நலம் தரும் புறக்கணிப்பு - 2
நலம் தரும் புறக்கணிப்பு - 2
Benign Neglect - 2
ஒரு முறை பங்குச்சந்தை ஜென் குருவிடம் சிஷ்யர்கள் , ' நலம் தரும் புறக்கணிப்பு என்ற ஒரு கருத்தாக்கத்தை அடிக்கடி கூறுகிறீர்கள் . உண்மையில் இந்த நலம் தரும் புறக்கணிப்பு என்பது என்ன ? புறக்கணிப்பு என்பது எப்படி நலம் தரும் ? சற்று விளக்கமாக எடுத்துரையுங்கள் ' என்று கேட்டுக் கொண்டனர் .
' நலம் தரும் புறக்கணிப்பு என்பது பட்டினத்தார் பாடியது மாதிரி தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதாகும் . தூங்காமல் தூங்குவது எங்ஙனம் என்பதாக ஒரு கேள்வி எழுவது இயற்கை . பங்குச்சந்தையை நீங்கள் பார்க்காமல் பார்க்க வேண்டும் '
சிஷ்யர்களின் தலை சுற்றத் தொடங்கியதைக் கவனித்தவராக ஜென் குரு புன்சிரிப்புடன் தொடர்ந்தார் .
' ஒரு சமயம் மதிப்பு முதலீட்டாளர் ஒருவர் திபெத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்தார் . இந்த சுற்றுலா கொஞ்சம் வித்தியாசமானது . இதன் காலம் ஆறு ஆண்டுகளாகும் . மேலும் இந்தக் கால கட்டத்தில் நீங்கள் வெளி உலகுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாது . நமது மதிப்பு முதலீட்டாளர் தனது டீமேட் கணக்கை ஆறப் போட்டு ( freeze) விட்டு திபெத்திற்குச் சென்று விட்டார் . இந்த இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் பங்குச்சந்தை மிகப்பெரிய மலை முகடு ஒன்றைச் சந்தித்ததும் அதன் எச்சமாக மிகப்பெரிய சரிவு ஒன்றுக்கு ஆளானதும் அந்த மதிப்பு முதலீட்டாளர் அறியாதது . அவரைப் பொறுத்தவரை சந்தை அவர் ஆன்மிக சுற்றுலா சென்ற போது இருந்ததை விடக் கூடுதலாக , அதன் சராசரி வருமானத்தைக் கொடுக்கவல்லதாக இருந்தது . அவர் மேற்கொண்டது நலம் தரும் ஒரு புறக்கணிப்பு . நலம் தரும் புறக்கணிப்பு என்றால் சந்தையையே பார்க்காமல் புறக்கணித்தல் என்று அர்த்தகமாகாது . நீண்ட காலத்திற்கான மதிப்பு முதலீட்டை மட்டும் மேற்கொள்ளுதல் , புரியாத துறைகளில் முதலீட்டைத் தவிர்த்தல் , பங்காதாயப் பலன்களில் கவனத்தைக் குவித்தல் , சந்தை மற்றும் நிறுவன வரலாறுகளைப் படித்தல் போன்றவை இந்த நலம் தரும் புறக்கணிப்பின் அங்கங்களாகும் . இந்த நலம் தரும் புறக்கணிப்பை மேற்கொள்ளாமல் அனுதினமும் சந்தையே கதியாக இருந்தவர்கள் சந்தை கூடக்கூட உயர் PE க்களில் பங்குகளை வாங்கி கொஞ்ச நாட்கள் வானத்தில் மிதந்த வண்ணம் இருந்தனர் . PE என்று சொல்வது கூடத் தவறு . அவர்கள் முதலீடு செய்த பெரும்பாலான நிறுவனங்களுக்கு வருமானம் என்பதே கிடையாது . வருமானம் இருந்தால் தானே E என்று சொல்லப்படும் Earnings கணக்கீட்டுக்கு வரும் ? 