சூதாட்டக்காரர்களின் மாயை
சூதாட்டக்காரர்களின் மாயை
Gamblers Fallacy
நாணயம் ஒன்றைச் சுண்டுகையில் தொடர்ந்து ஐந்து முறை தலை விழுகிறது . அடுத்த சுண்டுதலில் எது விழும் ? தலையா அல்லது பூவா ?
தலை என்று விடை சொன்னாலும் அல்லது பூ என்று சொன்னாலும் நீங்கள் சூதாட்ட மாயைக்கு ஆட்பட்டிருப்பதாக அர்த்தம் .
அடுத்த சுண்டுகையில் தலை அல்லது பூ விழுவதற்கு 50 சதவீத வாய்ப்பு இருக்கிறது . தொடர்ந்து வரும் சுண்டுதலிலும் இதே வாய்ப்பு மட்டுமே உள்ளது . மற்றபடி இந்த வாய்ப்பு இதற்கு முன்னர் விழுந்த தலை அல்லது பூவிலிருந்து தனிப்பட்டது . ஐந்து தடவை தொடர்ந்து தலை விழுந்தால் அடுத்தும் தலை விழும் என்று நினைப்பது அல்லது ஐந்து முறை தலை விழுந்து விட்டது இது பூவின் முறை என்று நினைப்பது தவறான எண்ணப்போக்கு . ஒவ்வொரு சுண்டுதலும் தனிப்பட்டதான ஒரு நிகழ்வு . முன்னர் நடந்த நிகழ்வு அதனைப் பாதிக்காது .
சூதாட்ட வட்டு (roulette wheel) ஒரு முறை தொடர்ந்தவாக்கில் கருப்பு நிறத்தில் நின்றது . அடுத்து சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று ஊகித்து சூதாட்டக்காரர்கள் சிவப்பு நிறத்தில் பந்தயம் கட்டினர் . ஆனால் தொடர்ந்து கருப்பு நிறமே வரப்பெற்று சிவப்பு நிறம் 27 வது தடவை தான் வந்தது . சிவப்பில் பந்தயம் கட்டியவர்களுக்குப் பெருத்த நஷ்டம் உண்டானது . 1913 ஆம் ஆண்டு நடந்த உண்மைச்சம்பவம் இது .
தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த மாயைக்கு உட்பட்டவர்களாகவே நாம் இருக்கிறோம் . என் இரு சக்கர வாகனம் இந்த மாதத்தில் இரண்டு முறை பஞ்சராகி விட்டது , இனி ஆகாது என்பதிலிருந்து அவருக்கு ஐந்து பெண் குழந்தைகள் , கட்டாயமாக அடுத்தது ஆண் தான் என்பது வரை உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம் .
பங்குச்சந்தைக்கு வருவோம் . ஒரு பங்கு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது . அது நாளை ஏறுமா அல்லது இறங்குமா ? அதே மாதிரி ஒரு பங்கு தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது . அது நாளை இறங்குமா அல்லது ஏறுமா ?
நாணயச் சுண்டுதல் மாதிரி இதுவும் தனிப்பட்ட ஒரு நிகழ்வு மட்டுமே . ஐந்து நாட்கள் தொடர்ந்து ஒரு பங்கு விலையேற்றத்துக்கு உட்படுவதோ அல்லது விலைக்குறைப்புக்கு ஆட்படுவதோ அடுத்த நாளைய அதன் விலையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது . மிகவும் முக்கியமாக தின அளவில் .
குறுகிய கால பங்குச் சந்தை முன் முடிவுகளும் இந்த மாயைக்கு உட்பட்டவை தான் . சந்தைக் குறியீடுகள் அதன் உயர்ந்த பட்ச அளவை எட்டி விட்டது என்று கையில் இருக்கும் பங்குகளை விற்று வைப்பது இந்த மாயையின் பாற்பட்டது . தனிப்பட்ட பங்குகளை இந்த முறையில் விற்று வைப்பதும் தவறு . 52 வார உயர்ந்த பட்ச விலை என்று ஒரு பங்கை விற்று வைக்கிறீர்கள் . அடுத்த வருடம் அதன் 52 வார உயர்ந்த பட்ச விலை , 52 வாரக் குறைந்த பட்ச விலையாகி விடும் . சந்தையின் குறைந்த பட்ச அளவையும் இதே முறையில் சிந்தித்துப் பாருங்கள் .
