முதல் பொது வெளியீடு
முதல் பொது வெளியீடு
Initial Public Offer
நிறுவனம் ஒன்று முதன்முதலாகப் பொதுப் பங்கு வெளியிடுவது முதல் பொது வெளியீடு (IPO) என்பதாக அழைக்கப்படுகிறது . நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் உள்ளன . துணிகர முதலீட்டு நிதிகள் (Venture Capital Funds) மற்றும் நிறுவனத்தின் தொடக்க நிலை முதலீட்டாளர்களுக்கு ஒரு மதிப்புத்திறப்பு (value unlocking) என்ற அடிப்படையில் பங்குகளைப் பட்டியலிடுவது (listing) முதல் காரணம் . இரண்டாவது , நிறுவனத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு வேண்டிய நிதியைத் திரட்டும் பொருட்டு நிறுவனங்கள் பட்டியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன . மூன்றாவது , ஒழுங்கு விதிகளின் பொருட்டு ... CAMS நிறுவனம் இந்தக் காரணத்திற்காக மட்டுமே பட்டியலிடப்பட்டது . தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) CAMS நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டிருந்தது . CAMS நிறுவனம் முன்னணி பரஸ்பர நிதிகளின் பதிவாளர் என்ற முறையில் அதற்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் ஆர்வ முரண் (conflict of interest) எழும் என்ற அடிப்படையில் SEBI , தேசிய பங்குச்சந்தை , அதன் CAMS நிறுவன முதலீட்டை விற்று விட உத்தரவிட்டது . அந்த அடிப்படையில் CAMS நிறுவனப்பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்டன .
பொதுவாக IPO வெளியீடுகள் விலை மலிவு என்பதான ஒரு கருத்து முதலீட்டாளர்களிடையே நிலவுகிறது . பெரும்பான்மையான சமயங்களில் இந்தக் கருத்து மிகவும் தவறான ஒன்றாகும் . நிறுவனங்கள் தங்கள் முதல் பொது வெளியீட்டை சந்தை சாதகமாக இருக்கும் போது மட்டுமே வெளியிடும் . 1994 - 95 ஆம் நிதியாண்டில் மொத்தம் 1400 முதல் பொது வெளியீடுகள் வெளி வந்தன . பிப்ரவரி 1995 ன் ஒரு வாரத்தில் மட்டும் 76 முதல் பொது வெளியீடுகள் வந்தன . இவ்வாறாக நல்ல காளைச்சந்தையில் தான் பெரும்பாலான நிறுவனங்கள் பட்டியலிடப்படும் . முதன்முதலாகப் பங்குகளை விற்கும் நிறுவனங்கள் உயர் விலைகளில் தங்கள் நிறுவனப்பங்குகளை விற்க முனைவதில் தவறு சொல்ல முடியாது . வாங்குபவர் கவனம் என்ற அளவில் நாம் தான் ஒவ்வொரு பங்கு வெளியீட்டையும் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் .
IPO வில் பங்கேற்று நிறுவனம் பட்டியலிடப்பட்டவுடன் பட்டியல் இலாபம் (listing gain) என்ற அடிப்படையில் அந்தப் பங்குகளை விற்கும் பெரும்பான்மையான போக்கு ஒன்று தற்போது நிலவுகிறது . இதுவும் மிகவும் தவறான ஒரு வழிமுறையாகும் . நீங்கள் இரண்டு மடங்கு பட்டியல் இலாபத்திற்கு விற்ற பங்கு நாளை இன்ஃபோசிஸ் நிறுவனம் மாதிரி பன்மடங்காளர் (multibagger) ஆகி விட்டால் இலாபத்தில் மிகப்பெரிய நஷ்டமாகி விடும் . இந்த இடத்தில் இன்ஃபோசிஸ் நிறுவன IPO குறித்து சில தகவல்கள் ... இன்ஃபோசிஸ் 1993 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டது . இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் அதன் IPO வில் முழுமையாக விற்கப்படவில்லை . அதன் underwriter , விற்காத பங்குகளை வாங்கிய பின்னர் , பங்குகள் பட்டியலிடப்பட்டன . IPO ல் 100 Infosys பங்குகளை 9500 ரூபாய்க்கு வாங்கி இன்றளவும் வைத்திருக்கும் நீண்ட கால முதலீட்டாளரிடம் தற்போது அதன் 102400 பங்குகள் இருக்கும் . இந்தப் பங்குகளின் தற்போதைய மதிப்பு இரண்டு கோடி ரூபாய் . You can't broke by taking profit என்பது இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஒரு இமாலயத்தவறு என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் நிறுவனங்கள் IPO ல் மறைத்து வைத்திருக்கும் செல்வத்தை விடுவிப்பது நாம் அதன் பங்குகளை விற்காமல் வைத்திருப்பதில் மட்டுமே உள்ளது .
