இலவசப்பங்குகளை ஏன் விற்கக்கூடாது ?

இலவசப்பங்குகளை ஏன் விற்கக்கூடாது ?

ஒரு நிறுவனம் அவ்வப்போது இலவசப்பங்குகளை அளிக்கிறது . இலவசப்பங்குகளை மட்டும் விற்று விட்டு நாம் முதலில் வாங்கிய பங்குகளை மட்டும் வைத்திருப்பது சரி தானே ? So, we can eat the cake and have it ...

ஒரேயொரு சின்னப் பிரச்னை இருக்கிறது . மும்பை பங்குச்சந்தையில் மட்டும் வர்த்தகமாகும் Anuh Pharma (BSE Code : 506260) நிறுவனப் பங்கை உதாரணமாகக் கொண்டு உங்கள் கேள்விக்கான பதிலைப் பெறலாம் .

Anuh Pharma நிறுவனத்தின் இலவசப்பங்குப் பட்டியல் :

1994 - 3:1
1999 - 1:1
2006 - 1:1
2010 - 2:1
2015 - 2:1
2020 - 1:1

1993 ஆம் ஆண்டு 100 பங்குகளை வாங்கி இன்றளவும் வைத்திருப்பவரிடம்  வருட வாரியாக எத்தனை இலவசப்பங்குகள் சேர்ந்திருக்கும் என்பதற்கான பட்டியல் :

1994 - 400 பங்குகள்
1999 - 800
2006 - 1600
2010 - 4800
2015 - 14400
2020 - 28800

இந்தப் பட்டியலில் நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது 1999 ல் நிறுவனம் வழங்கிய 1:1 இலவசப்பங்குகளின் எண்ணிக்கையும் 2020 ல் வழங்கிய 1:1 இலவசப்பங்குகளின் எண்ணிக்கையும் ஒன்றல்ல . 1999 ல் 1:1 இலவச விகிதம் 400 பங்குகளை வழங்கியிருக்கிறது . அதே 1:1 இலவச விகிதம் 2020 ல் 14400 பங்குகளை வழங்கியிருக்கிறது . இலவச விகிதம் என்னவோ 1:1 என்ற அளவில் மட்டுமே உள்ளது . ஆனால் இலவசப் பங்குகள் இந்த அளவில் அதிகரிக்க என்ன காரணம் ? காரணம் மீமிகை வளர்ச்சி என்று அழைக்கப்படும் Exponential growth . இந்த மீமிகை வளர்ச்சி பங்குகளை வாங்கி விற்காமல் வைத்திருப்பவருக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் . அவ்வப்போது கிடைக்கப்பெறும் இலவசப்பங்குகளை விற்பவர்கள் சதுரங்கக் கட்டம் ஒன்றிலேயே தேங்கி நின்று விடுவார்கள் . அவர்களைப் பொறுத்தவரை நேரியல் வளர்ச்சி (Linear growth) மட்டுமே கிடைக்கப்பெறும் . நிறுவனம் இன்னொரு 1:1 இலவசப் பங்கு வெளியீட்டை அளிப்பதாகக் கொள்ளலாம் . 28800 பங்குகள் 57600 பங்குகளாக மாறி விடும் . இன்னும் சொல்லப்போனால் 1993 ஆம் ஆண்டு 100 பங்குகளை வாங்கி வைத்திருப்பவரிடம் இப்போதே 57600 பங்குகள் இருக்கும் . ஏனெனில் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு பங்கை ஐந்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட இரண்டு பங்குகளாகப் பிரித்திருக்கிறது .

