நிதானமாக செல்வம் சேருங்கள்
நிதானமாக செல்வம் சேருங்கள்
Get Rich Slowly
நான் அவசரப்பட மாட்டேன் . தாமதம் செய்வேன் . இந்தப் பரபரப்பினால் என்ன பயன் ? வானத்திற்கு ஒவ்வொரு இரவும் விண்மீன்கள் வந்து விடுகின்றன .பேரலைகளும் கடலுக்கு வந்து பாய்கின்றன . காலமோ இடமோ பள்ளமோ மேடோ எனக்குச் சேர வேண்டியதைச் சேராமல் செய்து விட முடியாது - ஜான் பர்ரோஸ்
• * *
செல்வம் சேர்ப்பதற்கான கணித சமன்பாடு , மூன்று முக்கியக் காரணிகளால் ஆகப்பெற்றது .
முதலாவது , நீங்கள் இடும் முதலீடு . அது ஒரு முறை முதலீடாக இல்லாமல் தொடர்ந்த வாக்கிலான முதலீடாக இருக்க வேண்டியது முக்கியம் . இரண்டாவது , முதலீட்டின் காலம் . மூன்றாவது , இந்த முதலீட்டுக்கு நீங்கள் ஈட்டும் வட்டி விகிதம் .
இந்த மூன்று அளவுருக்களில் எவ்வளவு முதலீடு இடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு காலத்திற்கு இடுகிறீர்கள் என்பது உங்கள் கையில் உள்ளது . ஆனால் இந்த முதலீடு ஈட்டும் வட்டி விகிதம் உங்கள் கையில் இல்லை . அது நிரந்தர முதலீட்டு வாய்ப்புகளாக இருந்தால் பணவீக்கத்தை ஒட்டியும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளாக இருந்தால் பணவீக்கத்தை ஓரளவு வெல்வதாகவும் நேரடி பங்கு முதலீடுகளாக இருந்தால் பணவீக்கத்தை நன்கு வெல்வதாகவும் இருக்கும் .
முதலீட்டுத் தொகுப்பின் மூலம் ஒரு கோடி ஈட்ட வேண்டும் என்பது ஒருவரின் இலக்காக இருக்கலாம் . அவரின் தொடர் முதலீடு குறைந்த அளவுகளில் இருக்கலாம் . அல்லது அவர் தனது முதலீட்டுப் பயணத்தைத் தாமதமாகத் தொடங்கியிருக்கலாம் . இதைச் சமன் செய்ய அவர் தனது முதலீட்டுத் தொகுப்பு ஈட்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க முயலும் போது பிரச்னைகள் எழுகின்றன .
கூட்டு வட்டியின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக்கூடாது என்பதாகும் .
வட்டியை அதிகரிக்க முயற்சி செய்வது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாகும் . இன்றைக்கு நாம் அன்றாடம் பார்க்கும் நிதி மோசடிகளின் ஆரம்பப் புள்ளி இந்த அதிக வட்டி ஆசைகள் மட்டுமே .
வட்டியை விரைவுபடுத்துவதற்கு மாறாக நீங்கள் இடும் முதலீட்டை அதிகப்படுத்த முயற்சிக்கலாம் . அல்லது காலத்தை நீட்டிக்கலாம் .
இன்னும் சிலர் பங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தை அதிகப்படுத்தும் பொருட்டு அதனை வாங்கி விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் . அல்லது விற்று வாங்குவது ... பங்குகளை வாங்காமலேயே அவற்றின் ஏற்ற இறக்கங்களின் மூலமாகப் பலன் அடைவது ... உள்ளாள் வணிகம் ... உட்டாலக்கடி வணிகம் என்பதான முடிவேயில்லாத தொடர் செயல்பாடுகள் ...
வாரன் பஃபெட் , Berkshire Hathaway என்கிற முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் . தின அளவில் ஏறி இறங்கும் அவரது நிறுவனப் பங்குகளிலிருந்து அவர் ஆதாயம் பெற முனைய மாட்டார் . அவரது நிறுவனப் பங்குகள் அதிக அளவில் ஏற்ற இறக்கத்திற்கு ஆட்படாது என்பது வேறு விஷயம் . அவருடைய நிறுவனப்பங்கு குறை மதிப்பில் வர்த்தகமானால் அவைகளைத் திரும்ப வாங்க முற்படுவார் . பிற நிறுவனங்களைப் பங்குகளைக் கொடுத்து கையகப்படுத்த முனைகையில் ஒருவேளை QIP வெளியிடலாம் . மற்றபடி நிறுவனத்தை அறவழியில் நடத்திச் செல்வதில் தான் அவர் கவனம் குடி கொண்டிருக்கும் .
அது வாரன் பஃபெட்டாக இருந்தாலும் சரி , சில நூறு பங்குகளை வைத்திருக்கும் சிறு முதலீட்டாளராக இருந்தாலும் சரி , ownership mentality என்று அழைக்கப்படும் உடைமை மனப்பான்மை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது .
