தெரிந்த கருத்தாக்கம் தெரியாத விளக்கம்

தெரிந்த கருத்தாக்கம்

தெரியாத விளக்கம்


1. Efficient Market Hypothesis

(திறமையான சந்தை கருத்தாக்கம்)


பங்குச்சந்தையில் நிறுவனப்பங்குகளின் விலைகள், எல்லா நேரமும், எல்லாத் தகவல்களையும் பிரதிபலிக்கும் வண்ணம் மட்டுமே வர்த்தகமாகும் என்ற கருத்தாக்கம் Efficient Market Hypothesis என்பதாக அழைக்கப்படுகிறது. சந்தை விலை தான் எப்போதும் முதலும் முடிவுமானது. வேறு மாதிரி சொல்வதானால் பங்கின் விலைகள் எப்போதும் அதன் உள்ளார்ந்த மதிப்பை ஒட்டியே வர்த்தகமாகும். பங்குச்சந்தை குறியீடுகளை வெற்றி கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. சரியா? தவறு! இந்தக் கருத்தாக்கம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மதிப்பு முதலீடு என்ற கருத்தாக்கத்திற்கே இடமில்லாமல் போகிறது. மதிப்பு முதலீடு தான் பங்குச்சந்தையின் முதலும் முடிவுமான முதலீட்டு உத்தியாகும். பங்குச்சந்தை மாயப் பித்துகளில் இந்த EMH தலையானதாகும். ஒரு மதிப்பு முதலீட்டாளர் EMH விற்பன்னர் ஒருவருடன் நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கையில் கீழே 500 ரூபாய் நோட்டு ஒன்று தட்டுப்பட்டது. மதிப்பு முதலீட்டாளர் அதைக் குனிந்து எடுக்க முனைகையில் EMH விற்பன்னர் அவரைத் தடுத்தாட்கொண்டார். அது உண்மையான 500 ரூபாய் நோட்டு அல்ல, அது ஒரு கள்ள நோட்டு, உண்மையான நோட்டாக இருக்கும் பட்சத்தில் இந்நேரம் அதனை யாரும் எடுத்திருப்பார்கள். ஆனால் மீமிகை கரடிச்சந்தையில் தலால் தெருவெங்கும் 500 ரூபாய் நோட்டுகள் எடுக்க ஆள் இன்றிக் கிடக்கும் என்று மதிப்பு முதலீட்டாளர்கள் அறிவார்கள்.


2. Marginal Selling

[குறு (ஒரு) விற்பனை]


ஒரு தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது. நீங்கள் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பதாகக் கொள்ளுங்கள். உங்கள் மதிப்பீட்டின் படி நீங்கள் குடியிருக்கும் தனிப்பட்ட குடியிருப்பின் குறைந்த பட்ச மதிப்பு ஐம்பது இலட்சம். திடுதிப்பென்று உங்களுக்கு அடுத்த குடியிருப்பில் வசிப்பவர் தனது குடியிருப்பை 30 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். நீங்கள் இதனை இடர்ப்பாடு விற்பனை (distress selling) என்று புறந்தள்ளி விடுவீர்கள். அல்லது நீங்கள் மதிப்பு முதலீட்டாளராக இருக்கும் பட்சத்தில் அந்தக் குடியிருப்பை வாங்க முனைவீர்கள். மற்றபடி எந்தப் பத்திரிகையிலும் அல்லது தொலைக்காட்சியிலும் இந்த மாதிரி இந்தக் குடியிருப்பு இன்ன விலைக்கு விற்பனையானது என்று எந்தத் தகவலும் வெளிவராது. பங்குச்சந்தையில் இது தலைகீழாக நடைபெறும். தினசரி இந்தப் பங்குகள் விலை கூடியது, இந்தப் பங்குகள் விலை குறைந்தது என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருக்கும். பல்லாண்டுகளுக்கு முன்பு பங்குகளை வாங்கிய ஒருவர் இலாப நோக்கம் கருதி விற்பனை செய்திருக்கலாம். இன்னொருவர் தனது பங்குத் தொகுப்பை சமன் செய்யும் (portfolio rebalancing) பொருட்டு விற்றிருக்கலாம். அல்லது பிறிதொருவர் அந்தக் குடியிருப்பு விற்பனை மாதிரி இடர்ப்பாடு என்ற அடிப்படையிலும் விற்பனை செய்திருக்கலாம். ஒரு உண்மையான மதிப்பு முதலீட்டாளர் அந்த நிறுவனப் பங்கு தனது உள்ளார்ந்த மதிப்பை விடக் குறைவாக விற்பனையாகும் பட்சத்தில் அதனை வாங்கலாம். அல்லது பெரும்பான்மையான நேரம் சும்மா சந்தையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதுமானது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இடர்ப்பாடு விற்பனையின் போது அந்த ஒரு marginal seller தான் அந்தக் கணத்தில் பங்கின் விலையைத் தீர்மானிக்கிறார். பெரும்பான்மையான முதலீட்டாளர்களின் கருத்து வேறாக இருந்த போதும் அந்தக் கணத்தில் அந்த சிறுபான்மை அல்லது ஒருபான்மை முதலீட்டாளர் தான் பங்கின் விலையைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார். அடுக்குமாடி இடர்ப்பாடு விற்பனையின் போது அமைதியாக இருப்பவர்கள் சந்தையில் இடர்ப்பாடு விற்பனையின் போது அவசர கால அழைப்பை (panic button) அழுத்துவது ஒரு புரியாத புதிர்.