பங்குப் பிரிப்பு மற்றும் இலவசப் பங்களிப்பிற்குப் பின்னதான 1993 ல் வாங்கிய 100 Anuh Pharma பங்குகளின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட ஐம்பது இலட்சம் ரூபாய் . இலவசப் பங்குகளை விற்று விட்டு முதலில் வாங்கிய 100 பங்குகளை மட்டும் வைத்திருந்தால் அதன் மதிப்பு வெறும் 8800 ரூபாய் மட்டுமே . அவ்வப்போது இலவசப் பங்குகளை விற்பவருக்கு ஒரு பணப்பாய்ச்சல் கிடைக்கப்பெறும் என்பது உண்மை . ஆனால் இந்தப் பணத்தை நாம் என்ன செய்கின்றோம் என்பது மிக முக்கியமானது . Parkinson's law பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . Work expands according to time என்பது தான் Parkinson's law என்பதாக அழைக்கப்படுகிறது . அதாவது வேலை , நேரத்திற்குத் தகுந்தாற்போல் விரிவடைந்து கொண்டே செல்லும் . ஒரு வேலையை ஒரு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கறாராகச் சொன்னால் அது ஒரு மணி நேரத்திற்குள் முடிக்கப்பெறும் . அதே வேலையை முடிக்க ஒரு நாள் கொடுக்கப்பட்டால் அந்த ஒரு மணி நேர வேலை ஒரு நாள் வேலை என்பதாக விரிவாக்கம் அடையும் . பணமும் அப்படித்தான் . வரவுக்குத் தகுந்தாற்போல் செலவுகள் விரிவடையும் . அப்படியே ஒருவர் தப்பித்தவறி இந்தப் பணத்தை வேறு பங்குகளில் முதலீடு செய்தால் Reinvestment risk என்று அழைக்கப்படும் மறு முதலீட்டு அபாயங்களைக் கைக்கொள்ள வேண்டியதாக இருக்கும் . இந்த நிறுவனத்தை விட நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் குறைவான வருமானத்தைத் தரலாம் . அல்லது Cox and kings மற்றும் IL & FS Investment Managers மாதிரி எதிர்மைப் பெருக்கத்திற்கு (Negative compounding) உள்ளாகலாம் .

குறுகிய கால முதலீட்டாளர்கள் பங்காதாயத்திற்கு அதற்குரிய மதிப்பைக் கொடுப்பதில்லை . அவர்களைப் பொறுத்தவரை பங்குகளை வாங்கி விற்பதற்கிடையில் எப்போதாவது தப்பித்தவறி கிடைக்கப்பெறுவது தான் பங்காதாயம் . தின மற்றும் குறுகிய கால பங்கு வியாபாரம் செய்யும் சில நண்பர்கள் அவ்வப்போது அவர்களின் வங்கிக் கணக்கில் ஐந்தும் பத்துமாக ஏறும் பங்காதாயங்களைக் கண்டு குதூகலப்பட்டுக் கொள்வார்கள் . பங்குகளை வாங்கி பல்லாண்டுகள் வைத்திருந்தால் இலட்சக்கணக்கில் பங்காதாயம் கிடைக்கும் என்று சொன்னால் நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள் . நீண்ட கால முதலீட்டில் பங்காதாயங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது . அதுவும் பங்காதாய மறுமுதலீடு (Dividend Reinvestment) இன்னும் மகத்தானது .1993 ல் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் நீண்ட கால முதலீட்டாளருக்கு 2022 ஆம் வருடத்திற்கான பங்காதாயம் ஒரு பங்குக்கு 1.75 என்ற அளவில் 100800 ரூபாய் . இதனை நிறுவனப் பங்கில் மறு முதலீடு செய்தால் இன்னும் கூடுதல் பங்குகள் கிடைக்கப்பெறும் . இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் பங்குகளும் அடுத்த இலவசப் பங்களிப்பில் பங்கு பெறும் என்பது தெளிவு . இலவசப்பங்குகளை விற்று விடுபவருக்கு 2022 ஆம் ஆண்டுக்கு வெறும் 175 ரூபாய் மட்டுமே பங்காதாயமாகக் கிடைக்கப்பெறும் .

