பங்குப் பிரிப்பு

பங்குப் பிரிப்பு 

Stock Split

Eicher Motors நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் தனது 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்கை 1 ரூபாயாகப் பிரிக்க உள்ளதாக அறிவித்ததும் 14000 ரூபாய் என்ற அளவுகளில் வர்த்தமாகிக் கொண்டிருந்த அந்த நிறுவனப் பங்குகளின் விலை ஜிவ்வென்று உயரத் தொடங்கியது . உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சுலபமான வழி அதனை இரண்டாக மடித்து சட்டைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்ற பணமொழி ஞாபகத்திற்கு வந்தது . அது சரி , இந்தப் பங்குப் பிரிப்பு என்றால் என்ன ? நிறுவனங்கள் ஏன் பங்குகளைப் பிரிக்க வேண்டும் ? பங்குகளைப் பிரிக்காமல் ஒரு நிறுவனம் ஏன் வர்த்தகமாகக் கூடாது ? 

நிறுவனம் ஒன்றின் பங்கு முதல் (share capital) 10000 ரூபாய் என்று கொள்ளலாம் . அதாவது 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட 1000 பங்குகள் . நிறுவனத்தின் முதல் வருட நிகர இலாபம் (net profit) 2000 ரூபாய் . நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (Earnings Per Share) 2 ரூபாய் . நிறுவனம் 20 என்ற விலை வருவாய் விகிதத்தில் ( PE Multiple) வர்த்தமாகிறது . அதாவது பங்கின் விலை 40 ரூபாய் . ஆண்டாண்டு காலமாக நிறுவனம் நன்கு செயல்படுகிறது . நிறுவனத்தின் நிகர இலாபம் 20 சதவீத CAGR என்ற அளவில் வளர்ந்து வருகிறது . இப்போது நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் 200 ரூபாய் . சந்தை , நிறுவனத்தின் இந்தத் தரமான வளர்ச்சிக்கு உயர் அளவிலான 30 என்ற PE மதிப்பை வழங்குகிறது . பங்கின் விலை இப்போது 6000 ரூபாய் . சிறு முதலீட்டாளர்கள் வாங்க ஏதுவாக நிறுவனம் பங்குப் பிரிப்பை மேற்கொள்கிறது . 10 ரூபாய் முக மதிப்பை 1 ரூபாய் என்ற அளவில் குறைக்கிறது . அதாவது 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு பங்கிற்குப் பதிலாக 1 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பத்து பங்குகள் . பங்கின் விலை இப்போது 600 ரூபாயாக மாறி விடும் .

பங்குப் பிரிப்பின் மூலமாக நிறுவனத்தின் மற்ற எந்த அளவீடுகளும் மாறாது . பின்னர் பங்குப் பிரிப்பின் போது பங்குகளின் விலை ஏன் கூடுகிறது ? ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் affordability . அதாவது பங்கின் விலை மலிவாக (மதிப்பாக அல்ல) தாங்கத்தக்கதாக மாறுகிறது .

வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனமான Berkshire Hathaway இதுவரை பங்குப் பிரிப்பை மேற்கொள்ளவில்லை என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது . ஒரு BRK நிறுவனப்பங்கின் விலை 465600 டாலர் . ரூபாய்க் கணக்கில் சொல்வதானால் கிட்டத்தட்ட 3 கோடியே 82 இலட்சம் . இதற்கு மாறாக ஆப்பிள் நிறுவனம் ஐந்து முறை பங்குப் பிரிப்பை மேற்கொண்டிருக்கிறது . அதன் ஒரு பங்கு 224 பங்குகளாக உருமாற்றம் அடைந்திருக்கிறது . ஆப்பிள் நிறுவனப் பங்குகளின் முக மதிப்பு 0.00001 டாலர் . இந்த முக மதிப்பு ஒரு கருத்து வடிவாக்கம் மட்டுமே . இந்தியாவில் இன்றைய சந்தை விதிகளின் படி பங்குகளின் குறைந்த பட்ச முக மதிப்பு ஒரு ரூபாயாக உள்ளது .

