ஜென் கதைகள் - 1

ஜென் கதைகள் - 1

1. மனம் போல் வாழ்வு

பங்குச்சந்தையில் தேர்ச்சி பெற்ற ஒரு ஜென் குருவிடம் இரண்டு NRI முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆலோசனை கேட்பதன் பொருட்டு வந்திருந்தனர். முதலாமவர் இந்த மாதிரி எங்கள் நாட்டு பங்குச்சந்தையில் எப்போது பார்த்தாலும் ஒரே கூச்சலும் குழப்பமும் தான். எல்லோரும் குறுகிய கால இலாபத்திற்காக ஒருவரையொருவர் தோற்கடிக்கத் துடிக்கின்றனர். IPO என்பது பட்டியல் இலாபத்திற்கு (listing gain) என்பதாக உருமாற்றம் பெற்று விட்டது. இல்லாத பங்குகளை விற்று விட்டு (short selling) இலாபம் பார்க்க நினைக்கிறார்கள். முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் கால அளவு மென்மேலும் குறைந்த வண்ணமாகவே இருக்கிறது. Buy & Hold என்பதே கிடையாது. எல்லாமே F & O தான். அது சூதாடிகளின் கூடாரமேயன்றி வேறில்லை. உங்கள் நாட்டுப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று யோசனை. உங்கள் சந்தை எப்படி ? குரு பின்வருமாறு பதில் சொன்னார். எங்கள் சந்தையும் உங்கள் நாட்டு சந்தை மாதிரி தான். இங்கும் எப்போதும் ஒரே கூச்சலும் குழப்பமும் தான். இரண்டாமவர் எங்கள் நாட்டு பங்குச்சந்தை ஒரு சிறந்த மதிப்பு உருவாக்கக் களமாக இருக்கிறது. பல்லாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் வாங்கிய பங்குகள் மூன்று இலக்க பங்கு ஈட்டு விகிதங்களைக் கொடுக்க வல்லவையாக இருக்கின்றன. இத்தகைய வருமானங்களைக் கொடுக்க வல்ல பங்குகளின் விலைகளும் பன்மடங்கு பெருக்கத்தை அடைந்திருக்கின்றன. பங்குகளை தலைமுறை தாண்டியும் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பங்குகளை  சம்பாதிக்கும் ஒரு நபராகப் பார்க்கும் போக்கு நிலவுகிறது. ஒரு மாறுதலுக்காக உங்கள் நாட்டு சந்தையில் முதலீடு செய்யலாம் என்று யோசனை. உங்கள் சந்தை எப்படி ? குரு பின்வருமாறு பதில் சொன்னார். எங்கள் சந்தையும் உங்கள் நாட்டு சந்தை மாதிரி தான். எல்லாருமே இங்கு நீண்ட கால முதலீட்டாளர்கள் தான்.

2. தலைகீழ் விகிதங்கள்            

முதலீட்டாளர் ஒருவர் பங்குச்சந்தை ஜென் குருவிடம் சந்தையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வதின் பொருட்டு வந்திருந்தார். வந்தவர் ஒரு அவசரக்குடுக்கை. குருவிடம் இந்த மாதிரி பங்குச்சந்தை குறித்துக் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதாகக் கேட்டார். குரு பத்து ஆண்டுகள் என்பதாகப் பதிலளித்தார். நம்மவர் நான் இரவு பகலாகக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை கூட விடுப்பு வேண்டாம். உடனே உடனே நான் கற்றுத் தெளிய வேண்டும். அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் ? இருபது ஆண்டுகள்.

3. பழையன கழிதலும் ...

பங்குச்சந்தை ஜென் குருவைத் தேடி தொலைக்காட்சி புகழ் முதலீட்டு குரு வந்திருந்தார். இந்த முதலீட்டு குரு எல்லாம் எனக்குத் தெரியும் என்பதான ஒரு பேர்வழி. ஜென் குரு அவரை வரவேற்று தேநீர் அருந்துமாறு உபசரித்தார். தேநீரைக் கோப்பையில் ஊற்றும் போது ஜென் குரு கோப்பை நிரம்பியதைக் கவனிக்காதவராக வழிய வழிய ஊற்றிய வண்ணம் இருந்தார். முதலீட்டு குரு , "கோப்பை நிரம்பியதைக் கவனிக்காமல் ஊற்றிய வண்ணம் இருக்கிறீர்களே ! " "உங்கள் மனமும் சந்தை குறித்த முன் முடிவுகளால் நிரம்பப் பெற்றிருக்கிறது. பழையனவற்றைக் கழித்தால் தான் புதியன புக முடியும்"

