அனுமானக் கேள்விகளும் அதற்கான பதில்களும் - 1

அனுமானக் கேள்விகளும் அதற்கான பதில்களும் - 1


கேள்வி : பங்குச்சந்தை என்ற ஒன்றே இல்லாவிட்டால் என்னவாகும் ?


பதில் : Infosys நிறுவனம் , பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது . பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது அதன் சந்தை மதிப்பு 0.121 இலட்சம் கோடி . தற்போதைய அதன் சந்தை மதிப்பு 8.25 இலட்சம் கோடி . மும்பை பங்குச்சந்தை 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது . 2014 ஆம் ஆண்டு அதன் சந்தை மதிப்பு (அதில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு) , 100 இலட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டியது . தற்போதைய அதன் சந்தை மதிப்பு 461 இலட்சம் கோடி ரூபாய் . பங்குச்சந்தை இல்லாவிட்டால் செல்வ உருவாக்கத்திற்கான இத்தகைய வாய்ப்புகள் ஏதுமிருக்காது . இவ்வாறாக நிறுவனங்கள் , அவைகளின் ஆக்கத்திற்கும் , விரிவாக்கத்திற்குமான நிதியைத் திரட்ட முதலீட்டாளர்களை நம்பியுள்ளன . முதலீட்டாளர்கள் , பணவீக்கத்தை விஞ்சிய உண்மையான வருமானத்தை ஈட்ட நிறுவனங்களை நம்பியுள்ளனர் . அந்த வகையில் பங்குச்சந்தை  நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான மிக முக்கியமான பாலமாகச் செயல்படுகிறது . இந்தப் பாலம் இல்லாவிட்டால் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி வேலை வாய்ப்பின்மையால் அனைவருமே பாதிக்கப்படுவர் . அரசாங்கம் ஈட்டும் அந்நியச் செலாவணி மற்றும் வரி வகையறாக்கள் குறைந்து விடும் . பொருளாதாரம் பல படிகள் கீழிறங்கி விடும் . உலகப் பணக்காரர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை .


கேள்வி : சென்செக்ஸ் மீண்டும் 3000 புள்ளிகளுக்கு வருமா?


பதில் : சென்செக்ஸ் குறியீட்டை ஒரு நிறுவனமாகப் பாருங்கள் . அதன் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) ரூபாய் 3449.51 என்ற அளவில் உள்ளது . சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு வர வேண்டுமென்றால் அதன் ஒரு பங்குச் சம்பாத்தியத்தை விடக் குறை அளவுக்கு அது வரவேண்டும் . நிறுவனப்பங்கு ஒன்று அதன் ஒரு பங்குச் சம்பாத்தியத்தின் மடங்குகளில் மட்டுமே வர்த்தகமாகுமேயன்றி ஒரு பங்குச் சம்பாத்தியத்திற்கும் குறைவாக அது ஒருபோதும் வர்த்தகமாகாது . முன்னரே குறிப்பிட்டவாறு சென்செக்ஸின் தற்போதைய ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) ரூபாய் 3449.51 என்று உள்ளது . அதன் தற்போதைய விலை வருவாய் விகிதம் (PE) 23.81 என்ற மடங்கில் உள்ளது . இந்த EPS ஐயும் PE ஐயும் பெருக்கினால் சென்செக்ஸ் மதிப்பு கிடைத்து விடும் . சென்செக்ஸ் இப்போது 82133 என்ற அளவில் உள்ளது . சென்செக்ஸ் மீண்டும் 3000 புள்ளிகளுக்கு வர வேண்டுமென்றால் அதன் PE மதிப்பு  0.86 என்ற அளவுக்குக் குறைய வேண்டும் . PE என்பது நிறுவனத்தின் வருமானம் குறித்த சந்தையின் சராசரி எதிர்பார்ப்பு . வேறு மாதிரி சொல்வதென்றால் PE மதிப்பு என்பது ஒரு முன்னோக்கிய தரவு . நிறுவனங்களின் EPS தொடர்ந்தவாக்கில் உயர்ந்து வருகிறது . நிறுவனங்கள் ஈட்டக்கூடிய வருமானம் குறித்த சந்தையின் எதிர்பார்ப்பான PE யும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது . விளைவாக இவையிரண்டின் பெருக்கமான சந்தைக்குறியீடும் பெருகி வருகிறது . இது அருகிச் செல்வதற்கான அதுவும் 0.86 என்ற அளவிற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை . 


கேள்வி : ஒரு நாளைக்கு ஆயிரங்கள் என்ற எண்ணிக்கையில் ஒரு பங்கு விற்பனையாகிறது . ஒரே நாளில் அதன் இலட்சம் பங்குகளுக்கான தேவைப்பாடு ஏற்பட்டால் என்னவாகும் ? 


பதில் : ஒரு நாளைக்கு ஆயிரங்கள் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகும் பங்கு இலட்சம் எண்ணிக்கையிலான தேவைப்பாட்டுக்கு உள்ளானால் பங்கின் விலை விண்ணை முட்டும் . மாறாக , ஒரு நாளைக்கு ஆயிரங்கள் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகும் பங்கு இலட்சம் எண்ணிக்கையிலான அளிப்புக்கு உள்ளானால் பங்கின் விலை தரையைத் தட்டும் . 


கேள்வி : 52 வார குறைந்த விலையில் பங்குகளை வாங்கி 52 வார அதிக விலையில் தொடர்ந்த வாக்கில் விற்றால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?