அதே மாதிரி கொள்ளை நோய் வந்தால் சந்தை சரியும் , அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் சந்தை கூடும் என்பதையும் எப்போதும் உத்தரவாதமாகச் சொல்ல இயலாது . கொரோனா பெருந்தொற்று வந்ததும் சந்தைக்குறியீடு குறைந்து U திருப்பமாக உடனே உயர்ந்து சென்றதை நினைவு கூர்க . இதற்காக அடுத்த முறை பெருந்தொற்று வந்தால் சந்தை U திருப்பம் திரும்பும் என்று அர்த்தமில்லை . திரும்பலாம் . திரும்பாமலும் இருக்கலாம் .
குறைந்த எண்ணிக்கையில் அதாவது 10 முறை நாணயம் சுண்டும் போது 8 முறை தலை (அல்லது பூ) வந்தாலும் நீண்ட வரிசையில் அதாவது 100 முறை நாணயம் ஒன்றைச் சுண்டும் போது சராசரியாக 50 முறை தலை விழுவதற்கும் 50 முறை பூ விழுவதற்குமான வாய்ப்பு கட்டாயமாக உள்ளது . நீண்ட கால அளவில் சந்தைக் குறியீடுகள் மற்றும் தரமான பங்குகள் உயர் அளவை எட்டி விடுவது மாதிரி ...
ஒரு சிலர் சூதாட்டம் மூலமாகப் பணம் ஈட்டுகிறார்களே என்பதான ஒரு கேள்வி எழலாம் . மேலே குறிப்பிட்ட 1913 ஆம் ஆண்டு நிகழ்வை உதாரணமாகக் கொண்டால் , கருப்பில் பந்தயம் கட்டியவர் 26 முறை தொடர்ந்து வென்று பெரும் பணம் ஈட்டக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்தது . ஒருவேளை யாராவது இந்த அதிர்ஷ்டத்தில் சவாரி செய்திருக்கலாம் . ஆனால் தொடர்ந்த வாக்கில் இதனை யாரும் செய்ய முடியுமா ? முதலில் இத்தகைய வாய்ப்புகள் எழுமா ? 1913 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை . இவ்வாறு நடைபெறாமை தான் இந்நிகழ்வின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது .
மேலும் , சூதாட்ட நிலையங்கள் , பணத்தை வெல்வதற்கு உச்ச பட்ச அளவை நிர்ணயித்திருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும் . சூதாட்டத்தில் எப்போதும் சூதாட்ட நிலையங்கள் மட்டுமே வெல்வதாக இருக்கும் .
பங்குச்சந்தையிலும் இத்தகைய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்ற வண்ணம் உள்ளது என்பதென்னவோ உண்மை தான் . Unitech நிறுவனப் பங்கு , ரியல் எஸ்டேட் குமிழியின் போது உச்சாணிக்குச் சென்றது . அதே மாதிரி ஒரு முறை Vakrangee Software நிறுவனப் பங்கு . எவரெஸ்ட் சிகரம் மாதிரி இருக்கும் இந்தப் பங்குகளின் விலை வரைபடத்தை இன்றும் கூகுள் இமேஜ் தேடுபோறியில் பார்க்கலாம் . யாராவது இந்தப் பங்குகளின் அடியைப் பிடித்து அதன் முடியில் வெளியேறியிருக்கலாம் . ஆனால் இந்த ஊக வணிக வெற்றி நீண்ட கால அளவில் அவர்களுக்கு நன்மை செய்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறி தான் . எல்லாப் பங்குகளும் இந்த மாதிரி ஒரு வழிப்பாதை விலையேற்றத்துக்கு உள்ளாகாது . மேலும் இந்த ஊக வணிகத்தில் ஒரு முறை வெற்றி பெற்றவர்கள் சந்தையையும் அதில் வர்த்தகமாகும் பங்குகளையும் ஊகக் கண்ணாடி வழியே தான் நோக்குவார்கள் . கையில் (ஊக) சுத்தியல் இருந்தால் எதைப் பார்த்தாலும் (ஊக) ஆணியாகவே தெரியும் .
சரி , இந்த சூதாட்டக்காரர்களின் மாயையிலிருந்து எவ்விதம் விடுபடுவது ? இந்த மாதிரி சூதாட்ட மாயை என்பதாக ஒன்று இருக்கிறது , அதற்கு நாம் ஆட்படுவோம் என்பதைப் புரிந்து கொள்வது இதிலிருந்து விடுபடுவதற்கான முதல் படியாகும் .
இரண்டாவதாக the house is always win என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் . சூதாட்டத்தில் , இறுதியில் வெல்வது அதை நடத்துபவர்கள் தான் .
முடிவாக ஒழுங்கற்ற அமைவுகளில் ஒருங்கமைவைத் தேடாதீர்கள் .
Comments
Post a Comment