கதைக்குரு கதைகள் - 1

கதைக்குரு கதைகள் - 1

ஒரு ஊரில் ஜென் குரு ஒருவர் இருந்தார் . அவர் தன் சிஷ்யர்களுக்குக் கதை வடிவில் (முதலீட்டுப்) பாடங்களை நடத்துவது வழக்கம் . ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை சிறிய கதை ஒன்று எளிதில் விளக்கி விடும் . சிஷ்யர்கள் அவரை கதைக்குரு என்று அன்போடு அழைத்து மகிழ்வது வழக்கம் . அவரின் கதைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நானும் அக மகிழ்கிறேன் .

1. விருப்ப மரம் 

ஒரு ஊரில் முதலீட்டாளர் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் ஒருவர் இருந்தார் . அவர் பங்குச்சந்தையில் முதலீடு என்ற பெயரில் ஊக வணிகங்கள் பலவற்றைச் செய்து வந்தார் . முதல் பொது வெளியீட்டில் (IPO) பங்கு பெற்று பின்னர் அந்தப் பங்குகளை பட்டியல் இலாபத்திற்குக் கைமாற்றி விடுவார் . பெரும்பாலான சமயங்களில் நஷ்டத்திற்கு மட்டுமே விற்பார் . ஆனால் நஷ்டத்தை உடனடியாக மறந்து விடுவார் . தப்பித்தவறி அடைந்த இலாபங்களை மட்டும் மறக்காமல் அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருப்பார் . விளிம்பு நிலை வர்த்தகம் (margin trading) இல்லாத பங்குகளை விற்பது (Short selling) பெறுதிகள் (derivatives) தினசரி வணிகம் (day trading) மற்றும் ரூபாய் பங்கு முதலீடு ( penny stock Investing) என்று பலவற்றிலும் ஈடுபடும் ஒரு அஷ்டாவதானியாக இருந்தார் . ஆனால் அவர் மனதின் அடியாழத்தில் தான் செய்து கொண்டிருப்பது தவறு என்பதான ஒரு எண்ணமும் இருந்தது . இப்படியே தொடர்ந்து சென்று கொண்டிருந்தால் பன்மடங்காளர்களை (multibaggers) அடைய முடியாது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது . இவ்வாறான சூழ்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளின் மாலை நேரத்தில் மரம் ஒன்றின் அடியில் ஒதுங்கினார் . அது wishing tree என்று அழைக்கப்படும் விருப்ப மரம் . அதன் அடியில் நின்று என்ன நினைத்தாலும் அது நடக்கும் . நமது ஊக முதலீட்டாளர் விப்ரோ நிறுவனத்தின் 3 பங்குகளை அதன் IPO வில் வாங்கி இன்றளவும் வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பெருமூச்சு விடவும் CDSL ல் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது . அதைத் திறந்ததும் அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது . அவருடைய முதலீட்டுத் தொகுப்பில் 1148120 விப்ரோ பங்குகள் இருந்தது . அப்புறம் பஜாஜ் ஆட்டோ IPO பற்றி ஒரு நினைப்பு . ஒரு பத்து பஜாஜ் நிறுவனப்பங்குகளை அதன் IPO வில் வாங்கியிருந்தால் ... மற்றொரு மின்னஞ்சல் வந்தது . அதைத் திறந்தவருக்கு மூன்று ஆச்சரியங்கள் ... அவருடைய பங்குத் தொகுப்பில் 25920 பஜாஜ் ஆட்டோ பங்குகள் , 12960 பஜாஜ் ஹோல்டிங்ஸ் பங்குகள் , 12960 பஜாஜ் பின்செர்வ் பங்குகள் இருந்தன . நம்மவர் தலையை வலதும் இடதுமாக அசைத்து இதெல்லாம் சாத்தியமேயில்லை என்பதாக நினைத்ததும் மற்றுமொரு மின்னஞ்சல் வந்தது . அது உதவாக்கரை ரூபாய் பங்குகளால் நிரம்பியிருந்தது . ஒரு சிஷ்யர் அந்த மரம் எங்கிருக்கிறது என்று அப்பாவியாகக் கேட்டார் . குரு அது நம் மனதில் இருக்கிறது என்பதாகப் பதில் சொன்னார் .

