என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ?

என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ?

இந்தப் பதிவில் பணத்தைக் கொண்டு எதையெல்லாம் வாங்க முடியாது என்று கொஞ்சம் பார்க்கலாம்.

பணத்தால் நடத்தை, நேர்மை, மரியாதை, பண்பு நலன், பொது அறிவு, நம்பிக்கை, பொறுமை, ஒருமைப்பாடு மற்றும் அன்பு போன்றவைகளை வாங்க முடியாது.

பணத்தால் மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்க முடியாது.

கணினியை வாங்கலாம். மூளையை வாங்க முடியாது.

உணவை வாங்கலாம். பசியார்வத்தை வாங்க முடியாது.

அலங்காரத்தை வாங்கலாம். அழகை வாங்க முடியாது.

மருந்தை வாங்கலாம்.  ஆரோக்கியத்தை வாங்க முடியாது.

ஆடம்பரத்தை வாங்கலாம். கலாச்சாரத்தை வாங்க முடியாது.

கேளிக்கைகளில் ஈடுபடலாம். மகிழ்ச்சியை வாங்க முடியாது.

தெரிந்தவர்களைப் பெறலாம். நண்பர்களைப் பெற முடியாது.

கீழ்ப்படிதலைப் பெறலாம். விசுவாசத்தைப் பெற முடியாது.

காமத்தைப் பெறலாம். காதலைப் பெற முடியாது.

நீங்கள் பணக்காரர் ஆக உணர வேண்டுமென்று விரும்பினால் பணத்தால் வாங்க  முடியாத இத்தகைய விஷயங்களை எண்ணிப்பாருங்கள்.

பணம் என்பது வெறும் எண்கள் மட்டுமே. எண்களுக்கு முடிவே கிடையாது. பணத்தால் மகிழ்ச்சியை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் மகிழ்ச்சிக்கான உங்கள் தேடல் முற்றுப் பெறாது.

பணத்தால் வாங்க முடியாத விஷயங்களை நீங்கள் அடையாத வரை உங்களைப் பணக்காரர் என்று சொல்ல முடியாது.

வாழ்க்கை என்ற வலையை மனித இனம் மட்டும் நெய்யவில்லை. நாம் அந்த வலையின் ஒரு இழை மட்டுமே. அந்த வலையை அறுத்தால் நம்மை நாமே அறுத்துக் கொள்வதற்குச் சமம். எல்லாமே கட்புலனாகாத ஒரு கண்ணியால் பிணைக்கப்பட்டிருக்கிறது.

எல்லா மரங்களும் வெட்டப்படுவதற்கு முன் எல்லா மிருகங்களும் வேட்டையாடப்படுவதற்கு முன் எல்லா நீரும் மாசடைவதற்கு முன் எல்லாக் காற்றும் சுவாசிக்கத் தகுதியற்றதாக ஆவதற்கு முன் பணத்தை உண்ண முடியாது என்ற உண்மையை உணர்வோம்.

வழக்கம் போல் ஒரு (உண்மைக்)கதை. மாவீரன் அலெக்சாண்டர் ஒருமுறை வழி தவறி பாலைவனம் ஒன்றில் மாட்டிக்கொண்டு விடுகிறான். தாகத்தால் தவித்த படி நடந்து கொண்டிருக்கையில் எதிரே ஒரு துறவி தென்படுகிறார். அவர் கையில் ஒரு நீர்க்குடுவை. மன்னனுக்கு எப்போதும் ஆணையிட்டுத் தானே பழக்கம்? 'மாவீரன் அலெக்சாண்டர் ஆணையிடுகிறேன். அந்தக் குடுவையை இப்படித் தாரும்' என்று அலெக்சாண்டர் ஆணையிட்டதும் துறவி சாந்தமாக 'மன்னர் மன்னா! இதுவோ கொடும் பாலைவனம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை இங்கு தண்ணீர் கிடையாது. என்னிடம் இருப்பதோ ஒரே ஒரு குடுவை தண்ணீர் மட்டும் தான். எனக்கும் தாகமெடுக்கும். மேலும் உங்களை விட நான் வயதில் முதிர்ந்தவன். என்னால் தாகத்தைத் தாங்க இயலாது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதும் அலெக்சாண்டர் அவன் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொடுக்கிறான். 'இன்னும் எவ்வளவு பொன் பொருள் வேண்டுமோ கேளுங்கள் தருகிறேன்' என்கிறான். துறவி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியாக அந்த ஒரே ஒரு குடுவை தண்ணீருக்காகத் தன் இராஜ்ஜியத்தையே தர முன் வருகிறான். நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரு இராஜ்ஜியத்தின் மதிப்பு கடைசியில் ஒரு குடுவை தண்ணீர் மட்டும் தானா? அலெக்சாண்டரின் அகந்தை அந்தப் பாலைவனத்தில் சுக்கு நூறானது‌. அப்புறம் அந்தத் துறவி அலெக்சாண்டருக்குத் தண்ணீர் கொடுத்ததாக இந்தச் சம்பவம் முடிகிறது. அலெக்சாண்டர் இறக்கையில் அவன் ஆணைப்படி அலெக்சாண்டரின் சவப்பெட்டி அவன் இரண்டு கைகளும் வெளியே தெரியும் வண்ணம் செய்யப்படுகிறது. அலெக்சாண்டர் இந்தப் பூமிக்கு வரும் போது வெறும் கையுடன் தான் வந்தான். வெறும் கையுடன் தான் இந்தப் பூமியை விட்டுச் செல்கிறான் என்பதே அவன் தெரிவிக்க விரும்பும் செய்தி.

மொழிபெயர்ப்பு மற்றும் தொகுப்பு :
S. சொக்கலிங்கம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14