பன்மடங்காளர்கள் - பத்து கட்டளைகள்

பன்மடங்காளர்கள் - பத்து கட்டளைகள்

Multibaggers - Ten Commandments 


1. You have to look for them


பன்மடங்காளர்களைக் கைப்பற்ற நீங்கள் அவற்றை முதலில் மனக்கண்ணில் பார்க்க வேண்டும். அவற்றில் மனதைச் செலுத்த வேண்டும். பன்மடங்காளர் வேட்டை என்பது யானை வேட்டை மாதிரி. யானை வேட்டைக்குச் செல்லும் போது வழியில் தென்படும் குருவிகளைச் சுட்டுக் கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு தொடர்ந்து குருவிகளைச் சுட்டுக் கொண்டிருந்தால் குருவி வேட்டைக்கு நீங்கள் பழகி விடுவீர்கள். ஆயிரம் குருவிகள் கூட ஒரு யானைக்கு ஈடாகாது. மேலும் குருவி வேட்டையின் துப்பாக்கி சத்தத்தைக் கேட்டால் யானைகள் ஓடி ஒளிந்து கொள்ளும். பன்மடங்காளர் பங்குகள் உங்கள் கண்ணில் தென்படாது. Samvardhana Motherson International நிறுவனப்பங்கு ஒன்றின் விலை 125 ரூபாய். அதன் 52 வார உயர்ந்த பட்ச விலை 217 ரூபாய். அதன் 52 வார குறைந்த பட்ச விலை 107 ரூபாய். இது ஒரு பக்கம். ஆனால் Samvarthana Motherson International நிறுவனத்தின் பூர்வாசிரமப் பெயர் Motherson Sumi Systems. அது இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு Samvardhana Motherson International என்ற பெயரிலும், Motherson Sumi Wiring India என்ற பெயரிலும் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. Samvardhana Motherson International நிறுவனப்பங்காக நீங்கள் பார்ப்பது மரத்தின் ஒரு இலையை மட்டுமே. இரண்டு அடர்ந்த ஆலமரங்கள் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? இந்த மரங்கள் ஒவ்வொன்றிலும் 57654 இலைகள் உள்ளதை உங்களால் உணர முடிகிறதா? இந்த இரண்டு மரங்களும் வெறும் நூறு Motherson Sumi Systems நிறுவனப்பங்குகளின் மூலம் கிடைக்கப்பெற்றது.


2. Growth, Growth and more Growth 


பன்மடங்காளர் பங்குகளைச் சுருக்கமாக விளக்க வேண்டுமென்று சொன்னால் அவை தரமான வளர்ச்சியின் மூலமாக உயர்ந்து வரும் பங்குகள் என்பதாகச் சொல்லலாம். தரமான வளர்ச்சி என்றால் வளர்ச்சியின் மீதான வளர்ச்சி. மதிப்புக் கூட்டல் வளர்ச்சி. நிறுவனம் ஒன்று ஆண்டாண்டு 20 சதவீதம் என்ற கணக்கில் வளர்ந்து வருவதாகக் கொள்ளலாம். முதல் வருடம் 100 ரூபாய்க்கு 120 ரூபாய் இலாபம், அடுத்த ஆண்டு இந்த 120 ரூபாய்க்கு 144 ரூபாய் இலாபம் என்ற கணக்கிலான வளர்ச்சி இது. இந்த 20 சதவீத இலாபத்தை 20 சதவீத இலாபத்தைப் பெறுமாறு மறு முதலீடு செய்ய அந்நிறுவனத்திற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். மேலும் இதனைத் தொடர்ந்து செய்வதற்கான ஓடுபாதை அதற்கு இருக்க வேண்டும். ஒரு பாதை இல்லாவிட்டால் மாற்றுப்பாதைகளை அது கண்டறிய வேண்டும். விப்ரோ நிறுவனம் முதலில் டால்டா தயாரிக்கும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. அது தகவல் தொழில்நுட்பத்துறையில் கால் பதித்ததும் அப்புறம் நடந்ததும் வரலாறு. 