நான் ICICI வங்கியின் 100 பங்குகளை அதன் முதல் பொது வெளியீட்டில் வாங்கி நாளது தேதி வரை வைத்திருக்கிறேன் . ஒரு பங்கு 35 ரூபாய் என்ற கணக்கில் எனது முதலீடு 3500 ரூபாய் . வங்கி , ஒருமுறை பங்குப் பிரிப்பை , பத்து ரூபாய் பங்கு இரண்டு ரூபாய் என்றவாக்கில் மேற்கொண்டது . ஒரு முறை பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசப்பங்குகள் வழங்கப்பட்டன . ஆக , IPO வின் 100 பங்குகள் 550 பங்குகள் ஆகி விட்டன . இதில் 50 பங்குகளை புத்தியைக் கடன் கொடுத்த ஒரு நேரத்தில் விற்று விட்டேன் . இந்தப் பங்குகளை விற்று வேறு எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கினேன் , அது இலாபமீட்டியிருக்கிறதா என்ற விவரமெல்லாம் காற்றில் கரைந்து விட்டது . எனது ஆரம்ப முதலீடான 3500 ரூபாயின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட 5 இலட்சம் ரூபாய் . பங்குகள் குறித்தான எனது நீண்ட கால செயல்முறை இது தான் . நிறுவனப் பங்கை இனங்கண்டு வாங்குவது . அதனைக் காலாகாலத்திற்கும் வைத்திருப்பது . இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் வங்கிகளுக்கான தேவைப்பாடு என்றென்றும் பசுமையாக இருக்கும் என்ற கோட்பாட்டில் எனது முதலீடு கட்டப்பட்டுள்ளது . இந்த 3500 ரூபாய் முதலீட்டின் மூலமாக எனக்குக் கிடைத்த இந்த ஆண்டுக்கான பங்கு ஈட்டு விகிதம் 114 சதவீதம் . இது ஒரு வழிமுறை .
இன்னொரு வழிமுறையையும் பார்க்கலாம் . ICICI வங்கி அதன் IPO விலையான 35 ரூபாயிலிருந்து இன்றைய விலையான 5000 ரூபாயை ( பிரிக்கப்பட்ட பங்குகளை இணைத்து இலவசப் பங்குகளைக் கழித்த எனக்கான கணக்கு ) ஒரே நேர்க்கோட்டில் வந்தடையவில்லை . ஏறி இறங்கி , ஒரு சிறிய விலைப்பட்டையில் (price band) பல்லாண்டு காலம் உழன்று காளைச் சந்தையில் விரிந்து கரடிச் சந்தையில் சுருங்கி அது இந்த நிலையை எட்டியிருக்கிறது . அது 50 ரூபாய்க்குப் பட்டியல் இடப்பட்டது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது . ஒருவர் 35 ரூபாய்க்கு இந்த வங்கிப் பங்கை வாங்கி 50 ரூபாய்க்கு விற்று மறுபடி 40 ரூபாய்க்கு வாங்கி 60 ரூபாய்க்கு விற்று ... இப்படியே அதன் ஒவ்வொரு விலையேற்றத்தையும் கைப்பற்றினால் அவருக்கு எவ்வளவு இலாபம் கிடைக்கப்பெற்றிருக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்கள் . மிக விரைவாகவே அவர் கோடிகளைக் குவித்து விடுவார் . அதற்கு முன்னர் இந்த உத்தி எவ்வளவு தூரம் சாத்தியம் என்று எண்ணிப் பாருங்கள் .
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்ணுவது எண்பது கோடி என்பதாக ஒரு பழமொழி உண்டு . அது மாதிரி பங்குகளின் விலை ஏற்ற(இறக்க)த்திற்கும் பல்லாயிரம் காரணங்கள் இருக்கலாம் . இதனை எவ்வாறு சரியாக அதனினும் முக்கியமாக தொடர்ச்சியாகக் கணிக்க இயலும் ? அவ்வாறே ஒருவர் கணித்தாலும் இதற்கான உராய்வுச் செலவுகளான தரகர் தரகு , bid ask spread மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி போன்றவைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் . மேலும் , நேரம் என்பது ஒரு வரம்புக்கு உட்பட்ட அரிய வளமாகும் . இவ்வாறு ஒரு பங்கிலேயே கவனம் கொண்டிருந்தால் மற்ற முதலீட்டு வாய்ப்புகளை நேரம் இல்லாமல் தவற விட்டு விடுவோம் . இவ்வாறு பங்குகளின் ஒவ்வொரு விலை உயர்வையும் பிடிக்க முனையும் செயலே பங்குகளின் மூலமான குறை வருமானத்திற்கு இட்டுச் செல்கிறது .
பங்குச்சந்தையில் வெற்றி பெற பங்குகளை வெறுமனே துள்ளிக் குதிக்கும் காகிதங்களாகப் பார்க்காதீர்கள் . பஃபெட் மாதிரி உடைமை மனப்பான்மை கொள்ளுங்கள் . பங்குகளுடன் பயணம் செய்யுங்கள் . பயணிக்கும் பாதையில் பரவசம் கொள்ளுங்கள் .
இவ்வாறு பங்குச்சந்தையில் முறையாகப் பயணிப்பது வந்தடைவதை விட முக்கியமானது .
Comments
Post a Comment