பங்கு கேள்வி பதில் - 5

பங்கு கேள்வி பதில் -5


கேள்வி : டாடா சன்ஸ் IPO வருமா ?


பதில் : வரும்ம்ம் ... ஆனா வராது ! நகைச்சுவை ஒரு பக்கம் இருக்கட்டும் . டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீதம் பங்குகள் டாடா அறக்கட்டளைகள் வசம் உள்ளன . 18.4 சதவீதம் Pallonji Mistry குழுமம் வசம் உள்ளது . மீதி 15.6 சதவீதப் பங்குகள் டாடா கெமிக்கல்ஸ் , டாடா மோட்டார்ஸ் , டாடா பவர் , இந்தியன் ஹோட்டல்ஸ் , டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் போன்ற பட்டியலிடப்பட்ட டாடா நிறுவனங்களிடமும் மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்ட சில தனி நபர்களிடமும் உள்ளன . டாடா சன்ஸ் நிறுவன வருமானம் பட்டியலிடப்பட்ட டாடா நிறுவனங்கள் வழங்கும் பங்காதாயம் மூலமாகக் கிடைக்கப் பெறுகிறது . பங்காதாயம் என்றால் அதனைச் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள் . சென்ற நிதியாண்டில் இது 33250 கோடி ரூபாய் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள் . டாடா சன்ஸ் நிறுவனத்தைச் சந்தையில் பட்டியலிட்டால் இலட்சம் கோடிகளின் கணக்கில் மதிப்பு விடுவிப்பு (value unlocking) எட்டப்படும் என்பது உண்மை தான் . ஆனால் அதனை விட நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படுவதை டாடா சன்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது . நிறுவனத்தைப் பட்டியலிட்டால் அரசாங்க சட்ட திட்டங்களுக்கும் , முதலீட்டாளர்களின் மனமாச்சரியங்களுக்கும் ஆட்பட வேண்டியதாக இருக்கும் .


கேள்வி : RK Swamy நிறுவனம் 50 ஆண்டு காலமாக செயல்பாட்டில் இருக்கிறது . இருந்தாலும் அதன் முதல் பங்கு வெளியீடு வெறும் 288 ரூபாய் என்ற விலையில் தான் வெளி வந்தது . இவ்வளவு காலமாக நிறுவனம் இலாபம் ஈட்டாமலா இருக்கும் ? அதன் பங்குகள் ஏன் இவ்வளவு குறை விலையில் வெளியிடப்பட்டது ?


பதில் : IPO க்களில் பங்கின் விலைகளை வாங்கத்தக்க அளவில் அதாவது குறை விலையில் வெளியிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் . அதற்காக நிறுவனங்கள் முதல் பொது வெளியீட்டின் முன்னர் இலவசப் பங்கு வெளியீடு மற்றும் பங்குப் பிரிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் . இலவசப் பங்குகளை உயர் விகிதங்களில் வெளியிட்டால் நிறுவனப் பங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து அதன் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) குறைந்து விடும் . EPS ஐயும் PE ஐயும் பெருக்கினால் பங்கின் விலை கிடைத்து விடும் என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் . EPS ஐ இவ்வாறு வெகுவாகக் குறைப்பது உயர் PE க்களில் பங்குகளை வெளியிடுவதற்கும் மறைமுகமாக உதவுகிறது . பங்குப் பிரிப்பும் இவ்வாறே செயல்படும் . RK Swamy நிறுவனத்தின் முக மதிப்பு 5 ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .


கேள்வி : விப்ரோ , முதல் பொது வெளியீட்டில் பங்குகளை வாங்கி இன்றளவும் அதனை வைத்திருப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன ?


