படித்ததில் பிடித்தது- 3
படித்ததில் பிடித்தது - 3
[சுஜாதா பதில்கள்- முதல் மற்றும் இரண்டாம் பாகம் (உயிர்மை வெளியீடு) மற்றும் இணையத்திலிருந்து தேர்ந்தெடுத்த சில கேள்வி பதில்கள். சில பதில்கள் உங்களைச் சிரிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும்]
கேள்வி: இணையத்தளங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
பதில்: சுய விளம்பரங்களுக்குப் பயன்படும்.
கேள்வி: கடவுள் கொள்கையில் உங்கள் தெளிவான முடிவு என்ன?
பதில்: கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை.
கேள்வி: வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுவீர்கள்?
பதில்: கற்றது போதாது என்பதை.
கேள்வி: ஆண்கள், பெண்கள்- பொய் சொல்வதில் யார் கில்லாடி?
பதில்: பொய் பேசுவதில் கில்லாடிகள் ஆண்கள். அதைச் சட்டென்று கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் பெண்கள்.
கேள்வி: கதைகள் எப்போது காவியமாகின்றன?
பதில்: நூறு வருஷம் பிழைத்திருந்தால்.
கேள்வி: உங்களுக்கு எந்த அளவு கடவுள் நம்பிக்கை உண்டு?
பதில்: கடவுள் இருக்கிறார் என்ற அளவுக்கு.
கேள்வி: ஒரு கதை எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?
பதில்: சாதாரணமாக சில மணி நேரம் போதும். சில கதைகள் எழுதுவதற்கு வருஷங்கள் கூட ஆகும்.
கேள்வி: சந்தோஷம் என்பது ஆளுக்கு ஆள் மாறிக்கொண்டேயிருக்கிறது. சந்தோஷங்கள் பொதுவாகி விட்டால் வாழ்க்கை சீரடையும் அல்லவா?
பதில்: சந்தோஷம் பொதுவாகி விட்டால் அது சந்தோஷமல்ல. போர் அடிக்கும்.
கேள்வி: சொர்க்கம் எங்கே கிடைக்கும்?
பதில்: நல்ல வெயிலில் ரோட்டோர தர்பூசணியில் சில நேரம் சொர்க்கம் கிடைத்து விடுகிறது.
கேள்வி: ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க விரும்பிய நான் நீங்கள் சொன்னபடி ஆங்கில அகராதியை வாங்கி விட்டேன். அடுத்து என்ன செய்ய வேண்டும்?
பதில்: Serendipity என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்க்கவும்.
கேள்வி: கனவுகள் நிஜ வாழ்க்கையில் பிரதிபலிக்குமா?
பதில்: இல்லை. நிஜ வாழ்க்கை கனவுகளில் பிரதிபலிக்கும்.
கேள்வி: நேரம் என்பது என்ன?
பதில்: நேரம் என்பது தூரத்தின் மறு வடிவம்.
கேள்வி: நீங்கள் எப்படி இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?
பதில்: தொடர்ந்து படிப்பதால்.
கேள்வி: நீங்கள் விரும்பிக் கும்பிடும் கடவுள் யார்?
பதில்: கடவுள்.
கேள்வி: காதலித்தால் தான் கவிதை வருமா?
பதில்: ஆம். கவிதையைக் காதலித்தால்.
கேள்வி: நிறைய எழுதுவது - அதிகமாகப் படிப்பது. இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம்?
பதில்: நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும்.
கேள்வி: ஒரு கேள்விக்கு ஒரு கேள்வியையே பதிலாகச் சொல்ல முடியுமா?
பதில்: ஏன் முடியாது?
கேள்வி: வெற்றியின் விலாசம் என்ன?
பதில்: தோல்வி.
கேள்வி: ஙா முதல் ஙெள வரையிலான 11 எழுத்துக்களைப் பயன்படுத்தியது உண்டா?
பதில்: கைக்குழந்தையாக இருந்த போது பயன்படுத்தியிருக்கிறேன்.
கேள்வி: கதை எழுதிய பின் தலைப்பு வைப்பீர்களா? இல்லை தலைப்பு வைத்த பின் கதை எழுதுவீர்களா?
பதில்: இரண்டும் உண்டு.
கேள்வி: பழைய படப் பாடல்கள் போலப் புதிய படப் பாடல்கள் கேட்பதற்குச் சுகமாக இல்லையே?
பதில்: சரி, சரி. எப்போது உங்களுக்குச் சதாபிஷேகம்? அடுத்த வாரமா?
கேள்வி: மனிதனால் ஞாபக மறதியைப் போக்க முடியாதா?
பதில்: போக்கக் கூடாது. மறக்க வேண்டியது மனித வாழ்வின் முக்கியமான அம்சம்.
கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத் தான் ஆக வேண்டுமா?
பதில்: சரி தான் ... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?
கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே?
பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதி பூண்டு செயல்பட்டுப் பாருங்கள் .
கேள்வி: உலகில் மிகவும் அத்தியாவசியமான மொழி ஆங்கிலம் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதில்: அந்தப் பட்டியலில் மௌனம், பார்வை மற்றும் கணினி மொழிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கேள்வி: வியாபாரத்திற்கு முதல் தேவை எது?
பதில்: முதல்.
கேள்வி: இலக்கியத்துறையில் உங்களது இமாலய இலக்கு எது?
பதில்: கடைசி வரை எழுதிக் கொண்டிருப்பது.
கேள்வி: கடவுளைப் பார்த்திருக்கிறீரா?
பதில்: பார்த்ததில்லை. உணர்ந்திருக்கிறேன்.
கேள்வி: வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, வாய்ப்புகள் நல்ல வாய்ப்புகள் என்று எப்படித் தெரியும்?
பதில்: நழுவிப் போனதும் தெரிந்து விடும்.
கேள்வி: நீங்கள் எப்போது எழுதுவதை நிறுத்துவீர்கள்?
பதில்: நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு.
Comments
Post a Comment