நிழற்சண்டை

நிழற்சண்டை

பெறுதிகளுக்கு (Derivatives) விளக்கம் தேவை என்பதாக நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார் . பெறுதிகளை விரிவாக விளக்கத் தொடங்கினால் அந்த விளக்கத்திற்குள் நாமே காணாமல் போய் விடுவோம் . எனவே அவைகளைக் குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம் .

தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒன்றைக் கொண்டு புரிந்து கொண்டால் சுலபமாக இருக்கும் . அந்த அடிப்படையில் தெரியாத பெறுதிகளைத் தெரிந்த பங்குகளைக் கொண்டு புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் . பெறுதிகளின் முக்கியமான இரண்டு வகைகளான Futures மற்றும் Options குறித்துக் கொஞ்சம் நெருங்கிச் சென்று ஆராயலாம் .

பங்குகளுக்குத் தன்னளவில் மதிப்பு உண்டு . அவை பங்காதாயங்களை வழங்கும் . முதலீட்டுப் பெருக்கம் அடையும் . சந்தை விலையை விடக் குறைவான விலையில் அவை உரிமைப் பங்குகளை வழங்கும் . இலவசப் பங்குகளை அளிக்கும் . பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பு என்று பணப்பலன்கள் பலவற்றையும் அளிக்கும் .  பெறுதிகளுக்குத் தன்னளவில் மதிப்பு கிடையாது . பெறுதிகளுக்கு ஏன் பெறுதிகள் என்ற பெயர் என்றால் பெறுதிகள் தங்களது மதிப்பை மற்றவைகளிலிருந்து பெறுவதால் அவை பெறுதிகள் என்று அழைக்கப்படுகின்றன . பங்கு சார்ந்த பெறுதிகள் தங்களது மதிப்பை பங்குகளிலிருந்து பெறுகின்றன . பொருள் சார்ந்த பெறுதிகள் தத்தமது மதிப்பை அவை சார்ந்திருக்கும் பொருள்களிலிருந்து பெறுகின்றன .

பங்குகளைத் தலைமுறை தாண்டியும் வைத்துக் கொள்ளலாம் . பெறுதிகளின் ஆயுள் மிகமிகக் குறுகியது . அதிக பட்சமாக அதன் ஆயுட்காலம் மூன்று மாதங்கள் . மூன்று மாதங்களின் முடிவில் கட்டாயமாக பெறுதிக் கணக்கை முடித்தே ஆகவேண்டும் . அல்லது மூன்று மூன்று மாதங்களாகத் தொடரலாம் (Rollover) 

உங்களிடம் பங்குச்சந்தையில் நீண்ட கால அளவில் முதலீடு செய்ய 10000 ரூபாய் உபரிப்பணம் இருப்பதாகக் கொள்ளலாம் . அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீடாக (இது வாய்ப்பாடு மாதிரி , மீண்டும் மீண்டும் வரும்) நீங்கள் வாங்க இருக்கும் பங்கின் விலை 1000 ரூபாய் என்றும் கொள்ளலாம் . உங்களால் 10000 ரூபாய்க்கு வெறும் 10 பங்குகளை மட்டுமே வாங்க முடியும் . Futures வகைப் பெறுதிகளில் 10 சதவீத விளிம்புப் பணம் (margin money) என்ற கணக்கில் இதே 10000 ரூபாய்க்கு 90 பங்குப் பெறுதிகளை வாங்க முடியும் . பங்கு முதலீட்டில் உங்களுக்கு பத்து சதவீத இலாபம் கிடைப்பதாக வைத்துக் கொண்டால் Futures வகைப் பெறுதிகளில் விளிம்புப் பணத்தைச் சேர்க்காமல் 100 சதவீத இலாபம் கிடைக்கும் . அதே சமயம் பங்குகளில் பத்து சதவீத நஷ்டம் என்று கொள்ளலாம் . உங்கள் 10000 ரூபாய் முதலீடு 9000 ரூபாய் ஆகி விடும் . பெறுதிகளில் இது பூஜ்யமாகி விடும் . வேறு மாதிரி சொல்வதானால் பெறுதிகள் இலாபத்தை உருப்பெருக்கும் . மிகவும் முக்கியமாக நஷ்டத்தையும் உருப்பெருக்கும் . நீங்கள் பங்குகளை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீடாக வாங்கினால் இந்த 1000 ரூபாய் நஷ்டம் என்பது பெரும்பாலான சமயங்களில் தற்காலிகமான இழப்பு (quotational loss) என்ற அளவில் முடிந்து விடும் . உங்களிடம் உபரியாகப் பணம் இருந்தால் அந்தப் பங்குகளின் மீதான முதலீட்டை அதிகப்படுத்தவும் செய்யலாம் . பெறுதிப் பாம்பு பரமபத ஆதிசேஷன் பாம்பை விடக் கொடியது . அது சந்தையை விட்டு உங்களை வெளியே தூக்கியெறிந்து விடும் .