சரி , நிறுவனம் ஒன்று பட்டியலிடப்பட்டவுடன் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் பார்க்கலாம் .
நிறுவனம் ஒன்று 20 என்ற விலை வருவாய் விகிதத்தில் (Price Earning ratio - PE Multiple) முதல் பொது வெளியீட்டை மேற்கொள்வதாகக் கொள்ளலாம் . நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (Earnings Per Share - EPS) பத்து ரூபாய் எனில் பங்கின் விலை EPS × PE = 200 ரூபாய் . நிறுவனம் வருடாவருடம் 20 சதவீத CAGR என்ற அளவில் வளர்ந்து இந்த பத்து ரூபாய் EPS ஐ எட்டியிருக்கிறது . நிறுவனம் இதனை விடக் கூடுதல் சதவீத CAGR என்ற அளவில் இனி வளரும் என்று சந்தை எதிர்பார்ப்பதாகக் கொள்வோம் . எனில் சந்தை நிறுவனத்திற்கு இந்த 20 ஐ விடக் கூடுதலான PE ஐ வழங்கும் . வேறு மாதிரி சொல்வதானால் பங்கின் விலை உயரும் . நிறுவனம் சந்தையின் எதிர்பார்ப்பை விஞ்சியதான அளவீட்டில் வருமானம் ஈட்டினால் அதற்கேற்றவாறு PE அதிகரித்துச் செல்லும் . சந்தையில் பங்குகளின் விலை உயர்வதற்கு அடிப்படையான காரணம் இது தான் . நிறுவனம் ஒன்று 30 என்ற PE விகிதத்தில் வர்த்தகமாவதாகக் கொண்டால் , அந்தப் பங்குகளை வாங்குபவர்கள் , நிறுவனம் , இந்த வருடம் சம்பாதிக்கும் EPS ஐ மாதிரி எதிர்வரும் 30 வருடமும் சம்பாதிக்கும் என்பதாகக் கணக்கிட்டு அந்த 30 வருட EPS ஐயும் மொத்தமாகக் கொடுத்து வாங்குவதாக அர்த்தமாகிறது . இது சரி தானா என்று ஒரு கேள்வி எழுவது இயற்கை . தரமான நிறுவனங்களைப் பொறுத்தவரை இது மிகவும் சரி . நிறுவனம் ஒன்றின் EPS , 20 சதவீத CAGR என்ற அளவுகளில் தொடர்ந்து வளர்ந்து வருவதாகக் கொள்ளலாம். இருபது சதவீதம் குறைவு என்பதாக நினைக்க வேண்டாம் . ஆரம்ப EPS ஒரு ரூபாய் என்று வைத்துக் கொள்வோம் . முதல் வருடம் இருபது சதவீதம் இலாபம் என்றால் EPS 1.20 இரண்டாவது வருடம் இந்த 1.20 க்கு 20 சதவீதம் என்ற அளவில் 1.44 ... இவ்வாறு வருடாவருடம் வளர்ந்து வரும் உயர் அடித்தளத்தில் (base) உயர்ந்து செல்வது அதுவும் ஒரே சீராக (consistent) உயர்ந்து செல்வது ஒப்புயர்வற்ற ஒரு சாதனையாகும் . உயர் அடித்தளத்தில் குறுக்கமும் (contraction) விரிவாக்கமும் (expansion) அடைவது பொருளாதாரத்தின் இயற்கை . இந்தப் பின்புலத்தில் ஒரே சீரான வளர்ச்சியை எட்டுவது ஒரு இமாலய சாதனை . அந்தச் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக சந்தை இத்தகைய பங்குகளுக்கு உயர் அளவுகளிலான விலை வருவாய் விகிதத்தை வழங்கி அழகு பார்க்கும் . இந்த மாதிரி ஒரு நிறுவனம் ஒரே சீரான வளர்ச்சியை அடைந்து மலர்ந்து செல்வதில் இன்னொரு கேந்திரமான சாதகமும் இருக்கிறது . நீங்கள் நிறுவனத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான EPS ஐ துல்லியமாகக் கணக்கிட்டு விடலாம் . அதற்கேற்றாற் போல் கரடிச்சந்தையில் மதிப்பு முதலீடாக நிறுவனம் வர்த்தகமாகும் போது அதன் பங்குகளை வாங்கலாம் . வாரன் பஃபெட் ஒரே சீரான வருமானம் தரும் நிறுவனங்களில் மட்டுமே முதலீட்டை மேற்கொள்வார் என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது .
