . வங்கியில் நீ முதலீடு செய்த பணம் முழுமைக்குமாக 6 சதவீத வட்டி வருவாய் கிடைக்கும் . சந்தையில் நீ முதலீடு செய்த நிறுவனத்தின் முக மதிப்பிற்குத் தான் இந்த 8000 சதவீத பங்காதாயம் . மேலும் உனக்குக் கிடைக்கப்பெறுவதைப் பங்காதாயம் (Dividend) என்று சொல்வதே தவறு . அதன் பெயர் பங்கு ஈட்டு விகிதம் (Dividend Yield) நிறுவனப் பங்குகளை அதன் முக மதிப்பில் வாங்கியவர்களுக்குக் கிடைக்கப் பெறுவது தான் பங்காதாயம் . நீ இரண்டு ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளை 4000 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறாய் . கணக்கு சரி தான் . குரு மேலும் சொன்னது : ஆட்டத்தின் விதிமுறைகள் தெரிந்து மட்டுமே ஆடவேண்டும் . ஒரு சமயம் கால் பந்தாட்டக்குழு ஒன்றின் கோல் கீப்பருக்கு கடும் காய்ச்சல் கண்டு போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது . கால் பந்தாட்டக் குழுவினர் மாற்று கோல் கீப்பரைத் தேடியலைந்தனர் . அவர்கள் செல்லும் வழியில் பூசணிக்காய் ஏற்றி வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது . அதன் மேலிருந்து ஒருவன் பூசணிக்காய்களை கீழே எறிந்தவண்ணம் இருந்தான் . கீழே நின்று கொண்டிருந்தவன் மேலேயிருந்து எறிபவன் எவ்வாறு எறிந்தாலும் இலாவகமாகப் பிடித்தவாறு இருந்தான் . ஒரு பூசணிக்காய் கூட அவன் பிடியிலிருந்து தப்பவில்லை . கால் பந்தாட்டக் குழுவினர் அவனை அணுகினர் . இந்த மாதிரி கால் பந்தாட்டப் போட்டி ஒன்று விரைவில் நடைபெறவிருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள இயலுமா என்பதாகவும் கேட்டனர் . அவன் தனக்குக் கால் பந்தாட்டம் தெரியாது என்று பதில் சொன்ன போது அது ஒரு பிரச்னையில்லை , இந்தப் பூசணிக்காய்க்குப் பதிலாகப் பந்தைப் போடுவார்கள் , அதனைப் பிடித்தால் போதுமானது என்று குழுவினர் கூறினர் . இதே மாதிரி பிடித்து விடுவாய் அல்லவா என்றும் வினவினர் . நீங்க கவலையே படாதீங்க சாமி , எந்தக் காய் போட்டாலும் கரீக்டா பிடிச்சிருவேன் , பார்த்தீங்க இல்ல என்றான் . அந்த விதியான நாளும் வந்தது . இரண்டு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை . ஆட்டம் முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னதாக எதிரணிக்கு ஒரு பெனல்டி கிக் வாய்ப்பு கிடைத்தது . நமது பூசணிக்காய் கோல் கீப்பர் பந்தைத் தடுப்பதற்கான தயார் நிலையில் நின்று கொண்டான் . மிக இலாவகமாகப் பந்தைப் பிடித்தும் விட்டான் . அடுத்த கணம் பந்தைக் கூடைக்குள் எறிந்தான் .
2. மதிப்புக் கூட்டல்
ஜென் குரு நிறுவனங்களின் மதிப்புக் கூட்டல் நடவடிக்கைகளைப் பற்றியதான பாடம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார் . Info Edge நிறுவனத்தை உதாரணமாகக் கொண்டு அதன் மதிப்புக் கூட்டல் நடவடிக்கைகளான அதன் Zomoto , Policy Bazaar மற்றும் பல நிறுவனங்களின் மீதான முதலீடுகள் , தனது பணியாளர்களுக்கு அது இலவசமாகப் பங்குகளை வழங்கியது , முதலீட்டாளர்களுக்கு அவ்வப்போது இலவசப் பங்குகளை வழங்குவது , வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் பொருட்டு அது ஒரு தனிப்பட்ட நிதியை உருவாக்கியது , சரியான நேரத்தில் அது மேற்கொண்ட ஒரு QIP , இயற்கையாகவே அதற்கு அமைந்த நேர் பின்னூட்ட வளைய அகழி என்று அவருக்கே திருப்தி தரும் வகையில் வகுப்பை நடத்தினார் . இருந்தாலும் ஒரு சில சீடர்கள் கொட்டாவி விட்ட வண்ணம் இருந்தனர் . அப்போது குரு சீடர்களின் அலுப்பைப் போக்குவதற்காகச் சொன்ன மதிப்புக் கூட்டல் கதை : இது கதையல்ல . என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவமாகும் . ஒரு முறை பழங்காலப் பொருட்களை ஏலம் விடும் நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தேன் . பழைய வயலின் ஒன்று ஏலம் விடப்பட்டது . அதன் தந்திகள் தளர்ந்திருந்தன . அதன் மேல் ஏடு போல் தூசி படிந்திருந்தது . தந்தியைத் தொட்டால் அது ஈனஸ்வரத்தில் முனகியது . ஏலம் விடும் பொறுப்பாளர் , " இந்தப் பாடாவதி வயலினைப் பாருங்கள் . இதற்கு நான் எவ்வளவு ஏலம் கேட்க முடியும் ? இந்த வயலினுக்கு குறைந்த பட்ச விலையான பத்து ரூபாய் என்பதை நிர்ணயம் செய்கிறேன் . ஆனால் அந்த வயலினை வாங்க யாரும் முன்வரவில்லை . பொறுப்பாளர் அந்த வயலினை எடைக்குப் போட எடுத்து வைக்கும் போது ஒரு நிமிஷம் என்று சொல்லியவாறு நான் எழுந்தேன் . அதனைத் தூசி தட்டி தளர்ந்த அதன் தந்திகளை இறுக்கிக் கட்டினேன் . அதன் தந்திகளை மீட்டியதும் அது பேச அல்ல பாடத் தொடங்கியது . அதன் இனிய கானத்தில் அனைவரும் கட்டுண்டு கிடந்தனர் . பொறுப்பாளர் , திருவாளர் ஐயா அவர்கள் இசைத்த இந்த இன்னிசையைக் கேட்டீர்கள் அல்லவா ? இந்த அருமையான வயலினுக்குக் குறைந்த பட்ச விலை 100 ரூபாய் என்பதாக நிர்ணயம் செய்கிறேன் . ஒருவர் 200 ரூபாய் என்பதாகக் கேட்டார் . இன்னொருவர் 500 ரூபாய் . பிறிதொருவர் 750 . முதலில் வெறும் பத்து ரூபாய்க்கு ஏலம் போகாத அந்த வயலின் கடைசியில் 1000 ரூபாய்க்கு ஏலம் போனது .
Comments
Post a Comment