பங்குப் பிரிப்புக்கு ஒரு உதாவக்கரை அண்ணன் இருப்பது உங்களுக்குத் தெரியுமா ? அவன் பெயர் பங்குச் சேர்ப்பு (Reverse split) என்பதாகும் . பங்குப் பிரிப்பில் என்ன நடக்கிறதோ அது பங்குச் சேர்ப்பில் தலைகீழாக நடக்கிறது . ஒரு நிறுவனம் நன்கு வளர்ந்து பங்குப் பிரிப்பை மேற்கொள்கிறது . எதிர்பாராத அக மற்றும் புறச்சூழல் காரணமாக நிறுவனம் தொடர்ச்சியாக நஷ்டத்திற்கு உள்ளாவதாகக் கொள்ளலாம் . ஒரு பங்குச் சம்பாத்தியம் குறையத் தொடங்குகிறது . இந்த ஒரு பங்குச் சம்பாத்தியத்தைத் தொடரும் PE குறுக்கத்திற்கு உள்ளாகிறது . விளைவாக பங்கின் விலை குறையத் தொடங்கும் . ஒரு கட்டத்தில் 'ரூபாய் பங்கு' என்று சொல்லத்தக்க அளவில் பங்கின் விலை பத்து ரூபாய்க்கும் கீழாகச் சென்று விடும் . இதைத் தவிர்க்கும் பொருட்டு நிறுவனங்கள் பங்குச் சேர்ப்பை மேற்கொள்ளும் . 1 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பத்து பங்குகளுக்கு மாற்றாக 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு பங்கு என்பதாக வழங்கும் . 1 ரூபாய் பங்காக இருக்கும் போது 8 ரூபாய்க்கு வர்த்தகமானால் இப்போது 80 ரூபாய்க்கு வர்த்தகமாகும் .

சந்தை பொதுவாக பங்குச் சேர்ப்பை விரும்புவதில்லை . நிறுவனம் இலாபப் பாதைக்குத் திரும்பினாலும் கூட அத்தகைய நிறுவனங்களின் PE குறுக்கம் மீண்டும் பெருக்கத்திற்கு உள்ளாவது அரிதினும் அரிது .

பங்குப்பிரிப்பு என்பது சில்லறை மாற்றுவது போல் பத்தை ஒன்றாக்கும் எளிய விஷயமல்ல . பங்குப் பிரிப்பு என்பது கவனமாகக் கையாளப்பட வேண்டிய இருமுனைகளிலும் கூராக உள்ள கத்தி போன்றதாகும் .

முன்னரே குறிப்பிட்டபடி பங்குப் பிரிப்பின் மூலமாக நிறுவன அளவில் மதிப்பு எதுவும் உருவாக்கம் பெறுவதில்லை . விலை மலிவு என்ற அடிப்படையில் நிறையப் பேர் பங்குகளை வாங்க முனைவதால் பங்குகளுக்கான தேவைப்பாடு (demand) அதிகரிக்கிறது . அதனால் பங்கின் விலை கூடுகிறது .

சின்ன நகைச்சுவை ஒன்றுடன் இந்தப் பதிவை முடிக்கலாம் . பங்குச்சந்தை தினசரி வர்த்தகர் ஒருவர் சந்தை முடிந்தவுடன் வீட்டுக்கு சாப்பிடச் சென்றார் . மனைவி பீஸ்ஸா ஒன்றை நான்கு துண்டுகளாக வெட்டிப் பரிமாறினார் . தின வர்த்தகர் நான் இன்றைக்கு கொலைப்பசியில் இருக்கிறேன் , பீஸ்ஸாவை எட்டு துண்டுகளாக வெட்டு என்று கூறவும் மனைவி ஙே என்று விழித்தார் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14