எனது முதல் 200 மடங்காளர்

எனது முதல் 200 மடங்காளர்

My First 200 Bagger


நாட்கள் என்னும் பூக்கள் கொண்டு தான் ஆண்டுகள் என்னும் மாலைகள் கட்டப்படுகின்றன. ஆனால் நாட்கள் பார்க்காததையெல்லாம் ஆண்டுகள் பார்க்கின்றன - காண்டேகர்


ICICI, IDBI மற்றும் IFCI ஆகிய மூன்று நிறுவனங்களும் அவற்றின் ஆரம்ப காலத்தில் DFI (Development Financial Institutions) என்ற வகையில் இயங்கிக் கொண்டிருந்தன. DFI களின் வேலையை வங்கிகளே மேற்கொண்டமையால் DFI என்ற கருத்தாக்கம் ஒரு கட்டத்தில் தேவையில்லாமல் போனது. மேலும், இவற்றின் அதிகரித்து வந்த வாராக்கடன்களும் இவை தொடர்ந்து இயங்க சாதகமான ஒரு சூழலை உருவாக்கவில்லை. முதலிரண்டு நிறுவனங்களும் அவற்றின் துணை நிறுவனங்களான ICICI வங்கி மற்றும் IDBI வங்கியுடன் தலைகீழ் இணைப்பு (reverse merger) என்ற வாக்கில் இணையப்பெற்றன. இந்த மூன்று நிறுவனங்களில் தப்பிப் பிழைத்தது ICICI வங்கி மட்டுமே. IDBI வங்கி இன்றளவும் ஏனோதானோ என்று இயங்கிக் கொண்டிருக்கிறது. IFCI இன்னும் இறக்கத்தில் உள்ளது. IDBI Bank மற்றும் IFCI பங்கு விலைகள் ஆண்டாண்டாக குறிப்பிட்ட ஒரு விலைப்பட்டையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆக, இந்த மூன்று நிறுவனங்களில் அதிக அதிர்ஷ்டம் பெற்றது ICICI வங்கி என்று சொல்லலாம். அதில் நான் முதலீடு செய்ததை என்னுடைய அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். 


காலத்தில் பின்னோக்கிப் பார்த்து இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அப்போது இந்தக் கதைகள் எதுவும் எனக்குத் தெரியாது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விழைகிறேன். மேலும் வங்கிப் பங்குகளுக்கான அடிப்படை நிதி விகிதங்களான CASA, CAR, NPA மற்றும் NIM போன்ற தரவுகளின் முக்கியத்துவம் கூட எனக்குத் தெரியாது. Reverse merger என்பதே வெகு நாட்கள் சென்ற பின் தான் புரிந்தது. சேய் நிறுவனமான ICICI வங்கியுடன் அதன் தாய் நிறுவனமான ICICI ஐ தலைகீழ் இணைப்பில் இணைக்கும் போது தாய் நிறுவனத்தின் வாராக்கடன்கள் ஒரு இடர்ப்பாடாக இருக்கும் என்று பத்திரிகைகளில் படித்தது இன்னமும் நினைவில் உள்ளது.


1997 ஆம் ஆண்டு ICICI வங்கி IPO வெளி வந்தது. முக மதிப்பு 10 மற்றும் உயர் மதிப்பு 25 ஆக 35 ரூபாய் என்ற விலையில் அதன் பங்குகள் வெளியிடப்பட்டன. 200 பங்குகளுக்கு விண்ணப்பித்து 100 பங்குகள் கிடைக்கப்பெற்றது நினைவில் உள்ளது. 


