தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம்
1. Margin of safety
பத்து டன் எடையைத் தாங்கும் பாலத்தில் ஐந்து டன் எடையை மட்டும் கொண்டு செல்வது margin of safety என்று அழைக்கப்படுகிறது. இரயில் எட்டு மணிக்குப் புறப்படும் என்றால் ஏழரை மணிக்கே இரயில்வே ஸ்டேஷன் சென்றடைந்து விடுவது
margin of safety. பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க இது ஒரு முக்கியமான கல்யாண குணமாகப் பார்க்கப்படுகிறது. நூறு ரூபாய் உள்ளார்ந்த மதிப்பு உள்ள பங்கை ஐம்பது ரூபாய்க்கு வாங்குவது margin of safety. பங்குச்சந்தையில் மனித உணர்ச்சிகளும் முட்டி மோதிக் கொள்வதால் பங்குகள் குறுகிய கால அளவில் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பை விடவும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வர்த்தகமாகும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. நீண்ட கால அளவில் பங்குகள் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பை அடியொற்றிச் செல்லும் என்றாலும் குறுகிய காலத்தில் எதுவும் நடக்கலாம். எனவே எப்போதும் margin of safety யுடன் இருப்பது மிக மிக முக்கியம். வாரன் பபெட்டின் குரு பெஞ்சமின் கிரகாம் பிரபலப்படுத்திய உத்தி இது.
2. Circle of competence
தமிழில் திறமை வளையம் என்று சொல்லலாம். இது வாரன் பபெட் பிரபலப்படுத்திய முதலீட்டு மந்திரம். பங்குச்சந்தையில் நமக்கு நன்றாகத் தெரிந்த துறைகளில் மட்டும் முதலீடு செய்ய வேண்டும். ஒரு மருத்துவருக்கு மருத்துவத்துறை நிறுவனங்கள் குறித்த உள்ளார்ந்த புரிதல் இருக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அவர் மருத்துவத்துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்தால் அது ஒரு எளிமையான உத்தியாக அமையும். நன்றாகக் கவனத்தில் கொள்ளுங்கள், பங்குச்சந்தையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் எளிமையான உத்திகள் மட்டுமே வெற்றி பெறும். துரதிர்ஷ்டவசமாக மருத்துவர்கள் மருத்துவத்துறை தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் முதலீடு செய்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வாரன் பஃபெட், அடிக்கடி மாற்றம் அடைந்து கொண்டிருக்கும் துறைகளில் முதலீடு செய்ய மாட்டார். குளிர் பானங்கள், பூச்சு (paint) நிறுவனங்கள், புகை வண்டித் துறை, திருகு மற்றும் மரை போன்ற மிக மிக சாதாரணமான (mundane) பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் தான் பிரதானமாக முதலீட்டை மேற்கொள்வார். மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகில் மாறாமல் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது தான் அவர் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் எளிமையான ஒரு உத்தி. நாட்பட இந்தத் திறமை வளையத்தை நீங்கள் பெரிது படுத்தலாம். பல்வேறுபட்ட துறைகளில் பாண்டித்தியத்தைப் பெறலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் திறமை வளையத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது
3.Mr .Market
இந்த உருவகக் கருத்தாக்கத்தைச் சொன்னவர் பெஞ்சமின் கிரகாம். திருவாளர். சந்தை ஒரு manic depressive. ஒரு சில நாட்களில் மிகவும் உற்சாகமாகக் காணப்படுவார். பங்குகளுக்கு அவர் வைத்தது தான் விலை. ஒரு சில நாட்களில் மிகவும் சோர்வாக இருப்பார். பங்குகளை வந்த விலைக்கு விற்று விடுவார். நாம் அவருடைய மனமாச்சரியங்களுக்கு ஆட்பட்டு விடாமல் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். மேலும் திருவாளர்.சந்தை ஒரு வித்தியாசமான பேர்வழியும் கூட. நாம் அவரிடம் பங்குகளை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் மறுநாளும் வேறு ஒரு விலையுடன் திரும்ப வருவார். அவர் சொல்லும் ஒவ்வொரு பங்கு விலையையும் உங்களுக்கு வீசப்படும் ஒரு பந்தாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். விப்ரோ பங்கு 550 ரூபாய் என்ற விலையில் ஒரு பந்து உங்களை நோக்கி வீசப்படுகிறது. உங்களுக்கு இஷ்டமிருந்தால் பந்தை (பங்கை) நீங்கள் அடிக்கலாம் (வாங்கலாம்) இல்லாவிட்டால் வெறுமனே நீங்கள் களத்தில் நிற்கலாம். இத்தனை over இத்தனை பந்து என்ற கணக்கெல்லாம் கிடையாது. பந்து நல்ல வாக்கில் வந்தால் நீங்கள் sixer அடிக்கலாம் (மதிப்பு முதலீடு) எப்போது ஆட்டம் இழப்பீர்கள் என்றால் திருவாளர்.சந்தை மிகவும் உற்சாகமான மனநிலையில் (மிகை மதிப்பில்) போடும் பந்தை அடிக்கும் போது. அவர் சோர்வுற்று இருக்கும் போது பங்குகளை வாங்கி உற்சாகமான மனநிலைக்கு மாறும் போது பங்குகளை விற்று விடுவது ஒரு வழி. சோர்வான மனநிலையில் இருக்கும் போது பங்குகளை வாங்கி காலாகாலத்திற்கும் வைத்திருந்து கூடுதல் பங்கு ஈட்டு விகிதம் - கூடுதல் பங்காதாயம் - கூடுதல் பங்கு விலைகள் என்று பங்குகளைப் பன்மடங்காக்குவது இன்னும் சிறந்த வழி.
