சந்தைக்குள் சந்தை

சந்தைக்குள் சந்தை

நவராத்திரி கொலு கண்காட்சியில் ஒரு பொம்மை என் கருத்தைக் கவர்ந்தது. ஒரு பொம்மை. அதை மேல் கீழாக இரண்டாகப் பிரித்தால் அதற்குள் இன்னொரு பொம்மை. இவ்வாறாக பொம்மைக்குள் பொம்மையாக மொத்தம் ஆறு பொம்மைகள்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பங்குச்சந்தையையும் இவ்வாறு சந்தைக்குள் சந்தை என்பதாகப் பிரித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

காளைச்சந்தையை மூன்று விதமாகப் பிரிக்கலாம். காளைச்சந்தை, மிகை காளைச்சந்தை மற்றும் மீமிகை காளைச்சந்தை. அதே மாதிரி மூன்று விதமான கரடிச்சந்தைகள்... கரடி, மிகை கரடி, மற்றும் மீமிகை கரடி. இந்த ஆறு விதமான சந்தைகளையும் பல்வேறு விதமாகக் கையாண்டு பணம் சம்பாதிக்கலாம்.

மீமிகை கரடிச்சந்தையில் பங்குகளை வாங்கி மீமிகை காளைச்சந்தையில் விற்பது ஒரு வகை.

மீமிகை கரடிச்சந்தையில் பங்குகளை வாங்கி மிகை கரடிச்சந்தையில் விற்பது மற்றொரு வகை. 

இவ்வாறு அடுத்தடுத்த சந்தைகளில் (மீமிகை கரடி- மிகை கரடி- கரடி- காளை- மிகை காளை- மீமிகை காளை) விற்பது குறுகிய கால வணிகம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு தனிப்பட்ட சந்தையின் சின்னச்சின்ன விலை வித்தியாசங்களைப் பணமாக்கம் செய்வது தின வணிகம்

இதையே தலைகீழாக, அதாவது பங்குகளை விற்று விட்டு பின் வாங்குவது short selling. 

வாரன் பஃபெட்டின் உத்தி என்னவென்றால் மீமிகை கரடிச்சந்தையில் பங்குகளை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீடாக வாங்கி என்றென்றைக்குமாக வைத்துக் கொள்வது. அதிகரித்து வரும் பங்காதாயம் மற்றும் இந்த அதிகரித்து வரும் பங்காதாயங்களைக் கொடுக்கக்கூடிய பங்குகளின் கூடுதலான மதிப்பில் தான் அவரது கவனம் இருக்கும். 

பங்குகளை வாங்காமல், பங்குகள் விலை கூடும் (call option) அல்லது குறையும் (put option) என்று ஊக வணிகம் செய்வது தான் பங்குச்சந்தையில் பிரதானமாக ( கிட்டத்தட்ட 90 சதவீதம்) நடக்கிறது. Call option மற்றும் Put option என்பவை முதலீட்டாளர்களின் பங்குத்தொகுப்பை hedge செய்வதற்கானவை. பங்குத் தொகுப்பே இல்லாமல் இந்த மாதிரி call மற்றும் put optionல் பங்கு பெறுவது நூறு சதவீத ஊக வணிகம். வாழ்க்கையை மேலும் துலக்கமாகக் காட்டுமென்று எடுத்தணிந்த கண்ணாடி முக அடையாளத்தையே மறைக்கும் முகமூடியாகிப் போனது என்ற இந்திரனின் கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. 

இந்த மாதிரி ஊக வணிகம் செய்வதில் என்ன பிரச்னை வரும் என்றால் சந்தை ஒரே சீராக நேர்கோட்டில் மீமிகை கரடி... மிகை கரடி ... காளை... மீமிகை காளை என்று பயணிக்காது. அதே மாதிரி மீமிகை காளை... கரடி... மீமிகை கரடி என்பதாகவும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டும் என்பது மாதிரி உலக வர்த்தக மையத்தில் குண்டு போட்டால் உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகளில் அது வெடிக்கும். சந்தை ஒரே இரவில் தன் திசையை மாற்றிக் கொள்ளும். மேலும் நல்ல செய்தி வந்தால் சந்தை திடுதிப்பென்று 10 சதவீதம் உயரும். கெட்ட செய்தி வந்தால் 10 சதவீதத்தை இழக்கும். தவறான optionல் இருந்தால் அது வெறும் புத்திக் கொள்முதல் மட்டுமே.