பதில் : பங்குகளை அவற்றின் 52 வாரக் குறைந்த பட்ச விலையில் வாங்கி அவற்றை 52 வார அதிக பட்ச விலையில் விற்றால் குறைந்த பட்சமாக 50 சதவீதம் கிடைக்கும் . இது market timing என்று அழைக்கப்படும் . இதனையே தொடர்ந்து செய்தால் வெகு விரைவில் உலகப் பணக்காரர்களில் ஒருவராக மாறி விடலாம் . ஆனால் இந்த timing  வழிமுறையைக் கையாண்டு யாரும் உலகப் பணக்காரர் ஆகவில்லை . மேலும் பங்குகளில் முதலீடு செய்து தற்போது உலகப் பணக்காரர் ஆகியிருக்கும் பஃபெட்டின் கூட்டு வருமானம் ஆண்டுக்கு 20 சதவீதம் மட்டுமே . சந்தையில் timing முக்கியமில்லை . எவ்வளவு காலத்திற்கு சந்தையில் இருக்கிறீர்கள் என்பதான time மட்டுமே முக்கியமானது .


கேள்வி : முக மதிப்புக்கும் குறைவான விலையில் பங்குகளை வாங்கினால் என்னவாகும் ?


பதில் : அது எத்தகைய பங்குகளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது . HDFC முதலான பங்குகளை வாங்கினால் அதன் மூலமான உங்கள் பன்மடங்காளர் பயணம் விரைவு பெறும் . இன்னும் சொல்லப்போனால் HDFC நிறுவனப்பங்கின் முதல் பொது வெளியீடு , 1978 ஆம் ஆண்டு , அதன் முக மதிப்பான 100 ரூபாய் என்ற விலையில் வெளியிடப்பட்டது ; அது பட்டியலிடப்பட்ட போது அதன் முக மதிப்புக்கும் குறைவாக 85 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமானது . HDFC வங்கிப்பங்கும் , 1995 ஆம் ஆண்டில் , முதல் பொது வெளீயீட்டில் , அதன் முக மதிப்பான 10 ரூபாய் என்ற விலையில் வெளியிடப்பட்டது . இந்தியப் பங்குச்சந்தையைப் பொறுத்தவரை தரமான ஒரு பங்கு , அதன் IPO வில் , முக மதிப்பில் வெளியிடப்படுவது அதுவே கடைசி முறையாகும் . ஒரு பங்கை அதன் முக மதிப்பின் பாதியில் வாங்கினால் என்னவாகும் என்று கற்பனைக்குதிரையில் கொஞ்சம் சென்று பார்க்கலாம் . நிறுவனம் 10 சதவீதம் பங்காதாயம் வழங்கினால் பாதி விலையில் வாங்கியவர்களுக்கு 20 சதவீதம் பங்காதாயம் . நிறுவனம் 100 மடங்காளர் என்றால் பாதி விலையில் வாங்கியவர்களுக்கு அது 200 மடங்காளர் . முக மதிப்பில் பங்குகளை வாங்கியவர்களுக்குப் பங்காதாயமும் பங்கு ஈட்டு விகிதமும் சமம் . முக மதிப்பில் பங்குகளை வாங்கியவர்கள் பங்கு ஈட்டு விகிதத்தைத் தனியாகக் கணக்கிட வேண்டிய அவசியமில்லை . முக மதிப்புக்கும் மேலான விலையில் பங்குகளை வாங்கியவர்களுக்குப் பங்காதாயத்தை விடப் பங்கு ஈட்டு விகிதம் குறைவாகவே கிடைக்கும் . பங்குகளைக் குறை விலையில் மதிப்பு முதலீடாக வாங்க வேண்டும் என்பதற்கான அடிப்படையே இது தான் . மற்றபடி தரமற்ற பங்குகளை எந்த விலையில் வாங்கினாலும் நஷ்டக்கணக்கு தான் . HDFC பங்கு அதன் முக மதிப்புக்கும் குறைவாக வர்த்தகமானதற்கு அதன் வணிகம் குறித்த முதலீட்டாளர்களின் புரிதலின்மையே முக்கியக் காரணமாக இருந்தது . மேலும் , வீட்டுக்கடன் என்ற ஒரு துறையையே அது கட்டமைத்தது . அந்தக் காலத்தில் வாழ்நாள் முழுக்கப் பணம் சேர்த்து 60 வயதில் ஓய்வு பெறும் காலத்தில் மொத்தப் பணத்தையும் கொண்டு வீடு கட்டுவது தொன்றுதொட்ட வழக்கமாக இருந்தது . HDFC வந்த பிறகு தான் வீட்டுக்கடன் மற்றும் EMI போன்ற கருத்தாக்கங்கள் உருவாக்கம் பெற்றன . இந்தக் காலத்தில் எந்த வணிக உத்தியையும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் முதலீட்டாளர்கள் புத்திசாலிகளாக உள்ளனர் . HDFC வங்கிப்பங்கு , 1995 ஆம் ஆண்டு கூட , அதன் முக மதிப்பில் வெளியிடப்பட்டது அதன் நிறுவனர்களின் பெருந்தன்மையைக் காட்டுவதாக அமைந்தது . இப்போது எந்தப் பங்கும் இவ்வாறு முக மதிப்பிலோ அல்லது குறை மதிப்பிலோ வெளியிடப்படுவதில்லை . எனவே மாறி வரும் தற்போதைய சூழலில் முக மதிப்பிற்கும் குறைவாகவோ அல்லது முக மதிப்பிலோ பங்குகளை வாங்குவதற்கு முனையாமல் தரமான நிறுவனப்பங்குகளை கரடிச்சந்தையில் அவற்றின் மூன்று சதவீத பங்கு ஈட்டு விகிதத்தில் வாங்க முற்படுங்கள் . அதுவே ஒப்புயர்வற்ற ஒரு சாதனையாக அமையும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14