பணத்தின் நேர மதிப்பு

பணத்தின் நேர மதிப்பு

Time value of money


Waiting can make you older not richer .

காத்திருத்தல் உங்களை வயதானவர் ஆக்குமேயன்றிப் பணக்காரர் ஆக்காது .


            *                     *                  *


இன்று கையில் கிடைக்கப்பெறும் பணத்தின் மதிப்பு , அதன் சம்பாதிக்கும் சக்தியால் , எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் பணத்தின் மதிப்பை விட எப்போதும் உயர்ந்தது . இந்த உயர் மதிப்பு பணத்தின் நேர மதிப்பு என்று அழைக்கப்படுகிறது . 


இன்று உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கிடைப்பதாகக் கொள்ளலாம் . வங்கி சேமிப்புக்கணக்கில் அதனை வைத்திருந்தால் வருடத்திற்கு வட்டியாக 2.75 சதவீதம் (ரூ.2750) கிடைக்கும் . நிரந்தர வைப்பில் வைத்திருந்தால் 6.75 சதவீதம் (ரூ.6750) அதுவே பரஸ்பர நிதி முதலீடாக இருந்து , சந்தை காளைத்தனமாக இருந்தால் 15 சதவீதம் (ரூ.15000) பங்குகளாக வைத்திருந்தால் 20 சதவீதம் (ரூ.20000) இது தான் பணத்தின் நேர மதிப்பு . நீங்கள் முதலீடு செய்யும் முறையைப் பொறுத்து பணத்தின் நேர மதிப்பு மாறும் பாங்கைக் கவனிக்கவும்.


இந்த முதலீட்டுக் காலத்தை ஒரு வருடத்திலிருந்து பத்தாண்டுகள் , இருபதாண்டுகள் என்று தசாப்தங்களில் அதிகரித்தால் பணத்தின் நேர மதிப்பு கூட்டுப் பெருக்கத்தில் அதிகரித்துச் செல்லும் . இருபதாண்டுகள் கழித்து உங்களுக்குக் கிடைக்கப்பெறும் பணத்தின் நேர மதிப்பு என்று இதனைப் புரிந்து கொள்ளவும் .


ஆக , நேரமே பணமாகச் செயல்படுகிறது . ஆண்டாண்டுகளின் கணக்கில் இது மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகிறது .


பணத்தின் நேர மதிப்பில் இது ஒரு நேர்ம விளைவு .


முதலீட்டுச் சமன்பாட்டில் பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளும் போது இது எதிர்மறையாகச் செயல்படும் .


பணத்தின் நேர மதிப்பை நீங்கள் முறையாகக் கையாண்டு 25 ஆண்டுகள் என்ற கால அளவில் ஒரு இலட்சம் ரூபாயை ஒரு கோடி ரூபாய் (20 % CAGR) ஆக்கியதாகக் கொள்ளலாம் . 


இந்த ஒரு கோடி ரூபாயின் மதிப்பு ஒரு கோடி அல்ல .


இந்த இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் 6 சதவீதம் என்று கொண்டால் இந்த ஒரு கோடி ரூபாயின் மதிப்பு உண்மையிலேயே ஒரு கோடியாக இருக்க நீங்கள் 4.29 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் .


முதலீடுகள் மூலமாகப் பணவீக்கத்தை விஞ்சிய வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதற்கான அடிப்படையே இது தான் . இதற்குப் பங்கு முதலீடுகள் தான் ஒரேயொரு சரியான வழி .


பணத்தின் நேர மதிப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் பணவீக்கத்தை வேறு சில வகைகளிலும் வெல்லலாம் .


முதலீடு என்பது அடிப்படையில் நிகழ்காலப்பணத்தை எதிர்காலத்திற்குக் கொண்டு செல்வது . இவ்வாறு கொண்டு செல்கையில் பணவீக்கம் அதனை எதிர்மறையாகப் பாதிக்கும் என்று பார்த்தோம் . 


கடன் என்பது எதிர்காலப் பணத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டு வருவது . இவ்வாறு கொண்டு வருகையில் பணவீக்கத்தின் பாதிப்பு பூஜ்யமாகி விடும் . ஏன் , அதற்கும் கீழாகவும் (மேலாகவும்) செல்லும் . ஆனால் இந்தக் கடனை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது இதனைத் தீர்மானிக்கும் . 


அந்த வகையில் வீட்டுக்கடன் ஒரு பிரதானமான இடத்தை வகிக்கிறது . வீடு மற்றும் நில முதலீடுகள் நீண்ட கால அளவில் மதிப்புப் பெருக்கத்திற்கு உள்ளாகக்கூடிய முதலீடுகள் . இத்தகைய முதலீடுகளை நாளும் தன் மதிப்பை இழந்து வரும் எதிர்காலப் பணத்தைக் கொண்டு வாங்குவது சிறந்த ஒரு உத்தியாக இருக்கும் . கரும்பு தின்னக் கூலியாக இத்தகைய கடன்களுக்கு அரசாங்கம் தரும் வரி விலக்குகள் கூடுதல் அனுகூலம் . இது போக வீட்டுக்கடனில் leverage கிடைப்பதையும் இங்கு முக்கியமாகப் பார்க்க வேண்டும் . மொத்த வீட்டுக்கடனில் 20 சதவீதத்தை மட்டுமே நாம் செலுத்துகிறோம் . வங்கி , 80 சதவீதத்தைக் கடனாக வழங்குகிறது . ஆனால் 100 சதவீதத்தையும் , வீடு முழுமையையும் நமது சுவாதீனத்திற்கு உட்படுத்துகிறோம் . பங்கு முதலீடுகளில் மனோரீதியாக நாம் வாழலாம் . ஆனால் வீட்டுக்கடன் முதலீடுகளில் மெய்யாகவே வாழலாம் .