ICICI வங்கி இத்தனை பெரிய பன்மடங்காளராகும் என்று கணித்தெல்லாம் இந்த முதலீட்டை நான் மேற்கொள்ளவில்லை. பன்மடங்காளர் என்ற பதமெல்லாம் அப்போது எனது அகராதியில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் 1997 ஆம் ஆண்டு வெளி வந்த IPO க்களில் வரிசைக்கிரமமாகக் கண்ணை மூடிக்கொண்டு நான் முதலீடு செய்தது தான் உண்மை. Madras Fertilizer Ltd ன் IPO மற்றும் Shriram Transport Finance Company ன் பங்குகளாக மாற்றத்தக்க கடன் பத்திரம் (Convertible debenture) போன்றவற்றில் பங்கு பெற்றது நினைவில் நிழலாடுகிறது. MFL நிறுவன ஆண்டறிக்கை அட்டையில் Prosperity Celebration begins என்று பச்சை வண்ணத்தில் போட்டிருந்தது ஞாபகத்தில் உள்ளது. ஆனால் அந்நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் வளமைத் திருவிழா தொடங்கவேயில்லை. பல்லாண்டுகள் கழித்து அதன் 300 பங்குகளை ஒரு பங்குக்கு 3 ரூபாய் என்ற இலாபத்தில் (!) விற்றது ஒரு பக்கம். Shriram Transport Finance Co பங்குகளை 13 மடங்கு அதிக விலையில் விற்று வைத்தது இன்னொரு பக்கம். Shriram Transport Finance Co அதன் பின்னர் அதன் பன்மடங்காளர் பயணத்தை இன்றளவும் Shriram Finance வடிவத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அதன் பங்குகளை இலாபத்தில் விற்றது காலப்போக்கில் ஆகப்பெரிய நஷ்டமாகி விட்டது.


என்னை மன்னியுங்கள். ICICI வங்கி குறித்து எழுதாமல் ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.


ICICI வங்கி 50 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டது எனது பசுமையான நினைவுகளில் ஒன்று. ICICI Bank in limelight என்று Business Line பத்திரிகையில் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டிருந்தார்கள். 


வங்கி, 2002 ஆம் ஆண்டிலிருந்து பங்காதாயங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. 2020 ஆம் ஆண்டு மட்டும் ஒரு இடைவெளி வந்து விட்டது. அதைப்பற்றி அப்புறம். 


கீழே உள்ள பட்டியலைக் கொஞ்சம் கவனமாகப் பார்க்க வேண்டுகிறேன்.


Year - Dividend per share in Rs - Dividend Yield


2002 - 2 - 5.71 %

2003 - 7.50 - 21.42

2004 - 7.50 - 21.42

2005 - 8.50 - 24.28

2006 - 8.50 - 24.28

2007 - 10.00 - 28.57

2008 - 11.00 - 31.42

2009 - 11.00 - 31.42

2010 - 12.00 - 34.28

2011 - 14.00 - 40.00

2012 - 16.50 - 47.14

2013 - 20.00 - 57.14

2014 - 23.00 - 65.71

2015 - 25.00 - 71.42 - split adjusted 

2016 - 25.00 - 71.42

2017 - 12.50 - 35.71

2018 - 7.50 - 21.42

2019 - 5.00 - 14.28

2020 - 0 - 0

2021 - 10.00 - 28.57

2022 - 15.00 - 42.85

2023 - 40.00 - 114.28

2024 - 50.00 - 142.85

2025 - 55.00 - 157.14


2002 முதல் 2006 வரையிலான கால அளவில் நான் வங்கிப் பங்கில் முதலீடு செய்த பணத்தைக் கிட்டத்தட்ட பங்காதாய வடிவில் திரும்பப் பெற்றது இங்கே கவனம் பெறுகிறது. 


பங்கு ஈட்டு விகிதம் 2002 ஆம் ஆண்டு 5.71 சதவீதத்தில் தொடங்கி 2016 ஆம் ஆண்டு 71.42 சதவீதம் என்றவாக்கில் ஒரே சீராக உயர்ந்திருக்கும் பாங்கைக் கவனியுங்கள். இந்த உயர் பங்கு ஈட்டு விகிதங்களைக் கொடுக்கக்கூடிய பங்கின் விலைகளும் கூடிச்செல்லும் என்பது தெளிவு.


எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. பின்னர் CEO வடிவில் ஒரு பிரச்னை எழுந்தது. 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் பங்காதாயம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு 2020 ல் அது பூஜ்யமானது. வங்கிப் பங்கும் கொஞ்சம் தலைகுப்புற விழுந்தது.