பங்குகளில் உராய்வுச் செலவுகள் (frictional costs) குறைவு . நீண்ட கால முதலீட்டாளராக இருக்கும் பட்சத்தில் பங்குகளை வாங்கும் போது மட்டுமே நீங்கள் உராய்வுச் செலவுகளுக்கு உள்ளாக நேரிடும் . பெறுதிகளில் இது தலைகீழாக மாறுகிறது . பெறுதிகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக நீங்கள் முடிக்கவோ அல்லது தொடரவோ செய்ய வேண்டும் . ஒவ்வொரு முறையும் உராய்வுச் செலவுகள் உங்களை உரசிப் பார்க்கும் . மேலும் பங்குகளுடன் ஒப்பிடும் போது பெறுதிகள் ஆகப்பெரிய அளவிலான உராய்வுச் செலவுகளால் ஆனவை .

உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகளில் நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு அதற்கான வரி வகைகள் குறைந்த அளவில் மட்டுமே இருக்கும் . பெறுதிகளில் இது நேரெதிராக மாறுகிறது . பெறுதிகள் ஊக வணிகத்தின் பாற்பட்டதால் இதற்கான வரிகள் அதிகம் .

சரி , எதற்காக அரசாங்கம் இந்தப் பெறுதித் திட்டங்களை நடத்த வேண்டும் ? உங்களிடம் பத்து இலட்சம் பெறுமானமுள்ள பங்குகளின் ஒரு தொகுப்பு (share portfolio) இருப்பதாகக் கொள்ளலாம் . மேலும் சந்தை அதன் உச்சபட்ச PE அளவுகளில் இருக்கிறது . குறைந்த கால அளவில் சந்தை சரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் . அவ்வாறு சந்தை சரிந்தால் உங்கள் பத்து இலட்சம் பெறுமானமுள்ள பங்குத் தொகுப்பும் சரியும் என்பது தெளிவு . இவ்வாறு சரியும் உங்கள் பங்குத் தொகுப்பை சமன் (hedging) செய்யும் விதமாகப் பெறுதிகளில் நீங்கள் Short Futures நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளலாம் . இன்னொரு சூழ்நிலையையும் பார்க்கலாம் . சந்தை அடிமாட்டு விலைக்குப் போய்விடுகிறது . இனிமேல் சரிவதற்கான வாய்ப்புகள் குறைவு . இனி சந்தை மேலேறிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை . இவ்வாறு சந்தை உயர்ந்து செல்லப் போகும் ஒரு வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் போது நீங்கள் Long futures எடுத்துக் கொள்ளலாம் . சந்தை உயரும் போது உங்கள் பங்குத் தொகுப்பின் மதிப்பு கூடும் . பெறுதிகள் ரொட்டியின் மேல் வைத்த வெண்ணைய் மாதிரி (icing on the cake) செயல்படும் . நீங்கள் சந்தையின் ஏற்ற இறக்கங்களை இரசிக்கும் மற்றும் இத்தகைய ஏற்ற இறக்கங்களில் முக்கியமாக இறக்கங்களில் கேந்திரமான முதலீடுகளை மேற்கொள்ளும் உண்மையான ஒரு மதிப்பு முதலீட்டாளராக இருந்தால் உங்களுக்குப் பெறுதிகளே தேவைப்படாது . சுருக்கமாகச் சொன்னால் பெறுதிகள் பங்குத் தொகுப்பைக் காக்கும் காப்பீடு . காப்பீட்டிற்கு முனைமத் தொகை ( premium) கட்ட வேண்டும் . தவறான காப்பீடுகள் எடுத்துக் கொள்ளக்கூடாது . இந்தப் பெறுதிகளுக்கு விளிம்புப் பணம் மற்றும் உராய்வுச் செலவுகள் உண்டு . மேலும் பெறுதிகளைத் தவறாக எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன . சந்தை உயர் மதிப்பிலான PE என்று நீங்கள் நினைத்து short போவதாக வைத்துக் கொள்வோம் . சந்தை இன்னும் அதிகரித்து வரும் PE க்களில் வருடக் கணக்கில் வர்த்தகமாகலாம் . அதே மாதிரி குறை PE க்களும் ஆண்டாண்டுக் கணக்கில் தொடரலாம் . உங்களுக்கு இந்தக் கணக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் .

Options என்பவை மிகவும் குறைந்த பட்ச விளிம்புத் தொகையுடன் பங்கு பெறக்கூடிய ஒரு வகை பெறுதிகள் . சந்தை உயரும் என்றால் call option . சரியும் என்றால் put option . விளிம்புத்தொகை மாதிரி இலாபமும் குறைவாகவே இருக்கும் .

