John Bogle - மணி மொழிகள் - ஒரு எளிய விளக்கம்
John Bogle - மணி மொழிகள் - ஒரு எளிய விளக்கம்
1. A stock market is a giant distraction to the business of investing .
முதலீட்டிற்கான ஒரு பெரும் கவனச்சிதறல் பங்குச்சந்தை .
இன்று இந்தியப் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டது , சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் சரிவு , முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு இத்தனை கோடி மாயம் என்று பத்திரிகை தலைப்புச் செய்திகளை நீங்கள் அவ்வப்போது படித்திருப்பீர்கள் . மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் இப்போது 66000 புள்ளிகளில் வர்த்தமாகிக் கொண்டிருக்கிறது . 66000 புள்ளிகளில் 600 புள்ளிகள் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவு . இதனைக் கடும் வீழ்ச்சி என்றெல்லாம் சொல்ல முடியாது . சென்செக்ஸ் முன்னொரு காலத்தில் 6600 புள்ளிகளில் இருந்தது . அப்போது வேண்டுமானால் 600 புள்ளிகள் சரிவு என்பது ஒரு கடும் சரிவாக இருக்கலாம் . 6600 புள்ளிகளில் 600 புள்ளிகள் என்பது கிட்டத்தட்ட 10 சதவீதம் வருகிறது . ஆனால் நமது சந்தை முதலீட்டாளர்கள் இவ்வாறு சதவீதக்கணக்கு எல்லாம் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் . பங்குச்சந்தைப் பணம் இத்தனை கோடி இழப்பு என்பது ஒரு மெய்யல்லாத இழப்பு (notional loss) என்பதும் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் அறியாத ஒன்று . Stock market is settled transactions of marginal buyers and sellers , பங்குச்சந்தை என்பது விளிம்பு நிலை வாங்குதல் மற்றும் விற்றல்களின் முடித்து வைக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே என்று இன்னமும் விளக்கமாகச் சொன்னால் அது புரியாத புதிராகி விடும் . பங்குச் சந்தையில் எல்லாமே தலைகீழாக நடக்கும் . நாளை நாம் என்ன செய்யப் போகிறோம் என்று நம்மால் எளிதாகச் சொல்லி விட முடியும் . சந்தை நாளை என்ன செய்யப் போகிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது . பத்தாண்டுகள் கழித்த இந்த நாளில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நம்மால் தீர்மானமாகச் சொல்ல இயலாது . ஆனால் பத்தாண்டுகள் கழித்து பங்குச்சந்தை உயர் அளவுகளில் இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும் . அதே மாதிரி பங்குகளின் விலையும் அதன் மதிப்பும் எதிரெதிர் விகிதங்களில் கட்டப்பட்டுள்ளன . பங்குகளின் விலை குறையக் குறைய அதன் மதிப்பு கூடும் . இதை விட முக்கியமாக , சந்தையில் , நிலையற்ற பங்குகள் நாம் நினைத்ததை விட நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும் . நிலையான பங்குகள் நாம் நினைத்ததை விட நீண்ட காலத்திற்கு நிலையற்று இருக்கும் . பங்குச்சந்தையில் இலாபம் ஈட்ட இந்த சந்தை முரண்பாடுகளுக்கு நாம் பழக வேண்டும் . இவ்வாறு முதலீடுகளுக்கான ஒரு ஒப்பற்ற தளம் முதலீடுகளுக்கான கவனச் சிதறலாகவும் இருக்கிறது .
2. When there are multiple solutions to a problem , choose the simplest one .
பிரச்னை ஒன்றுக்கு நிறையத் தீர்வுகள் இருக்கிறதென்றால் இருப்பதிலேயே எளிமையான ஒரு தீர்வைத் தேர்ந்தெடுங்கள் .