தனிப்பட்ட சில பங்குகள் நிரந்தர காளைச்சந்தையில் அதன் போக்கில் பயணித்துக் கொண்டிருக்கும். உதாரணமாக HDFC வங்கிப் பங்கைக் குறிப்பிடலாம். அதே மாதிரி சில பங்குகள் நிரந்தர கரடிச்சந்தையில் தரை தட்டிய வண்ணம் இருக்கும். உதாரணம் Jet Airways.

Sideways market என்று ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவின் Dow Jones index கிட்டத்தட்ட 17 வருடங்களாக எந்தப் பக்கமும் செல்லாமல் முதலீட்டாளர்களின் பொறுமையைச் சோதித்தது. இந்த மாதிரி சந்தைகளில் தான் பங்காதாயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

எல்லாம் சரி, எதற்காக காளை, கரடி என்பதான சந்தைகள் இருக்க வேண்டும்? நிறுவனங்களின் வருமானம் கூடக்கூட அதைத் தொடரும் சந்தை அது பாட்டிற்கு 45 டிகிரி என்ற அளவில் ஒரே சீராக உயர்ந்தால் என்ன? அது உப்பில்லாத கஞ்சியைக் குடிப்பதற்கு ஒப்பானதாகும். சந்தை ரங்கராட்டினம் மாதிரி சுழன்றடிப்பது தான் சுவாரஸ்யம். மேலும் சந்தை மேலும் கீழுமாக ஏறி இறங்கினால் தான் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் முகிழ்த்தெழும்.

சந்தை இப்போது எப்படியிருக்கிறது? மொத்தம் உள்ள ஆறு பொம்மைகளில் வெளியிலிருந்து உள்ளாக இரண்டாவது பொம்மை வடிவில் இருப்பதாகத் தோன்றுகிறது. இவ்விடத்தில் வார்த்தைகளைச் சற்று கவனிக்க வேண்டுகிறேன். 'இருக்கிறது' என்று சொல்லவில்லை. 'இருப்பதாகத் தோன்றுகிறது' என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன். பங்குச்சந்தையில் எதிர்காலத்தை அறுதியிட்டுச் சொல்லவே முடியாது. 2008ல் உள்ளுக்குள் உள்ளாக ஆறாவது பொம்மையாக இருந்தது என்பதை இப்போது அறுதியிட்டுக் கூற  முடியும். 2008ல் அது ஒரு பனிமூட்டத்தின் ஊடாக இருந்தது. அப்போது நான் வாங்கிய பல பங்குகள் இப்போது பன்மடங்காளர்கள் என்பதைச் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.

இவ்வாறாக பங்குகளிலிருந்து நீங்கள் ஈட்டும்  வருமானம் பங்குகளை விற்கும் போது தீர்மானிக்கப் படுவதில்லை . மாறாக பங்குகளை அவற்றின் உள்ளார்ந்த மதிப்பிலிருந்து எவ்வளவு குறை மதிப்பில் வாங்குகிறீர்கள் என்னும் புள்ளியில் தீர்மானிக்கப்படுகிறது. 

இவ்வாறு பங்குகளை அவற்றின் குறை மதிப்பில் வாங்குவதில் இன்னொரு அனுகூலமும் இருக்கிறது. பங்குகளின் குறை மதிப்பும் பங்கு ஈட்டு விகிதமும் தலைகீழ் விகிதத்தில் இணைந்திருப்பதால் பங்குகளின் விலை குறையக் குறைய பங்கு ஈட்டு விகிதம் கூடும். தரமான நிறுவனங்கள் வருடாவருடம் பங்காதாயத்தை அதிகரித்த வண்ணம் இருப்பதால் வெகுவிரைவில் உங்களின் பங்கு ஈட்டு விகிதம் கடன் பத்திர முதலீட்டு வட்டியை விடக் கூடுதலாகக் கூடிய ஒரு வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு கூடினால் பங்கு ஈட்டு விகிதத்தின் மூலமாக மட்டும் உங்களுக்கான வருமானம் கிடைத்து விடுவதால் பங்கின் விலை ஏற்ற இறக்கத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரு யோக நிலையை அடைந்து விடுவீர்கள். அது தான் உண்மையான நிதி விடுதலைக்கான (financial independence) மூலாதாரம் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14