4. பயணமே இலக்கு               

ஜென் குருவின் சிஷ்யர் ஒருவர் இருந்தார். எதற்கெடுத்தாலும் அவர் 'இருக்கலாம்' என்று சொல்வது வழக்கம். ஒரு முறை அவர் மதிப்பு முதலீடாகப் பார்த்துப் பார்த்து வாங்கிய பங்கு கரடிச்சந்தை ஒன்றில் பாதியாகக் கரைந்து விட்டது. அவருடைய பங்குச்சந்தை நண்பர்கள் என்ன ஒரு துரதிர்ஷ்டம் என்று வருத்தப்பட்டனர். சிஷ்யர் இருக்கலாம் என்றார். கொஞ்ச நாட்களில் பாதியாகக் கரைந்த நிறுவனம் ஒரு பங்கிற்கு மூன்று பங்குகள் என்று இலவசப்பங்குகளை அளிக்கப் போவதாக அறிவித்ததும் அந்தப் பங்குகளின் விலை விண்ணை முட்டிச் சென்றது. என்ன ஒரு அதிர்ஷ்டம் என்று நண்பர்கள் வியந்து போற்றினர். சிஷ்யர் இருக்கலாம் என்றார். சில காலம் கழித்து அந்த நிறுவனத்தின் CEO உள்ளாள் வணிகம் (insider trading) ஒன்றில் மாட்டிக் கொண்டதும் பங்கின் விலை தலை குப்புறக் கவிழ்ந்தது. நண்பர்கள் சிஷ்யரைத் துரதிர்ஷ்டம் திரும்பவும் துரத்தத் தொடங்கி விட்டதாகக் கூறிக் கொண்டனர். சிஷ்யர் இருக்கலாம் என்றார். பின்னர் அந்த CEO மாற்றப்பட்டு நிறுவன உரிமையாளரே நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் அற வழியில் வாரன் பஃபெட்டிற்கு இணையானவர். அவர் வழிகாட்டுதலில் நிறுவனத்தின் PE எங்கோ சென்று விட்டது. நண்பர்கள் அவர் எதைத் தொட்டாலும் துலங்கும் என்று கூறினர். சிஷ்யர் இருக்கலாம் என்றார். வழிமுறைகளில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். வளமை தானாக வரும்.

5. திடீர் ஞானோதயம்

ஒரு சமயம் மதிப்பு முதலீட்டாளர் ஒருவர் தனது மகனை ஜென் குருவிடம் அழைத்து வந்திருந்தார். மகன் விளிம்பு நிலை வர்த்தகம் (margin trading) புரிவதில் கில்லாடி. அவன் ஆரம்ப நிலைகளிலையே நஷ்டம் அடைந்திருந்தால் புத்திக் கொள்முதல் என்ற அளவில் அவனைத் திருத்தியிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக அவன் தொடர்ந்து விளிம்பு நிலை வர்த்தகத்தில் இலாபமீட்டிய வண்ணம் இருந்தான். யார் சொன்னாலும் அவன் கேட்கும் மனநிலையில் இல்லை. அவனைப் பொறுத்தவரை தின அளவில் பணம் வந்து கொட்டுகிறது. சனி ஞாயிறு சந்தைக்கு  விடுமுறை இல்லையென்றால் இன்னும் கொஞ்சம் சம்பாதித்திருப்பேன் என்று கூறிக் கொண்டான். அவன் கஷ்டப்பட்டுப் பணம் சம்பாதிக்காததால் அதன் அருமை அவனுக்குத் தெரியாமல் கண்டபடி செலவழிப்பவனாகவும் இருந்தான். மதிப்பு முதலீட்டாளர் விளிம்பு நிலையில் இருக்கும் தன் மகனை நல்வழிப்படுத்துமாறு ஜென் குருவிடம் கேட்டுக் கொண்டார். குருவும் இன்றிரவு மகனை ஆசிரமத்தில் விட்டுச் செல்லுமாறு அவரைப் பணித்தார். அன்று பௌர்ணமி. குரு, மகனிடம் வாளி ஒன்றைக் கொடுத்து அருகிலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்து வருமாறு கேட்டுக் கொண்டார். வாளியின் அடிப்பாகம் உடைந்து மூங்கிலால் முட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. மகன் கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்துக் கொண்டு முழு நிலா வாளியின் தண்ணீரில் பிரதிபலிப்பதை இரசித்துக் கொண்டே வருகையில் திடீரென்று மூங்கில் உடைந்து தண்ணீர் முழுவதும் கீழே கொட்டி விட்டது. மகன் தண்ணீரைப் பிடிக்க வாளியை இப்படியும் அப்படியும் ஆட்டிப் பார்த்தும் ஒன்றும் கதைக்காகவில்லை. பாத்திரத்தில் இப்போது தண்ணீரும் இல்லை. தண்ணீரில் இப்போது நிலவும் இல்லை. மகன் இப்போது விளிம்பு நிலை வர்த்தகத்தில் ஈடுபடுவதில்லை என்று கேள்வி.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14