இது போக Strangle , Straddles என்று பல்வேறு பெறுதி வகைகள் இருக்கின்றன . அவைகளை விளக்குவது என் திறமை வளையத்திற்கு (circle of competence) அப்பாற்பட்டது .

உண்மையில் சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும் பார்த்து விடலாம் . பெரும்பாலோனோர் பங்குத் தொகுப்பு ஏதுமின்றி சமயங்களில் ஒரு பங்கு கூட இல்லாமல் நேரடியாக இந்தப் பெறுதிகளில் குதித்து விடும் போது தான் பிரச்னை எழுகிறது . முந்தைய பதிவுகளில் பார்த்த மாதிரி சந்தையின் நீண்ட காலப் போக்கைக் கணித்து விடலாம் . குறுகிய காலத்தில் சந்தை அதன் மனம் போன போக்கில் செல்லும் . ஒரு தனிப்பட்ட நிறுவனப்பங்கு உயர் விலையில் வர்த்தகமாகிறது என்று நீங்கள் மிகச் சரியாகக் கணித்து அதன் விலை குறையும் என்பதாக யூகித்து short போவதாக வைத்துக் கொள்வோம் . அந்த உயர் விலையிலான பங்கு இன்னும் உயர் விலைகளில் வர்த்தகமாகி உங்கள் பெறுதி காலாவதியாகி விடும் . அதே மாதிரி ஒரு பங்கு மிகவும் குறை விலையில் வர்த்தகமாவதாக நீங்கள் மிகச் சரியாகக் கணித்து அதன் விலை கூடும் என்று long போவதாகக் கொள்ளலாம் . அதன் விலை இன்னும் குறைந்து உங்கள் பெறுதி காலாவதியாகி விடும் . The market can stay irrational longer than you can stay solvent என்று Keynes சொன்னது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது . சந்தை நீண்ட காலத்திற்கு பகுத்தறிவற்று இருக்கும் . ஐயோ பாவம் , அண்ணண் கடனாளி ஆகி விடுவார் என்றெல்லாம் அது கவலைப்படாது . இந்த மாதிரி , பணக் கொள்முதல் செய்யாமல் புத்திக் கொள்முதல் என்ற அளவில் தோல்வியடைந்து சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று நீங்கள் பெறுதிகளை விட்டு வெளியேறி விடுவது உத்தமம் . தப்பித்தவறி இந்தப் பெறுதிகளில் நீங்கள் வெற்றி பெற்று பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் இன்னும் ஆபத்து . Long நிலைப்பாடுகளில் தொடர் வெற்றிகளைப் பெற்று ஒவ்வொரு முறையும் அதிகரித்து வரும் நிலைப்பாடுகளை மேற்கொண்டு ஒரேயொரு தவறான நிலைப்பாட்டின் மூலமாகச் சந்தையை விட்டுக் காணாமல் போனவர்கள் ஏராளம் . இவ்வாறு பத்து நிலைப்பாடுகளில் அடைந்த இலாபம் பதினோராவது நிலைப்பாட்டில் கை நழுவிப் போவது சர்வ சாதாரணமாக சந்தையில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஒரு செயலாகும் . Short லும் தலைகீழாக இவ்வாறே நடைபெறும் .

சந்தையின் முதலும் முடிவுமான பயன்பாடு முதல் உருவாக்கம் (capital formation) மற்றும் முதலீட்டுப் பெருக்கம் (capital appreciation) ஆகிய இரண்டு மட்டுமே . இந்த இரண்டிலும் குறைந்த பட்ச உராய்வுச் செலவுகளுடன் பங்கு பெறுவது மட்டுமே அறிவார்ந்த ஒரு முதலீட்டாளர் செய்யும் செயலாக இருக்க முடியும் .

