பணத்தோட்டம்
பணத்தோட்டம்
பங்குச்சந்தை முதலீடுகளை ஒரு தோட்டமாகக் கற்பனை செய்து பார்க்கலாம் .
முதன்முதலாக ஒரு கன்றை (நிறுவனப் பங்கை) ஊன்றி வைக்கிறீர்கள் . அது தான் வரும் வசந்த காலங்களில் பூத்துக் குலுங்கப் போகும் உங்கள் முதலீட்டுத் தோட்டத்திற்கான ஆணி வேராகும் .
மா , பலா , கொய்யா போன்றவற்றை மட்டுமின்றி நீண்ட கால அளவில் பலன்களைத் தரும் தேக்கு (Asian Paints, HDFC , L & T ) முதலான மரங்களையும் வளர்த்து வருகிறீர்கள் .
ரப்பர் மரம் (Balkrishna Industries) காபி (CCL Products) பருத்தி (Ambika Cotton Mill) மசகு எண்ணெய் (Castrol) நெற்பயிர் (Chamanlal Setia Exports) புகையிலைச் செடிகள் (ITC) திராட்சைக் கொடிகள் (GM Breweries) மட்டுமின்றி வித்தியாசமான சில விதை வகைகளையும் தூவி வைக்கிறீர்கள் (Nesco , Tata Elxsi)
சமவெளியில் மலரவே மலராது என்று சொல்லப்படும் மலர் வகைகள் கூட உங்கள் தோட்டத்தில் மலர்கின்றன .
தோட்டத்திற்குள் ஒரு தோட்டமாக Bajaj Holdings , Tata Investment Corporation முதலிய பங்குகளையும் மற்றும் பரஸ்பர நிதிகளையும் வைத்துப் பராமரிக்கலாம் .
30 வகையான மரங்களைக் கொண்ட தோட்டங்கள் (Sensex) 50 வகை மரங்கள் (Nifty) மற்றும் 500 வகை மரங்கள் (S & P 500) என்றெல்லாம் கூட வகை வகையான தோட்டங்களை அப்போதைக்கப்போது வாங்கி இதனுடன் சேர்க்கலாம் .
அயல் நாட்டு அற்புத மரங்களின் கன்றுகளைக் கூட (Alphabet , Berkshire Hathaway) உங்கள் தோட்டத்தில் பயிரிடலாம் .
இந்தத் தோட்டத்தில் இன்னொரு சாதகமான அம்சமும் உள்ளது . காய்களையும் கனிகளையும் அறுவடை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை . அது பாட்டிற்கு மரம் நெடுநெடுவென்று விண்ணை முட்டிச் சென்று மென்மேலும் வளர்ந்த வண்ணமாக இருக்கும் . எப்போது உங்களுக்குக் காய்களும் கனிகளும் தேவைப்படுகிறதோ எவ்வளவு தேவைப்படுகிறதோ அவ்வளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம் . ஆப்பிள் மரத்தை ஒரு உலுக்கு உலுக்கினால் போதும் . ஒரு கூடை நிறைய ஆப்பிள் கிடைத்து விடும் .
ஒரு சில ஆல மரங்கள் விழுது விட்டு அது ஒரு தனிப்பட்ட மரமாக வளர்ந்து வரும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும் . சமயங்களில் இந்த விழுது விட்ட மரம் (Godrej Consumer Products) தாய் மரத்தை (Godrej Industries) விட மிகப்பெரிய அளவில் வளர்வதும் உண்டு .
சில சமயங்களில் நல்ல விதை என்று நட்டு வைத்தது பட்டு விடுவதும் உண்டு (Cox and Kings) அறிவு என்ற உரம் மட்டுமின்றி இத்தகைய பட்டுப்போன மரங்களையும் வெட்டி வீழ்த்தி அதனையும் உரமாகப் போடலாம் .
ஆயுர்வேத மருந்து மரங்கள் (Dabur India) உணவாகப் பயன்படும் மரங்கள் (Britannia) என்று இவைகளின் வகைகளுக்கு முடிவே கிடையாது . அதுவும் மருந்து மரமும் உணவு மரமும் நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னும் இளமையாக இருக்கின்றன .
பணப்பயிர் (Dividend Yield Stocks) களின் ஒரு தனிப்பட்ட வரிசை (Balmer Lawrie Investments, Coal India , PTC India , Rites) உள்ளது . இவ்வகைப் பயிர்கள் வருடா வருடம் காய்த்துத் தள்ளும் . இதனைத் தனியே எடுத்து பணப்பயிர்களாகவோ அல்லது நீண்ட காலத்தில் பலன் தரும் தேக்கு முதலான மரங்களாகவோ மறுசுழற்சி (Dividend Reinvestment) செய்யலாம் .
இவ்விதம் பூத்துக் குலுங்கி காய்த்துக் கனி தரும் இந்தப் பணத் தோட்டத்தை உங்கள் மனக்கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் .