முதலீடுகளுக்கான ஒரு பெரும் கவனச் சிதறல் சந்தை என்று பார்த்தோம் . எனில் அதனில் கவனத்தைச் சிதற விடாது முதலீட்டை மேற்கொள்ள ஏதேனும் வழிவகைகள் இருக்கிறதா ? வளர்ச்சி முதலீடு , வேக முதலீடு , மதிப்பு முதலீடு , தின குறுகிய மற்றும் நீண்ட கால முதலீடு , அடிப்படை மற்றும் தொழில் நுட்பப் பகுப்பாய்வு , F & O என்று அழைக்கப்படும் பெறுதிகள் ... என்று நிறைய வழிமுறைகள் இருந்தாலும் இவை அனைத்துக்கும் மாற்றாக சந்தையையே நீங்கள் வாங்கி விடுவதான ஒரு எளிதான தீர்வு இருக்கிறது . அது குறியீட்டு நிதிகளில் முதலீடு செய்வது .
3. Fund performance comes and goes . Costs go on forever .
நிதி செயல்பாடுகள் வரும் , போகும் . நிதி செலவுகள் வந்தால் போகாது .
நன்கு செயல்படுவதான பன்மய பங்கு நிதி ஒன்றில் முதலீட்டை மேற்கொள்கிறீர்கள் . அது தொடர்ந்து நன்கு செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது . நிதி மேலாளர் மாறி விடலாம் . அவருடைய செயல்பாடு சராசரியை நோக்கிய பின்னடைவுக்கு உள்ளாகலாம் . தற்செயலான ஒரு துரதிருஷ்டம் ... என்று நிதியின் குறைச் செயலாக்கத்திற்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் . நிதி குறைச் செயலாக்கத்திற்கு உள்ளானாலும் நிதி செலவுகள் குறையாது . நிதியின் வருமானத்தைத் தீர்மானிப்பது நம் கையில் இல்லை . ஆனால் நிதி செலவுகளைக் குறியீட்டு நிதிகளில் முதலீடு செய்வதன் மூலமாக அதனைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ளலாம் . பன்மய பங்கு நிதிகளின் மேலாண்மைச் செலவு சராசரியாக 2.5 சதவீதம் . குறியீட்டு நிதிகளின் சராசரி 0.5 சதவீதம் . இந்த 2 சதவீத வேறுபாடு நீண்ட காலக் கூட்டுப் பெருக்கத்தில் ஆகப்பெரிய நேர்ம விளைவை ஏற்படுத்துவதாக இருக்கும் .
4. Don't look for the needle in the haystack . Just buy the haystack .
வைக்கோற்போரில் ஊசியைத் தேடாதீர்கள் . வைக்கோற்போரையே வாங்கி விடுங்கள் .
எந்த நிறுவனப் பங்கு அடுத்த கூகுள் என்பதை உங்களால் இனங்காண முடியுமா ? அது முடியாது என்பதற்கு அடுத்தது . மேலும் கூகுள் நிறுவனர்களுக்கே அது தெரியாது . தெரிந்திருந்தால் அதனைக் குறை விலையில் விற்க அவர்கள் முனைந்திருக்க மாட்டார்கள் . எனில் என்ன செய்யலாம் ? பங்குச்சந்தை என்ற இந்த வைக்கோற்போரில் மறைந்து கிடக்கும் தங்க ஊசிகளைத் தேடுவதற்குப் பதிலாக வைக்கோற்போரையே வாங்கி விடுங்கள் . குறியீட்டு நிதிகளில் முதலீடு செய்யுங்கள் .
5. If you live by the sword , you die by the sword .
வாளில் வாழ்பவன் வாளில் இறப்பான் .
கையில் ஊக வணிக சுத்தியல் இருந்தால் எதைப் பார்த்தாலும் ஊக ஆணியாகவே தெரியும் . மனிதர்கள் , நாளடைவில் தங்கள் கருவியின் கருவியாக மாறி விடுகிறார்கள் . உங்கள் கையிலிருக்கும் கருவிகளைக் குறித்துக் கவனம் கொள்ளுங்கள் . பொறுமை , சீர்மை , தாமதமான மனநிறைவு , நீடிப்புத் திறன் , உணர்வு மேலாண்மை போன்ற மென் கருவிகளைக் கைக்கொள்ளுங்கள் . பங்குச்சந்தையில் வெற்றியை நேரடியாக அடைய முடியாது . உங்கள் உணர்வுகளை வெற்றி கொள்வதன் மூலமாக அதனை நீள் வட்ட சுற்றுச் சாலையில் சென்று தான் அடைய முடியும் . Try not to become a man of success but become a man of value என்று ஐன்ஸ்டீன் கூறியது மாதிரி வெற்றிகரமான மனிதராக மாற முயற்சி செய்யாதீர்கள் . மாறாக மதிப்பு மிக்கவராக மாறுங்கள் .