3. Risk Reward Ratio

(அபாய வெகுமதி விகிதம்)


அபாய அளவும் அந்த அபாயத்தைக் கைக்கொள்வதற்கான வெகுமதியும் நேர் விகிதத்தில் இணைந்துள்ளன. வங்கி சேமிப்புக் கணக்கில் அபாயத்தின் அளவு மிகவும் குறைவு. எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதற்கான வருமானமும் 2.75 சதவீதம் என்ற குறைந்த அளவே உள்ளது. வங்கி வைப்பு நிதித் திட்டங்களில் அபாய அளவு கொஞ்சம் கூடுதல். நமது தேவைக்கு பணத்தை எடுப்பது கொஞ்சம் கடினமாகிறது. விளைவாக வருமானமும் கொஞ்சம் கூடுதல். அடுத்த அபாய அளவாக வங்கிப் பங்குகளைக் குறிப்பிடலாம். அதுவும் மீமிகை காளைச்சந்தையில் (extreme bull market) அதன் பங்குகளை உயர் மதிப்பில் வாங்குவது மிகையான அபாயத்திற்கு இட்டுச்செல்லும். வங்கி திவாலானால் வங்கியின் பங்குதாரர்களுக்கு வங்கி சேமிப்புக் கணக்கு மற்றும் வைப்பு நிதிக்கணக்கு முதலீட்டாளர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியது ஏதாவது இருந்தால் மட்டுமே கிடைக்கும். ஏனெனில் முதல் இரண்டிலும் நீங்கள் loaner. அதாவது கடன் கொடுப்பவர் மூன்றாவதில் நீங்கள் Owner. நீங்கள் தான் முதலாளி. ஆக, அபாயமும் அதற்கான வெகுமதியும் நேர் விகிதத்தில் இணைந்துள்ளன. எவ்வளவுக்கு எவ்வளவு அபாயத்தைக் கைக்கொள்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வெகுமதி கிடைக்கப்பெறும். சரியா? ஒரு கோணத்தில் மட்டுமே சரி. மிக முக்கியமாகப் பங்குகளின் விலைகளைப் பொறுத்தவரை இந்தக் கருத்தாக்கம் மிகவும் தவறு. வங்கிப்பங்கு ஒன்றையே உதாரணமாகக் கொள்ளலாம். 1600 ரூபாய் என்ற விலையில் ஒருவர் HDFC வங்கிப் பங்குகளை வாங்குகிறார். Covid 19 சந்தைச் சரிவில் அதன் விலை 800 ரூபாய் என்ற அளவில் குறைந்தது. 800 ரூபாய் என்ற அளவில் அதன் பங்கு ஈட்டு விகிதம் 1600 ரூபாய் என்ற விலையில் அதன் பங்கு ஈட்டு விகிதத்தைப் போல இரண்டு மடங்கு. ஆக, பங்குகளைப் பொறுத்தவரை அபாய அளவும் அதற்கான வெகுமதியும் தலைகீழ் விகிதத்தில் இணைந்துள்ளன. மீமிகை கரடிச்சந்தையில் (extreme bear market) பங்குகளை வாங்க வேண்டும் என்பதற்கான அடிப்படையே இது தான். கரடிச்சந்தையில் பங்குகளின் விலைகள் அதன் உள்ளார்ந்த மதிப்பை நோக்கி நகர்கின்றன. அபாய அளவு குறைந்து கொண்டே வருகிறது. மீமிகை கரடிச்சந்தையில் பங்குகளின் விலைகள் அதன் உள்ளார்ந்த மதிப்பிற்கும் கீழாக வர்த்தகமாகின்றன. அந்தப் புள்ளியில் அபாய அளவு பூஜ்யமாகி விடுகிறது. இதுவே மதிப்பு முதலீட்டு குரு பெஞ்சமின் கிரகாம் குறிப்பிடும் Margin of safety.

Comments

  1. புரியாத விஷயங்களை தெளிவாக புரிய வைத்த அருமையான பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14