2000 ஆவது ஆண்டின் இந்த இணையத்தள நிறுவனங்கள் தங்கள் இணையத்தளத்தை இத்தனை கண்கள் பார்த்தன என்ற கணக்கீட்டைக் கொண்டு தங்களை மதிப்பிட்ட கொடுமையெல்லாம் நிகழ்ந்தது . இந்த online பொம்மைக் கடைகளில் ஒரு பொம்மையின் அடக்க விலை 100 ரூபாய் . அதனை அவர்கள் 80 ரூபாய்க்கு விற்றனர் . அதனை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவுகள் இதில் சேராது . எவ்வளவுக்கு எவ்வளவு பொம்மைகள் விற்கப்படுகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு நஷ்டம் . இதனை ஆரம்ப அனுகூலம் ( first mover advantage ) என்று கூறிக் கொண்டார்கள் . அதை விடக் கொடுமை Burn Rate என்பது . Burn Rate என்பதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அது காசைக் கரியாக்குவது என்பதாகும் . பின்னர் சந்தை சரிவைச் சந்தித்த போது முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்றனர் . இது buy low sell high என்ற பங்குச்சந்தை தாரக மந்திரத்திற்கு எதிரானது . ஆனால் திபெத்திற்குச் சுற்றுலா சென்ற நமது மதிப்பு முதலீட்டாளர் நலம் தரும் புறக்கணிப்பு என்ற அடிப்படையில் தப்பித்துக் கொண்டார் . ஆனால் இதற்காக நீங்கள் திபெத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை . நீங்கள் இருந்த இடத்திலிருந்தே இவ்வாறு தூங்காமல் தூங்கி சுகம் பெறலாம் '
' ஆறு ஆண்டுகள் சுற்றுலா சென்றவரைக் குறித்துப் பார்த்தோம் . இப்போது ஆறு நாட்கள் சுற்றுலா சென்றவர்களைக் குறித்தும் கூறுகிறேன் கேளுங்கள் ' என்று குரு தொடர்ந்தார் .
' 2000 ஆவது ஆண்டில் பங்குச்சந்தையில் IT bubble என்று அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பக்குமிழி வெடித்துச் சிதறியது . அது வெடிப்பதற்கு முன்னர் முதலீட்டாளர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் சிலர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்பச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர் . இவர்கள் பங்குச்சந்தையில் IT பங்குகளில் அவர்களது முழுவதுமான முதலீட்டைக் கொண்டிருந்தனர் . போதும் போதாததற்கு அவர்களின் பங்குத் தொகுப்பின் மேல் கடன் பெற்று அதனையும் IT பங்குகளாக வைத்திருந்தனர் . IT குமிழி வெடித்துச் சிதறியது . விளிம்பு அழைப்பு (Margin call ) எழும்பியது . கழுத்தளவு கடனில் இருந்தவர்களிடம் ஏது பணம் ? அப்படியே ஒரு சிலரிடம் பணம் இருந்தாலும் அவர்கள் பங்குச்சந்தையுடனான தங்களது இணைப்பைத் துண்டித்து விட்டு சுற்றுலா சென்றதால் அவர்கள் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தனர் . அவர்கள் திரும்பி வந்த போது அவர்களின் பங்குத் தொகுப்பு சின்னாபின்னமாகி ஒரு சின்ன பின்னம் மட்டும் மிச்சமிருந்தது . கொதிக்கின்ற பாலைக் குடித்து நாவைச் சுட்டுக்கொண்ட பூனை பின்னர் பாலையே குடிக்காதது மாதிரி இவர்கள் சந்தையை முற்றாகப் புறக்கணித்து வளர்ச்சி வாய்ப்புகளுக்கான கதவை என்றென்றைக்குமாக அடைத்துக் கொண்டனர் . அவர்கள் பங்குச்சந்தையில் அடைந்த நஷ்டத்தை விட இது தான் ஆகப்பெரிய நஷ்டம் '
' முதலீடு என்பது சாகச நிகழ்ச்சியோ , கேளிக்கையோ அல்லது சூதாட்டக்களமோ அல்ல . அது புல் வளர்வதைப் பார்த்துக் கொண்டிருப்பது அல்லது பூச்சு உலர்வதிற்காகக் காத்துக் கொண்டிருப்பதான நலம் தரும் புறக்கணிப்பாகும் '
Comments
Post a Comment