அதி நம்பிக்கை சாய்வு
அதி நம்பிக்கை சாய்வு
Over Confidence Bias
நம்மைக் குறித்த நம்பிக்கை நமக்குக் கட்டாயம் இருக்க வேண்டும் . ஆனால் அது அதி நம்பிக்கையாக இருக்கக் கூடாது . மற்ற இடங்களை விட பங்குச்சந்தையில் அதி நம்பிக்கைக்கு நாம் கொடுக்கக்கூடிய விலை மிகவும் அதிகம் .
நம்முடைய திறமைகள் எதுவாக இருந்தாலும் பொதுவாக அதனை நாம் மிகை மதிப்பீடு செய்பவர்களாகவே இருக்கிறோம் . பரஸ்பர நிதி மேலாளர்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது . 74 சதவீதம் பேர் தாங்கள் சராசரிக்கும் மேல் என்பதாகவும் 26 சதவீதம் பேர் தாங்கள் சராசரி என்பதாகவும் பதில் அளித்தார்கள் . உண்மை என்னவென்றால் பெரும்பாலான பரஸ்பர நிதிகள் பங்குச்சந்தை குறியீடுகளைக் கூட வெற்றி கொள்வதில்லை . சரி , அதை விடுங்கள் . யார் யாரெல்லாம் சொர்க்கத்திற்குப் போவார்கள் என்பதான ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது . ஹிட்லர் 10 சதவீதம் , பில் கிளிண்டன் 40 சதவீதம் , அன்னை தெரசா 60 சதவீதம் ... 80 சதவீதம் யார் தெரியுமா ? கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தங்களைத் தாங்களே தேர்வு செய்து கொண்டனர் . இது எப்படி இருக்கு ?
பங்குச்சந்தை தினசரி மற்றும் குறுகிய கால அளவில் சீரற்ற (random) நடை தான் பயிலும் . ஆனால் இந்த நடையை சரியாகக் கணித்து விடலாம் என்று பெரும்பாலோனோர் தினசரி மற்றும் குறுகிய கால வணிகத்தில் ஈடுபடுவது அதி நம்பிக்கை சாய்வு . அப்படியே ஒருவர் பங்குச்சந்தையின் குறுகிய கால ஓட்டத்தை மிகச் சரியாகவும் , தொடர்ந்த வாக்கிலும் கணித்தாலும் கூட bid ask spread , தரகு மற்றும் வரி வகையறாக்களைக் கணக்கில் கொண்டால் அது ஒரு சுழி விளைவு வினை (zero sum game) மட்டுமே .
பங்குச்சந்தை சுழி விளைவு விளையாட்டிற்கான தளம் அல்ல . முதல் உருவாக்கம் (capital formation) என்பது அதனுடைய முதலும் முடிவுமானதாகும் . முதலீட்டாளர்கள் இந்த முதல் உருவாக்கத்தில் பங்கு பெற்று நிறுவனத்துடன் சேர்ந்து அவர்களும் வளர வேண்டும் . ஆனால் உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகளில் பங்குகளை வாங்கி வைத்திருத்தல் (delivery based buying) என்பதே கிடையாது . பங்குகள் பறக்க விட வேண்டிய காகிதங்கள் அல்ல . அது இரத்தமும் சதையும் ஆன்மாவும் கொண்ட நிறுவனங்களின் ஒரு சின்னஞ்சிறு பகுதியாகும் .
முதல் உருவாக்கம் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம் .
Mindtree நிறுவனர் சுப்ரதோ பக்சியின் வார்த்தைகளில் ...