இன்னும் சிலர் நிறுவனம் இலவசப்பங்குகளை வழங்கும் தேதிக்கு முன்னதாக அதன் உச்சபட்ச PE அளவுகளில் விற்று விட்டு மறுபடி PE குறைந்ததும் வாங்குவேன் என்பதாக ஜல்லியடித்துக் கொண்டிருப்பார்கள் . எனக்கும் அவ்வாறு செய்ய ஆசையாகத் தான் உள்ளது . 2020 ஆம் ஆண்டு நிறுவனப் பங்கு அதன் உச்சபட்ச விலையை எட்டிய பின்னர் தற்போது அதன் பாதிக்கும் கீழாக வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது . இந்த உச்சபட்ச விலையில் பங்குகளை விற்று விட்டு தற்போது வாங்கினால் அது நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் இலவசப்பங்குகளை வழங்கியதற்கு ஒப்பானதாகும் . ஆனால் நான் இப்போது காலத்தில் பின்னோக்கிப் பார்த்து இந்தக் கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறேன் . ஆனால் 2020 ல் நீங்கள் காலத்தில் முன்னோக்கிப் பார்த்து இந்தக் கணக்கைப் போடவேண்டும் . இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று சற்றே யோசித்துப் பாருங்கள் .

' ஒரு விஷயத்தைப் பின்னால் திரும்பிப் பார்க்கும் போது , அது தவிர்க்கப்பட்டிருக்க முடியாத ஒன்று போலத் தெரியும் . ஆனால் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அது வெளிப்படையாகத் தெரியாது . இது வரலாற்றின் ஒரு இரும்பு விதியாகும் ' என்ற Yuval Noah Harari ன் கூற்று இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது .

நிறுவனம் அடுத்ததாக 1:1 என்ற விகிதத்தில் இன்னுமொரு இலவசப் பங்களிப்பை மேற்கொண்டால் (அடுத்த ஐந்தாண்டுகளில் இது நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசம்) 1993 ல் வாங்கி வைத்திருப்பவரிடம் 115200 பங்குகள் இருக்கும் . நிறுவனம்  அப்போதும் 1.75 என்ற அளவில் பங்காதாயம் வழங்குவதாகக் கொண்டால் அவருக்கான பங்காதாயம் 201600 ரூபாய் .

இன்னொரு கருத்தாக்கத்தின் மூலமாகவும் இதே முடிவுக்கு வரலாம் . Anuh Pharma நிறுவனர் 1993 ஆம் ஆண்டிலிருந்து இன்றைய தேதி வரை அவரது ஒரு பங்கைக் கூட விற்கவில்லை . மிகக் குறைந்த அளவே நிறுவனப்பங்கை வைத்திருக்கும் சிறு முதலீட்டாளர்களும் நிறுவனர் மனப்பான்மையுடன் (ownership mentality) மட்டுமே செயலாற்ற வேண்டும் .

இன்னும் சொல்லப்போனால் இந்த நிறுவனப்பங்கு மட்டுமின்றி Bajaj Auto , Cipla , ITC , Wipro என்று எந்த நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் இலவசப்பங்குகள் இந்த நிறுவனப் பங்குகளின் சொத்து உருவாக்கத்தில் ஒரு மிகப்பெரிய பங்கை ஆற்றுகின்றன .

பங்குச்சந்தை மூலமான செல்வ உருவாக்கத்தின் அடிநாதமே இலவசப்பங்குகள் மற்றும் அதன் வாயிலான பங்காதாயப் பலன்கள் இவையிரண்டும் மட்டுமே .

எல்லாம் சரி , இந்தப் பங்குகளை எப்போது தான் விற்பது ? இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நீண்ட கால முதலீட்டாளர் ஒருவரிடம் எப்போது இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளை விற்பீர்கள் என்பதாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு அவருடைய பதில் : எப்போது பணம் தேவைப்படுகிறதோ எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் விற்பேன் . என் மகனுக்கு மடிக்கணினி ஒன்று தேவைப்படுகிறது . அதன் விலைக்குத் தகுந்தாற்போல் சில பங்குகளை விற்க வேண்டும் . அந்த வகையில் பங்குகள் அலாவுதீனின் அற்புத விளக்கு மாதிரி . எவ்வளவு தேவையோ அவ்வளவு தேய்த்துக் கொள்ளலாம் . நமக்குத் தேவையான போது தேவையான பணம் வானத்திலிருந்து கொட்டப் பெறுவது நிதி விடுதலை என்பதாகவும் அழைக்கப்பெறும் .

Yes , we can eat the cake and have it , but only in the long term .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14