இந்தக் காலத்தில் அதன் பங்குகளை நான் விற்காமல் இருந்ததை இன்னொரு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். இது போக வங்கி துணை நிறுவனங்களின் உட்கிடக்கை மதிப்பு (embedded value) அதன் பங்குகளை நான் விற்காமல் காக்கும் அரணாகச் செயல்பட்டது. அதை விட முக்கியமான ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனது இயல்பு நிலைச் சாய்வு (Status quo Bias) இந்தப் பங்குகளை நான் விற்காமல் இருந்தமைக்குக் காரணமாக அமைந்தது.


வங்கிப் பங்கை நான் IPO வில் வாங்கிய போது அதன் விலை 35 ரூபாய். 2015 ஆம் ஆண்டு, வங்கி, அதன் 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்கை 2 ரூபாய் என்று பிரித்தது. இதன் மூலம் எனது IPO பங்குகளுக்கான அடக்க விலை 7 ரூபாய் ஆனது. இந்த 7 ரூபாயில் எனது மனது நங்கூரம் (anchor) கொண்டதும் நான் பங்குகளை விற்காமல் இருந்ததற்கான இன்னொரு முக்கியமான காரணமாகும். இன்னொரு பங்கைச் சரியாக இனங்கண்டு முதலீடு செய்து அதன் அடக்க விலை 7 ரூபாய் ஆவதற்கான நிகழ்தகவு அரிதினும் அரிதாகத் தோன்றியது.


உண்மை விவரிக்கப்படும் போதே பொய்யாகிறது என்று படித்திருக்கிறேன். அது உண்மை தான். முந்தைய பத்தியில் நான் குறிப்பிட்ட கருத்தாக்கம் குறித்த எந்தப் புரிதலும் வங்கி அதன் பங்குகளைப் பிரித்த காலத்தில் எனக்கு இல்லை. இத்தகைய எண்ணப் போக்குகளெல்லாம் பிற்பாடு வருகின்றன. 


ஏப்ரல் 17, 2025 அன்று வங்கிப்பங்கு 50 ரூபாய் கூடியது. நான் வாங்கிய 7 ரூபாய் என்ற அடக்க விலையைக் கொண்டு கணக்கிட்டால் அது ஒரே நாளில் 7 மடங்காளர் ஆகியிருக்கிறது. 


எதிர்வரும் காலங்களில், வங்கி அதன் முக மதிப்பை ஒரு ரூபாயாகக் குறைத்தால் எனக்கான அடக்க விலை மூன்றரை ரூபாயாகக் குறைந்து விடும். அதன் பன்மடங்காளர் பயணம் இரட்டிப்பு வேகத்தில் செல்லும். வங்கி, ஒருவேளை இலவசப் பங்களிப்பு எதையேனும் மேற்கொண்டால் இந்தப் பயணத்தின் வேகம் இன்னும் கூடும். 


வங்கி தற்போது இலாபப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது. எனக்கான அதன் தற்போதைய பங்கு ஈட்டு விகிதம் 157.14 சதவீதம். இன்னொரு பங்கில் முதலீடு செய்து இத்தனை சதவீதப் பங்கு ஈட்டு விகிதத்தை ஈட்ட எவ்வளவு காலம் பிடிக்கும்? இதுவும் அதன் பங்குகளை விற்காமல் இருப்பதற்கான கேந்திரமான ஒரு காரணமாக உள்ளது.


2017 ஆம் ஆண்டு, வங்கி, பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசப்பங்களிப்பை மேற்கொண்டது. புத்தியைக் கடன் கொடுத்த ஒரு நேரத்தில் இதன் மூலமாகக் கிடைக்கப்பெற்ற 50 பங்குகளை நான் விற்றதால் அது கணக்கிற்கு வராது.


இது போக கையில் உள்ள 500 பங்குகளின் மதிப்பு 7 இலட்சம் ரூபாய். எனது IPO முதலீடான 3500 ரூபாய் 200 மடங்கு கூடியிருக்கிறது. இந்த வகையில் இது 200 மடங்காளர் என்ற மந்திர இலக்கை எட்டியிருக்கிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் வங்கி செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. 