2. மூடுபனி முதலீடு

ஒரு சமயம் பங்குச்சந்தையில் பத்து வருடமாகக் காளையின் ஆதிக்கமாகவே இருந்தது . பங்குகள் சர்வசாதாரணமாக மூன்று இலக்க விலை வருவாய் விகிதங்களில் (PE Multiple) வர்த்தகமாகின . சந்தைக் குறியீடே 80 என்ற PE க்களில் இருந்தது . நமது கதைக்குரு கடந்த பத்து ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் சந்தையில் புதிய முதலீடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை . அவருக்கு ஒரு சிஷ்யர் இருந்தார் . இளங்கன்று பயமறியாது . அது கரடியையும் அறியாது . சிஷ்யர் சந்தையில் புகுந்து விளையாடிய வண்ணமாக இருந்தார் . அவர் தொட்டதெல்லாம் துலங்கியது . போதும் போதாததற்கு அவர் தனது குருவைக் கேலியும் கிண்டலும் செய்வது வழக்கமாக இருந்தது . குரு முன்னர் மாதிரியில்லை அவருக்கு வயதாகி விட்டது என்று சக சிஷ்யர்களிடம் கூறிக் கொண்டார் . பத்து வருடமாகக் கும்பகர்ணன் கணக்காகத் தூங்கிக் கொண்டிருந்த கரடி ஒரு நாள் எழுந்தது . சந்தையில் போவோர் வருவோர் அனைவரையும் பதம் பார்க்க ஆரம்பித்தது . சிஷ்யரின் பங்குத் தொகுப்பும் சின்னா பின்னமாகி விட்டது . இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும் . குருவின் பங்குத் தொகுப்பும் பாதிப்புக்குள்ளானது . ஆனால் குரு அவருடைய  பங்குத் தொகுப்பில் பாதி பணமாக வைத்திருந்தார் . மூன்று இலக்க PE பங்குகளை விற்றும் மற்றும் பங்காதாயம் மூலமாகவும் இந்தப்பணம் கிடைக்கப்பெற்றது . சந்தை விழ விழ குரு முதலீட்டை மேற்கொண்ட வண்ணம் இருந்தார் . ஆங்கிலத்தில் ஒரு அருமையான சந்தை மொழி உண்டு . Don't confuse brain with bull market . மூளையையும் காளையையும் குழப்பிக் கொண்ட சிஷ்யர் வாகன வெளிச்சத்தில் மருண்ட மான் கணக்காக அப்படியே சிலையாக நின்று விட்டார் . அவர் நினைத்திருந்தால் சந்தை சரியத் தொடங்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை விற்று விட்டு வெளியேறியிருக்கலாம் . ஆனால் உயர் விலையில் வாங்கிய பங்குகளைக் குறை விலையில் விற்க மனத்தடையாக இருந்தது . மேலும் சிஷ்யர் முதலீடு செய்த பங்குகள் பங்காதாயம் எதனையும் வழங்குவதாகவும் இல்லை . சிஷ்யரைப் பொறுத்தவரையில் பங்காதாயம் என்பது கெட்ட வார்த்தை . மறு முதலீட்டு வாய்ப்புகள் இல்லாத நிறுவனங்கள் தான் பங்காதாயங்களை வழங்கும் என்பதான ஒரு எண்ணம் . கரடியின் உச்சக்கட்ட ஆதிக்கத்தில் சிஷ்யரின் பங்குத் தொகுப்பு நிறுவனங்கள் வழங்கும் பங்காதாய அளவில் சுருங்கி விட்டது . குருவின் பங்குத் தொகுப்பு அந்த அளவுக்கு இறங்கவில்லை . மேலும் குரு  காளையோ கரடியோ நிறுவனங்கள் தவறாமல் வழங்கும் பங்காதாயங்களையும் மறு முதலீடு செய்தவண்ணம் இருந்தார் . ஒரு கட்டத்தில் காளை விழித்துக் கொண்டது . குருவின் பங்குத் தொகுப்பு புதிய உச்சங்களைத் தொட்டது . சிஷ்யரின் பங்குத் தொகுப்பு நிரந்தரக் கரடியாகி விட்டது . சிஷ்யர் குருவிடம் தான் செய்த தவறு என்ன என்பதாகக் கேட்டார் . அப்போது குரு அவருடைய குரு சொன்ன ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார் . அந்தக் கதை ... ஒரு ஊரில் அர்ச்சுனனுக்கு அண்ணன் என்று சொல்லத்தக்க வில்லாளி ஒருவன் இருந்தான் . வில் வித்தைக்குரு ஒருவரிடம் தன் பாண்டியத்தைப் பறை சாற்றும் விதமாக வெகு தூரத்தில் இருக்கும் காளை பொம்மை ஒன்றின் கண்ணில் முதல் அம்பை அடித்து அடுத்த அம்பால் முதல் அம்பை இரண்டாகப் பிளந்தான் . அருமை என்று பாராட்டிய குரு தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு அவனைக் கேட்டுக் கொண்டார் . இரண்டு பெரும் மலைகளுக்கிடையில் மூங்கில் பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது . கீழே அதல பாதாளம் . கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் . குரு , வில்லை எடுத்து தூரத்து மரத்தின் கனி ஒன்றை வீழ்த்தினார் . இப்போது உன் முறை . அந்த இளம் வில் வீரனுக்குக் கை கால் உதற ஆரம்பித்தது . குறி தவறி அம்பு காற்றைப் பிளந்து எங்கோ சென்று மறைந்தது . வில் வித்தைக் குரு இறுதியாகச் சொன்னது : உன் வில்லில் இருக்கும் உறுதி மனதில் இல்லை .

