பங்குச்சந்தை பதில்கள் - 4

பங்குச்சந்தை பதில்கள் - 4 

கேள்வி : எதிர்காலத்தில் ஒரு கோடி நிகர சொத்து மதிப்பு கூட சராசரியான வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்குப் போதுமானதாக இருக்காது என்பது உண்மையா ?


பதில் : உண்மை . காரணம் பணவீக்கம் .


கேள்வி : நிதி விடுதலை ?


பதில் : நேர விடுதலை !


கேள்வி : சந்தையில் காளையும் கரடியும் ஏன் மாறி மாறி வருகின்றன ?


பதில் : Stability leads to instability . நிலைத்தன்மை நிலையில்லாத தன்மைக்கு இட்டுச் செல்வதாக இருக்கும் .


கேள்வி : பங்காதாயங்களுக்கு வரி உண்டா ?


பதில் : உங்களிடம் இருக்கும் அனைத்துப் பங்குகளின் மூலமாக , மொத்தமாக நீங்கள் வருமான வரியின்றி வருடத்திற்கு 5000 ரூபாய் வரை பெறலாம் . அதற்கு மேற்பட்ட பங்காதாய வருமானத்திற்கு நீங்கள் இருக்கும் வருமான வரி படிநிலை (Income Tax Slab) யின் படி வரி உண்டு . இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லி வைக்கிறேன் . முதலீட்டுத் திட்டங்களில் வரிகளைக் கவனத்தில் கொள்வது தவறில்லை . ஆனால் வரிகளைத் தவிர்க்கும் பொருட்டு முதலீட்டுத் திட்டங்களைக் கட்டமைக்காதீர்கள் .


கேள்வி : மென் சொத்துக்கள் என்றால் என்ன ?


பதில் : தாமதமான மனநிறைவு , நீடிப்புத்திறன் , பொறுமை , வாசிக்கும் பழக்கம் , வெற்றி தோல்விகளை சமமாகப் பாவிக்கும் தன்மை , பயணத்தைப் பரிசாகக் கொள்ளல் ... போன்றவை மென் சொத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன . இவற்றை வழி (வாழ்க்கை) முறையாகக் கொண்டால் பங்குச்சந்தையில் மட்டுமல்ல எந்தச் சந்தையிலும் பிரகாசிக்கலாம் .


கேள்வி : அது என்ன Wealth Effect ?


பதில் : தற்போது காளைச் சந்தையின் காலம் . முதலீட்டாளர்களின் பங்குத் தொகுப்பின் (share portfolio) மதிப்பு தின அளவில் உயர்ந்த வண்ணம் உள்ளது . இவ்வாறு உயர்ந்து வரும் சொத்தின் மதிப்பு முதலீட்டாளர்களின் மனநிலையில் ஏற்படுத்தும் ஒரு சாதகமான விளைவு wealth effect என்று அழைக்கப்படுகிறது . கரடிச்சந்தையில் இது தலைகீழாக மாறும் .


கேள்வி : பங்குச்சந்தையில் களமிறங்க எது சரியான நேரம் ?


பதில் : கையில் காசு இருக்கும் நேரம் .


கேள்வி : முதல் நிலைச் சந்தை , இரண்டாம் நிலைச் சந்தை என்றால் என்ன ?


பதில் : நிறுவனங்கள் முதன் முதலாகத் தனது பங்குகளைப் பொது மக்களுக்கு வெளியிடுவது முதல் நிலைச் சந்தை (Primary Market) இவ்வாறு வெளியிடப்பட்ட பங்குகளை முதலீட்டாளர்கள் தங்களுக்குள் வாங்கி விற்பது இரண்டாம் நிலைச் சந்தை ( Secondary Market) முதல் நிலைச் சந்தை , இரண்டாம் நிலைச் சந்தை என்று தனிப்பட்டு எதுவும் கிடையாது . ஒரு வசதிக்காக இவ்வாறு சொல்லப்படுகிறது . முதல் பொது வெளியீட்டின் (Initial Public Offer) போது மட்டுமே நாம் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக அவற்றின் பங்குகளை வாங்க முடியும் . பின்னர் வாங்குவது மற்றும் விற்பது சக முதலீட்டாளர்கள் மூலமாக மட்டுமே .


கேள்வி : அது நல்ல நிறுவனப் பங்கு என்று மதிப்பு முதலீடாகப் பார்த்துப் பார்த்து வாங்கியது . இப்போதும் நல்ல நிறுவனமாகத் தான் இருக்கிறது . ஆனால் பங்கின் விலை ஏறாமல் பொறுமையைச் சோதிக்கிறது ?


பதில் : Linear growth / Non Linear growth என்று இரண்டு வகைகள் இருக்கின்றன . கடன் பத்திரங்கள் Linear growth வகையைச் சார்ந்தவை . குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட அளவில் வளரும் . பங்கு முதலீடுகள் Non Linear growth வகையைச் சார்ந்தவை . குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட அளவில் வளராது . ஆனால் நீண்ட கால அளவில் நிறுவனப்பங்குகள் நிறுவன வருமானத்தை அடியொற்றிச் செல்லும் . மூன்று வருட கால அளவில் இரண்டே முக்கால் வருடம் பங்கு உறங்கிக் கொண்டிருக்கும் . கடைசிக் கால் வருடத்தில் மூன்று வருட வளர்ச்சியையும் எட்டி விடும் . இதனால் தான் பங்கு முதலீடுகள் variable investment மாறக்கூடிய தன்மை கொண்ட முதலீடுகள் என்று அழைக்கப்படுகின்றன .


கேள்வி : 52 வாரக் குறைந்த விலை பங்குகளை வாங்கலாமா ?


பதில் : 52 வாரக் குறைந்த விலை பங்குகள் ஏதோ சில நியாயமான காரணங்களுக்காகத் தான் அவ்விதம் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் . மாறாக புதிதாக இந்த 52 வார குறைந்த விலை பட்டியலில் இணைந்த பங்குகளை ஆராயலாம் . தரமான நிறுவனம் ஒன்று தீர்க்கப்படக் கூடிய தற்காலிகமான பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் போதும் இவ்விதம் குறை மதிப்பீட்டில் வர்த்தகமாகும் . அதனை இனங்கண்டு முதலீடு செய்வது தேர்ந்த ஒரு உபாயமாகும் . இதற்கும் மேலாக இன்னொரு உபாயம் இருக்கிறது . அது 52 வார அதிக பட்ச விலையில் வர்த்தகமாகும் பங்குகளில் முதலீடு செய்வது . அடுத்த வருடம் அத்தகைய பங்குகளின் விலை உயர்ந்து சென்ற வருட 52 வார அதிக பட்ச விலை இந்த வருட 52 வாரக் குறைந்த பட்ச விலையாகி விடும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14