முதலில் ஓரடிக்கு ஓரடி என்ற அளவில் ஆரம்பித்த இந்தத் தோட்டம் காலங்களின் ஓடுகையில் ஏக்கர் கணக்கில் வளர்ந்து விடும் . வசந்த காலங்களில் பூத்துக் குலுங்கும் இந்தத் தோட்டம் வறண்ட காலங்களில் வாடி வதங்கவும் செய்யும் . மேலும் இந்தத் தோட்டத்தில் இன்னொரு சிறிய பிரச்னையும் உள்ளது . வறண்ட வானிலையில் (கரடிச்சந்தை) தோட்டம் பாதியாகச் சுருங்கி விடும் . ஆனால் வானிலை மாறும் போது (காளைச்சந்தை) மீண்டும் பழைய அளவை எட்டிப் பிடிக்கும் . ஏன் , அதற்கும் மேலாக வளரவும் செய்யும் . மரங்கள் நமக்கு சுத்தமான காற்றையும் நிழலையும் தருகின்றன . தப்பித்தவறி புயற்காற்றில் விழுந்தாலும் அல்லது பட்டுப் போனாலும் எரிபொருளாகவும் உரமாகவும் பயன்படுகின்றன .
பயிர் பார்க்காமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது என்று சொல்வார்கள் . இந்தப் பணத்தோட்டத்தையும் அப்போதைக்கப்போது 'பார்க்காமல் பார்த்து' பராமரிக்க வேண்டும் .
நிஜமான தோட்டத்தை வைத்துப் பராமரிப்பவர்களுக்குச் சில சிக்கல்கள் இருக்கின்றன . உதாரணமாக அரை ஏக்கர் இருக்கும் தோட்டத்தை , அருகாமையில் இருக்கும் அரை ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு வந்தால் அன்றி , ஒரு ஏக்கர் என்ற அளவில் பெரிதுபடுத்த முடியாது . உங்கள் மனத்தோட்டத்தில் இருக்கும் பணத்தோட்டத்திற்கு இந்த மாதிரி எல்லைகள் ஏதும் கிடையாது .
இவ்வாறாக சொத்து உருவாக்கம் (Wealth Creation) என்பது தோட்டத்தை வளர்ப்பது போன்றது . மாறாக அது பட்டாம்பூச்சிகளைப் (சின்னச்சின்ன விலை வித்தியாசங்களைப் பணமாக்கம் செய்வது) பிடிப்பது போன்றது அல்ல .
பட்டாம்பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தால் (தினசரி / குறுகிய கால வணிகங்கள்) என்ன ஆகும் என்று கொஞ்சம் பார்க்கலாம் . முதலில் நீங்கள் தினசரி பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கச் செல்ல வேண்டும் . மிகவும் முக்கியமாக பட்டாம்பூச்சிகளைப் பிடிப்பதற்கு நீங்கள் அங்கே இருக்கவேண்டும் . பட்டாம்பூச்சிகளைப் பிடிப்பதற்கு வலையை விரித்து வைத்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் . உங்கள் வலையை விட மற்றவர்கள் பெரிய நூதனமான வலையைக் கொண்டு பட்டாம்பூச்சிகளைப் பிடித்துக் கொண்டிருக்கலாம் . பட்டாம்பூச்சி வேட்டையாவது பரவாயில்லை . இன்னும் சி(ப)லர் பட்டாம்பூச்சி எந்தத் திசையில் பறக்கும் (F & O) என்று பந்தயம் கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் . மாறாகத் தோட்டத்தைக் கட்டமைத்தால் பங்காதாயப் பட்டாம்பூச்சிகள் நூற்றுக் கணக்கில் ஏன் ஆயிரக் கணக்கில் உங்களை நாடி வரும் . இந்தப் பட்டாம்பூச்சிகளால் அயல் மகரந்தச் சேர்க்கை நடந்து உங்கள் தோட்டம் வண்ணமயமாகப் பூத்துக் குலுங்கும் . இதனால் இலட்சக்கணக்கில் பட்டாம்பூச்சிகள் வருவதான ஒரு நேர் பின்னூட்ட வளையம் சுழலத் தொடங்கும் . மிகவும் முக்கியமாக இந்தச் சுழற்சிக்கு நீங்கள் அங்கே இருக்கவேண்டும் என்று அவசியமில்லை .
இந்த மனத்தோட்ட ரோஜாக்களின் நறுமணத்தை மறைமுகமாகத் தான் உங்களால் நுகர முடியும் . இதன் இதமான தென்றல் காற்றை உணர ஒரு மனப்பக்குவம் தேவைப்படும் .
வால்ட் டிஸ்னி , டிஸ்னிலேண்ட்டைப் பார்க்கவேயில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா ? டிஸ்னிலேண்ட் அவர் மனக்கண்ணில் பார்த்த ஒரு விளையாட்டுப்பூங்கா மட்டுமே . வால்ட் டிஸ்னியின் காலத்திற்குப் பின்னர் தான் டிஸ்னிலேண்ட் கட்டமைக்கப்பட்டது .
இவ்வாறாக நாம் சில மரங்களையேனும் நட்டு வைக்க வேண்டும் . அவை தரும் நிழலில் ஒருபோதும் நாம் உட்காரவே முடியாமல் போனாலும் ...
Comments
Post a Comment