3. கூறியது கூறல்

மதிப்பு முதலீட்டுக் கதைக் குருவிடம் முதலீட்டு உத்திகளைக் கற்றுக்கொள்ள வந்த  சிஷ்யர் ஒருவருக்கு வரவர குருவின் பாடங்கள் அலுப்பைத் தருவதாக அமைந்தன . எப்போது பார்த்தாலும் பங்காதாயம் - உயர்ந்து வரும் பங்காதாயம் - அதைத் தரும் பங்குகளின் வாயிலான முதலீட்டுப் பெருக்கம் - பங்காதாய மறு முதலீடு - பங்காதாயம் ... என்று குரு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதாகத் தோன்றியது . ஒரு முறை தாங்க முடியாதவராக குருவிடமே நேரடியாகக் கேட்டு விட்டார் . பதிலாக குரு ஒரு கதையைச் சொன்னார் . முன்னொரு காலத்தில் ஒரு பாடல் குரு இருந்தார் . அவரிடம்  ஒருவர் பாடல் பயிற்சி பயின்ற வண்ணம் இருந்தார் . அதில் ஒரு சின்னப் பிரச்னை எழுந்தது . பாடல் குரு ஒரு குறிப்பிட்ட பாடலை மட்டும் சாதகம் செய்ய சொல்லிக் கொடுத்தவாறு இருந்தார் . தினமும் அதே பாடல் என்று காலங்கள் உருண்டோடின . ஒரு கட்டத்தில் பாடகர் மனம் வெறுத்தவராக பாடல் பயிற்சியை நிறுத்தி விட்டார் . ஒரு நாள் பாடகர் வெறுமனே அலைந்து கொண்டிருக்கையில் பாராயணப் போட்டி ஒன்றைப் பார்க்க நேரிட்டது . இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் பாடகர் அந்தப் போட்டியில் தான் பல்லாண்டுகள் கற்ற பாடலை ஒப்புவித்தார் . அந்தப் போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது . எல்லோரும் உங்கள் குரு யார் என்று கேட்டவண்ணம் இருந்தனர் . நான் இதுவரை பாராயணம் கற்றுக் கொள்ளவில்லை என்று பாடகர் சொன்னதை யாருமே நம்பவில்லை .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14