கதைக்கரு சொன்ன மற்றுமொரு கதை

கதைக்குரு சொன்ன மற்றுமொரு கதை

ஒரு கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிந்த வண்ணம் இருந்தன . அவைகளின் சேட்டைகளுக்கு அளவேயில்லை . போவோர் வருவோரை மிரட்டி உணவைப் பறித்துச் செல்வது , வீட்டுக்குள் புகுந்து குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து கோககோலாவை எடுத்துக் குடிப்பது என்று அவைகளின் அழிம்புகள் தாங்கவியலாததாக இருந்தது .

இந்த நிலையில் அந்தக் கிராமத்திற்குக் குரங்கு வியாபாரி ஒருவன் வருகை தந்திருந்தான் . குரங்கு ஒன்றுக்கு 500 ரூபாய் தருவதாகப் பேச்சு .

அந்தக் கிராமத்தின் படித்த இளைஞர்கள் சிலர் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic value) கணக்கீட்டைப் போட்டுப் பார்த்து , குரங்கு ஒன்றுக்கு ஏன் 500 ரூபாய் தருகிறீர்கள் என்று அந்த வியாபாரியிடம் வினவினர். அவன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அந்தக் குரங்குகளை இலாபம் வைத்து விற்று விடத் தீர்மானித்திருப்பதாகக் கூறிக் கொண்டான் .

கிராமத்து ஜனங்கள் குரங்குகளைப் பிடித்து வியாபாரியிடம் கொடுத்து 500 ரூபாய் பெற்று டாஸ்மாக் சென்று குடியும் கும்மாளமுமாக இருந்தார்கள் .

ஒரு கட்டத்தில் கிராமத்தில் பிடிப்பதற்குக் குரங்குகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டது .

இந்த நிலையில் இன்னொரு குரங்கு வியாபாரி அந்தக் கிராமத்திற்கு வருகை தந்தான் . அவன் குரங்கு ஒன்றுக்கு தலா 1000 ரூபாய் தருவதாகக் கூறினான் .

ஜனங்கள் முதல்  வியாபாரியிடம் சென்று குரங்குகளை buyback முறையில் திரும்ப வாங்குவதாகக் கூறினர் . அவன் buyback விலை 1000 ரூபாய் என்றும் அதற்குச் சற்றும் குறையாது என்றும் தீர்மானமாகக் கூறி விட்டான் . ஜனங்கள் ஒரு வேளை இன்னொரு வியாபாரி 1500 ரூபாய்க்கு இந்தக் குரங்குகளை வாங்க வரலாம் என்று தீர்மானித்து அந்தக் குரங்குகளை 1000 ரூபாய்க்கு buyback செய்தனர் . ஆனால் அவ்வாறு எந்த வியாபாரியும் வரவில்லை . குரங்குகளை 1000 ரூபாய்க்குக் கேட்ட வியாபாரியும் எங்கே போனான் என்று தெரியவில்லை .

ஜனங்கள் 1000 ரூபாய் வியாபாரியை எதிர்நோக்கிக் கூண்டில் அடைத்துப் பாதுகாத்து வைத்திருந்த குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது . ஏற்கனவே ஒரு பைசா பெறாத குரங்குகளை 1000 ரூபாய்க்கு வாங்கிய ஜனங்களுக்கு இப்போது அவைகளைப் பாதுகாக்கும் செலவும் (Operational Expenditure - OPEX ) சேர்ந்து கொண்டது .

ஒரு கட்டத்தில் ஜனங்கள் மனம் வெறுத்து இந்தக் குரங்குகளை வெளியே விட்டு விட்டார்கள் . அவை மறுபடியும் கிராமத்தில் சுற்றித் திரிந்த வண்ணம் இருந்தன .

அன்பான வாசகர்களே ! கதை இதனுடன் முடியவில்லை . இது இடைவேளை .

கொஞ்ச நாட்கள் சென்று அந்தக் கிராமத்திற்கு ஆட்டு வியாபாரி ஒருவன் வருகை தந்தான் . ஒரு ஆடு தலா 10000 ரூபாய் என்று வாங்கிக் கொள்வதாகப் பேச்சு .

படித்த இளைஞர்கள் வழக்கம் போல் Intrinsic value கணக்கைப் போட்டுப் பார்த்தனர் . அரேபிய நாடுகளுக்கு இந்த ஆடுகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருப்பதாக அந்த வியாபாரி கூறிக் கொண்டான் . கிராமத்து ஜனங்கள் ஆடு ஒன்றுக்கு 10000 ரூபாய் என்பது நல்ல இலாபம் என்று தங்கள் ஆடுகளை விற்று வைத்தனர் .

ஒரு கட்டத்தில் இன்னொரு வியாபாரி 15000 ரூபாய்க்கு ஆடுகளை வாங்க முன் வந்தான் . வழக்கம் போல் ஜனங்கள் முதல் வியாபாரியை அணுகினர் . அவன் 15000 ரூபாய்க்கு ஒரு பைசா குறையாது என்று கூறி விட்டான் . ஜனங்கள் வேறு வியாபாரி 20000 ரூபாய்க்கு வாங்க வரலாம் என்று தீர்மானித்து ஆடுகளை buyback செய்து கிடையில் வைத்து முன்னர் மாதிரி பாராமுகமாக இல்லாமல் கண்ணின் மணி போலப் பாதுகாத்து வந்தனர் . ஏனெனில் தற்போதைய அதன் எதிர்பார்க்கப்பட்ட மதிப்பு 20000 ரூபாய் . எதிர்காலத்தில் இன்னும் கூடலாம் . யார் கண்டது ? ஆனால் அவர்கள் நினைத்தது போல் 20000 ரூபாய்க்கு யாரும் அந்த ஆடுகளை வாங்க முன் வரவில்லை . 15000 ரூபாய்க்கு ஆடுகளைக் கேட்ட வியாபாரியும் எங்கோ மாயமாகி விட்டான் .

ஆனால் ஆடு வளர்ப்பு , குரங்கு வளர்ப்பு போல் சுழி விளைவு வினை (Zero sum Game) யாக இல்லை . இவ்வாறு பார்த்துப் பார்த்து வளர்த்த ஆடுகள் அதிகமான பால் தந்தன . குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா ?  ஆட்டுக்கால் இரசம் சிறந்த மருந்தாகப் பயன்பட்டது ‌.  ஆட்டுத்தோல் அவ்வளவேன் ஆட்டுப் புழுக்கை கூட சிறந்த உரமாகப் பயன்பட்டது (dividend) இந்த உரத்தினால் உரம் பெற்ற பயிர்களை உண்ட ஆடுகள் பல்கிப் பெருகின. இவ்விதமாக நேர் பின்னூட்ட வளையம் (Positive Feedback Loop) ஒன்று சுழலத் தொடங்கியது . கிராம மக்கள் கொழுத்த ஆடுகளை விற்றுப் பணமாக்கம் செய்தனர் (Capital Appreciation) ஈகைத் திருநாளின் போது ஆட்டுக்கறியைத் தானமாகக் கொடுத்து ( குர்பானி ) கூட்டுக்குழும சமூகப் பொறுப்புக் கடமைகளை (Corporate Social Responsibility) நிறைவேற்றிக் கொண்டனர் .

(பின் குறிப்பு : இது பங்காதாயம் தராத ரூபாய் பங்குக்கும் பங்காதாயம் தரும் பங்காதாயப் பங்குக்கும் உள்ள வித்தியாசம் குறித்து கதைக்குரு சொன்ன கதை)

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14