அறிவில் முதலீடு செய்வது அளவற்ற செல்வத்தைத் தரும் . அந்த வகையில் உயர் கல்விக்குக் கடன் வாங்கலாம் .


இது போக முதலீட்டுக்கடன் . அதாவது கடன் வாங்கி முதலீடு செய்வது . 7 சதவீத வட்டியில் கடன் வாங்கி , பங்கு முதலீடுகள் மூலம் , 20 சதவீத வருமானம் பெற்றால் 13 சதவீதம் இலாபம் கிடைக்கும் . ஆனால் , இது கத்தியின் மேல் நடப்பது மாதிரி கவனமாகச் செய்ய வேண்டிய காரியம் . இந்த முறையில் asset liability mismatch என்று சொல்லப்படும் ஆஸ்திக்கும் பொறுப்பிற்குமான ஒரு பொருந்தாத்தன்மை எப்போதும் இருக்கும் . பங்கு முதலீடுகள் என்பது மாறும் நிலை முதலீடு . கடன் பொறுப்புகள் மாறா நிலை வகையைச் சார்ந்தவை . வேறு மாதிரி சொல்வதென்றால் பங்கு முதலீடுகளில் பல்லாண்டுகளின் கணக்கில் இலாபம் கிடைக்கும் . கடனை மாதாமாதம் கட்டியாக வேண்டும் . பங்கு முதலீடுகளை முறையாக மேற்கொள்ளாவிடில் முதலுக்கே மோசமாகி விடும் .


முன்னரே குறிப்பிட்டது மாதிரி முதலீடு என்பது நிகழ்காலப் பணத்தை எதிர்காலத்திற்குக் கொண்டு செல்வது , கடன் என்பது எதிர்காலப் பணத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டு வருவது . முதலீட்டுக் கடன் என்பது இந்த இரண்டையும் இணைப்பது . அதாவது எதிர்காலப் பணத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்து பின்னர் அதனை மீண்டும் எதிர்காலத்திற்குக் கொண்டு செல்வது . பணத்தைக் காலத்தில் முன் பின்னாகக் கொண்டு செல்லும் இந்த முறையை முறையாகச் செய்ய வேண்டும் .


உங்கள் வாழ்க்கைத்தரம் உயர உயர அதற்கேற்றவாறு செலவுகளை அதிகரித்துக் கொண்டே செல்வதான lifestyle inflation என்று சொல்லப்படும் வாழ்க்கைமுறை பணவீக்கம் போன்ற மனமாச்சரியங்களுக்கு ஆட்படாமல் இருப்பதும் உங்களைக் காக்கும் அரணாகச் செயல்படும் .


காலத்தின் நேர மதிப்பை முழுமையாகப் பணமாக்கம் செய்த முதல் முதலீட்டாளர் என்ற பட்டத்தைப் பஃபெட்டிற்குக் கொடுக்கலாம் . பதினோரு வயதில் தொடங்கிய அவரது முதலீட்டு வாழ்க்கையின் இன்றைய வயது 83 ஆண்டுகள் . 20 சதவீத கூட்டுப் பெருக்கத்தை சில காலம் அடைவது குறிப்பிடத்தக்கது என்றாலும் அதனைப் பல்லாண்டுகளுக்குக் கொண்டு செல்வது வாரன் பஃபெட்டை உருவாக்குவதாக இருக்கிறது என்ற Basant Maheswari ன் கூற்று இங்கே கவனம் பெறுகிறது . 


வாரன் பஃபெட்டின் தற்போதைய முதலீட்டுக் கடன் எவ்வளவு தெரியுமா ? 174 பில்லியன் டாலர் . ரூபாய்க்கணக்கில் சொல்வதானால் 14,85,612 கோடி . அவருடைய காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாகக் கிடைக்கும் முனைமத்தொகையான இத்தனை பணமும் பஃபெட்டிற்குப் பூஜ்ய வட்டியில் கிடைக்கப்பெறுகிறது . 


ஆக , நேரத்தைப் பயன்படுத்துவதன் மூலமே அதனைப் பணமாக்கம் செய்ய முடியும் . முதலீடுகளைப் பொறுத்தவரை இது மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறுகிறது .


பணத்தின் நேர மதிப்பைச் சுருக்கமான சூத்திரமாகப் பின்வருமாறு கூறலாம் .


 நேரம் = பணம்

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14