கரடிகள் பலவிதம்

கரடிகள் பலவிதம்


கேள்வி : எந்தக் கரடிச்சந்தை உண்மையிலேயே மதிப்பு உருவாக்கத்திற்கான ஒரு சிறந்த களமாக இருந்தது ? 


பதில் : இந்தியப் பங்குச்சந்தையில் கரடித் தாக்குதல் நடைபெற்ற ஆண்டுகளின் பட்டியல் :


1992 - ஹர்ஷத் மேதா ஊழல்


1998 - ஆசிய நிதி நெருக்கடி


2000 - தகவல் தொழில்நுட்பக் குமிழி வெடிப்பு


2008 - அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்னை


2011 - தீவிரவாதத் தாக்குதல்


2019 - கோவிட்


1992 ன் கரடிச்சந்தை , சட்ட திட்டங்களை முறையாக அமல்படுத்தாமை காரணமாக உருவானது . 1998 ல் ரஷ்யா அதன் நாணய மதிப்பைக் குறைத்ததால் ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்டது . 2000 ல் Y2K பிரச்னை எழுந்தது . அதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள மைய நிதி வங்கிகள் 1999 ல் வட்டி விகிதங்களைக் குறைத்து பணப்புழக்கத்தை அதிகரித்தன . 2000 ன் குமிழி வெடிப்புக்கு இது ஒரு மறைமுகமான காரணம் . அதன் நீட்சி தான் 2008 வீட்டுக்கடன் பிரச்னைக்கும் காரணமாக அமைந்தது . 2011 ன் கரடிச் சந்தைக்கு உலக வர்த்தக மையத்  தீவிரவாதத் தாக்குதல் காரணமாக அமைந்தது . 2019 ன் கரடித் தாக்குதல் காற்று வடிவில் வந்தது . அடுத்த தாக்குதல் எங்கிருந்து எழும் என்று யாராலும் கணிக்க முடியாது . 


இந்தக் கரடிச் சந்தைகளில் நிறுவனப் பங்குகளின் மதிப்பும் விலையும் ஒன்றிணைந்தன . இன்னும் சொல்லப்போனால் விலை மிகவும் குறைந்து மதிப்பு விண்ணை முட்டியது . பங்குகளின் மூலமான வருமானம் நீங்கள் அதனை அதிக விலையில் விற்கும் போது தீர்மானிக்கப்படுவதில்லை . மாறாக அவற்றைக் குறை விலையில் வாங்கும் போது தீர்மானிக்கப்படுகிறது . அவற்றைப் பல்லாண்டுகள் வைத்திருந்து அவை தரும் அதிகரித்து வரும் பங்காதாயம் மற்றும் அதன் மூலமான பங்குகளின் விலையேற்றத்தில் அது இருக்கிறது . அந்த வகையில் இந்த ஆறு கரடிச்சந்தைகளும் மதிப்பு உருவாக்கத்திற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்தாலும் 1977 ஆம் ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்துப் பார்க்கலாம் .


1988 ல் SEBI நிறுவப்படுவதற்கு முன்னர் Controller of Capital Issues என்பதான ஒரு அமைப்பு இருந்தது . அது நிறுவனங்கள் பட்டியல் இடப்படுவதன் மூலமாக எவ்வளவு பணத்தைத் திரட்ட வேண்டும் , என்ன விலையில் பங்குகளை வெளியிட வேண்டும் என்பதையெல்லாம் கட்டுப் படுத்துவதாக இருந்தது . நிறுவனங்களைக் குறித்த தகவல்கள் அந்தக் காலத்தில் மூடுமந்திரமாக இருந்தன . இப்போது மாதிரி பரஸ்பர நிதிகள் மற்றும் அவை சார்ந்த பங்கு ஆய்வாளர்கள் அப்போது செயலாக இல்லை . எனவே பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் காக்கும் விதமாக , அரசாங்கம் , CCI act மூலமாக முதலீட்டாளர்களுக்கு அனுகூலமான முடிவுகளை எடுத்தது . Colgate முதலான நிறுவனப் பங்குகள் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பை விடக் குறைவிலும் குறைவான விலையில் பங்கு வெளியீடுகளை மேற்கொள்ளுமாறு சட்ட திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன . 1977 ஆம் ஆண்டு Colgate நிறுவனம் 10 ரூபாய் முக மதிப்பிலும் 15 ரூபாய் உயர் மதிப்பிலுமாக 25 ரூபாய் என்ற விலையில் பங்குகளை வெளியிட்டது . Colgate நிறுவனம் மட்டுமல்ல , ஏராளமான நிறுவனங்கள் இவ்விதம் பங்குகளை வெளியிட்டன . இந்த சட்டங்களுக்குக் கட்டுப்படாத Coca-Cola போன்ற நிறுவனங்கள் நமது நாட்டை விட்டு வெளியேறின . நிறுவனங்களுக்கு CCI ன் இந்த செயல் பிரதிகூலமாக இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு அது அனுகூலமாகவே இருந்தது . 