3. Lower multiples preferred


ஒரு பங்கின் மூலமாக நீங்கள் பெறும் வருமானம் அதனை விற்கும் போது தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, அவற்றை எவ்வளவு குறைவாக வாங்குகிறீர்கள் என்பதான தருணத்தில் அது தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் பங்குகளைக் குறை மதிப்பில் வாங்குவது அதன் பன்மடங்காளர் பயணத்திற்கு ஒரு சாதகமான கட்டமைப்பைக் கொடுக்கிறது. ஆனால் அது விருப்பத்தேர்வு மட்டுமே. கட்டாயம் அல்ல. மிகை வருமான வளர்ச்சியை அடையும் நிறுவனங்களை மிகை விலையில் வாங்குவதில் தவறேதும் இல்லை. Avenue Supermarts நிறுவனப்பங்கின் பட்டியல் விலை (listing price) அதன் IPO விலையிலிருந்து இரண்டு மடங்கு என்பதால் அதனை நான் வாங்கவில்லை. இன்றைய தேதியில் அதன் பட்டியல் விலையிலிருந்து அது 6 மடங்கு கூடியிருக்கிறது.


4. Economic moats are a necessity


முதலாளித்துவத்தின் (Capitalism) பெரும் பிரச்னை என்னவென்றால் நிறுவனம் ஒன்று வெற்றி பெற்றால் அதனை நகலெடுக்க ஓராயிரம் போட்டி நிறுவனங்கள் புற்றீசல் மாதிரி முளைத்து விடும். இவற்றை எட்ட நிற்க வைக்க ஏதாவது ஒரு அகழி தேவைப்படுகிறது. இந்த மாதிரி அகழி இருந்தால் தான் நிறுவனங்கள் மதிப்பான வளர்ச்சியைக் காலாகாலத்துக்கும் எட்ட முடியும். இந்த அகழி ITC போன்ற நிறுவனங்களுக்கு இருப்பது துலாம்பரமாகத் தெரியும். இந்திய சிகரெட் சந்தையின் 80 சதவீதத்தை அது வைத்திருக்கிறது. மேலும், அரசாங்கம் புதிய சிகரெட் நிறுவனங்களுக்குத் தடை விதித்திருப்பதும் அதற்கு ஒரு அகழியாக இருக்கிறது. சில நிறுவனங்களின் அகழி அவ்வளவு தெளிவாகத் தெரியாது. Balkrishna Industries நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம். Off highway tyre என்று சொல்லப்படும் சாலைப் போக்குவரத்தைத் தவிர்த்த மற்ற வாகன டயர் தயாரிக்கும் நிறுவனம் அது. இதற்கான சந்தை மிகவும் சிறியது என்பது தெளிவு. ஆனால் அந்தச் சிறிய சந்தையின் பெரும்பான்மையை அது தன்வசம் வைத்திருக்கிறது. அதே மாதிரி கடன் என்பது ஒரு பொறுப்பு (liability) ஆனால் அந்தப் பொறுப்பே Powergrid நிறுவனத்தின் அகழியாகச் செயல்படுகிறது. 


5. Smaller companies preferred


TCS நிறுவனப்பங்கு அதன் IPO விலிருந்து நாளது தேதி வரை 37 மடங்காளர். ஆனால் Infosys Technologies நிறுவனப்பங்கு அதன் IPO விலிருந்து நாளது தேதி வரை 19973 மடங்காளர். TCS, 2004 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டது. Infosys, 1993 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டது. பதினோரு ஆண்டுகள் முன்னதாக Infosys பட்டியலிடப்பட்டாலும் இந்த இரு பங்குகளுக்கிடையே ஏன் இவ்வளவு மாறுபாடு? ஏனென்றால் Infosys அதன் இளமைக்காலத்திலேயே அதாவது அது சிறு நிறுவனமாக இருக்கும் போதே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு விட்டது. TCS நிறுவனம் பங்குச்சந்தைக்கு வரும் போது அது ஏற்கெனவே வளர்ந்து பெரு நிறுவனமாகி விட்டது. வளர்ந்து வரக்கூடிய ஒரு நிறுவனத்தை அதன் ஆரம்ப காலங்களில் இனங்கண்டு முதலீடு செய்வது பன்மடங்காளர் பயணத்திற்கு உகந்தது. Apple நிறுவனம் அதன் இப்போதைய நிலையிலிருந்து 100 மடங்காளராக ஒருபோதும் ஆகாது.