நிறுவனங்களைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது ஒரு அவசியமான தேவையா ? நிறுவனங்களைப் பட்டியலிடாமல் இருந்தால் என்ன ? பட்டியலிடுதல் மூலமாக நிறுவனங்கள் ஒரு ஒழுங்கு முறைக்குள் (Regulatory framework) வந்து சேர்கின்றன . சந்தை எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு தேவை எழுவதால் அதற்கேற்ற மாதிரி நிறுவனங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன . பட்டியலிடப்படுவதால் , PE மூலமாக சந்தை மாயப் பணம் (virtual money) உருவாகிறது . இந்த மாயப் பணத்தைக் கொண்டு மற்ற நிறுவனங்களைக் கையகப்படுத்தலாம் . அமுல் , டாடா சன்ஸ் போன்ற நிறுவனங்கள் இன்னமும் பட்டியலிடப்படவில்லை . பட்டியலிடப்படாமல் இருந்தால் ஒவ்வொரு காலாண்டுக்கும் சந்தையின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமின்றி நிறுவனங்கள் நீண்ட கால அளவிலான திட்டங்களை மேற்கொள்ளலாம் . யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை . பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படாமல் இருப்பதில் இம்மாதிரி சில சாதகங்களும் உள்ளன . அதனை விட முக்கியமாக நிறுவனம் பட்டியலிடப்படுகிறதோ இல்லையோ தரமான நிறுவனங்களைப் பொறுத்தவரை மதிப்பு என்பது நாளும் உருவாகிய வண்ணமாகவே இருக்கும் . பட்டியலிடப்படாத நிறுவனம் ஒன்றின் EPS ஒரே சீராக வளர்ந்து வருவதாகக் கொள்ளலாம் . நிறுவனம் பட்டியலிடப்பட்ட அடுத்த கணம் , சந்தை அதற்கு PE மதிப்பை வழங்கும் . நிறுவனத்தின் மதிப்பு எங்கேயோ போய் விடும் . சந்தையில் இவ்வாறு தான் செல்வ வளம் உருவாகிறது .
முக மதிப்பில் வெளியிடப்பட்ட நிறுவனப்பங்கு ஒன்றை அதன் பாதி விலையில் வாங்கினால் என்ன நடக்கும் என்று கொஞ்சம் பார்க்கலாம் . உங்களுக்கான பங்கு ஈட்டு விகிதம் (Dividend Yield) இரட்டிப்பாகி விடும் . நிறுவனம் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசப்பங்குகளை வழங்கினால் உங்களுக்கு ஒன்றுக்கு இரண்டு . Buy low என்பதன் அடிப்படையே இது தான் .
முதல் பொது வெளியீட்டிற்குப் பின்னரும் அடிக்கடி சந்தைக்கு வந்து முதலீடுகளைத் திரட்டி தத்தமது பங்கு முதலை நீர்க்கும் செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களில் அறவே முதலீடு செய்ய வேண்டாம் . உள்முகமாகவே வளரும் ராம்கோ சிமெண்ட் போன்ற நிறுவனங்கள் தான் முதலீட்டிற்கு ஏற்றவை . மேலும் பங்குச்சந்தை முதல் (equity capital) என்பது இலவசப்பணம் அல்ல . அது விலை மதிப்பற்ற பணம் .
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒரு ரூபாய் IPO முதலீடு தற்போது 593295 ரூபாய் ஆகியிருக்கிறது . சிப்லா நிறுவனத்தின் ஒரு ரூபாய் IPO முதலீடு 538560 ரூபாய் ஆகியிருக்கிறது .
ஆக , முதல் பொது வெளியீடு மற்றும் அதன் மூலமான பங்குகளைப் பட்டியலிடும் நிகழ்வு என்பது வெறுமனே பட்டியல் இலாபத்திற்கு மட்டுமல்ல , அது நிறுவனங்களின் செல்வ உருவாக்கத்தில் நாம் பங்கு பெறுவதற்கான முதல் படி நிலையாகும் .
Comments
Post a Comment