வங்கியின் தற்போதைய உட்கிடக்கை மதிப்பு பின்வரும் நிறுவனங்களில் நிலை கொண்டுள்ளது. இதில் முதல் நிறுவனம் இன்னமும் சந்தையில் பட்டியலிடப்படவில்லை. இரண்டாவது நிறுவனம் சந்தையில் பட்டியலிடப்பட்டு (listing) பின்னர் பட்டியல் விலக்கம் (delisting) பெற்றது. மூன்றாவது மற்றும் நான்காவது நிறுவனங்கள் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 


ICICI Bank's stake in group companies:


ICICI Prudential AMC 51%

ICICI Securities 100%

ICICI Prudential Life Insurance 51.1%

ICICI Lombard General Insurance 51.1%


காலத்தைத் திரும்பிப் பார்க்கும் போது தொடர்ந்தவாக்கில் ICICI வங்கிப் பங்கில் முதலீடு செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதன் IPO விலையான 35 ரூபாயில் மற்றும் அதன் பங்குப்பிரிப்பின் பின்னதான 7 ரூபாயில் நான் கொண்ட மனச்சாய்வின் காரணமாக என்னால் இவ்விதம் செய்ய இயலவில்லை. 


பங்குகளின் அடக்க விலையில் நான் கொண்ட Anchoring bias என்று சொல்லப்படும் நிலை நிறுத்தச் சாய்வு, நான் அதன் பங்குகளை விற்காமல் காக்கும் வகையில் நேர்மமாகவும் அதே சமயத்தில் அதன் பங்குகளைத் தொடர்ந்து வாங்க தடையாக இருந்ததன் மூலமாக எதிர்மமாகவும் செயல்பட்டதை இப்போது என்னால் உணர முடிகிறது.


ஒரே ஆற்றில் இரண்டு முறை இறங்க முடியாது. ஒரே பங்கையும் இரண்டு முறை வாங்க முடியாது. 


வங்கிப் பங்குகளின் மூலமான 28 வருட கூட்டுப்பெருக்கம் 20.83 சதவீதம் வருகிறது. பங்காதாயத்தையும் சேர்த்துக் கணக்கிட்ட TSR விகிதம் 21.05 சதவீதம். சராசரியை நோக்கிய பின்னடைவு தனது வேலையைச் செய்திருப்பது தெளிவு. பங்காதாயம் மூலமாக மொத்தம் ரூபாய் 37150 கிடைத்திருக்கிறது. என்னுடைய ஆரம்ப முதலீட்டைக் கொண்டு கணக்கிட்டால் அதுவே பத்து மடங்காளர் ஆகியிருக்கிறது. வெறும் 0.22 சதவீதக் கூட்டுப்பெருக்க வித்தியாசம் நீண்ட கால அளவில் பத்து மடங்காளராக மாறியிருக்கும் பாங்கை இங்கு முக்கியமாகக் கவனிக்கவும். இந்தப் பங்காதாயங்களை வங்கிப் பங்கில் நான் அவ்வப்போது காலப் பன்மயமாக்கம் செய்திருந்தால் இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெற்றிருக்கும்.


அதே மாதிரி பத்துக்கு ஒன்று என்பதான இலவசப்பங்குகளை நான் விற்காமலிருந்தால் வங்கியுடனான என் பன்மடங்காளர் பயணம் இன்னும் வேகம் பெற்றிருக்கும்.


24 வருடங்களில் வங்கிப்பங்கு 100 மடங்காளர் என்ற இலக்கை எட்டியது. அடுத்த 100 மடங்கு வெறும் நான்கு ஆண்டுகளில் எட்டப் பெற்றிருக்கிறது. இது ஏன் இவ்விதம் என்றால், கூட்டுப்பெருக்கம் அதன் பின்னாட்களில் தான் விரைவு கொண்டு செயல்படும். முன்னாட்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான அடிப்படையே இது தான். கீழ்க்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்.


20 % CAGR - 100 மடங்காளர் - 24 ஆண்டுகள்

20 % CAGR - 500 மடங்காளர் - 34 ஆண்டுகள் 

20 % CAGR -1000 மடங்காளர் -37 ஆண்டுகள் 


20 சதவீதக் கூட்டுப்பெருக்கத்தில் வளர்ந்து வரும் ஒரு பங்கு 100 மடங்காளராக 24 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. அதே பங்கு தொடர்ந்த 10 ஆண்டுகளில் 500 மடங்காளராகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் அது 1000 மடங்காளராகிறது. 