6. Owner-Operators preferred


Amazon நிறுவனத்திற்கு ஒரு ஜெஃப் பீஜோஸ், Apple நிறுவனத்திற்கு ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ், Bershire Hathaway நிறுவனத்திற்கு ஒரு வாரன் பஃபெட், Walmart நிறுவனத்திற்கு ஒரு சாம் வால்டன் முதலானவர்கள் இருந்தது/இருப்பது சாதகமான ஒரு அம்சமாகச் செயல்படுகிறது. நமது பங்குச்சந்தையிலும் enduring values என்ற அடிப்படையில் இயங்கும் நீடித்த மதிப்பு நிறுவனங்களாக டாடா குழுமம், சுந்தரம் குழுமம், இராமசாமி இராஜா குழுமம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


7. You need time


நிறுவனப்பங்கு ஒன்று ஆண்டாண்டு 20 சதவீத கூட்டுப்பெருக்கத்தில் வளர்ந்து வருவதாகக் கொண்டால் அது 100 மடங்காளராக 25 நீண்ட நெடிய ஆண்டுகள் பிடிக்கும். அது வரை நீங்கள் கையைக் கட்டிக்கொண்டு இருக்கவேண்டும். மாறாக இந்த 20 சதவீதக் கூட்டுப்பெருக்கத்தை விரைவுபடுத்துகிறேன் என்று ஒரு பங்கை விற்று இன்னொன்றை வாங்கக்கூடாது. 16 ஆண்டுகளுக்கு முன்னர், 2008 ஆம் ஆண்டில், 42 ரூபாய்க்கு வாங்கப்பட்ட V Guard நிறுவனப்பங்கின் எனக்கான தற்போதைய அடக்க விலை 3 ரூபாய். வேறு மாதிரி சொல்வதானால் V Guard நிறுவனப்பங்கு வெறும் 3 ரூபாய் கூடினால் எனக்கு அது ஒரு மடங்காளர் ஆகி விடும். இந்தப் பங்கை விற்று விட்டு வேறு ஒரு பங்கை வாங்கினால் அது பன்மடங்காளர் ஆகுமா ஆகாதா என்பது ஒரு பக்கம் இருக்க, 16 ஆண்டு காலத்தில், வெறும் 3 ரூபாய் கூடினால், அது, ஒரு மடங்காளர் என்பதான நிலையை எட்டியிருக்கும் ஒரு பங்கை விற்பது அறிவுடைமையாகாது. கூட்டு வட்டியின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக்கூடாது என்பதாகும். இந்த இடத்தில் பன்மடங்காளர் பங்குகளுக்கான பயணத்தைக் கைக்கொள்ளத் தடையாக இருக்கும் மனச்சாய்வுகள் சிலவற்றைப் பார்த்து விடலாம். பங்கு ஒன்றை மதிப்பாய்வு செய்து ஒரு விலையில் வாங்குகிறீர்கள். திடுதிப்பென்று அதன் விலை பாதியாகி விடுகிறது. நீங்கள் பகுப்பாய்வை ஒழுங்காக மேற்கொண்டிருக்கும் பட்சத்தில் பங்கின் விலை குறைந்தால் அதன் மதிப்பு கூடும். ஆனால் பங்கை வாங்கிய விலையில் நீங்கள் கவனம் கொண்டிருந்தால் நிலை நிறுத்தச் சாய்விற்கு (Anchoring Bias) ஆட்பட்டிருப்பதாக அர்த்தம். இன்னொன்று, ஒரு பங்கை ஒரு விலையில் வாங்குகிறீர்கள். நிறுவனம் தரமான வளர்ச்சியை எட்டுகிறது. விளைவாக அதன் விலை கூடுகிறது. நீங்கள் முதலில் வாங்கிய விலையில் கவனம் கொண்டு அந்தப் பங்கை தற்போது வாங்காமல் தவற விடுவதும் நிலை நிறுத்தச் சாய்வின் பாற்பட்டது. நீங்கள் முதலில் வாங்கிய விலையை விட தற்போதைய அதன் கூடுதல் விலை குறைவாக (மதிப்பாக) இருக்கலாம். இன்னும் சிலர் பங்கின் விலை பாதியானால் பதறிப்போய் அதனை விற்று விடுவார்கள். இது நஷ்டம் தவிர்ப்புச் சாய்வு (Loss Aversion Bias) இந்தச் சாய்வு மனப்பான்மை பங்கின் விலை உயரும் போதும் எட்டிப் பார்க்கும். பங்கின் விலை மூன்று மடங்காகி அது இரண்டு மடங்காகக் குறைந்தாலும் இவர்கள் அச்ச விற்பனையை மேற்கொண்டு விடுவார்கள். இன்னும் சிலரோ பங்கின் விலை ஒரு மடங்கு கூடியதும் அதனை விற்று விட்டு அடுத்த பங்கில் முதலீடு செய்வார்கள். இது அதி நம்பிக்கை சாய்வு (Over Confidence Bias) மற்றும் சிலருக்கு பங்குகளை வாங்குவது மற்றும் விற்பதான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இது செயல்பாட்டு சாய்வு (Action Bias) பங்குச்சந்தையைப் பொறுத்தவரை பெரும்பாலான சமயங்களில் செயல்படாமல் இருப்பது தான் சிறந்த செயல்பாடாக இருக்கும்.