' Mindtree நிறுவனம் 1999 ஆம் ஆண்டு பத்து நபர்களால் தொடங்கப்பட்டது . ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு இரண்டு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்குகளை எங்களுக்குள் விநியோகித்துக் கொண்டோம் . பின்னர் அமெரிக்க வால்டன் இண்டர்நேஷனல் நிறுவனமும் இந்திய க்ளோபல் டெக்னாலஜி வெண்ட்சரும் Mindtree நிறுவனத்தின் 45 சதவீதப் பங்குகளை பங்கு ஒன்றுக்கு 41 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள் . இதன் மூலம் நிறுவனத்திற்கு 9.5 மில்லியன் டாலர் மூலதனமாகக் கிடைக்கிறது . 2001 ஆம் ஆண்டில் , இரண்டாம் சுற்று முதலீட்டில் கேபிடல் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பங்கு ஒன்றை 100 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்தோம் . 2007 ஆம் ஆண்டு Mindtree நிறுவன முதன்மைப் பங்கு வெளியீடு (IPO) ஒரு பங்கு 425 ரூபாய் என்ற விலையில் வெளியிடப்பட்டது . 2012 ஆம் ஆண்டு , முதன்முதலாக Mindtree யில் முதலீடு செய்த வால்டன் நிறுவனம் 610 ரூபாய் என்ற விலையில் தனது முதலீட்டை பங்குச்சந்தையில் விற்று விட்டு வெளியேறுகிறது. 13 ஆண்டுகளில் இரண்டு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு பங்கு 610 ரூபாய்களாக மதிப்புப் பெருக்கம் அடைவது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது . நிறுவனம் நன்கு மேலாண்மை செய்யப்பட்டு பங்குச்சந்தையும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் பங்கின் விலை உயர்ந்த வண்ணமாகவே இருக்கும் '
IPO வில் Mindtree நிறுவனப் பங்கை வாங்கி நாளது தேதி வரை வைத்திருக்கும் நீண்ட கால முதலீட்டாளருக்கு என்ன இலாபம் கிடைக்கப் பெற்றிருக்கிறது என்பதையும் பார்த்து விடலாம் .
நிறுவனம் 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசப்பங்குகளை அளித்திருக்கிறது . IPO ன் ஒரு பங்கு நான்கு பங்குகளாகப் பெருகியிருக்கும் . இன்றைய தேதியில் Mindtree நிறுவனம் L & T Infotech நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு விட்டது . Mindtree நிறுவனத்தின் 25 பங்குகளை அதன் முதல் பொது வெளியீட்டில் வாங்கி வைத்திருப்பவரிடம் அதன் இரண்டு இலவசப்பங்கு வெளியீடுகள் மூலமாக தற்போது 100 பங்குகள் இருக்கும் . இந்த 100 Mindtree பங்குகள் 73 L & T Infotech பங்குகளாக மாற்றம் பெற்றிருக்கும் . இவ்வாறு இணைக்கப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய பெயர் LTIMindtree . அதன் ஒரு பங்கின் தற்போதைய விலை 4703 ரூபாய் . 73 பங்குகளின் விலை 343319 ரூபாய் . 25 Mindtree பங்குகள் நாளது தேதி வரை 32 மடங்கு முதல் உருவாக்கம் பெற்றிருக்கின்றன .
நிறுவனம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது . இந்த நீண்ட கால ராஜபாட்டையில் பயணிப்பதை விடுத்து தின அடிப்படையில் இங்கொரு பத்து ரூபாய் அங்கொரு இருபது ரூபாய் என்று இலாபத்தைக் கைப்பற்ற முனைவதும் , L & T நிறுவன கையகப்படுத்தலின் போது பங்கின் விலை குறையும் என்று short selling செய்வதும் அதி நம்பிக்கையின் பாற்பட்டது .
அதி நம்பிக்கை அகங்காரத்திலிருந்து (arrogance) பிறக்கிறது . மாறாக பணிவு (humility) கொள்ளுங்கள் . வளரும் சூட்சுமம் வளைவதில் .
Metomorphosis முதலான புகழ்பெற்ற புதினங்களை எழுதிய பிரான்ஸ் காஃப்கா அவர்களின் தந்தை எப்போதும் கையில் ஒரு பிரம்பை வைத்திருப்பாராம் . அதில் ' இந்தப் பிரம்பு எதனையும் உடைக்கும் ' என்பதாக எழுதப்பட்டிருக்குமாம் . பிரான்ஸ் காஃப்கா அந்தப் பிரம்பை வாங்கி அதில் பின்வருமாறு எழுதினார் . ' இந்தப் பிரம்பை எதுவும் உடைத்து விடும் '
Comments
Post a Comment