4. Time value of money
நீங்கள் உடனே ஒரு இலட்சம் ரூபாய் பெற விரும்புவீர்களா அல்லது ஒரு வருடம் கழித்து ஒரு இலட்சம் ரூபாய் பெற விரும்புவீர்களா? உடனே ஒரு இலட்சம் பெற்று விடவே விரும்புவீர்கள். எதற்காக? உடனே செலவழிக்கவா? ஒரு இலட்சம் ரூபாயை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்தால் ஒரு வருடத்திற்கு 2.75 சதவீத வட்டி கிடைக்கும். கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் 6 சதவீதம். பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தால் (அதிர்ஷ்டமும் இருந்தால்) 15 சதவீதம். தரமான பங்குகளில் மதிப்பு முதலீட்டு வாய்ப்பு கிடைக்கப் பெற்றால் 20 சதவீதம். இது தான் பணத்தின் நேர மதிப்பு என்பதாக அழைக்கப்படுகிறது. இதை நம்ம ஊர் பழமொழி ஒன்று மரத்தில் உள்ள பலாக்காயை விட கரத்தில் உள்ள கலாக்காயே மேல் என்று எளிமையாக எடுத்துரைக்கிறது.
5. Division of labour
வேலையைப் பகிர்ந்தளித்தல் division of labour என்று அழைக்கப்படுகிறது. ஒரு சாதாரண குண்டூசி தயாரிக்கும் வேலையை எடுத்துக் கொள்ளலாம். ஒரு குண்டூசி தயாரிப்பில் 18 விதமான தனிப்பட்ட வேலைகள் உள்ளன. குண்டூசி தயாரிப்பதற்கான கம்பியை நேர்ப்படுத்துதல், கம்பியை அளவாக வெட்டுதல், ஒரு முனையைக் கூராக்குதல், மறு முனையில் கொண்டை போடுதல்... இந்தக் கொண்டை போடுதலில் மட்டும் மூன்று தனிப்பட்ட வேலைகள் உள்ளன. இந்த அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்தால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரேயொரு குண்டூசி மட்டுமே தயாரிக்க முடியும். ஆனால் இந்த வேலையைப் பகிர்ந்தளித்தால் பத்து பேர் வேலை பார்க்கும் ஒரு தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 48000 குண்டூசிகள் வரை தயாரிக்க முடியும். திரும்பத் திரும்ப ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலையைத் தொடர்ந்து செய்து வந்தால் அவர் அதில் நிபுணத்துவம் பெற்று விடுகிறார். அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவையும் ஒவ்வொரு மருத்துவர் மேற்கொள்வதான ஒரு முறை இன்றளவும் பின்பற்றப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் சிலிக்கான் வேலியில் கருவாகி, இந்தியாவின் ஐதராபாத் நகரில் மென்பொருளாக்கம் செய்யப்பட்டு, சீனாவின் தைவான் நகரில் இணைக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுவதை division of labour ன் சிகர உதாரணமாகச் சொல்லலாம். 1776 ஆம் வருடம் ஆடம் ஸ்மித் சொன்ன காலத்தை வென்ற கருத்தாக்கம் இது.
Comments
Post a Comment