8. You need a really good filter


பன்மடங்காளர் பங்குகள் பன்மடங்காளராக நீண்ட காலமாகும் என்று பார்த்தோம். இந்தப் பன்மடங்காளர் பயணத்தை அவை 45 டிகிரி என்ற பாகையில் கடக்காது. ஏறி இறங்கி, இறங்கி ஏறி, ஒரே தளத்தில் பல்லாண்டுகள் உழன்று பின்னர் தான் பனமடங்காளராகும். எனது உச்சபட்ச பன்மடங்காளர் பங்கான ICICI வங்கியை நான் விற்பதற்கான நியாயமான காரணங்கள், நிறுவன அளவிலும், தனிப்பட்ட முறையிலும் அடிக்கடி எழுந்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கரடிச்சந்தையில் பன்மடங்காளர்கள் பங்குகள் மீண்டும் புதிதாய்ப் பிறக்குமென்றாலும் நீங்கள் ஏற்கெனவே வாங்கிய பங்குகள் தற்காலிக முதல் இழப்பிற்கு (Quotational Loss) உள்ளாகும். நாளும் ஏறியிறங்கும் விலையில் கவனத்தைச் சிதற விடாது மதிப்பில் கவனத்தைக் குவிக்க வேண்டும். இதற்கிடையில் பொருளாதார மந்தம் (recession) மற்றும் பொருளாதார நெருக்கடிகள் (depression) எட்டிப் பார்க்கும். அரசாங்கம் வட்டி விகிதத்தைக் குறைக்கும். கூட்டும். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கூடும், குறையும். இதற்கு நடுவில் தான் நீங்கள் பன்மடங்காளர் பயணத்தைத் தொடர வேண்டும். இந்த நெருப்பாற்றில் தான் நீங்கள் நீந்த வேண்டும். எனில் எதில் உங்கள் கவனத்தை நிலை நிறுத்துவது என்ற கேள்வி எழுகிறது. தரமான நிறுவனங்களை நீங்கள் வாங்கியிருக்கும் பட்சத்தில் ஆண்டாண்டு உயர்ந்து வரும் அதன் பங்கு ஈட்டு விகிதத்தில் (Dividend Yield) நீங்கள் கவனம் கொள்ளலாம். பங்கு ஈட்டு விகிதம், பாதை மாறிச் சென்று விடாமல் உங்களைக் காக்கும் கலங்கரை விளக்கமாகச் செயல்படும்.


9. Luck helps


நான் அதிர்ஷ்டத்தை மிகவும் நம்புகிறேன், எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உழைக்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுகிறது என்பது எனக்குப் பிடித்த அதிர்ஷ்ட மொழிகளில் ஒன்று. நீண்ட கால அளவில் ஒரு செயலில் நீங்கள் ஈடுபடும் போது அதிர்ஷ்டம் அவ்வப்போது உங்கள் கதவைத் தட்டியே தீரும். நான் நிறுவனப்பிரிப்பு மூலமாக 'வாங்காமல் வாங்கிய' பங்குகள் கூட பன்மடங்காளர் ஆகியிருக்கின்றன. அவ்வப்போது துரதிர்ஷ்டமும் கதவைத் தட்டும். Shriram Transport Finance Corporation நிறுவனப்பங்கை நான் கையில் பிடித்துத் தவறவிட்டது, எனது, தவற விட்ட பன்மடங்காளர் பங்குகளில் தலையாயது. எனக்குப் பிடித்த இன்னொரு அதிர்ஷ்ட மொழி: அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்பதாக ஏதுமில்லை. அவை இறைவனின் அருட்கொடை மற்றும் வாழ்க்கைப் பாடங்கள் மட்டுமே.


10. You should be a relectant seller


ஒரு பங்கைச் சரியாக இனங்கண்டு முறையாக வாங்கியிருந்தால் அதனை விற்பதற்கான தருணம் என்று ஏதுமில்லை என்பது Philip Fisher ன் வைர வரிகள். Cipla நிறுவனப்பங்கு அதன் IPO விலிருந்து நாளது தேதி வரை 524520 மடங்காளர். 2024 ஆம் ஆண்டுக்கான பங்கு ஈட்டு விகிதம் 468000 சதவீதம். இத்தகைய பங்குகளை எக்காரணம் கொண்டும் விற்க முடியமா என்று சற்றே யோசித்துப் பாருங்கள்.


Inspiration from the book '100 Baggers' by 'Christopher Mayer'

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14