ஒரு பங்கு 100 மடங்காளராகும் வரை பொறுமை காப்பது தான் கடினமான காரியமாகும். அடுத்தடுத்த 500 மற்றும் 1000 மடங்காளர் தடை தாண்டும் ஓட்டங்களை அது எளிதாகத் தாண்டி விடும்.


மேலும், ICICI வங்கியின் தற்போதைய விலை-வருவாய் விகிதம் (PE multiple) 20 என்ற அளவுகளில் உள்ளது அதற்கு மதிப்பு சார்ந்த ஒரு அனுகூலத்தைக் கொடுப்பதாக இருக்கிறது. அதன் தற்போதைய CASA விகிதம் 42.18 % என்ற அளவீட்டில் உள்ளது. Capital Adequacy Ratio 16.55, Net Interest Margin 4.16 மற்றும் Net NPA 0.45 என்றும் உள்ளது.


எனது தனிப்பட்ட பங்குத்தொகுப்பின் தற்போதைய மதிப்பில் 7.86 சதவீத இடத்தை ICICI வங்கி பிடித்திருக்கிறது. பங்குத்தொகுப்பின் 5 சதவீத மதிப்புக்கு மேலாக ஒரு பங்கு வளர்ந்தால் அதனை 5 சதவீதத்திற்குள்ளாகக் குறைக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்தவரை அத்தகைய பங்குகளை வளர விடுவது தான் சரியான ஒரு செயலாக இருக்க முடியும். Too much of a good thing is a good thing. மாந்தர்களால் அவ்வப்போது வெட்டப்பட்டு சீரமைக்கப்பட்ட தோட்டத்தை விட இயற்கையால் அதன் போக்கில் விடப்பட்ட காடு எப்போதும் செழிப்பாகக் காணப்படுகிறது. உங்கள் பங்குத்தொகுப்பையும் தசாப்தங்களின் போக்கில் பன்மடங்காளர்களின் ஒரு கட்டற்ற தோட்டமாக மாற்றுங்கள். ஒரு 1000 மடங்காளர், நாலைந்து 500 மடங்காளர்கள், ஏராளமான 100 மடங்காளர் மற்றும் 100 மடங்காளர் ஆகவல்ல பங்குகளால் ஆகப்பெற்ற ஒரு பங்குத்தொகுப்பின் மதிப்புப் பெருக்கச் சாத்தியக்கூறுகளைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள்.


மலையேற்றத்துக்குப் பற்பல பாதைகள் இருக்கின்றன. ICICI வங்கி முதலீட்டைப் பொறுத்தவரை நான் சென்றது ஒரு பாதை. இதற்கான மாற்றுப் பாதைகளையும் பார்த்து விடலாம். வங்கியின் பட்டியல் விலை 50 ரூபாய் என்று பார்த்தோம். இரண்டு வாரத்தில் 43 சதவீத வருமானம் என்றால் ஆண்டாண்டு வருமானம் எவ்வளவு கிடைக்கப்பெறும் என்று கணக்கிட்டு பெரும்பாலோனோர் அதன் பங்குகளைப் பட்டியல் விலைக்கு விற்று வைத்திருக்கலாம். ஒரு சிலர் வங்கிப் பங்கின் விலை இரட்டிப்பானதும் விற்றிருக்கலாம். இரட்டிப்பானதும் அதனை விற்று விட்டால் இன்னொரு பங்கை வாங்க வேண்டியதான ஒரு முடிவை எடுக்க வேண்டி வரும். இப்படியே தொடர்ந்த வாக்கில் பற்பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். பத்து முடிவுகளை எடுத்தால் அதில் பாதி தான் வெற்றிகரமான முடிவுகளாக இருக்கும். ஒரு தவறான முடிவு உங்களைப் பல படிகள் கீழே இறக்கி விட்டு விடும். மேலும் இதற்கான அரசாங்க வரி போன்ற உராய்வுச் செலவுகளையும் கணக்கிட வேண்டும். அரசாங்க வரி போக இதற்கான உணர்வு ரீதியான வரி என்னவாக இருக்கும்? என் நண்பரின் ஒருவரின் சிக்கலான பாதை ஒன்றையும் பார்த்து விடலாம். வங்கிப் பங்கு 35 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆனதும் அதனை விற்று விட வேண்டியது. பின்னர் அது 45 ரூபாய்க்கு வந்ததும் வாங்கி 65 ரூபாயில் விற்க வேண்டியது. இப்படியே அதன் ஒவ்வொரு உயர்வையும் (தாழ்வை மட்டும் தவிர்த்து விட்டு) பணமாக்கம் செய்தால் எவ்வளவு வருமானத்தைப் பெறலாம் என்பது அவர் கணக்கு. நடைமுறையில் இதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்று  சிந்தித்துப் பாருங்கள். 