6. The greatest enemy of a good plan is the dream of a perfect plan.
நல்ல திட்டங்களின் எதிரி பூரணமான திட்டம் குறித்த கனவு .
பங்கு முதலீட்டுத் திட்டங்களைச் சிறிய வயதிலேயே தொடங்கி விடுவது ஆகப்பெரிய அனுகூலங்களைக் கொடுக்கவல்லது . வாரன் பஃபெட் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ளத் தொடங்குகையில் அவருடைய வயது பதினொன்று . கூட்டு வட்டி அதன் பின்னாட்களில் தான் பெரும் பயன் தருவதாக இருக்கும் . எவ்வளவு பயன் தரும் ? எவ்வளவுக்கு எவ்வளவு அதனை முன்னால் கொண்டு செல்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு . எனவே பூரணமாகத் திட்டமிடுவதில் நேரத்தை வீணடிக்காமல் கையில் இருக்கும் வளங்களைக் கொண்டு வளமைக்கான திட்டங்களைத் தொடங்கி விட வேண்டும் .
7. The two greatest enemies of the equity fund investor are expenses and emotions .
பங்கு நிதிகளின் இரு பெரும் எதிரிகள் பங்கு நிதி மேலாண்மைச் செலவு மற்றும் முதலீட்டாளர் உணர்வு .
பங்கு நிதி மேலாண்மைச் செலவு குறித்து ஏற்கெனவே பார்த்து விட்டோம் . முதலீட்டாளர் உணர்வு குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் . பங்குச் சந்தையில் செயல்படும் இரு பிரதானமான உணர்வுகள் பேராசை மற்றும் பயம் . பிரச்னை என்னவென்றால் நாம் பேராசை கொள்ள வேண்டும் போது , அதாவது மீமிகை கரடிச் சந்தையில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் போது , பயம் கொள்கிறோம் . பயம் கொள்ள வேண்டும் போது , அதாவது மீமிகை காளைச் சந்தையில் முதலீட்டை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் போது , பேராசை கொள்கிறோம் . நாம் பேராசையும் கொள்ள வேண்டாம் . பயமும் கொள்ள வேண்டாம் . உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு இருக்கலாம் . அதற்காக உணர்வுகளே இல்லாமல் இருக்க வேண்டாம் . பட்டினத்தார் சொல்வது மாதிரி தூங்காமல் தூங்கலாம் . பங்குச் சந்தையைப் பார்க்காமல் பார்க்கலாம் . ஆசிர்வாதமான ஒரு புறக்கணிப்பை மேற்கொள்ளலாம் .
8. Learn everyday , but especially from the experience of others . It's cheaper .
மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் . அது விலை மலிவானதும் கூட .
மின் வேலியைத் தொட்டால் அதிர்ச்சிக்கு உள்ளாவோம் என்பதை நாமே அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள முனைவது அறிவுடைமை ஆகாது . வாசிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்வது மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான எளிமையான ஒரு வழிமுறையாகும் . வாரன் பஃபெட் , சார்லி முஞ்சர் , டெம்பிள்டன் முதலான முன்னணி முதலீட்டாளர்கள் வாசிக்கும் பழக்கத்தில் தீராக் காதல் கொண்டவர்கள் . பணம் கூட்டுப் பெருக்கத்திற்கு உள்ளாவது மாதிரி படிக்கும் பழக்கமும் அறிவுப் பெருக்கத்திற்கு வித்திடும் . கடந்த காலத்தின் ஒப்பற்ற ஆன்மாக்கள் உங்களுடன் உரையாடக் காத்திருக்கிறார்கள் . காதுள்ளவர்கள் கேட்கக் கடவர் .