வாரன் பஃபெட் , பெறுதிகள் நின்று கொல்லும் ஆயுதங்கள் என்று கூறுவதன் காரணம் என்ன ? 1995 ல் பிரிட்டனின் பழைமையான வங்கிகளில் ஒன்றான Barings Bank இழுத்து மூடப்பட்டது . என்ன காரணம் ? அந்த வங்கியின் பெறுதிப் பொறுப்பாளர் Nick Leeson என்ற 28 வயது இளைஞரின் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள அதிகாரப்பூர்வமற்ற , இழப்புக்காப்பு பெறாத பெறுதி ஊக வணிகம் . Nick Leeson ஜப்பானிய பங்குச்சந்தைக் குறியீடான Nikkei கூடும் என்பதான ஒரு நிலைப்பாட்டை ஒரு பில்லியன் டாலர் என்ற அளவிற்கு எடுத்திருந்தார் . அப்போது ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக Nikkei படுத்து விட்டது . Barings வங்கியின் உபரிப்பணம் இந்தப் பெறுதிகளை நேர் செய்வதன் பொருட்டுக் காலியாகி வங்கி ஒரே நாளில் திவாலாகி விட்டது . வங்கி , பெறுதி வர்த்தகத்திற்கும் அதன் கணக்கு முடிப்பிற்கும் ஒரே நபராக Nick Leeson ஐ வைத்திருந்ததால் அவர் செய்த தவறைக் காலத்தில் கண்டறிய முடியவில்லை . 2008 ல் அமெரிக்க Sub prime crisis அவ்வளவு மோசமாக உலகப் பொருளாதாரத்தை மண்டியிடச் செய்ததற்கு முதன்மையான காரணம் இந்தப் பெறுதிகள் மட்டுமே .

அது சரி , தத்தமது நிறுவனங்களைச் சந்தையில் பட்டியலிட்டு அல்லது வாரன் பஃபெட் மாதிரி பிற நிறுவனப்  பங்குகளில் முதலீடு செய்து உலகப் பணக்காரர்கள் ஆனவர்கள் மாதிரி பெறுதிகளில் நிலைப்பாடு எடுத்து யாராவது பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்களா ? ஒரேயொருவர் இருக்கிறார் . 2008 ல் அமெரிக்க sub prime crisis ஐ சரியாகக் கணித்து வீட்டுக் கடன் நிறுவனங்களின் மதிப்பு மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று ஆகப்பெரிய அளவுகளில் short futures எடுத்து கோடிகளைக் குவித்த பால்சன் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருடைய தொடர்ந்த வாக்கிலான பெறுதி நிலைப்பாடுகள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை .

பின்வரும் கருத்தாக்கத்தைக் கொஞ்சம் கவனமாகப் படிக்க வேண்டுகிறேன் . நாம் ரிலையன்ஸ் பங்குகளை வாங்கினால் அது நமக்குப் பெறுதிகள் மட்டுமே . ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு அம்பானியையும் அதன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் சார்ந்திருக்கிறது . ரிலையன்ஸின் மதிப்பு அதன் எண்ணெய்க் கிணறுகளின் ஊடாகவும் , ஜியோவின் 4G தொழில் நுட்பத்திலும் (விரைவில் 5G) அதன் சில்லரை வணிகக் கட்டமைப்பிலும் பொதிந்திருக்கிறது . நாம் ரிலையன்ஸ் பங்குகளை வாங்க மற்றும் விற்க என்பதான முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும் . அந்த வகையில் அவை நமக்குப் பெறுதிகள் மட்டுமே . Long மற்றும் Short futures , Options என்பவை இந்தப் பெறுதிகளின் பெறுதிகள் . நிறுவனம் என்பது முதல் அடுக்கு . பங்குகள் இரண்டாம் அடுக்கு . பெறுதிகள் மூன்றாவது மற்றும் கடைசி அடுக்கு . பெறுதிகளுடன் மல்லுக் கட்டுவது நிழலுடன் சண்டையிடுவதைப் போன்றது . இந்தப் பெறுதிகளுக்குத் தன்னளவில் மதிப்பு ஏதுமில்லை . அதன் மதிப்பு சந்தை மனோபாவத்தைப் பொறுத்துள்ளது . மனோபாவம் என்பது நாளும் மாறக்கூடியது . மேலும் மனிதர்களின் மனோபாவத்தைக் கணிக்கக்கூடிய கருவிகள் ஏதும் நம்மிடம் இல்லை .

இந்தப் பதிவு ஒரு சிலருக்கு இன்னமும் புரியாத புதிராக இருக்கலாம் . அவ்விதம் இருந்தால் அது எழுதிய என் தவறும் அல்ல . படித்த உங்கள் தவறும் அல்ல . அது பெறுதிகளின் தவறு . மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை மிகவும் எளிமையாக விளக்க முடியாது . இவ்வாறு பெறுதிகள் புரியாமல் இருப்பதன் பொருட்டு வருத்தம் கொள்ள வேண்டாம் . பெறுதிகள் புரியாமல் போவது முதலீட்டு வாழ்க்கையில் ஒரு கேந்திரமான அனுகூலமாகும் .

பெறுதிகள் காற்றில் கரையும் கற்பூரம் மாதிரி . கொஞ்ச நாட்களில் காணாமல் போய் விடும் . நீண்ட காலப் பங்கு முதலீடுகள் ஒயின் மாதிரி . காலம் செல்லச் செல்ல அதன்  மதிப்பு கூடிய வண்ணமாக இருக்கும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14