பதில் : விப்ரோ நிறுவனம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள Amalner என்ற ஊரில் தொடங்கப்பட்டது . அந்த ஊரில் முதல் பொது வெளியீட்டில் வாங்கிய விப்ரோ பங்குகளை இன்றளவும் வைத்திருக்கும் பங்குதாரர்கள் இருக்கிறார்கள் . ஆனால் விப்ரோ இத்தனை பெரிய பன்மடங்காளர் ஆகும் இவ்வளவு செல்வ வளத்தை உருவாக்கும் என்ற உணர்வுடன் அவர்கள் அதனை வைத்திருந்தார்கள் என்று கூறவியலாது . அது வெறும் குருட்டு அதிர்ஷ்டம் என்று கூறலாம் . அல்லது கடவுளின் கருணை அல்லது கர்மா என்று கூறலாம் . பங்குகளில் மட்டுமல்லாது பரஸ்பர நிதிகளிலும் இதே கதை தான் . HDFC Prudence Fund (தற்போதைய HDFC Balanced Advantage Fund) முதல் நிதி வெளியீடு பிப்ரவரி 1994 ல் வெளி வந்தது . அதில் முதலீடு செய்யப்பட்ட பத்தாயிரம் ரூபாய் செப்டம்பர் 2015 ல் நாலரை இலட்சம் என்றவாக்கில் வளர்ந்தது . கூட்டுப் பெருக்கக் கணக்கில் சொல்வதானால் அது 19.6 சதவீதம் . முதல் நிதி வெளியீட்டில் இலட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் இருப்பதாகக் கொண்டால் செப்டம்பர் 2015 ல் எவ்வளவு பேர் அந்த நிதி அலகுகளை இன்னமும் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? ஏதேனும் யூகம் ? அது வெறும் 2500 மட்டுமே ! இந்த இடைப்பட்ட காலத்தில் தேசம் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்தது . அண்டை நாட்டுடன் ஒரு போர் மூண்டது . பங்குச்சந்தையில் தகவல் தொழில் நுட்பக் குமிழி வெடித்தது . இது தவிர தொடர்ச்சியான ஊழல்கள் . 2008 ல் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி . இத்தனைக்கிடையிலும் HDFC Balanced Advantage Fund சிறப்பான ஒரு செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறது . இந்த நிதி அலகுகளை வைத்திருக்கும் 2500 பேரும் இந்த நிதி இவ்வாறு செயல்படும் என்று கணித்து அதனை வைத்திருந்தார்கள் என்று சொல்ல முடியாது . சமீபத்தில் கூட ITC நிறுவனத்தின் 420 பங்குகளை வாங்கி அதனை மறந்து விட்ட ஒருவரின் மனைவி ஆறரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள அதன் பங்குகளைப் பெற்ற நிகழ்வு குறித்த செய்தி வெளி வந்தது . நான் சொல்ல வருவது இது தான் : வாங்கிய பங்குகளைத் தன் உணர்வுடன் பேணிப் பாதுகாத்து வாருங்கள் . யார் கண்டது ? உங்கள் பங்குத் தொகுப்பிலும் விப்ரோ மற்றும் ITC மாதிரியான பங்குகள் இருக்கப் பெறலாம்


கேள்வி : Absolute return / Annualised return என்ன வேறுபாடு ?


பதில் : Absolute return காலத்தைக் கருதாமல் கணக்கிடப்படுவது . Annualised return காலத்தைக் கொண்டு கணக்கிடப்படுவது . மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1979 ஆம் ஆண்டு 100 என்ற மதிப்புடன் தொடங்கப்பட்டது . அதன் தற்போதைய மதிப்பு 72000. இந்த இடைப்பட்ட 45 ஆண்டுகளில் சென்செக்ஸின் absolute return 72000 சதவீதம் . Annualised return 16 சதவீதம்.


கேள்வி : நீண்ட காலம் என்பது எவ்வளவு காலம் ?


பதில் : 1977 ஆம் ஆண்டு HDFC நிறுவன IPO வெளி வந்தது . அப்போதைய அதன் முக மதிப்பு 100 ரூபாய் . பங்கு அதன் முக மதிப்பிற்கு வெளியிடப்பட்டது . அதன் ஒரு பங்கு , பங்குப் பிரிப்பு மற்றும் இலவசப்பங்கு வெளியீட்டின் பின்னர் 100 பங்குகள் ஆகியிருக்கும் . கதை இதனுடன் முடியவில்லை . 2023 ஆம் ஆண்டு HDFC நிறுவனம் reverse merger என்ற வகையில் HDFC வங்கியுடன் இணைக்கப்பட்டது . HDFC நிறுவனத்தின் 25 பங்குகளுக்கு HDFC வங்கியின் 42 பங்குகள் என்ற கணக்கில் 100 HDFC பங்குகளுக்கு 168 HDFC வங்கிப் பங்குகள் கிடைக்கப்பெற்றிருக்கும் . இது தான் HDFC ன் ஒரு பங்கு HDFC வங்கியின் 168 பங்கு ஆகிய கதை . இதனைப் பன்மடங்காளர் கணக்கில் சொல்ல வேண்டுமானால் HDFC (Bank) பங்கு நாளது தேதியில் 2520 மடங்காளர் . பங்கு முதலீடுகளைப் பொறுத்தவரை நீண்ட காலம் என்பது நிறுவனத்தின் காலத்தையும் முதலீட்டாளர்களின் காலத்தையும் கடந்த ஒன்று .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14