ICICI வங்கியைப் பொறுத்தவரை எனக்கான இன்றைய அடக்க விலை 7 ரூபாய் என்று பார்த்தோம். இது நாட்பட குறைந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில் இது பூஜ்யத்திற்கும் கீழாகச் சென்று விடும். விப்ரோ, சிப்லா பங்குகளைப் பொறுத்தவரை இது உண்மை. அடக்க விலை எவ்வாறு பூஜ்யத்திற்குக் கீழாகச் செல்லும் என்று கேட்கிறீர்களா? இதனை வேறு மாதிரி சொன்னால் எளிமையாகப் புரியும். விப்ரோ பங்கு ஒரு பைசா கூடினால் அதன் IPO வில் ஒரு பங்கினை வாங்கி நாளது தேதி வரை வைத்திருக்கும் முதலீட்டாளருக்கு அது 78 மடங்காளர். விப்ரோ பங்கு ஒரு நாள் என்ற கணக்கில் சர்வசாதாரணமாக நாலைந்து ரூபாய் என்று கூடும் (குறையும்) இந்தப் பதிவை எழுதும் நாளில் அது ஒன்பது ரூபாய் கூடியிருக்கிறது. ஒரு நாள் என்ற கணக்கில் அது 70200 மடங்காளர் ஆகிறது. மலையேற்றத்துக்கு இது எவ்வளவு சுலபமான வழி? பங்கின் விலை குறைந்தாலும் அது இலாபத்தில் ஒரு சிறிய நஷ்டம் மட்டுமே. மனிதத்தின் கூர்மதி காரணமாக நீண்ட கால அளவில், பங்குகளின் விலை, உயர்வு என்ற ஒருவழிப்பாதை மட்டுமே. 


தற்போது ICICI வங்கிப் பங்குகளை வாங்கலாமா? முன்பே குறிப்பிட்ட படி அதன் தற்போதைய விலை-வருவாய் விகிதம் 20 என்ற அளவீட்டில் உள்ளது. CASA உள்ளிட்ட மற்ற நிதி விகிதங்களும் திருப்திகரமாக உள்ளன. வங்கியின் கடந்த 28 ஆண்டு வளர்ச்சி இதே போல் தொடருமென்றால் அடுத்த 24 ஆண்டுகளில் அது 100 மடங்காளர் ஆகக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த தொடக்கத்தை விட தற்போதைய ICICI வங்கி சிறப்பான ஒரு தொடக்கத்தைக் கொடுப்பதாக இருக்கிறது என்று கூறலாம். ஆனால், பங்குச்சந்தை முதலீடுகளைப் பொறுத்தவரை அது நிச்சயங்களின் (certainities) தொகுப்பு அல்ல, சாத்தியக்கூறுகளின் (probabilities) தொகுப்பு மட்டுமே என்பதையும் மறந்து விடாதீர்கள்.


இந்தப் பதிவை காண்டேகரின் பொன்மொழியுடன் தொடங்கினோம். Michelangelo வைர வரி ஒன்றுடன் இதனை முடிக்கலாம்.


உங்கள் மகத்துவம் நீங்கள் பார்க்கும் அடிவான எல்லைகளால் அளவிடப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14