நிலை நிறுத்தச் சாய்வு
நிலை நிறுத்தச் சாய்வு
Anchoring Bias
நடத்தை நிதியியலின் (Behavioural Finance) இன்னொரு அங்கமான நிலை நிறுத்தச் சாய்வு குறித்து சற்றே பார்க்கலாம் .
ஒரு நிறுவனப்பங்கை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீடாக 100 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் . அதன் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic Value) உங்கள் கணக்கீட்டின்படி 150 ரூபாய் . நிறுவனத்திற்கு ஒரு நிரந்தரமான பின்னடைவு ஏற்பட்டு விடுகிறது . பங்கின் விலையும் பாதி ஆவியாகி 50 ரூபாய்க்கு வந்து விடுகிறது . இப்போது அதன் உள்ளார்ந்த மதிப்பு 50 ரூபாய்க்கும் கீழாகச் சென்று விட்டது . நீங்கள் அந்தப் பங்கை 50 ரூபாய்க்கு விற்று விட்டு வெளியேறி விடுவது தான் ஒரு அறிவார்ந்த செயலாக இருக்க முடியும் . மாறாக பங்கின் விலை 100 ரூபாய்க்கு வந்த பின்பு விற்று விடலாம் என்று நினைத்துக் காத்திருந்தால் நீங்கள் நிலைநிறுத்தச் சாய்விற்கு உள்ளாகியிருப்பதாக அர்த்தம் .
நிறுவனம் தற்காலிகமான ஒரு பின்னடைவிற்கு உள்ளாகியிருந்தால் 50 ரூபாய்க்கு அந்தப் பங்குகளை மேலும் வாங்குவது தான் ஒரு சரியான முடிவாக இருக்க முடியும் . ஆனால் நிரந்தரமான பின்னடைவு என்றால் வாங்கிய விலைக்கு நங்கூரம் கட்டுவது (anchoring) ஒரு பகுத்தறிவிற்கு உட்பட்ட செயலாக இருக்க முடியாது . உங்களுக்குப் பங்குகளைத் தெரியும் . பங்குகளுக்கு உங்களைத் தெரியாது . அண்ணன் பாவம் 100 ரூபாய்க்கு நம்மை வாங்கியிருக்கிறார் , அதனால் 100 ரூபாய்க்கு நாம் வந்து விடலாம் என்றெல்லாம் அது நினைக்காது . அந்தப் பங்குகளை 50 ரூபாய்க்கு விற்று விட்டு வேறு ஒரு நிறுவனப் பங்கை வாங்கினால் இழந்த பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் . மேலும் 100 ரூபாய் விலை உள்ள பங்கு 50 சதவீதத்தை இழந்து விட்டால் அது மீண்டும் 100 ரூபாய் ஆக 100 சதவீதம் கூட வேண்டும் .
நிலை நிறுத்தச் சாய்வின் பாதிப்பு இதற்கு எதிர்மாறாகவும் வெளிப்படும் . ஒரு பங்கின் விலை வெகு காலத்திற்கு முன்னர் 100 ரூபாய் என்ற அளவில் இருந்திருக்கும் . இப்போது நிறுவனம் நன்கு வளர்ந்து அதன் ஒரு பங்குச் சம்பாத்தியமே 100 ரூபாய்க்கு மேலாக இருக்கும் . ஆனால் அந்த 100 ரூபாய் என்ற விலையில் கொண்ட சாய்வின் காரணமாக நாம் அந்தப் பங்கை வாங்காமல் விட்டு விடுவது நிலை நிறுத்தச் சாய்வு .
நிலை நிறுத்தச் சாய்விலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பங்கின் விலையை பல்வேறு கோணங்களிலிருந்து அணுக வேண்டும் . முக்கியமாக பங்கின் விலையை மட்டும் பார்க்காமல் அதன் உள்ளார்ந்த மதிப்பை ஆராய வேண்டும் .
நிலை நிறுத்தச் சாய்வை நமக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் . தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும் பங்காதாயங்களில் கவனத்தைக் குவிப்பது அவற்றில் ஒன்று . அதிகரித்து வரும் பங்காதாயங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கும் பங்கின் விலைக்கு இட்டுச்செல்லும் . மேலும் வெயிலோ மழையோ காளையோ கரடியோ பரஸ்பர நிதிகளில் சீரான முதலீட்டுத் திட்டத்தை (SIP) மேற்கொள்வது பிறிதொன்று .
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வெளிவரும் இந்தப் பங்குச்சந்தை பதிவுகளும் நிலை நிறுத்தச் சாய்வின் பாற்பட்டது தான் .
Comments
Post a Comment