9. The true investor ... will do better if he forgets about the stock market and pays attention to his dividend returns and to the operating results of his companies .
ஒரு உண்மையான முதலீட்டாளர் பங்குச்சந்தையை மறந்தவராகவும் நிறுவனங்கள் செயல்படும் விதத்திலும் அதன் பங்காதாயப் பலன்களிலும் கவனத்தைக் குவிப்பவராகவும் இருந்தால் மட்டும் போதுமானது .
பங்குகள் தின அளவில் துள்ளிக் குதிக்கும் வெற்றுக் காகிதங்கள் அல்ல . ஒவ்வொரு நிறுவனப் பங்கின் பின்னாலும் நிறுவனம் ஒன்று உள்ளது . நிறுவனம் நன்கு செயல்பட்டால் அதன் பங்கின் விலைகள் குறுகிய கால அளவில் அப்படி இப்படி இருந்தாலும் நீண்ட கால அளவில் நன்கு செயல்பட்டே தீரும் . மேலும் , உயர்ந்து வரும் பங்காதாயம் - உயர்ந்து வரும் பங்கு ஈட்டு விகிதம் - உயர்ந்து வரும் பங்கு விலைகள் என்ற பங்குச்சந்தை பால பாடத்தை மறந்து விட வேண்டாம் . பஃபெட் , பங்குச்சந்தை என்ற ஒன்றே இல்லை என்பதாகக் கொண்டு முதலீடு செய்யுங்கள் என்று இதைத் தான் கூற முற்படுகிறார் . அவர் மேலும் கூறுகிறார் : பங்குச்சந்தையை , யாராவது எதையாவது முட்டாள்தனமாக செய்து வைக்கிறார்களா (பங்குகளை அடிமாட்டு விலையில் விற்கிறார்களா என்று படிக்கவும்) என்பதற்காக நான் பார்ப்பதுண்டு .
10. When returns are concerned time is your friend . When costs are concerned time is your enemy .
நிதிகள் தரும் வருமானத்தைக் கணக்கில் கொள்கையில் காலம் உங்கள் நண்பன் . நிதிகளுக்கான செலவைக் கணக்கில் கொள்கையில் காலம் உங்கள் பகைவன் .
பன்மய பங்குப் பரஸ்பர நிதி ஒன்று , பத்தாண்டுகளுக்கு , மேலாண்மைச் செலவுகளைக் கணக்கில் கொள்வதற்கு முந்தைய வருமானமாக 17.5 சதவீத CAGR கொடுத்திருப்பதாகக் கொள்ளலாம் . அதன் மேலாண்மைச் செலவுகள் 2.5 சதவீதம் . ஆக , அது பத்தாண்டு நிகர வருமானமாக 15 சதவீத CAGR கொடுத்திருக்கிறது . இந்த வருமானம் ஆண்டாண்டுகளின் கணக்கில் நேர்மமாகச் செயல்படும் . அதே மாதிரி செலவும் 2.5 சதவீத கூட்டுப் பெருக்கத்தில் வளர்ந்து வரும் . இது ஆண்டாண்டுகளின் கணக்கில் எதிர்மமாகச் செயல்படும் . இதே காலகட்டத்தில் மற்றொரு பரஸ்பர நிதியும் 17.5 சதவீத CAGR கொடுத்திருப்பதாகக் கொள்ளலாம் . ஆனால் அதன் மேலாண்மைச் செலவுகள் 2 சதவீதம் . அதன் நிகர வருமானம் 15.5 சதவீதம் . ஆண்டாண்டுகளின் கணக்கில் இந்த அரை சதவீத உயர் ஈட்டு , வருமானத்தில் மட்டுமின்றி செலவிலும் நேர்ம விளைவை ஏற்படுத்துகிறது . இவ்வாறாக நிதிகள் தரும் வருமானத்தைக் கணக்கில் கொள்கையில் காலம் உங்கள் நண்பன் . நிதிகளுக்கான செலவைக் கணக்கில் கொள்கையில் காலம் உங்கள் பகைவன் .
Comments
Post a Comment