1977 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட Colgate நிறுவனத்தின் 100 பங்குகள் இலவசப் பங்குகள் வழி 10240 பங்குகளாகப் பல்கிப் பெருகின . 


Colgate நிறுவனத்தின் முக மதிப்பு தற்போது ஒரு ரூபாயாக இருந்தாலும் அது தனது பங்குகளைப் பிரிக்கவில்லை . மாறாக முதல் நீக்கம் (Capital Reduction) என்ற வகையில் அதன் முக மதிப்பான 10 ரூபாயில் 9 ரூபாயை முதலீட்டாளர்களுக்குத் திரும்ப வழங்கியது . முதல் நீக்கம் செய்தால் முதலீட்டாளர்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்கும் என்பதோடு அதன் இருப்பு மற்றும் உபரி (Reserves and Surplus) மேலும் ROCE போன்ற அதன் நிதி விகிதங்களும் அதிகரிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும் . அந்த வகையில் மட்டும் நிறுவனத்தின் IPO முதலீட்டாளர்கள் 46080 ரூபாயை (18 bagger) திரும்பப் பெற்றுக் கொண்டனர் . 


நிறுவனம் தொடர்ந்து ஆண்டாண்டு பங்காதாயங்களை வழங்கி வருகிறது . 2023 ஆம் ஆண்டுக்கான பங்காதாயத்தை மட்டும் இங்கு கணக்கிட்டுப் பார்க்கலாம் . 2023 ஆம் ஆண்டுக்கு நிறுவனம் வழங்கிய பங்காதாயம் ஒரு பங்குக்கு 43 ரூபாய் என்ற கணக்கில் 10240 பங்குகளுக்கு 440320 ரூபாய் (176 bagger) 


அப்போதைய Colgate நிறுவனப் பங்குகளின் மீதான 2500 ரூபாய் முதலீட்டின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட இரண்டே முக்கால் கோடி . இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ரூபாய் 2,71,36,000/- (10854 bagger) இந்த மதிப்பு பிரம்மாண்டமாகத் தெரிந்தாலும் 1977 லிருந்து 2024 வரையிலான 47 ஆண்டுகளின் கூட்டுப்பெருக்கத்தைக் கணக்கிட்டால் 21.86 சதவீதம் மட்டுமே வருகிறது . சராசரியை நோக்கிய பின்னடைவு சரியாக வேலை செய்திருக்கிறது . இருந்தாலும் 47 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக 22 சதவீத CAGR என்பது ஒரு சாதனை தான் . நிறுவனம் வருடாவருடம் வழங்கிய பங்காதாயம் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை . மேலும் பங்கு நீக்கம் (capital reduction) என்ற வகையில்  நிறுவனம் வழங்கிய பணமும் இதில் சேர்க்கப்படவில்லை . 


நிறுவனத்தின் தற்போதைய இருப்பு மற்றும் உபரி 1693.70 கோடியாக உள்ளது . அதன் பங்கு முதல் 27.2 கோடி . ஆக , நிறுவன இருப்பு மற்றும் உபரி 62 மடங்காக உள்ளது . 2027 ஆம் ஆண்டு நிறுவனம் பட்டியலிடப்பட்டதன் 50 ஆண்டு நிறைவை ஒட்டி இலவசப் பங்குகளை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது . 


இவ்வாறாக 1977 ஆம் ஆண்டு பங்குகள் வழி மதிப்பு உருவாக்கத்திற்கான ஒரு சிறந்த தொடக்கமாக இருந்தது . அப்போதைய இந்த மதிப்பை இனங்கண்டு முதலீடு செய்தவர்கள் , மிகவும் முக்கியமாக அந்த முதலீடுகளை நாளது தேதி வரை சொந்தம் கொண்டாடுபவர்கள் உண்மையான செல்வ வளத்தை உருவாக்கிக் கொண்டனர் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14